வியாழன், 2 பிப்ரவரி, 2012

98. மொஹஞ்சதாரோ கொம்பும், வேதக் கருத்துக்களும்,


தலையில் கொம்பு முளைத்த வர்ணனைகள் வேத மரபில் பல இடங்களில் வருகின்றன. மலைக்குக் கொம்பு இருந்திருக்கிறது, மண்ணுக்குக் கொம்பு இருந்திருக்கிறது, மனிதனுக்குக் கொம்பிருந்திருக்கிறது, மிருகங்கள், தெய்வங்கள் என எல்லாவற்றுக்குமே பல கொம்புகள் இருந்திருக்கின்றன என்பது போன்ற வர்ணனைகள் வேதங்களிலும், பல நூல்களிலும் வருகின்றன. இவையெல்லாம் ஒரு உருவகமே. ஒரு விஷயத்தை அல்லது ஒரு நபரை உயர்வாகச் சொல்லுமிடங்களிலெல்லாம் கொம்பு இருப்பதாகச் சொல்லியுள்ளார்கள். யாராவது பெரியமனிதத்தனம் செய்தார்கள் என்றால், 'தலையில் கொம்பா முளைத்து விட்டது' என்று இன்றும்கூட  நாம் பேச்சு வழக்கில் சொல்வது, வேதங்களிலிருந்து தொடர்ந்து வந்திருக்கும் ஒரு உருவக வர்ணனையே. அதை அப்படியே உண்மையான விவரமாக எடுத்துக் கொண்டு, கொம்பு வைத்துக் கதை கட்டியவர்கள் ஐரோப்பியர்கள். அதன் பலனாக, யூனிகான் என்னும் கற்பனை மிருகத்தை உருவாக்கி கிருஸ்துவ பைபிளிலும் நுழைத்தாகி விட்டது!!

 

மொஹஞ்சதாரோவின் முத்திரைகளில் காணாப்பட்ட ஒற்றைக் கொம்பு மிருகத்தின் மறு பதிப்பாக யூனிகான் சித்தரிக்கப்பட்டது என்பதைக் கீழ்க்காணும் படங்கள் தெள்ளத் தெளிவாக விளக்குகின்றன.



 

 


இடது புறம் இருப்பது இடைக்கால ஐரோப்பாவில் (1000 வருடங்களுக்கு முன்) சித்தரிக்கப்பட்ட யூனிகான். வலப்புறம் இருப்பது 5000 வருடங்களுக்கு முன் மொஹஞ்சதாரோவில் கண்டெடுக்கப்பட்ட முன் தலையில் ஒற்றைக் கொம்பு கொண்ட வராஹம்.

இதை வராஹம் என்று சொல்லக் காரணம், ஏக ஸ்ருங்கி என்று வராஹத்தைச் சொல்வதாலும், ருஷ்யஸ்ருங்கரது கதையை ஒட்டியே ஐரோப்பிய யூனிகான் கதை அமைந்துள்ளதாலும் என்பதை 96 ஆவது கட்டுரையில் கண்டோம். .


 

இந்தக் கட்டுரையில் கொம்பு அல்லது ஸ்ருங்கி என்பது எங்கெல்லாம் சொல்லப்பட்டது என்பதையும், அதைக் கொண்டு மொஹஞ்சதாரோவில் காணப்படும் உருவங்களது தாத்பரியத்தையும் பார்ப்போம்.


நாம் இருக்கும் பாரத வர்ஷம் என்னும் இந்த தேசத்தில் ஸ்ருங்கவான் (கொம்புடையவன் அல்லது கொம்பு முளைத்தவன்) என்னும் மலை இருந்தது என்று விஷ்ணு புராணம் கூறுகிறது. (2.8) இதன் வடக்கு, தெற்கு, மத்தியம் என்று மூன்று இடங்களில் கொம்பு இருந்தது என்று வர்ணிக்கும் இந்த ஸ்லோகம், சூரியன் வட கோடியிலும், தென் கோடியிலும் மத்தியில் விஷு என்னும் சம பகல்-இரவு தினத்திலும் சஞ்சரிக்கும் நிலையை விவரிக்கிறது.


அதாவது உச்சியில் என்று பொருள் படும் இடங்களில் கொம்பு என்ற உருவகத்தைக் கூறியிருக்கிறார்கள். சூரியன் கடகரேகையின் உச்சியிலும், மகரரேகையின் உச்சியிலும், பூமத்திய ரேகையின் உச்சியிலும் சஞ்சரிக்கும் போது வானில் எங்கு தென்படுகிறதோ, அவையே ஸ்ருங்கி அல்லது பாரத தேசத்தின் கொம்புகள் ஆகும்.

இந்த வானவியல் உண்மையை நம் பாரத மக்கள் என்றோ தெரிந்து கொண்டு விட்டார்கள். ஆனால், மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இதைக் கண்டு கொள்ள மாட்டார்கள். பாரத நாட்டில் இருந்த எந்த அறிவுப் பொக்கிஷத்தையும்  அவர்கள் கவனத்தில் கொள்ள மாட்டார்கள். ஆனால் எங்கோ அமெரிக்கவிலும், ரஷ்யாவிலும், ஐரோப்பாவிலும், அரைகுறையாக ஒரு அமைப்பு இருந்தால் மட்டும் போதும், அதைக் கொண்டு அங்கிருந்த பழங்கால மக்கள், வானவியலை ஆராய்ந்தார்கள் என்று சொல்லிக் கொண்டிருப்பார்கள். அதில் என்ன தமாஷ் என்றால், அந்த இடங்களிலெல்லாம் வருடம் முழுவதும் வெயிலே இருக்காது. பகல் வேளை என்பதே 8 மணி மணி நேரம் கூட இருக்காது. ஆனால் அவர்கள்தான் நாளைக் கண்டுபிடித்தார்கள், வாரத்தைக் கண்டு பிடித்தார்கள் சூரியனைக் கண்டு பிடித்தார்கள் என்று சொல்லிக் கொள்கிறார்கள். அந்த அபத்தங்களை எல்லாம் பிறகு பார்க்கலாம்.



வானத்தில் சூரியன் தென்படும் நிலைகளைக் கொம்புகள் என்று வேத மக்கள் சொல்லி வந்தார்கள். அது போல, பூமிக்கும் கொம்புண்டு என்று சொல்வதை ஹரிவம்சத்தில் காணலாம் (1-57- 2 &3). கிருஷ்ணன் வடமதுரையை விட்டுச் சென்று விட்டான் என்று சொல்லுமிடத்தே, "ஸ்ருங்க ப்ருதிவ்யா" – அதாவது பூமிக்குக் கொம்பு போல இருந்த மதுராவை விட்டுச்.சென்று விட்டான் என்கிறது அந்த ஸ்லோகம். சிறந்த நகரங்கள் அல்லது இருப்பிடங்களைக் கொம்புள்ள இடங்கள் என்று சொல்லி வந்திருக்கிறார்கள் என்று தெரிகிறது.


அதுபோல மலையின் உயர்ந்த சிகரங்களை ஸ்ருங்கி என்று சொல்லியிருக்கிறார்கள். கோமந்தம் என்னும் மலைக்கு இரண்டு கொம்புகள் இருந்தன என்றும் அவை இரண்டு தெய்வங்கள் போல ஒளி வீசின என்று ஹரிவம்சத்தில் ஒரு வர்ணனை வருகிறது.


மலை உச்சியை தெய்வத்துடன் ஒப்புமை கண்டிருக்கிறார்கள், அது ஏன் என்று பார்த்தால், தெய்வம் என்ற சொல் 'திவ்' என்னும் வேர்ச் சொல்லிலிருந்து எழுந்தது. திவ் என்றால் ஒளி என்று பொருள். ஒளி வீசிக் கொண்டிருப்பதால் அவர்கள் தேவர்கள் அல்லது தெய்வங்கள் என்று அழைக்கப்பட்டார்கள். மலையின் உயர்ந்த சிகரத்தில் சூரிய கிரணங்கள் பட்டு, ஒளி வீசிக் கொண்டிருக்கும். ஒளி வீசுவதால், அந்தச் சிகரங்களைத் தெய்வங்கள் என்றும், உயரமாக இருப்பதால் கொம்பு (ஸ்ருங்கி) என்றும் ஒன்று சேர அழைப்பது வழக்கமாக இருந்திருக்கிறது. தெய்வத்தையும், கொம்பையும் ஒருங்கிணைத்து, அதாவது தலையில் கொம்புடன் தெய்வத்தை வருணிக்கின்ற மரபையும் உண்டாக்கியிருக்கிறது.


பிரஜாபதிக்கு, அக்னிக்கு, இந்திரனுக்கு, பரமேஷ்டிக்கு, என்று பலருக்கும், கொம்புகள் இருந்தன என்ற வர்ணனைகள் வேதங்களில் உள்ளன. கொம்பை ஒரு தாயத்தாகக் கருதி, நோய் நீக்க அது பயன்படட்டும் என்று சொல்லும் மந்திரங்கள் அதர்வண வேத்த்தில் இருக்கின்றன. (அ-வே 3-7).இந்தக் கருத்துக்களைப் பின்பற்றி எகிப்தியக் கடவுளர்களில் பலருக்கும் கொம்புகள் அமைக்கப்பட்டிருக்கலாம் என்று சொல்லும் வண்ணம் இந்த வர்ணனைகள், எகிப்தியக் காலக்கட்டத்துக்கு முன்பே பாரத நாட்டில் இருந்திருக்கின்றன. 


மாடுகளுக்கும், மனிதர்களுக்கும் கொம்புகள் இருப்பதாகச் சொல்லும் வேத மந்திரங்கள் இருக்கின்றன. இரண்டு தலை, நான்கு கொம்பு, 7 கைகள் என்றெல்லாம் வர்ணனைகள் வருவதைப் பார்க்கும் போது, இவற்றின் பிரதிபலிப்பு மொஹஞ்சதாரோ, ஹரப்பாவில் இருப்பது புலனாகிறது.


ஹரப்பாவில் காணப்படும் சில ஆண் உருவங்களுக்கு இரண்டு கொம்புகள் போன்ற அமைப்புகள் இருக்கின்றன. இது தலை அலங்காரமாகவும் இருக்கலாம், ஆனால் கொம்பு போன்ற அமைப்பில் அலங்காரம் செய்து கொண்டார்கள் என்பதை மறுக்க முடியாது.




 

பெண்கள் உருவப் பொம்மைகளிலும், அவர்களது தலை அலங்காரம் இரண்டு கொம்புகள் போலச் சித்தரிக்கப்படுகின்றன.



 


கொம்புகள் பற்றிய வேதக் கருத்துக்களைத் தெரிந்து கொண்ட பிறகு இவற்றைக் காணும் போது, இந்தப் பொம்மைகள் உயர்ந்த நிலையில் இருப்பவர்களைக் குறிக்கின்றன என்றும், அவர்கள் எதோ ஒரு விதத்தில் சிறப்பு பெற்றவர்களாக இருந்திருக்க வேண்டும் என்றும் புலனாகிறது.

 

இதில் நாம் கவனிக்க வேண்டிய மற்றொரு விவரம் என்னவென்றால், இப்படிப்பட்ட பொம்மைகள் தமிழ் மக்கள் மத்தியில் இல்லை. இவற்றைச் செய்தவர்கள் மொஹஞ்சதாரோ, ஹரப்பாவைச் சேர்ந்தவர்கள், அவர்கள் தமிழர்களாக இருந்திருந்தால், அவர்கள் ஆரியப் படையெடுப்பால் இடம் பெயர்ந்திருந்தால், தமிழ் நாட்டில் வந்த பிறகும் இவற்றைச் செய்து இருக்க வேண்டுமே?


இவ்வாறு காணப்படும் உருவப் பொம்மைகளில் ஒரு குறிப்பிட்ட உருவக் கருத்து மட்டுமே தமிழ் நாட்டில் காணப்படுகிறது. அது விளக்குப் பெண் பொம்மை ஆகும். மின் விளாக்கு அறிமுகமாகும் வரை, எண்ணை விளக்குகள்தான் தமிழ் நாடு உட்பட எல்லா இடங்களிலும் பயன்படுத்தப்பட்டன.  1000 வருடங்களுக்கு முன்பே தமிழ் நாட்டில் பல வகையான விளக்குத் தருமங்கள் செய்யப்பட்டிருக்கின்றன என்பதைப் பல கல்வெட்டுகள் மூலம் அறிகிறோம். அவற்றில் விளக்குகளது பெயர்களும் குறிக்கப்பட்டுள்ளன. குடம், அனந்தலை, நிலை, தூக்கு, பாவை என்று அவற்றின் உருவத்தாலும், தன்மையாலும் பலவிதமான பெயர்களுடன் விளக்குகளைத் தமிழ் நாட்டில் செய்திருக்கிறார்கள். அவற்றுள் பாவை விளக்கு என்பது, ஒரு பெண் கையில் விளக்கேந்தியது போன்ற அமைப்பில் இருக்கும். இவற்றைத் தமிழகக் கோவில் தூண்களில் காணலாம். சிற்பங்களாகவும் காணலாம் – கீழுள்ள படத்தில் இருப்பது போல.



ஹரப்பா பகுதிகளில் கிடைத்துள்ள உருவங்களில், தலையின் இருபுறமும் விளக்குகள் அமைந்த உருவங்கள் மட்டுமே காணப்படுகின்றன. அதாவது தலையில் இரண்டு கொம்பு வடிவமும் அங்கு காணப்படுகிறது. கொம்புகள் என்பவையே ஒரு உயர்வையும், ஒளியையும் பிரதிபலிப்பவை என்று வேத மரபில் சொல்லப்பட்டதை ஒட்டி, கொம்புகள் போல தலையில் இரண்டு விளக்குகள் அமைப்பும் அங்கு காணப்படுகின்றன.


 


மேலே உள்ள படத்தில் காணப்படும் பெண் உருவத்தின் தலையின் பக்கவாட்டில் இரண்டு கொம்புகள் போன்ற அமைப்புகள் இருக்கின்றன. இவை கொம்புகள் அல்ல. தீபம் ஏற்றும் வகையில் அமைக்கப்பட்ட விளக்குகள் என்பதைக் கீழுள்ள படத்திலிருக்கும் உருவத்தின் அமைப்பில் காணலாம்.



இப்படிப்பட்ட அமைப்பில் உள்ளவை பாவை விளக்குகள் போன்ற விளக்குகளே என்பதை உறுதிப் படுத்தும் வண்ணம் இன்றைக்கும், ஹரப்பா பகுதிகளில் உள்ளவர்கள் இதே அமைப்பில் விளக்குப் பாவைகளைச் செய்து வருகிறார்கள்.


கீழுள்ள படத்தில், தற்காலக் கை வினைஞர்கள் செய்து வரும் உருவங்களைப் பார்க்கலாம்.



இதைச் செய்தவர்கள், இதே ஹரப்பா முதலான பகுதிகளில், காலம் காலமாக வசித்து வருபவர்கள். இவர்கள் செய்யும் பாவை விளக்கு உருவங்கள் 5000 வருடங்களுக்கு முன்னால் செய்யப்பட்டவற்றை ஒத்து இருப்பதை இந்தப் படத்தின் மூலம் அறியலாம்.


இதன் மூலம் இரண்டு விவரங்கள் புலனாகின்றன.

(1)  ஹரப்பா முதலான பகுதிகளில் வாழும் மக்கள், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அங்குதான் வாழ்ந்து வருகின்றனர். இது சிலப்பதிகாரத்தில், கோவலனது பெற்றோர் காலம் காலமாகப் பூம்புகார்ப் பகுதியிலேயே வாழ்ந்து வந்தனர் என்று சொன்னதற்கு ஒப்பாக இருக்கிறது. (18 ஆம் கட்டுரை). ஹரப்பா பகுதி மக்கள், அதே பகுதியில் தொடர்ந்து வாழ்ந்து வந்திருந்தால்தான், இப்படி ஒரே விதமான அமைப்புகளில் விளக்குச் சிற்பங்களை உருவாக்கியிருக்க முடியும், பரம்பரை பரம்பரையாகத் தொடர்ந்து ஒரே தொழிலைச் செய்தும், ஒரே இடத்தில் வாழ்ந்தும் இருந்தால்தான், இவ்வாறு, இன்றும் செய்யக் கூடிய சாத்தியம் உருவாகும்.

.

(2)  ஹரப்பா பகுதிகளிலிருந்து தமிழ் நாட்டுக்கு இடப்பெயர்வு ஏற்பட்டிருந்தால், இந்த வகை உருவங்கள் தமிழ் நாட்டில் ஏராளமாகக் காணப்பட்டிருக்கும். இந்த விதமான விளக்கு உருவங்கள் தமிழ் நாட்டில் காண்பது அரிது. கேரளாவில் அனந்த பத்மநாப ஸ்வாமி ஆலயத்தின் வெளிச் சுற்றின் தூண் சிற்பங்களில் ஒன்றில் மட்டும் மேற்காணும் விளக்குப் பெண் அமைப்பைக் கண்டிருக்கிறேன்.  இந்தத் தூண்கள் சில நூறு ஆண்டுகளுக்கு முன் தான் உருவாக்கப்பட்டவை. அதனால் சமீப காலத்தில்தான், இந்த அமைப்பைப் பார்த்தோ, அல்லது கேள்விப்பட்டோ, அங்கு செதுக்கியிருக்கிறார்கள் என்று சொல்லலாம்.

தலையில் கொம்பு போலத் துருத்திக் கொண்டிருக்கும் மற்றொரு அமைப்பு, நாம் முன்பே ஆராய்ந்த வராஹ உருவமாகும். அவையும் ஒரு குறிப்பிட்ட அமைப்பு வேத வாழ்க்கையை நினைவு படுத்துகிறது. இந்த அமைப்பில் 3 தலைகள் உள்ளன.





மேலே உள்ள முத்திரைகளில் நாம் முன்பு சொல்லி வந்த வராஹத்திற்கு, ஒரு தலை - ஒரு கொம்பு என்பதற்குப் பதிலாக, மூன்று தலைகள், அவற்றில் இரண்டு கொம்புகள் என்று காணப்படுகின்றன. இவற்றில் உள்ள தலைகள், வராஹம், எருது, மான் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். இப்படிப்பட்ட முத்திரை, துவாரகையிலும் கிடைத்துள்ளன என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். இப்படிப்பட்ட முத்திரைகளை துவாரகை மக்கள் தங்கள் அடையாளங்களாக எப்பொழுதும் வைத்துக் கொண்டிருக்க வேண்டும் என்று ஹரிவம்சம் கூறுகிறது.


கங்கை நதிப் புறத்திலும், வட மதுரையிலும் வாழ்ந்த மக்களுக்குக் கம்சனது மாமனாரான ஜராசந்தனால் பல துன்பங்கள் ஏற்பட்டன. கிருஷ்ணன் கம்சனைக் கொன்றதால், ஜராசந்தனுக்குக்  கிருஷ்ணன் மீதும், அவனைச் சார்ந்த மக்கள் மீதும் தீராப் பகை இருந்த்து. அவனது தொல்லை தாங்காமல், கிருஷ்ணன் அந்த மக்களை அழைத்துக் கொண்டு துவாரகைக்கு வந்து, கடலிலிருந்து நிலப்பகுதிகளை மீட்டு, நகரத்தை நிறுவினான். அவனது மக்களது பாதுகாப்புக்காகவும், வெளிமனிதர்கள், வந்தால் அடையாளம் கண்டு கொள்ளவும் அடையாளச் சின்னங்களை அறிமுகப்படுத்தினான். அப்படி வைத்துக் கொண்ட ஒரு அடையாளச் சின்னமே மேலே காணப்படும் மூன்று தலை மிருகமாகும். (ஆதாரம் - History of Ancient India from 4250 BC to 637 AD, by J.P. Mittal)


இந்த விவரத்தின் மூலம், சிந்து சவெளி மக்களுக்கும், கிருஷ்ணனுக்கும் தொடர்பு இருந்தது தெரிகிறது. இதற்கிடையே, தாங்களும் அந்தப் பகுதியில் இருந்தோம் என்று திராவிடவாதிகள் சொல்லிக் கொண்டால் அதை என்னவென்று சொல்வது? கிருஷ்ண பக்தி என்று சொல்லி விட்டு விடுவோம்!


இப்படிப்பட்ட உருவ அமைப்புகள் உண்டாக ஒரு காரணம் வேத மதத்தில் இருக்கிறது. வேத வேள்விகளில் 'யஞ்ய புருஷன்" என்று வராஹப் பெருமானை வழிபட்டார்கள். அது விஷ்ணுவே என்றும் சொல்லப்பட்டுள்ளது. அந்த யஞ்ய புருஷனை பிரதிஷ்டை செய்யும் முறைகள் இருக்கின்றன என்பதை யஸ்கரும், சாயனரும் விவரித்துள்ளன்ர்.

யஞ்ய புருஷனான வராஹத்துக்கு 2 தலைகள், 4 கொம்புகள், 3 கால்கள், 7 கரங்கள் என்று இருந்தன. இவற்றில் உள்ளர்த்தமாகத் தத்துவங்கள் உள்ளன. தத்துவ வெளிப்பாட்டாக, இப்படி உருவம் செய்து, அதற்கு அலங்காரம் செய்து வேள்விகளில் வழிபட்டிருக்கின்றனர். இவற்றின் தாக்கம், அல்லது, வெளிப்பாடு கொம்புள்ள மிருகமாக மொஹஞ்சதாரோ, ஹரப்பா பகுதிகளில் உண்டாகியிருக்க வேண்டும், இந்தக் கொம்புள்ள மிருக உருவம் துவாரகையிலும் கிடைத்திருப்பதால், இந்த மூன்று இடங்களில் வாழ்ந்த மக்களுக்குள் ஒரு நெருங்கிய தொடர்பு இருந்திருக்க வேண்டும் என்று தெரிகிறது.

 


மோஹனஸ்ய தரு என்று மோஹன் எனப்படும், கிருஷ்ணன் பெயரைத் தாங்கியுள்ள மொஹஞ்சதாரோவில் ஏறு தழுவும் முத்திரை கிடைத்துள்ளாதாலும், ஹரப்பாவில் வழிபாட்டில் உபயோகப்படுத்தப்படும் சங்குகள் கிடைத்துள்ளதாலும், மூன்று தலை வராஹ புருஷனது முத்திரை துவாரகை உள்ளிட்ட இடங்களில் கிடைத்துள்ளதாலும், கிருஷ்ணன் காலத்தை ஒட்டி, கிருஷ்ணனைச் சேர்ந்த மக்கள் இந்த இடங்களில் வாழ்ந்திருக்க வேண்டும் என்று தெரிகிறது. அதை மேலும் உறுதி படுத்தும் ஒரு செய்தியை இந்த்த் தொடரின் போக்கில் பிறகு பார்ப்போம்.



இங்கு கொம்புள்ள தலை என்று இன்னுமொரு முக்கியமான உருவத்தைக் காட்ட வேண்டும். அந்த உருவத்தை PROTO SIVA  என்றும், வேத மரபில் சிவன் என்னும் கருத்து உண்டாகக் காரணமான உருவமாக இருக்கலாம் என்றும் ஆரய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். அதில் எந்த அளவு உண்மை இருக்கிறது என்பதையும், அந்த உருவத்தின் தாக்கம் எகிப்து வரை சென்றது என்பதையும் அடுத்தக் கட்டுரையில் காண்போம்.



6 கருத்துகள்:

  1. Very Nice Madam! You have answered my questions excellently. Also, from this post of yours i came to know a new fact that, the 'Swetha Varaha' roopam is what we worship. But i feel that this should have some distinct features from the existing 'Wild Boar'. Also as you have mentioned there should be only philosophical reasons for assuming a 'One-horned Varaha'. Also, the Tamil literatures identify 'Rishya-Shrunga' as 'Kalai-kottu Munivar' - 'Deer horned Saint'. Again the Tamil Culture also was of the same openion of addressing great men with Horns, but with the Horns of a Deer, i think as Deers were very common here! Also, i am very eager to know about the continuation of this post as it is very much obvious that the Roman, Celtic and Baltic people had "Jupitor/Jeus" as their God and he resembles very much with our 'Easwara'. Also, people say that 'Ethini' was someone like 'Ujjini Maha Kali'. Also i hope you might have come across a book named 'Eni Padigalil Mandargal' which shows exact pictures of what you say! But they are not that clear like your claims and you are really doing a very great service! Prayers for you!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Thanks.
      I have not read the book you have mentioned. Can you give the theme of that book or about the pics that you have spoken about?

      நீக்கு
    2. Dear Madam,

      Yeni Padigalil Mandargal is an excellent book. I think it is published by 'Vani' or 'Kalaimagal' pathippagam. I have read it many times. It elaborately tells about how all the world civilizations like Mayan, Roman, Inca, Baltic, Celtic and other Easter Civilizations were only the branches of our Bharatha Thoughts. It is a research book and quotes various scientists and eminent historians. It is written by a person named 'Shiva'. Mostly this should be a pseudonym and i think he should be a saintly person. I am trying the maximum to give you the number of the publications and if possible to send you the book. I have read it very long back and found your article is going in the same way of that book. But you are concentrating more on the Mother Culture and that book compares all world ancient Civilizations and people's beliefs. It stats with King Ramses of Egypt and even before his time and travels through all major Civilizations with authentic proofs and hence proves that there was only one religion that is the Vedic Religion of Sanatana Dharma and all others are just wings to it. It affirms the same excellently. Please read that book.

      நீக்கு
    3. Thanks for the information.
      This site also has compilations of all the news published on Hindu roots throughout the world.

      http://www.hinduwisdom.info/index.htm

      நீக்கு
  2. Yeni Padigalil Mandargal is by Shiva who was the younger brother of the kanchi Paramacharya Sri Chandrasekarendra Saraswati Swamigal. Sivan Sir as he was popularly called was himself a great yogi and a saint.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. I think you are the one who left a similar comment in my English blog. I have not read this book by Sivan Sir. i would look for it and read. Thanks.

      நீக்கு