திங்கள், 22 ஏப்ரல், 2013

இந்தியாவிலிருந்து ஐரோப்பாவுக்குச் சென்ற தாய் தெய்வ வழிபாடு – 4




ஆங்கிலத்தில் எனது மூலக் கட்டுரை:- http://jayasreesaranathan.blogspot.in/2013/03/origin-of-easter-from-ishtar-and-ishtar_2523.html
 
தமிழாக்கம்:- திரு T.G  சாரநாதன்


கட்டுரையை முடிப்பதற்கு முன்னால், பாம்புகளைப் பற்றி சில வார்த்தைகள். ஹிந்து எண்ணங்களில், பாம்புகள் இரு வகையாகச் சித்தரிக்கப் படுகின்றன. ஒன்று , எரிமலை வெடிக்கும் போதும்,பூகம்பத்தின் போது, பல துவாரங்கள் வழியாக அடியிலிருந்து வெளிப்படும் நிலப்பரப்பின் மூடகம் எனப்படும் மேண்டில் (Mantle). அவை நாகர்கள் எனப்படும். அப்படி ஏற்பட்ட துவாரங்களும்,சுரங்கங்களும் நிலம் குளிர்ந்த பிறகு குகைகளாக மாறுகின்றன. அவைகளில் பாம்புகள் வசிக்கின்றன.அந்த குகைகளை வசிக்கும் இடமாகக் கருதுபவர்களை பாம்புகள் அல்லது நாகர்கள் என்று அழைக்கிறோம். பூகம்பத்தினாலோ  எரிமலை வெடிப்பதினாலோ  ஏற்படும் அழிவை, பாம்பின் நடனம் என்கிறோம்.

பூமிக் கோளத்தின் மைய பாகத்தை (core), முக்கியத்துவம் வாய்ந்த பாம்பான ஆதிசேஷன்  என்கிறோம். இதை உருவகப் படுத்தி, ஆதிசேஷன்  பூமியைத் தாங்குகிறது என்கிறோம். கிரேக்கக் கதைகளில் உள்ள அட்லாஸ், இந்தக் கருத்தைத் தழுவியது. ஆதிசேஷன் பூமிக்கு உள்ளிலிருந்து பூமியைத் தாங்கும் ஆதாரமாக விளங்குகிறது. ஆனால்அட்லாஸ் தனது தோளில் பூமியைத் தாங்குகிறார். ஒரே கருத்து இரண்டு வெவ்வேறு கலாச்சாரங்களில் தனிப்பட்டதாக உற்பத்தியாகி இருக்க முடியாது. ஆதிசேஷன் கருத்து முன்னது, ஒரு  உருவகமாக ஏற்படுத்தப்பட்டது. ஆனால், அட்லாஸ் என்பது சாத்தியமற்றதைச் சித்தரிப்பது. இது மூலத்துடன் தொடர்பை இழந்ததால் ஏற்பட்ட விளைவு.

இன்னொரு பாம்பாகக் கருதப்படுவது, நம்முடைய உயிர் அல்லது ஜீவாத்மா. அந்த ஜீவன் தான் நமக்கு வாழ்வைக் கொடுக்கிறது. உபநிஷத்துக்கள் படி அது நம் கட்டை விரல் அளவே உடையது. முதுகெலும்பின் அடி முனையில் பாம்பைப் போல் சுருண்டு படுத்திருக்கும். தியானத்தினால் அதை எழுப்பி விட முடியும். ஆகையால், ஜீவாத்மா நம் உடலில் உறங்கும் பாம்பு என்றாகிறது. எல்லோருக்குமே எப்பொழுதாவது குறைந்த பட்சம் ஒரு முறையாவது பாம்பு கனவில் வந்திருக்கும். அது  ஜீவன் பாம்பைப் போல் நம் உடலில் இருப்பதால் தான். யோகப்பியாசம் அல்லது தியானம் அல்லது பிரணாயாமம் மூலமாக நாம் அந்த ஜீவனை (குண்டலினியை) எழுப்புகிறோம். பதஞ்சலி முனிவர் நமக்கு இந்த யோகாப்பியாசம் அல்லது தியானத்தை வழங்கி இருக்கிறார். அதனால், அவரை பாம்பு உடலுருவம் கொண்டவராக, சிலையில் காண்கிறோம்.


                 ஹிந்து கோயில்களில் பதஞ்சலி முனிவர்.
  
ஊழிக்குப் பிறகு - பிரபஞ்சத்தின் பிரளயத்திற்குப் பிறகு- இந்த பாம்புகள் (ஜீவாத்மாக்கள்) எங்கு போகும்? அவை முடிவில்லா எண்ணிக்கை - அனந்தம்- உடையவை. அவை யோக நித்திரையில் உறங்கும் நாராயணன் அல்லது விஷ்ணுவிடம் அடங்கும்.


சிருஷ்டி அல்லது உற்பத்தியின் போது அவை மீண்டும் உலகத்தில் புது வாழ்வுடன் பிறக்கும்.

பாம்புகளின் இந்த இரண்டு அடிப்படைக் கருத்து நிலைகளை நாம் பலவிதத்தில் பார்க்கலாம். முக்கியமாகக் காணப்படுவது குண்டலினியில் சுருண்ட பாம்பு எழுப்பிய பிறகு அது மூக்கு வழியாக வெளிப்படுவது. அந்த உருவம் கீழே :


யூதர்களின் பெண் தெய்வமானஆஷேராவின் (Ashera) கையில் இந்த சுவாரசியமான வெளிப்பாடு:



இது யூதர்களின்  ஆஷேரா என்று கருதப்படும்  ஈஸ்டர் (ISHTAR) இடது  கையில்  ஏந்தியிருக்கும் பொருள் பாம்புகள் என்று எண்ணப்படுகிறது. ஆனால், அந்த உருவ அமைப்பைப் பார்க்கும் போது அது முந்தின உருவத்தைப் போல் உள்ளது. பலவிடங்களில் காணப்படுவது. சொல்லப்போனால், இது ரிஷிகளும்,முனிவர்களும் உபயோகிக்கும் தண்டத்தைப் போல் உள்ளது. கீழேயுள்ள படத்தில் பாருங்கள்.


பொதுவாக யோகிகள் ஜபம் செய்யும் நிலையில் தங்கள் கைக்குத் தாங்கலாக இந்தத் தண்டத்தை வைத்திருப்பர். கீழுள்ள சிவ பெருமான் படத்தில் அது காட்டப்பட்டுள்ளது.
.

அக்காலங்களில் தண்டமும், கமண்டலமுமே யோகிகளின் இரண்டு முக்கிய உபகரணங்களாக இருந்தன. தண்டமானது முறுக்கிக் கொண்ட இருபாம்புகள், தங்கள் தலைகளை வேறு பக்கம் திருப்பிக் கொண்டிருப்பது போலிருக்கும். அந்தப் பாம்புகளை இணைக்கும் சிறு கட்டையின் மேல் யோகிகள் தங்கள் கைகளை வைத்து தவம் செய்வார்கள். ஆஷேரா கையில் வைத்திருப்பது அதே மாதிரி தண்டம் போல் உள்ளது .  




அது மட்டுமல்ல. ரிஷிகள், யோகிகள் வைத்திருக்கும் தண்டத்தில் பாம்புத் தலைகள் செதுக்கப் பட்டிருக்கும்.


 
யூத மரபில்  யாவேயின் மனைவி ஆஷேரா. ஹிந்து எண்ணங்களின்படி, சிவனின் மனைவி துர்க்கா, தவம் செய்யும் யோகிகளாக விரும்பும் பக்தர்களை அருள் பாலிப்பாள். இந்த நிலையில் அவளை விஷ்ணு துர்க்கா என்று அறியப்படுவாள். இந்த விளக்கங்கள் முடிவற்றவை. ஆனால், ஆஷேரா -ஈஸ்டர் உருவம்  பற்றிய கருத்து, விளக்கங்கள்,ஹிந்து எண்ணங்களில் வருவதால், எங்கிருந்து கருத்துப் பரிமாற்றம் நடந்திருக்கும் என்று ஊகிக்கலாம். மேலும், யூதர்களின் ஹீப்ரூ பைபிள்படிஆஷேராவை மரங்களின் தெய்வமாக வழிபட்டார்கள்.


கிருத்துவம் தோன்றிய பிறகு, ஆஷேராவைப் பற்றின நினைவுகள் மக்களின் மனதிலிருந்து அழிக்கப்பட்டன.

பெண் தெய்வங்கள், பாம்புகளுடன் மரத்தின் அடியில் பிரதிஷ்டை செய்யப்பெற்று வணங்கப் படுவது, இன்றும் நாம் காணலாம். மயமதம், சப்தமாதாவில்  இருக்கும் ஒவ்வொரு பெண் தெய்வத்திற்கும் தனிப்பட்ட மரத்தைக் கூறியுள்ளது.

பெண் தெய்வங்களுடன் மரங்களையும், பாம்புகளையும் தொடர்புபடுத்தியது ஒரு அர்த்தமற்ற  செயல் அல்ல.  அந்த அர்த்தம் இந்தியாவுக்கு மட்டுமே பொருந்தும். அது  இயற்கையின் நீர் உற்பத்தி ஸ்தானங்களைப் பாதுகாப்பதற்காக ஏற்பட்டது. 

இந்தியா பருவ மழைகளையே நம்பி இருக்கிறது. அந்தத் தண்ணீர் பூமிக்கடியில் தேங்கி நிற்கிறது. இதைத்தான் நாம் நிலத்தடி நீர் என்கிறோம். பூமிக்கடியில்  நிலத்தடிக் கால்வாய்கள் போல  பல நீரோட்ட அமைப்புகள் இந்த நிலத்தடி நீரை இணைக்கின்றன. நம் நாட்டில் காணப்படும் இவற்றை 'ஜல நாடிகள்" அல்லது நீர் நாடிகள் (Water veins) என்கிறார்கள். இந்த ஜல நாடிகள் ஓடும் இடங்களில் கிணறுகள்,குளங்கள், ஏரிகள் ஆகியவை வெட்டப்படுகின்றன.  குறிப்பிட்ட மரங்களும்,பாம்பு புற்றுக்களும், இந்த ஜல நாடியை சுலபமாகக் கண்டறிய உதவின, என்பது இதன் சிறப்பம்சம். வராஹமிஹிரரின் ' ப்ருஹத் சம்ஹிதை'யில் இதற்காக ஒரு தனி அத்தியாயமே உள்ளது. அதில் 50க்கும் மேற்பட்ட மரங்கள் குறிக்கப் பட்டுள்ளன. விவரங்களுக்கு 

மரங்களும், புற்றுக்களும் ஜல நாடியை சுலபமாகக் கண்டறிய உதவின. மக்களுக்கு இந்த மரங்களைக் பாதுகாக்க சிறந்த வழி அவைகளை வணங்கிக் காப்பாற்றுவதே! அதனால், ஜல நாடிகளைப் பற்றியும் மக்களுக்கு ஞாபகம் இருந்து வந்தது. இப்படித்தான் மரங்களையும், பாம்புகளையும் வழிபடுவது வழக்கத்தில் வந்தது.

இந்த முறை, இந்தியாவுக்கு மட்டுமே ஏற்றதாக இருந்தது, ஏனெனில் மற்றைய தேசங்களில் இம்மாதிரி ஜல நாடிகள் இல்லை. சுமேரியா, லேவந்த் (Levant) தேசங்களில் இம்மாதிரி ஜல நாடிகளுடன் குறிப்பிட்ட மரங்களோ, பாம்பு புற்றுகளோ தொடர்பு இருந்ததில்லை. ஆனால், 2000 வருடங்களுக்கு முன்பிருந்தே இந்த இடங்களில், மரம்- பாம்பு- பெண் தெய்வம் கலாசாரம் இருந்தது என்றால், இந்தியக் கலாசாரம் அங்கு பரவியதையோ அல்லது இந்திய கலாசாரத்தை தழுவியோ ஏற்பட்டது என்று கூறலாம். ஜல நாடிகளை மரம் புற்று என்பவைகளால் கண்டறிவது சிந்து சமவெளியிலும் காணப்பட்டது. 

சிந்து சமவெளியில் தான் ஸரஸ்வதி நதி பாய்ந்தோடியது. இதற்கு ஆதாரம், வராஹமிஹிரர் தன்னுடைய நூலில், ஜலநாடி - பாம்பு- மரம் ஆகியவற்றின் தொடர்ப்பைக் கொண்டு நிலத்தடி நீரைக் கண்டறியும் கருத்துக்களைக்  கொடுத்தவராக  ஸரஸ்வதர் என்னும் ரிஷியையே காட்டுகிறார். அவருக்கு அந்தப் பெயர் வரக் காரணம், அவர் அந்த நதி தீரத்தில் வசித்ததனால் என்பதைச் சொல்லத் தேவையில்லை.. பூமி அதிர்வுகளால், ஸரஸ்வதி நதி மறைந்த போது , இந்த ரிஷி தண்ணீர் நெருக்கடியைத் தீர்க்க, நதியின் பூமிக்கடியிலுள்ள ஜல நாடிகளைக் கண்டறிய முயற்சி செய்து இந்த அறிவைத் தந்துள்ளார்.


கீழ்க்காணும் உருவம் தான் சிந்து சமவெளியில் கண்டெடுத்த மிகத் தொன்மையான  ஆதாரம், மக்கள் மரங்களை வழிபட்டதற்கு. மரத்தின் அடியில் ஒரு பெண் தெய்வம் பிரதிஷ்டை செய்யப் பட்டுள்ளது.


இது கண்டெடுத்த இடத்தில், அதிக ஆழத்தில் இல்லாமல் பூமியின் மேல் பாகத்திற்கருகிலேயே தண்ணீர் கிடைத்திருக்கலாம். இந்தப் பிரதேசத்தைத் தவிர மற்ற வட  மேற்குப் பிரதேசங்களில், ஜல நாடி- மரம் தொடர்பு யாரும் அறியாதது; அம்மாதிரி தொடர்பு இருக்கவும் வாய்ப்பில்லை. உண்மை நிலவரம் இப்படி இருக்க, ஆஷேராவையோ  அல்லது வேறு யாரையோ, மரம், பாம்புகளுடன் தொடர்பு படுத்தி, மரத்தடியில் தெய்வமாகக் கருதி  வழிபட்டார்கள் என்றால், அது இந்தியாவில் இருந்த வழக்கத்தையே தழுவியதாகும்.

(முற்றும்)