ஞாயிறு, 9 பிப்ரவரி, 2020

ராமன் பரம்பரையில் வந்தவர்கள் சோழர்கள்- இலக்கியச் சான்றுகள் (பகுதி-2) (காணொளி)


சோழர்கள் ராமன் பரம்பரையில் வந்தவர்கள் என்று சொல்லும் இலக்கியச் சான்றுகளைக் காட்டும் இந்தக் காணொளி, அந்தச்  சான்றுகள் தசரதன் பெயர்க் காரணம், முதுமக்கள் சாடியை முதலில் அறிமுகப்படுத்தியவன் நாபாகன் என்னும் இக்ஷ்வாகு அரசன்தான் என்பது போன்ற செய்திகளையும் தருகிறது.



ராமனைக் குறிக்கும் இலக்கியச் சான்றுகள் அவனைத் தூங்கெயில் இருந்தவன் என்றே கூறுகிறது. இதற்கு, தொங்கும் மதிலை அழித்தவன் என்று பொருள். புறநானூறு முதல் உலா இலக்கியங்கள் வரை சொல்லப்படும் இந்தக் கருத்து, மூன்று மதில்களை உடைய ராவணன் நகரத்தைக் குறிக்கிறது என்ற செய்தியை ஆதாரத்துடன் விளக்குகிறது இந்தக் காணொளி

மேலும் திரேதா யுகத்தில் பிறந்த ராமன் எவ்வாறு சோழர் பரம்பரையினன் ஆனான் என்பதையும், துஷ்யந்தன் மகன் பரதனுக்குப் பிறந்த முதல் சோழன் எவ்வாறு ராமன் பரம்பரையுடன் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டான் என்பதையும் விவரிக்கிறது.

அந்த விவரங்கள் மூலம் தமிழகம் உட்பட நம் பாரத தேசமே தந்தை வழியில் ஒன்று பட்ட மக்களைக் கொண்டது என்பதையும் விளக்குகிறது.







ராமன் பரம்பரையில் வந்தவர்கள் சோழர்கள்- கல்வெட்டு ஆதாரங்கள் (பகுதி-1) (காணொளி)

ராஜராஜன் தமிழன் தானா என்னும் முந்தின காணொளியைத்  தொடர்ந்து, இந்தக் காணொளியை நான் வெளியிட்டுளேன். இதில் சோழர்கள் ராமன் பரம்பரையில் வந்தவர்கள் என்று சொல்லும் வீர ராஜேந்திரன் கல்வெட்டுச் செய்திகளைக் கொடுத்துள்ளேன்.



வடமொழியில் 419 வரிகளில் எழுதப்பட்டிருக்கும் இந்தக் கல்வெட்டில் சுதாஸ், சம்பூகன் போன்றவர்களைக் குறித்தும் எழுதப்பட்டுள்ளது. ராமனைப் பற்றி மிக விரிவாக எழுதப்பட்டுள்ளது. அந்த ராமன் வம்சத்தில் சோழன் (முதல் சோழன்) பிறந்தான் என்று சொல்லப்பட்டுள்ளது.


சோழன் தென் திசை நோக்கி வந்தான் என்றும் காவிரி பாயும் இடத்தில் குடியேறினான் என்றும், ஆரிய வர்த்தத்திலிருந்து பிராம்மணர்களை வரவழைத்துக் குடியேற்றினான் என்றும் கல்வெட்டில் எழுதப்பட்டுள்ளது. இது தொடர்பாக உள்ள மரபணு ஆராய்ச்சிகளைக் காட்டி, பிராம்மணர்கள் வந்தேறிகள் அல்ல என்றும், ஆதிக் குடிகளிலிருந்துதான் வந்தவர்கள் என்றும் நிரூபித்துள்ளேன். பார்க்கவும், பகிரவும். 

தஞ்சை குடமுழுக்கு சர்ச்சை: ராஜராஜ சோழன் தமிழன் தானா? (காணொளி)

தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு நெருங்கி கொண்டிருக்கிறது. இந்த வேளையில் குடமுழுக்கை சமஸ்க்ருதத்தில் செய்யக்கூடாது என்றும் தமிழில்தான் செய்ய வேண்டும் என்றும் ஆர்பாட்டம் செய்து கொண்டிருக்கிறார்கள். இது தொடர்பான விளக்கங்களைக் காணொளி மூலமாக மக்களுக்கு எடுத்துச் சொல்ல விரும்புகிறேன். அந்த முயற்சியின் முதல் பகுதியாக ராஜராஜன் தமிழன் தானா என்ற கேள்விக்கு இந்தக் காணொளி விடை கொடுக்கிறது.


இதில் முதலாவதாக தஞ்சாவூர் என்பதே தமிழ்ச் சொல்லா என்று ஆராய்ந்து அது தஞ்சலா என்னும் சாதகப் பறவையின் பெயரால் அழைக்கப்படுகிறது என்று தெளிவு படுத்தி உள்ளேன். தஞ்சலா என்பது சமஸ்க்ருதப் பெயர்!

அடுத்ததாக சோழர் வம்சாவளியை ஆராய்ந்துள்ளேன். ராஜராஜன் மகன் முதலாம் ராஜேந்திரனின் ஆறாம் ஆண்டில் வெளியிடப்பட்ட திருவாலங்காடு செப்பேட்டில் கொடுக்கப்பட்டுள்ள சோழர் வம்சாவளியை சுட்டிக் காட்டியுள்ளேன்அதில் சோழன் பரம்பரை மனுவில் ஆரம்பித்து ராமனின் வம்சாவளியுடன் ஒத்துப் போவதைக் காட்டியுள்ளேன். அந்த வம்சாவளியில் சிபியும், அவனுக்குப் பின்னாளில் துஷ்யந்தனும் வருகிறார்கள். துஷ்யந்தன்-சகுந்தலைக்குப் பிறந்த மகனே பரதன். அவனுக்குப் பிறந்த மகன் சோழ வர்மன் என்பவன். அவனே சோழ தேசத்தையும் சோழ வம்சத்தையும் உருவாக்கினவன் என்பதையும் சுட்டிக் காட்டியுள்ளேன்.

தொடர்ந்து சோழன் என்றால் என்ன அர்த்தம் என்று ஆராய்ந்துள்ளேன். சோழன் என்பதற்குத் தமிழில் பொருள் இல்லை என்பதையும் அது சமஸ்க்ருதத்திலிருந்து வந்தது என்பதையும் நிரூபித்துள்ளேன்.
இந்த ஆதாரங்களின் மூலம் சோழர்கள் வடக்கிலிருந்து வந்தவர்கள் என்பது தெளிவாகிறது. அவ்வாறு வந்தவர்களைத் தமிழன் என்பதா? வந்தேறி என்பதா? காணொளியைப் பார்க்கவும். பகிரவும்.