வியாழன், 30 ஆகஸ்ட், 2012

103. பாரதத்திலிருந்து களவாடப்பட்ட யூத, கிருஸ்துவ நக்ஷத்திரங்கள்!


 

கிருஸ்துவத்திலும், யூத மதத்திலும் நக்ஷத்திரக் குறிக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. இவர்களைப் பின்பற்றி இஸ்லாத்திலும் நக்ஷத்திரக் குறியீடு முக்கிய இடம் வகிக்கிறது. நக்ஷத்திரங்களைத் தினம் தோறும் மனிதன் பார்த்ததினால் இப்படி அதற்கு முக்கியத்துவம் ஏற்பட்டது என்று சொல்லலாம். ஆனால் அப்படிச் சொன்னால், அப்படிப்பட்ட குறியீடுகள் சிந்து சமவெளிப் பகுதியில் ஏன் காணப்படவில்லை என்று கேட்கத் தோன்றுகிறது. சிந்து சமவெளியை ஆராய்ந்த பெரும்பாலான ஆராய்ச்சியாளர்கள் மேற்கூறிய மதக் கொள்கைகளில் வளர்ந்தவர்களே. அதனால்தானோ என்னவோ அவர்கள், நக்ஷத்திரக் குறியைச் சிந்து சமவெளியில் தேடுகிறார்கள். சிந்து சமவெளி முத்திரைகளில் பரவலாகக் காணப்படும் மீன் போன்ற அமைப்பில் இருக்கும் உருவத்தை, மீன் என்றே தமிழில் அழைத்து, அத்துடன் நில்லாமல், மீன் என்ற சொல் தமிழில் விண்மீனுக்கும் பொருந்தும், எனவே இந்த மீன் சின்னங்கள் நக்ஷத்திரத்தையே குறிக்கின்றன என்றும் சொல்கிறார்கள்.


 


 

முதலில், மீன் வடிவ அமைப்பை ஏன் தமிழ்ப் பெயர் என்று சொல்ல வேண்டும்? மீன் என்னும் சொல் சமஸ்க்ருதத்திலும் உண்டல்லவா? மீன ராசி என்கிறோமே அது சமஸ்க்ருதச் சொல். மீன் என்பது தமிழுக்கும், சமஸ்க்ருதத்துக்கும் பொதுவான சொல். ஆனால் அது தமிழ்ச் சொல் என்று சொல்லி, அதைக் கொண்டு அங்கிருந்தவன் தமிழன், திராவிடன் என்று சொல்வது சரிதானா?

 

சமஸ்க்ருதத்தில் அந்தச் சொல்லின் பயன்பாட்டை எடுத்துக் கொள்ளாமல், அப்படிப்பட்ட பயன்பாட்டில் மீன் என்பது எங்கேனும் சம்பந்தப்படுகிறதா என்று ஆராயாமல், மீன் வடிவம் தமிழ்ச் சொல்லைக் குறிக்கிறது என்று சொல்வது சரியல்ல.

 

அது மட்டுமல்ல, இந்தக் குறிகள் கிடைத்துள்ள ராஜஸ்தான் உள்ளிட்ட பகுதிகள், மத்ஸ்ய தேசம் (மத்ஸ்யம் என்றால் மீன்) என்று அழைக்கப்பட்டது. அரசாட்சி இருந்த காலத்தில் ஒவ்வொரு நாட்டுக்கும், குலத்துக்கும் சின்னங்கள் இருந்தன. ஒற்றை மீன், இரட்டை மீன் போன்றவை அரசச் சின்னங்களாகவும், அஷ்ட மங்கலச் சின்னங்களாகவும் நம் நாட்டில் இருந்திருக்கின்றன. மீன் உருவத்தை ஆன்மீகச் சின்னமாக புத்தர்களும், ஜைனர்களும் கருதினார்கள். உண்மையில் பாரதப் பகுதியில் மீன் சின்னத்துக்குக் கொடுக்கப்பட்ட புனித்த்தைக் கிருஸ்துவம் கடன் வாங்கிக் கொண்டது. அதைப் பிறகு பார்ப்போம்.

 

இங்கு சொல்ல வருவது சிந்து சமவெளி முத்திரைகளில் காணப்படும் மீன் உருவம் என்பது தமிழ்ச் சொல்லைக் குறிக்கிறது என்று சொல்வது சரியல்ல என்பதே, ஆரியதிராவிடப் போர் என்னும்  ஒரு கருத்தை முன்கூட்டியே வைத்துக் கொண்டு, அதற்கு ஆதாரம் தேடவே, உண்டான கருத்து என்றே தோன்றுகிறது. அது மட்டுமல்லாமல், அந்தச் சொல்லைக் கொண்டு நக்ஷத்திரத்தைத் தொடர்புபடுத்துவது, ஆபிரஹாமிய மதங்களில் காணப்படும் நக்ஷத்திரச் சின்னங்களால் ஏற்பட்ட தாக்கமே என்று கருத வேண்டியிருக்கிறது.

 

உண்மையில் மீன் என்ற தமிழ்ச் சொல்லை நினைவு படுத்தும் விவரங்கள் வேறு இடங்களில் இருக்கின்றன. ஒன்று ராஜஸ்தானில் செல்லும் ஆரவல்லி மலைத்தொடரில் வசிக்கும் மீனா என்றழைக்கப்படும் மக்கள். மற்றொன்று மீனோ அல்லது மீனோவர்கள் என்று சொல்லப்படும் 5000 வருடங்களுக்கு முற்பட்ட ஒரு இனம். மத்தியத்தரைக்கடலில் அமைந்துள்ள கிரீடி (CRETE)  என்னும் இடத்தில் இந்த மக்களின் தொன்மையைக் காட்டும் சின்னங்கள் இருக்கின்றன. அவற்றையும், ஆரவல்லியின் மீனா மக்களையும், அவர்களுடன் தமிழ் நாட்டு மீனையும் சேர்த்து ஆராயலாமே.

 

அதைப் பற்றி இந்தத் தொடரின் போக்கில் பிறகு ஆராய்வோம், ஏனெனில் இவர்களுக்கிடையே ஒரு முக்கிய ஒற்றுமை இருக்கிறது. இந்த இரு வகை மக்களும் (மீனா, மீனோவன்) மலை உச்சி மீதுதான் வசித்தார்கள். மீனா மக்கள் இன்னும் அப்படித்தான் வசிக்கிறார்கள். மீனா மக்களின் வாழ்க்கை முறை தமிழில் குறிஞ்சி நில மக்களின் வாழ்க்கையை நினைவு படுத்துகிறது. குறிஞ்சி மக்கள் மலை மேலும், மலையைச் சார்ந்தும் வாழ்ந்தவர்கள். மாலத்தீவு தொடங்கி, லக்ஷத்தீவுகள் வாயிலாகச் செல்லும் ஒரு ஆழ்கடல் மலைத்தொடரின் தொடர்ச்சிதான் ஆரவல்லி மலையாகும். இந்தத் தொடரின் பல பகுதிகள் 3000 வருடங்களுக்கு முன்பு வரை கடல் மட்டத்துக்கு மேலிருந்திருக்கின்றன. அதாவது தென்னன் தேசத்தின் ஏழு குன்ற நாடுகள் இந்த ஆரவல்லி மலையின் தொடர்ச்சியில் ஆங்காங்கே கடலில் இருந்திருக்கிறது. சுற்றிலும் கடல் இருக்கவே அந்த மக்கள் (குன்ற நாட்டு மக்கள்) பாதுகாப்புக்காக மலை உச்சியில் வாழ்ந்திருக்கிறார்கள். கடலைச் சார்ந்து மீன்பிடித் தொழிலும் செய்திருகிறார்கள். தென்னன் தேசத்தில் நெய்தல் என்ற தனி நிலப்பிரிவு கிடையாது. ஆனால் குன்ற மக்களும், குணகரை மக்களும் கடல் சார்ந்த வாழ்க்கையை (மீன் பிடித்தல்) வாழ்ந்திருக்க வேண்டும். இந்த மக்களுக்கும், ஆரவல்லி மீனா மக்களுக்கும் உள்ள ஒற்றுமையையும், தொடர்பையும் ஆராய்ந்தால் பல ஆச்சரியங்கள் கிடைக்கும்.

 

அதுபோல மீன என்னும் சொல்லோசையுடன் கூடிய பெயரைக் கொண்ட மக்கள் கிரீடி தீவில் குறைந்தது 3000 ஆண்டுகளுக்கு முன்பே வசித்திருக்கிறார்கள். இந்த ஒற்றுமை பெயரில் மட்டுமல்ல, வாழ்ந்த இடத்திலும் இருக்கிறது. அந்த மக்களும் மலை உச்சியில்தான் வாழ்ந்திருக்கிறார்கள் என்னும் விவரம் நம் ஆராய்ச்சிக்குத் தூண்டு கோலாகிறது. அங்கு என்னதான் இருக்கிறது என்று பார்த்தால், பாரதப் பண்பாட்டுக்கும், அந்த மக்களுக்கும் ஒற்றுமை இருப்பது தெரிய வருகிறது. அந்த விவரங்களைத் தனிக் கட்டுரையாக இடுகிறேன். இங்கு வாசகர் ஆர்வத்துக்குத் தீனி போட ஒரே ஒரு ஒற்றுமையை மட்டும் காட்டி விட்டு, மேலே தொடர்கிறேன்.

 

மீனோவ மக்கள் செய்த பொம்மைகள் நிறைய கிடைத்துள்ளன. அவை இப்படி இருக்கிறன.


நன்கு அலங்கரிக்கப்பட்ட பெண் உருவம். ஆனால் இது பொம்மை என்று சொல்லும் வண்ணம் இடுப்புக்குக் கீழே சிலிண்டர் வடிவம். கைகள் இரண்டையும் மேல் நோக்கித் தூக்கி வைத்துக் கொண்ட அமைப்பு. பிற பொம்மைகளும் இப்படித்தான் கையைத் தூக்கிக் கொண்டு 'போஸ்' கொடுக்கின்றன.

 

இவற்றைப் பார்த்த உடனேயே நமக்கு தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகளும், பொம்மலாட்ட பொம்மைகளும் நினைவுக்கு வருகின்றன அல்லவா? பொம்மலாட்ட பொம்மைகளது கையில் நூலை இணைத்து, திரைக்குப் பின்னிருந்து இயக்குவார்கள். அதனால் பெரும்பாலும் அவற்றின் கைகள் தூக்கின அமைப்பில்தான் இருக்கும்.

 

சாம்பிளுக்கு நம் நாட்டு பொம்மலாட்ட பொம்மைகளைப் பாருங்கள்.

 


 

இதைப் பார்த்தவுடன், மீனோவாவை நாம் இன்னும் ஆராய வேண்டும் என்பது தெளிவாகிறது. இவ்வாறு பல தொடர்புகள் எங்கெங்கோ செல்லுகையில், சிந்து சமவெளியில் காணப்படும் மீனை மீனாகப் பார்க்காமல், அதில் நக்ஷத்திரத்தைப் பார்ப்பது முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட மன நிலையைக் காட்டுகிறது.

 

இந்த மன நிலையைச் சொல்லிக் குற்றமில்லை. ஏனெனில் பைபிளில், கிருஸ்து பிறந்த போது ஒரு நக்ஷத்திரம் தோன்றி அவர் பிறந்த இடத்தை அடையாளம் காட்டியது என்ற கருத்து உள்ளது. ஆனால் எங்கெங்கெல்லாம் முடியுமோ, அங்கெல்லாம் நக்ஷத்திரங்களை உருவகப்படுத்தி, இதுவரை பல நக்ஷத்திரங்களைக் கிருஸ்துவர்கள், உருவாக்கி இருக்கிறார்கள். கிருஸ்துமஸ் மரத்தை அலங்கரிக்க 4-முனைகள் கொண்ட நக்ஷத்திரம் என்று 4 முனைகளில் ஆரம்பித்து, 5 முனை, 6 முனை, 8 முனை, 9 முனை, 12 முனை கொண்ட நக்ஷத்திரங்கள் என்று பல விதமான நக்ஷத்திரங்கள் கிருஸ்துவத்தில் உள்ளன.

 

இவையெல்லாம் சென்ற 500 முதல் 1000 வருடங்களுக்குள்தான் உருவாயின. இவை எல்லாம் உருவகங்களாக இருக்கின்றன. இவ்வாறு நக்ஷத்திரமாக உருவகிக்கக் காரணம், 1000 வருடங்களுக்கு முன் 6 முனை கொண்ட நக்ஷத்திரக் குறி கெல்டிக் நாடுகளில் கோலோச்சிக் கொண்டிருந்தது. இவற்றுக்கு முன்னோடியாக யூதர்களது 'ஸ்டார் ஆஃப் டேவிட்' (STAR OF DAVID) என்ற கருத்து யூதர்கள் பைபிளில் இருந்தது. அதற்குக் கொடுக்கப்பட்ட வடிவம் இப்படி இருந்தது.

 


 

இதைக் கொண்டே நாஜி ஹிட்லர், யூதர்கள் அனைவரும் மஞ்சள் நிறத்தில் நக்ஷத்திரக் குறியில் தங்கள் உடையில் அணிய வேண்டும் என்று வற்புறுத்தினான். யூதர்களை வெறுத்த அவனுக்கு, அவர்களை எளிதில் அடையாளம் காண இந்தக் குறி பயன்பட்டது.

 


 

இந்த நக்ஷத்திரச் சின்னத்தைப் பற்றி சென்ற 1000 வருடங்களுக்கு மேலாகவே ஐரோப்பியர்களுக்கிடையே குழப்பமான எண்ணம் இருந்து வந்திருக்கிறது.

டேவிடின் நக்ஷத்திரம் என்றழைக்கப்பட்ட இந்தச் சின்னம் பாதுகாப்பு தரும் தாயத்தாகக் கருதப்பட்டு வந்தது. 1000 வருடங்களுக்கு முன்னால் இந்தச் சின்னத்தை, சனி கிரகத்தின் அடையாளம் என்றும், அதைத் தாயத்தாகவும் மக்கள் அணிந்து வந்தார்கள். ஆனால் இந்தச் சின்னத்தைக் கொண்டு சூனியம் வைத்தல், பில்லி சூனியம் என்று மக்களைப் பயமுறுத்தும் வண்ணம் 1000 வருடங்களுக்கு முன் ஒரு சூழ்நிலை இருந்தது. சனி கிரகம் என்பவன் சாத்தான் ஆனான். இந்த்ச் சின்னத்தில் 6,6,6 பக்கங்கள் இருக்கின்றன என்றும், 666 என்பது சாத்தானைக் குறிக்கும் என்ற எண்ணங்கள் எழுந்தன.


 


 

இந்த சமயத்தில்தான் சாத்தானை அழிக்கிறோம் என்ற பெயரில், சூனியக் காரர்கள் என்று பலரையும் கொன்றார்கள். அதுவரை மக்களிடையே புழங்கி வந்த பல நம்பிக்கைகளையும், வழிபாட்டு முறைகளையும் அழித்தார்கள். அது மட்டுமல்ல, கிரகங்களைப் பற்றியும் உலகம் சூரியனைச் சுற்றி வருகிறது என்றும் விஞ்ஞான ரீதியாகச் சொன்னவர்களையும் கூடக் கொடூரமாகக் கொன்றார்கள். இதையெல்லாம் கிருஸ்த்துவத்தின் பெயரில், கிருஸ்துவர்கள் செய்தார்கள். ஆனால் கிருஸ்துவர்களால் நக்ஷத்திரத்தை விட முடியவில்லை. 6 முனை நக்ஷத்திரம், யூதர்கள் நக்ஷத்திரமாக இருந்தாலும், அது சாத்தான் என்று பெயர் பெற்று விட்ட்தால், அப்பொழுது புழக்கத்தில் இருந்த இன்னொரு நக்ஷத்திரமான 5- முனை நக்ஷத்திரத்தை, ஏசு பிறந்த போது வழிகாட்டிய நக்ஷத்திரமாக ஆக்கிக் கொண்டார்கள்.

ஸ்டார் ஆஃப் பெத்லஹேம் (STAR OF BETHLEHEM) என்று பெயர் சூட்டப்பட்ட அது கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

 


 

இதையெல்லாம் இங்கு சொல்வதற்குக் காரணம், இந்த ஸ்டார் ஆஃப் பெத்லெஹேம் என்பது நாம் முந்தின கட்டுரையில் காட்டிய – தீபஸ் எழுத்துடன் கூடிய கேர்னூனோஸின் தலையில் உள்ள நக்ஷத்திரமே.

 


 

ஸ்டார் ஆஃப் பெத்லெஹேம் என்பதே யூதப் புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டது.

யூதர்களது 'புக் ஆஃப் நம்பர்ஸ்' (BOOK OF NUMBERS)  என்னும் புத்தகத்தில் ஸ்டார் ப்ராஃபஸி (STAR PROPHECY) என்ற ஒன்று காணப்படுகிறது. அதில் ஒரு நக்ஷத்திரத்தின் வரவையும், அதனால் மக்களுக்கு ஏற்படப்போகும் நன்மையைப் பற்றியும் ஒரு எதிர்கால கணிப்பு சொல்லப்பட்டுள்ளது. (There shall come a Star out of Jacob, and a Sceptre shall rise out of Israel, and shall smite the corners of Moab, and destroy all the children of Sheth.)

 

இது 2000 வருடங்களுக்கு முன்னால், யூதர்கள் கோவில் இடிக்கப்பட்டு, பல எதிர்ப்புகளுக்கிடையே அவர்கள் அல்லல் பட்டபொழுது அவர்களுக்கு ஊக்கம் தர அவர்களது போதகர்களால் சொல்லப்பட்டது. இங்கு நக்ஷத்திரம் என்பது நம்பிக்கை நக்ஷத்திரம் என்ற பொருளில் சொல்லப்பட்டுள்ளது.

 

ஆனால் அதை ஏசுவுக்கு எடுத்துக் கொண்டு, ஏசு பிறந்த பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு, அவர் பெயரைக் கொண்டு, கிருஸ்துவம் என்னும் ஒரு புது மதத்தை உருவாக்கி, இந்த நக்ஷத்திரத்தையும் சுவீகரித்துக் கொண்டு விட்டார்கள். தங்களை முன்னிறுத்திக் கொண்ட கிருஸ்துவ போதகர்களால் இந்த 5 முனை நக்ஷத்திரச் சின்னம் பிரபலப்படுத்தப்பட்டது. அதற்குப் பிறகு அதன்முனைகளுக்கு பல அர்த்தங்களைக் கற்பித்துக் கொண்டார்கள். ஆனால் இந்த நக்ஷத்திரத்தின் ஆரம்பம் யூத நம்பிக்கைகளில்தான் என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

 

யூதர்களுக்காகச் சொல்லப்பட்ட நக்ஷத்திர ஆரூடம் அவர்களுக்கு நடந்தாற்போல் போலத் தெரியவில்லை. அவர்களுக்கு ஒரு நம்பிக்கை நக்ஷத்திரம் வரவில்லை. ஆனால் அவர்கள் அதுவரை அணிந்து வந்த டேவிட்டின் நக்ஷத்திரம், பில்லி சூனியத்துக்குத்தான் பெயர் பெற ஆரம்பித்தது. அந்த நக்ஷத்திரத்தை அணிந்தவர்கள் சூனியம் வைப்பவர்கள் என்று கருதப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள்.

 

யூதர்களுடைய நக்ஷத்திரத்தை ஆராய்ந்தால், அது சனி கிரகத்துக்கான தாயத்தாக, ஒரு காப்பாக அணியப்பட்டது என்று தெரிகிறது. சனிக்கும் அந்த 6- முனை நக்ஷத்திரத்துக்கும் என்ன தொடர்பு? அப்படி ஒரு தொடர்பை அவர்களுக்கு யார் சொன்னது என்று பார்த்தால், அங்கே வேத மதத்தின் தொடர்பைக் காணலாம்.

 

நான்கு வேதங்களில், முதல் மூன்றும் மந்திர அடிப்படையைக் கொண்டவை. நான்காவது வேதமான அதர்வண வேதம் யந்திர, தந்திர அடிப்படையைக் கொண்டது. பலவிதமான தாயத்துகள், பில்லி சூனியத்திலிருது பாதுகாப்பு போன்றவற்றுக்கான வழிமுறைகள் அதர்வண வேத்த்தில் காணப்படுகின்றன. அதில் யந்திர வழிபாட்டுக்கு அடிப்படையாக்க் குறிகளும் சின்னங்களும் உள்ளன. அவற்றில் அதிகம் காணப்படுவது கோண அமைப்புகளைக் கொண்ட பலவிதமான நக்ஷத்திரங்களே.

 

வேத மரபில் பல நக்ஷத்திரங்கள் இருந்தாலும் அவற்றைக் கல்லிலும், பொது இடத்திலும் செதுக்க மாட்டார்கள், அல்லது கழுத்தில் போட்டுக் கொள்ளும் தாயத்தாகவும் அணிய மாட்டார்கள். அவற்றைப் புனிதமாகக் கருதி பூஜையில் வைத்து வழிபடுவார்கள். இந்தியாவில் எந்த இட்த்திலுமே இந்த நக்ஷத்திரங்களைப் பொதுவில் பார்க்க முடியாது. வழிபாட்டுத் தகடுகளில்தான் பார்க்க முடியும். சிந்து சமவெளியில் நக்ஷத்திரக் குறி காணப்படாததற்கு இது ஒரு முக்கியமான காரணம்.

 

ஒவ்வொரு விதமான நக்ஷத்திர அல்லது கோண அமைப்புக்கும் ஒவ்வொரு அர்த்தம் உண்டு. அவ்வவற்றின் மந்திரங்களைக் கொண்டு அவற்றில் சக்தியை ஏற்றுவார்கள். தங்களைக் காப்பாற்றுவதற்காகவும், எதிரிகளை அழிப்பதற்காகவும், விரும்பியதைப் பெறவும் குறிப்பிட்ட சக்திகளைக் குறிப்பிட்ட யந்திர உருவத்தின் மூலம் பெற்றார்கள். அப்படிப்பட்ட சக்திகளை தவயோகத்தின் மூலமும் பெற்றார்கள். இவ்வாறு இருந்த பல யந்திரச் சின்னங்களுக்கு அடிப்படையான உருவம் 6 முனைகள் கொண்ட நக்ஷத்திரமே. அதிலும், சனி கிரக தேவதையை அந்த நக்ஷத்திரம் வடிவம் கொண்ட யந்திர வடிவில்தான் பூஜித்தார்கள்.

இதைக் காட்ட, திருவண்ணாமலை மாவட்ட்த்தில் இருக்கும் ஏரிக்குப்பம் என்னும் ஊரில் இருக்கும் சனி பகவான் சிலையைக் குறிப்பிடலாம். அதில் இந்த நக்ஷத்திர உருவம் செதுக்கப்பட்டிருக்கும்.

 


 

 

இந்த கோண வடிவம் ஏதோ கற்பனையில் உருவாக்கப்பட்டதல்ல. இன்று விஞ்ஞானம் வளர்ந்துவிட்ட நிலையில், அந்த விஞ்ஞானம் காட்டும் உண்மைகள், இதை ஒத்தே இருக்கின்றன.

 

சனி கிரகம் என்பது சூரியனிலிருந்து 6 ஆவது கிரகமாகும். 666 என்ற குறியீட்டின் தொடர்பை சனியின் வட துருவப் பகுதியில் காணலாம். சமீபத்தில் காசினி விண்கலம் சனி கிரகத்தருகே சென்ற போது அனுப்பின படங்கள் என்றோ அதர்வண வேத அடிப்படையில் உருவாக்கப்பட்ட யந்திர அமைப்பை ஒத்திருக்கிறது.

 

சனியில் வட துருவ உச்சியில் அதனுடைய காற்று மண்டலம் உண்டாக்கும் கொந்தளிப்பால் உருவாக்கப்படும் அமைப்பைக் கீழே காணலாம்.

 

 

 

நடுவில் உள்ள அமைப்பு 6 பக்கங்களைக் கொண்ட HEXAGRAM ஆகும்.

அந்த 6 பக்கங்களையும் வெளி எல்லையாக்க் கொண்டு, நடுவில் ஒரு நக்ஷத்திரம் வரைந்தால் அது 6 முனைகள் கொண்ட நக்ஷத்திரமாகத்தான் அமையும். சனி கிரக துருவப் பட்த்தில் அவ்வாறு வரைந்த அமைப்பைக் கீழே காணலாம்.




 

இதைப் பார்க்கும் பொழுது, வேத முன்னோர்கள், மிகச் சரியாகத்தான், சனி யந்திரத்தைப் படைத்திருக்கிறார்கள் என்று தெரிகிறது. இந்தியாவில் சனி பிரதிஷ்டை செய்த இடங்களில் இந்த அமைப்பில் யந்திரம் இருக்கிறது. சனிக்கும், நக்ஷத்திரத்துக்கும் உள்ள தொடர்பு பாரத நாட்டில் உண்டாகி, அதுவே வழிபாட்டுச் சின்னமாகவும் ஆகியிருக்கிறது. இந்த நக்ஷத்திரத்தை எவ்வாறு அமைக்க வேண்டும், அதில் எவ்வாறு சக்தி ஏற்ற வேண்டும் என்பதெல்லாம் பாரத நாட்டவர்களுக்குத்தான் தெரியும்.

 

இதே நக்ஷத்திரம் டேவிடின் நக்ஷத்திரம் என்றும், சனிக்குரியது என்றும் யூதர்கள் சொன்னது 1000 முதல் 2000 ஆண்டுகளுக்குள்தான். அதற்கு முன்பே இதைக் கிரக வழிபாடாக பாரத மண்ணில் செய்திருக்கிறார்கள் என்பதை பழம் ஜோதிட நூல்கள் மூலம் தெரிந்து கொள்கிறோம். இதன் மூலம் இந்தக் கருத்து எங்கிருந்து எங்கு சென்றது என்பதை ஊகிப்பதில் தவறே ஏற்பட முடியாது.

 

பாரதம் என்பது ஒரு திறந்த புத்தகமாகத்தான் இருந்திருக்கிறது. மிலேச்சர்களாக இருந்தாலும் அவர்கள் பாரத்த்துக்கு வந்து போயிருக்கின்றனர். ராமன் பிறப்பதற்குக் காரணமான புத்திர காமேஷ்டி யாகத்திற்கு மிலேச்ச அரசர்கள் வந்திருந்தனர் என்று வால்மீகி கூறுகிறார். மிலேச்சர்களாக இருந்தாலும் அவர்கள் சொன்ன கருத்துக்கள் சிறந்தவையாக இருந்தால் அவற்றை ஏற்றுக் கொள்வோம் என்று 1500 ஆண்டுகளுக்கு முன் வராஹமிஹிர்ர் கூறியுள்ளார். யவன ரிஷி, ரோமக ரிஷி, பௌலிஸ ரிஷி போன்றோர் மிலேச்ச ரிஷிகளே. அவர்களுள் ரோமக ரிஷி தமிழ் போற்றும் சித்தர்களுள் ஒருவராக இருந்திருக்கிறார் என்பதை 56 ஆவது கட்டுரையில் கண்டோம். இதன்  மூலம் பாரத்துக்கு வந்த வெளி நாட்டவர் (மிலேச்சர்கள் என்றழைக்கப்பட்டவர்கள்), இங்கிருந்து வேதக் கருத்துக்களைத் தங்கள் நாட்டுக்கு எடுத்துச் சென்றனர் என்று தெரிகிறது.

 

அது மட்டுமல்ல. 2700 ஆண்டுகளுக்கு முன்பே தக்ஷசீலம் என்னுல் இடத்தில் ஒரு உலகப் பல்கலைக் கழகம் இருந்திருக்கிறது. இந்த இடத்தைப் பற்றி 13, 34 ஆவது கட்டுரைகளில் பார்த்தோம். இது இன்றைய பாகிஸ்தானில் இருக்கிறது.



 

அங்கே 64 கலைகள் உட்பட வேதாந்தம், விண்வெளி ஞானம் என்று பல துறைகளும் கற்பிக்கப்பட்டன. இந்தப் பல்கலைக் கழகத்துக்கு ஐரோப்பியர் பலரும் வந்து பயின்றிருக்கின்றனர். அவர்கள் மூலமாக வேதக் கருத்துக்கள் ஐரோப்பாவுக்கு 2000 ஆண்டுகளுக்கு முன்பே பரவியிருக்கிறது.

 

ஏசு கிருஸ்து பிறந்த கதையிலேயே என்ன சொல்கிறார்கள்? கிழக்குத் திசையிலிருந்து ஞானிகள் வந்தார்கள் என்றுதான் சொல்லப்பட்டுள்ளது. அவர்கள் இன்றைய ஈரான், ஈராக் பகுதியில் இருந்த சுமேரியாவிலிருந்து வந்தவர்களாக இருக்கலாம் என்ற எண்ணம் இருக்கிறது. அந்தப் பகுதியில் வாழ்ந்த ஞானிகளுக்கு இந்த தக்ஷசீலம்தான் கல்விச் சாலையாக இருந்தது.

 

இங்கிருந்து 6- முனை நக்ஷத்திரத்துக்கும், சனி கிரகத்துக்கும் உள்ள தொடர்புகள் எளிதாக ஐரோப்பா, அரேபிய நாடுகளில் பரவியிருக்கின்றன. அவர்கள் பெயர்களுக்கும் பாரதத் தொடர்பு இருக்கிறது. உதாரணாமாக ஸ்டார் ஆஃப் டேவிட்டில் உள்ள டேவிட் என்னும் பெயரைப் பாருங்கள், இது தோவாப் என்னும் பெயரிலிருந்து தாவூத் ஆகி, டேவிட் என்றாகியிருக்கிறது.

 

தோவாப் (दो आब) என்பது இரண்டு நீர் நிலைகளுக்கு இடையே உள்ள பகுதி சிந்து, கங்கை முதலான நதிகளின் கிளை நதிகளுக்கிடையே உள்ள பகுதி தோவாப் என்றழைக்கப்பட்டது. தக்ஷசீலம், ஒரு தோவாபில்தான் அமைந்துள்ளது. தோவாபில் வாழும் மக்கள் பெயரிலும் அந்தப் பெயர் அமையும். ஏனெனில் ஊர் பெயரைத் தன்பெயரில் இணைத்துச் சொல்லும் வழக்கம் நம் நாட்டில் உள்ளது. கஜினி முகம்மது படையெடுத்து வந்த போது, லாகூரில் அவனை எதிர்த்த ஹிந்து மன்னன் பெயர் தாவூத். தாவூத் என்பது முஸ்லீம் பெயர் என்று நினைக்கிறோம். முகலாயர்கள் இந்தியாவுக்குள் வந்த பிறகுதான் அந்தப் பெயர் இந்தியாவுக்குள் நுழைந்தது என்று நாம் நினைக்கிறோம். ஆனால் முகலாயர்கள் இந்தியாவுக்குள் நுழையும் முன்பே அந்தப் பெயரை ஹிந்துக்கள் வைத்திருகிறார்கள்.

 

தோவாபில் இருந்தவன் தாவூத் என்று அழைக்கப்பட்டிருக்கிறான். அரேபியாவிலிருந்தோ அல்லது முகம்மதியர்களாலோ அந்தப் பெயர் இந்தியாவுக்குள் வரவில்லை. இந்தியாவிலிருந்துதான் அரேபியாவுக்குப் போயிருக்கிறது.

அது எப்படிப் போயிருக்க முடியும்?

இங்கிருந்தவன் அங்கு போயிருக்கிறான்.

அல்லது அங்கிருந்து இங்கு வந்தவர்கள் – அதிலும் தோவாப் பகுதியில் படித்தவர்கள், அந்தப் பெயரைச் சிறப்புப் பெயராகத் தாங்கி, திரும்பிச் சென்றிருக்கிறான்.

தோவாப் என்பதே டேவிட் என்றும் ஆனது.

இதை நாம் சொல்லவில்லை.

ஆங்கிலேயர்கள் 17-18 ஆம் நூற்றாண்டுகளில் இந்தியாவில் காலூன்றி அரசு ஊழியத்தில் ஆங்கிலேயர்களை அமர்த்தியபோது, அந்த ஆங்கிலேயர்கள், பல இந்தியப் பகுதிளின் பெயர்களும், மக்கள் பெயர்களும், யூதப் பெயர்களுடன் ஒத்திருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டார்கள். அவர்களுள் ஒருவரான காட்ஃப்ரே ஹிக்கின்ஸ் (GODFREY HIGGINS)  என்பவர், ஆராய ஆரம்பித்தார். அதன் மூலம பல ஐரோப்பிய, யூத மரபுகள் இந்தியாவிலிருந்தே தோன்றின என்றும் அவர் கண்டுபிடித்தார். தான் கண்டுபிடித்த்தை 'அனகாலிப்சிஸ்' (ANACALYPSIS) என்று பெயரிட்டு இரண்டு பகுதிகளாக வெளியிட்டார்.

அந்தப் புத்தகத்தை அப்படியே அமுக்கி விட்டார்கள்.

 

இன்றும் விஞ்ஞானம் முன்னேறின இந்தக் காலக்கட்டத்தில் மரபணு ஆராய்ச்சிகள் மூலம் யூதர்களது மூலத்தை ஆராய்ந்துள்ளார்கள். அது அவர்களது மூலத்தை இன்றைக்கு 3000 ஆண்டுகள் முன்னால், இன்றைய ஈரான், ஈராக் நாட்டில் கொண்டு விடுகிறது.

ஆனால் 3000 ஆண்டுகளுக்கு முன் அவர்களது மரபணுப்பாதை எது?

3000 வருடங்களுக்கு முன் அவர்கள் மூதாதையர் எங்கு இருந்தனர்?

அதை ஆராய அவர்களுக்குப் பயம், தயக்கம்.

ஏனெனில் அது இந்தியாவில் கொண்டு வந்து விடும்.

இந்தியாவிலிருந்துதான் மக்களும், அறிவும் ஐரோப்பாவுக்குச் சென்றது என்பதை இன்று வரை அவர்களால் ஒத்துக் கொள்ள முடியவில்லை.

18 ஆம் நூற்றாண்டிலேயே இந்த ஆரம்பத்தை ஹிக்கின்ஸ் போன்றவர்கள் மூலமாகத் தெரிந்து கொண்டும், அதை மறைத்தார்கள்.

ஒரு சொத்தையான ஆரிய- திராவிடக் கருத்தை வேண்டுமென்றே வளர்த்தார்கள்.

அதன் மூலம் இந்தியர்களை ஆளவும், கிருஸ்துவத்தை விதைக்கவும் செய்தார்கள்.

 

இந்தக் கட்டுரையின் முக்கியக் கருத்துக்கு வருவோம்.

டேவிடின் நக்ஷத்திரம், சாலமனது பெண்டகிளுக்குச் செல்கிறது. (PENTACLE OF SOLOMON)

இதுவும் ஒரு தாயத்து.

இந்தப் படத்தில் இருக்கும் சாலமன் பெண்டக்கிளில் 5-முனை நக்ஷத்திரத்தைக் காணலாம்.

 


 

இதையே சாலமனது சாவி (KEY OF SOLOMON) என்றும் சொன்னார்கள்.


இந்த சாவி எதைத் திறக்கும்? அது அவர்களுக்குத் தெரியாது.

அதைத் தெரிந்து கொள்ள இந்தியாவுக்கு வரவேண்டும். இந்தியாவில்தான் இந்தப் பெண்டக்கிளின் விடை இருக்கிறது. அதை இவ்வாறு காட்டலாம்.

 


 

இந்தப் படம் ராகுவின் வழிப்பாதை எனலாம். அம்புக் குறி காட்டும் திசையில் ராகு நகருகிறது. ராகு என்பது பூமியின் சுற்றுப்பாதையும், சந்திரனது சுற்றுப் பாதையும் சந்திக்கும் புள்ளி. அது தினமும் ஒரு திசையில் அமையும் என்றும், அவ்வாறு 7 திசைகளில் நகர்ந்து, 8 ஆவது நாள் மீண்டும் முதலில் இருந்த இடத்திலிருந்து ஆரம்பிக்கும் என்பதும், அதர்வண வேதத்தின் கிளை நூலான வாஸ்து சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. அதாவது ஞாயிறு தொடங்கி 7 நாட்கள், நாளொன்றுக்கு ஒரு திசையாக, இது 7 திசைகளில் நகரும். அந்தப் புள்ளிகளை இணைத்தால் கிடைப்பது சாலமனது பெண்டக்கிள் அல்லது சாலமனது சாவியாகும்.  

 

இந்தச் சாவி திறக்கும் புதிர் என்னவென்றால், எந்தெந்த நாளில் எந்த திசையில் ராகு இருக்கிறதோ, அந்த நாளில் அந்த திசையில் பூமியைத் தோண்ட மாட்டார்கள். மீறித் தோண்டினால், எதற்காகத் தோண்டினார்களோ அது வெற்றி பெறாது. உதாரணமாக, ஒரு மரம் வளர்க்க, விதை விதைக்கத் தோண்டினால், அது பலன் தராது. ஒரு வீடு கட்டத் தோண்டினால் அந்த வீடு நிலைக்காது. இந்த அடிப்படையில், நின்று நிலைக்க கூடிய வகையில் நாளையும், திசையையும் தேர்ந்தெடுத்து, கடைக்கால் எழுப்பவோ, விவசாயத்துக்கோ நிலத்தைத் தோண்டினார்கள்.

 

இந்த வழக்கமும், அறிவும் சென்ற நூற்றாண்டு வரை நம் நாட்டு விவசாயிகளுக்கும், கட்டட வேலைக்காக பூமியைத் தோண்டுபவர்களுக்கும் இருந்தது. விவசாயத்தில் பூமியைத் தோண்டவோ, விதை விதைக்கவோ இந்த அறிவும், இது தவிர ராகு பணிச் சக்கரம் என்ற சக்கரமும் துணை புரிந்தன. இதை ஒரு வரைபடமாக இந்தியாவிலிருந்து டேவிட் (டோவாபில் படித்தவன் அல்லது அங்கு வாழ்ந்தவன்) எடுத்துச் சென்றதே சாலமனது சாவியாகவும், டேவிடின் பெண்டக்கிளாகவும் சொல்லப்பட்டிருக்கிறது.

 

விவசாயத்துக்குக் காரகன் என்று சனிக் கிரகத்தைச் சொல்லும் வழக்கம் பாரதத்தில் தான் உள்ளது. இந்தக் கருத்தை யூத மக்களும் 2000 வருடங்களுக்கு முன் சொன்னார்கள். இந்தச் சாவியைப் பயபக்தியுடன் போற்றினார்கள். அந்தக் கருத்து அவர்களால் உருவாக்கப்பட்டதல்ல.

 

இன்னும் பின்னோக்கித் தேடிப் போனால், இந்த்த் தேடுதல் எகிப்தில் கொண்டு போய் விடுகிறது. பொ.மு 922 இல் சாலமன் அரசன் எகிப்திய இளவரசியை மணந்து கொண்டான். அப்பொழுது அவன் எகிப்தியர்களிடமிருந்து 6 முனை கொண்ட நக்ஷத்திரத்தைப் பெற்றுக் கொண்டான். யூனிவர்சல் ஜூயிஷ் என்சைச்ளோபீடியா (UNIVERSAL JEWISH ENCYCLOPEDIA) என்னும் யூத அகராதி இதை உறுதிபடுத்துகிறது.

 

யூதர்கள் தாங்கள் வாழ 3000 வருடங்களுக்கு முன் ஒரு நாட்டைத் தேடிக் கொண்டு போனபோது, எகிப்து நாடு நன்கு வளர்ந்து விட்டிருந்தது, அங்கு விவசாயம் வந்து விட்டது. அங்கு நக்ஷத்திரக் குறியும் இருந்திருக்கிறது. அது 5 முனை நக்ஷத்திரம். அது இப்படி இருந்தது.

 


 

பெத்லஹேம் நக்ஷத்திரம் என்று கிருஸ்துவர்களால் யூதர்களிடமிருந்து சுவீகரிக்கப்பட்ட நக்ஷத்திரம், யூதர்களுக்கு உரியதோ அல்லது அவர்களால் உருவாக்கப்பட்டதோ அல்ல. அதை அவர்கள் எகிப்திலிருந்து பெற்றார்கள்.

 

எகிப்தில் அந்த நக்ஷத்திரம் தலைக்கு மேல் அமைக்கப்பட்டது.

படத்தில் காண்க.


 


 

தீபஸ் (THEBES) மொழியில் எழுதப்பட்ட கேர்னூனோஸ் சிலையைப் பார்த்தோம். அதன் தலையில்தான் 5 முனை நக்ஷத்திரம் அமைக்கப்பட்டதை நினைவு கூறுவோம்.

 

 


 

தீபஸ் என்னுமிடம் முதன் முதலில் எகிப்து நாட்டில் தான் உருவானது.

கீழ்க்காணும் படத்தில் நைல் ஆற்றின் கிழக்குக் கரையில் காட்டப்பட்டுள்ள சிவப்புப் புள்ளியே தீபஸ் ஆகும்.

 

 


இந்தத் தீபஸ் நகரம் 5000 ஆண்டுகளுக்கு முன் உண்டானது. அதாவது சிந்து சமவெளி நாகரிகம் ஆரம்பித்தது என்று நாம் சொல்லும் காலக்கட்டத்தில் இந்த நகரம் உருவாக்கப்பட்டது. தீபஸ் என்னும் பெயரே 'தா- பே' (TA-PE)  என்னும் பெயரால் முதலில் அழைக்கப்பட்டது என்றும் அதுவே நாளடைவில் மறுவி தோபே என்றும் தீபஸ் என்றும் ஆனது என்றும் கிரேக நூல்கள் மூலம் தெரிய வருகிறது. தபம், அல்லது தபஸ் என்னும் சமஸ்க்ருதச் சொல்லே தீபஸ் என்றாகி இருக்கிறது.

 

இங்குதான் சூரியனுக்குக் கோவில் கட்டப்பட்டது. அந்தக் கோவில் பெயரைப் பாருங்கள் – கர்னாக் கோவில்.

இந்தியாவிலும் ஹரியானா மாநிலத்தில் (சிந்து சமவெளி நாகரிகப் பகுதி) கர்னால் என்று ஒரு இடம் இருக்கிறது.

இதை நிறுவியவன் கர்ணன்!

அவன் சூரியனுக்குப் பிறந்தவன்.

சூரிய வழிபாட்டைச் செய்தவன்.

மஹாபாரதப் போரில் அவன் இறந்து விடுகிறான்.

அவனது 9 மகன்களில் 8 பேர் போரில் இறந்து விடுகின்றனர்.

அவர்களுள் பிழைத்தவன் ஒருவன் மட்டுமே.

அவன் பெயர் வ்ருஷகேது.

போருக்குப் பிறகு அர்ஜுனன் அவனிடம் பகைமை பாராட்டமல் ஒற்றுமையாக இருக்கிறான் என்று சொல்லும் மஹாபாரதம் அவன், யவனதா என்னும் அரசனுடைய மகளை மணந்து கொண்டான் என்கிறது. பெயரைக் கொண்டு அவன் ஒரு யவன அரசன் என்று தெரிகிறது. யவனர்கள் மிலேச்சர்கள் என்று கருதப்பட்டனர். அவர்களுக்கு பாரத நாட்டில் இடம் கொடுக்கவில்லை. அதனால் இந்த வ்ருஷகேது, தன் மனைவியுடனும், தன்னைச் சேர்ந்தவர்களுடனும் வேறு இடம் பெயர்ந்திருக்க வேண்டும். அந்த இடம் எகிப்தில் உள்ள தீபஸ் ஆக இருக்க வேண்டும்.

 

இல்லையெனில் அங்கு ஏன் சூரியனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் வழக்கம் ஏற்பட்டது?  சூரியனுக்கு எழுப்பட்ட கோவில் கர்னாக் என்று ஏன் அழைக்கப்பட்டது. கர்னாக் என்ற பெயர்க் காரணத்தை யாராலும், எந்த மொழியிலும் சொல்ல முடியவில்லை. ஆனால் பாரத நாட்டவர்களுக்குத் தான் அதில் ஒரு தொடர்பு தெரிகிறது. கிருஸ்துவ சிலுவைச் சின்னம் (க்ராஸ்) களவாடப்பட்ட கதையைச் சொல்லும் போது அதைக் காண்போம்.

 

இங்கு 5 முனை நக்ஷத்திரத்தைக் கவனிப்போம்.

வ்ருஷகேதுவுடன் சென்ற மக்கள் சிந்து சமவெளிப் பாரம்பரியத்தில் இருந்தவர்கள். ஏனெனில் அங்குதான் கர்ணனது நாடான கர்னால் இருந்தது. அந்தக் காலக் கட்டத்தில் தவ யோகம் செய்வதில் அதிகம் பேர் ஈடுபட்டிருந்தனர். 2200 வருடங்களுக்கு முன்பே மெகஸ்தனிஸ் அவர்கள் இந்தியா முழுவதும் தவசிகளையும், சித்தர்களையும் பார்த்ததாகச் சொல்கிறார். அப்படியென்றால் 5000 வருடங்களுக்கு முன் இருந்த மக்களில் எத்தனை பேர் யோக வழியில் இருந்திருப்பர்?  அதற்கு ஆதாரமாக, மொஹஞ்சதாரோவில் குண்டலினியை எழுப்பியவர் அடைந்த நிலையைக் காண்கிறோம்.

 


 

இந்த நிலையில் இருக்கும் யோகிக்கு ஏற்படும் உயர் நிலையை 5 முனை நக்ஷத்திரமாக கேர்னூனோஸ் அமைப்பில் காண்கிறோம்,

 


 

எகிப்து நாட்டிம் தீபஸ் மொழியில் எழுதப்பட்ட பெயருடன் கூடிய இந்த உருவத்தின் தலையில் உள்ள நக்ஷத்திரம், காளி உபாசகர்களுக்கு ஏற்படுவது.

 

ஆம், யந்திர வழிபாட்டில் இந்த 5- முனை நக்ஷத்திரம் ஸ்யாமா காளியைக் குறிக்கும். ஸ்யாமா என்றால் கருப்பு என்று பொருள். காளி என்றாலும் இருட்டு என்று பொருள்.

அந்த யந்திரம் இப்படி இருக்கும்.




 


எகிப்து நாட்டுப் பழம் உருவப் படங்களில் தலைக்கு மேலே இந்த காளி யந்திர நக்ஷத்திரம் காணப்படவே, காளியை நோக்கித் தவம் செய்த யோகிகள் அங்கு வாழ்ந்திருக்கிறார்கள் என்று தெரிகிறது. தபஸ் என்ற சொல்லோசை கொண்ட தீபஸ் என்ற பெயரும் அதனால் ஏற்பட்டிருக்கிறது. அந்த நரத்தை மையமாகக் கொண்டு ஆண்ட அரசன் சூரிய உபாசகனாக இருக்கவே கர்னாக் என்னும் சூரியக் கோவிலைக் கட்டியிருக்கிறான்.

 

காளி உபாசகனது தலையில் ஒளிரும் நக்ஷத்திர உருவகம் பல காலம் எகிப்தில் இருந்திருக்கிறது. அந்த நக்ஷத்திரக் குறி யூதர்கள் கையில் வந்தபோது, அதன் அர்த்தம் மறைந்து விட்டது. ஏனெனில் பாரதத்தில் மட்டும்தான், இந்தக் கருதுகோள்கள் வழி வழியாக உபதேசிக்கப்பட்டன. இந்த நிலை மற்ற நாடுகளில் இல்லை.

 

இந்த நக்ஷத்திர உருவகங்கள் கற்பனையும் அல்ல. அவை இயற்கையில் இருக்கும் சக்தி அலைகள், இவற்றை, யோகம், தவம், யந்திரம், மந்திரம் மூலமாக வசீகரித்து, பயன்படுத்திக் கொள்ளும் வழியை வேத மதத்தினர் அறிந்திருந்தனர். அவர்கள் மூலமாக உலகெங்கும் பரவியது. ஆனால் அதை அப்படியே தலைமுறை தலைமுறையாக எடுத்துச் செல்லும் மக்களும், சூழ்நிலைகளும் அந்த நாடுகளில் இல்லை. அதனால் அவற்றின் உட் பொருள் திரிந்து போய், அவை கெடுதலை உண்டாக்கும் பில்லி சூனியம் என்ற அளவுக்குப் போய் விட்டது.

 

அவர்களுக்கு எது பில்லி சூனியமோ, அது நமது கோவில்களில் யந்திர ரூபமாக குடி கொண்டுள்ளது. இவ்வாறு இருக்க, இந்த அறிவின் ஆரம்பமும், நக்ஷத்திரக் குறியின் அர்த்தமும் எங்கிருந்து உருவானது? அது பாரதத்தில் உருவாகி, பிற இடங்களுக்குச் சென்றது என்பதுதானே சரியான பதிலாக இருக்க முடியும்? 5000 ஆண்டுகளுக்கு முன்பே இந்த குறிகள் எகிப்து வரை சென்றிருக்கின்றன என்றால், அதற்கும் முன்பே – அதாவது சிந்து சமவெளி நாகரிகத்துக்கும் முன்பே பாரத்த்தில் இந்தப் பாரம்பரியம் செழித்திருந்தது என்பதுதானே உண்மை?

 

இதற்கு மேலே நாம் விவரிப்பதற்கு முன் இன்னும் ஒரு விவரம் இருக்கிறது. இதே 5 முனை நக்ஷத்திரக் குறி, இயற்கையாகவே திடீரென்று – அதாவது ஓரிரவுக்குள் – வயல்வெளியில் பரந்து வளர்ந்துள்ள பயிர்கள் மத்தியில் உருவாகியிருக்கிறது. 1993 ஆம் ஆண்டு தென் இங்கிலாந்து வயலில் உண்டான இந்த அமைப்பு ஸ்யாமா காளி யந்திரத்தை ஒத்திருக்கிறது.

 

 


இது எப்படி சாத்தியம்? வேத மரபில் யோகத்தாலும், மந்திரத்தாலும் அடையும் இந்த ஸ்யாமா காளி, அவளைப் பற்றி அறியாத, அவள் மீது நம்பிக்கை கொள்ளாத, அவளை வணங்காத ஒரு நாட்டில் எப்படி உருவாக முடியும்?

 

இந்தக் கேள்விகளுக்கு விடை தேடினால், நம் பாரத நாட்டின் ஒரு ரகசியம் தெரிய வரும். அந்த ரகசியம் அதன் முக்கோண அமைப்பில் இருப்பது தெரிய வரும். அவற்றையும் தெரிந்து கொண்டு, மீண்டும் தீபஸ் சென்று, அங்கிருந்த கர்ணன் வழித் தோன்றல்கள் மூலமாக சிலுவைச் சின்னம் எப்படி ஐரோப்பா சென்று, கிருஸ்துவர்கள் கையில் விழுந்தது என்பதையும், அதே நேரம், இந்தியா வழியாகவும் அது ஐரோப்பா சென்று உருமாறியதையும் அறிவோம்.

 

இவற்றுக்குப் பின்னணியில் ஆதாரமாக இருப்பவை சிந்து சமவெளிச்  சின்னங்களே. அவை காட்டும் விவரங்கள், ஐரோப்பாவிலிருந்து அந்த ஆரியனும், இந்தியாவுக்கு வரவில்லை என்பதே. ஆனால் ஆரியத்தை இந்தியாவிலிருந்து எடுத்துக் கொண்டு போனவர்கள், அதைத் தொலைத்து உருமாற்றி விட்டார்கள் என்பதும் தெரியவரும். அங்கு மிச்சம் மீதி இருக்கும் ஆரியச் சின்ன்ங்களைக் கொண்டு, அங்கிருந்துதான் ஆரியர் இந்தியாவுக்கு வந்தனர் என்று சொன்னால் அது உளறலே. அதற்கு ஒத்தூதும் திராவிடவாதிகள் பேசும் பேச்சு காது கொடுத்துக் கேட்க முடியாத பிதற்றல்தான்!

 

 

 

 

 

 

, p. 188)