ஞாயிறு, 20 மார்ச், 2011

47. கங்கையும், ராமர் சேதுவும்.



குமரிக் கண்டம் எனப்படும் தென்னன் தேசங்கள்
தமிழனது தொன்மையை 10,000 ஆண்டுகளுக்கும் மேல் காட்டுகிறது
என்பதைக் கடந்த சில கட்டுரைகள் மூலம்    தெரிந்து கொண்டோம்.
தமிழ் மக்கள் ஒவ்வொரு ஊழியின் போதும்
கடல் கோளிலிருந்து தப்பி வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்திருக்கின்றனர்.
3500 ஆண்டுகளுக்கு முன் நடந்த 3- ஆம் ஊழியின் போது
தற்போதைய தமிழ் நாட்டுக்குப் பெயர்ந்திருக்கின்றனர்.
ஆனால் ஸ்ரீமத்  பாகவதம் சொல்வதைப்போல (பகுதி 38)
திராவிட நாட்டுப் பகுதியிலிருந்து வெள்ளத்திலிருந்து தப்பி
வடக்குக்குக் குடி பெயர்ந்தார்கள் என்று ஓரிடத்திலும் சொல்லப்படவில்லை.
இதிலிருந்து தமிழ் நாட்டு மக்கள்
வட இந்தியாவுக்கோ,
சிந்து சமவெளிப் பகுதிக்கோ இடம் பெயரவில்லை என்பது தெளிவாகிறது.
அவர்கள் ‘சிவனேஎன்று,
தென்னாட்டுடைய சிவனைப் பணிந்து
தென்னன் தேசங்களில்தான் இருந்திருக்கிறார்கள்.



முதல் ஊழியின்போது பாதிப்பு அதிகம் இல்லாமல்,
தென் மதுரையிலேயே தொடர்ந்திருக்கிறார்கள் (அதிக பட்சம் 12,000 ஆண்டுகள்).
2-ஆம் ஊழியின் போது, கபாடபுரம் வந்திருக்கிறார்கள்.
இதுவும் இந்தியாவின் தென் பகுதியில்தான் இருந்திருக்கிறது.(7000 ஆண்டுகளுக்கு முன்)
3-ஆம் ஊழியின் போது, தற்போதைய மதுரைக்குக் குடி பெயர்ந்திருக்கிறார்கள். (3500 ஆண்டுகளுக்கு முன்)


3- ஆம் ஊழியும், மாக்ஸ் முல்லர் போன்றவர்கள் சொன்ன
ஆரியப் படையெடுப்பும் ஒரே காலக்கட்டமான 3500 ஆண்டுகள்.
அந்த சமயம் தென் கடலில் கடல் நாசத்தை அனுபவித்து,
தென்தமிழ் நாட்டுக்கு வந்தார்கள் தமிழர்கள் என்பது சங்கத் தமிழ் தரும் செய்தி.
அப்படி இருக்க,
அதே காலக் கட்டத்தில் சிந்து சமவெளிப் பகுதியில் தமிழர் இருந்தனர் என்பதும்
அவர்கள் ஆரியர்களுடன் போரிட்டு,
தோற்று தமிழகப் பகுதிகளுக்கு வந்தனர் என்பதும் எப்படி நடக்க முடியும்? 


தமிழர்களது பூர்வீகத்தைப் பற்றி எதுவுமே அறிந்து கொள்ளாத ஐரோப்பியர்
தங்கள் காலனி ஆதிக்கத்துக்கு உறுதுணையாக உருவாக்கியக் கருத்து அது,
அதைத் தமிழன் எப்படி ஏற்றுக் கொள்ளலாம்?
அதை வைத்து ஒரு நூற்றாண்டு காலமும் அரசியல் செய்து வருகிறார்களே,
இவர்கள் தமிழ்த் துரோகிகள் அல்லவா?
ஆதிக்கம் செய்ய வந்தவன் தனக்கு வேண்டியதை வேண்டிய மாதிரி பேசுவான்.
தமிழ் நூல்களைக் கரைத்துக் குடித்தவர்கள் என்று சொல்லிக் கொள்ளும் இவர்களுக்கு
எங்கே போயிற்று புத்தி?
தமிழ் நூல்களைப் படித்தும் தமிழர் சரித்திரத்தைத் தெரிந்து கொள்ளவில்லையா?
அல்லது தமிழ் நூல்களைப் படித்தாற்போல பாவனை காட்டுகிறார்களா?


தமிழ் நூல்களில் வரும் மற்றொரு முக்கிய செய்தி ராமர் சேது பாலத்தைப் பற்றியது.
சேது பாலம் கட்டப்பட்டது என்று தெரிவிக்கும் தமிழ்ப் பகுதிகளை நான் இங்கு தரவில்லை.
(தனிக் கட்டுரையாக தருகிறேன்)
இங்கு தமிழன் தொன்று தொட்டு,
தென் நிலங்களில்தான் இருந்திருக்கிறான் என்பதை மேலும் நிரூபிப்பதற்கும்,
ஸ்ரீமத் பாகவதம் சொல்லும் கடல் கோளில் தப்பி
திராவிட நாட்டிலிருந்து வட இந்தியப் பகுதிக்குச் சென்ற மக்கள் யார்
என்று தெரிந்து கொள்வதற்கும்,
ராமர் சேதுவைப் பற்றியும்,
கங்கை தோன்றின விவரங்களையும் நாம் தெரிந்து கொள்ள அவசியம் இருக்கிறது.



இன்றைக்கு 12,000 ஆண்டுகளுக்கு முன் முதல் சங்கம் ஆரம்பித்திருக்கிறது.
அதை ஆரம்பித்தவர் இறையானார்.
சிவ பெருமானே பாண்டிய குலத்தின் மன்னாகி
தமிழை வளர்த்திருக்கிறார்.
அந்தப் பாண்டிய குலத்தில் உமையம்மையே தடாதகைப் பிராட்டி
என்னும் மகளாகப் பிறந்து மீனாட்சி அம்மை என்று அழைக்கப்பட்டாள்.
திராவிடவாதிகளது நாத்திகப் பேச்சில் மயங்கும் தமிழர்கள் இதெல்லாம் கற்பனைக் கதை என்பார்கள்.
ஆனால் அவர்கள் தலைவர் கண்ணகிக்குக் கொடி தூக்கும் போது ஆனந்தமாக ஆமோதிப்பர்.
அந்தக் கண்ணகி யார்?
சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்குக் கோவில் எழுப்பிய போது,
தெய்வமாக இருந்த அவள், தான் பாண்டியன் மகளாக அவதரித்த மீனாட்சி அம்மை என்கிறாள்.
சிலப்பதிகாரம் வாழ்த்துக் காதையில்,
ஆராயாமல் கோவலனுக்குத் தண்டனை அளித்த
தென்னவன் தீதிலன் அதாவது பாண்டியன் நெடுஞ்செழியன் குற்றமற்றவன் என்றும்,
தானே பாண்டியனுக்கு மகளாகப் பிறந்த மீனாட்சி என்றும்,
தானே கண்ணகியாகக் கோவில் கொண்டிருக்கிறேன் என்றும் சொல்கிறாள்.



1800 ஆண்டுகள் முன் வரையில்,
தென்னன் பெருமையும்,
அவன் குடியில் மீனாட்சி பிறந்ததும்,
அவளை சிவ பெருமானே மணந்ததும்,
அவரே பாண்டியர்களுக்கு வழிகாட்டியாக இருந்ததும்
சர்வ சாதாரணமாக ஒத்துக் கொள்ளப்பட்ட வரலாறாகும்.
இதில் உண்மையில்லை என்றால்
அத்தனை ஆயிரம் காலம் அந்தக் கதை மக்களிடையே புழங்கி இருக்காது.
இதில் உண்மையில்லை என்றால்சங்கம் வளர்த்தார்கள் என்பதும் பொய் என்றாகிவிடும்.
சங்க நூல்கள் என்பதும் பொய் ஆகி விடும்.


அந்தத் தென்னன் வளர்த்த மொழி தமிழாகும்.
அதைப் பேசிய தமிழன் தென்புலத்திலிருந்துதான் வந்தான் என்று
மேலும் உறுதி செய்யும் இந்தத் தொடரில்
வேறு சில முக்கிய குறிப்புகளை ஆராய வேண்டியிருக்கிறது.
அதில் ஒன்று கங்கை நதியாகும்.




பனியுகம் நடந்து கொண்டிருந்தபோது கங்கை ஓடவில்லை.
ராமனது முன்னோனான பாகிரதன் காலத்தில்தான் கங்கை பூமியில் ஓட ஆரம்பித்தது.
மீனாட்சி அம்மையின் தாயாரான காஞ்சன மாலை
அந்தக் கங்கைக்குத் தீர்த்த யாத்திரை செல்ல விரும்பினாள்,
என்கிறது திருவிளையாடல் புராணம்.
(அவள் இருந்த இடம் தென் மதுரை என்பது நினைவிருக்கட்டும்.)
ஆனால் அப்பொழுது கங்கை ஓடவில்லை. பின்னாளில் எழுதப்பட்ட இந்தப் புராணத்தில் கங்கையின் முக்கியத்துவம் கருதி இவ்வாறு எழுதப்பட்டிருக்க வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு மேலே படிக்கவும்.


சிவனுடன் சம்பந்தப்பட்ட கங்கை போன்ற புண்ணிய தீர்த்தங்களுக்குப் போய் வருமாறு
காஞ்சன மாலையிடம் கோதம முனிவர் சொல்கிறார் (திபு 884).
ஆனால் கங்கை எங்கோ தொலைவில் இருக்கவே,
தன் மாமியார் அலைய வேண்டாம் என்று
எல்லாப் புண்ணிய தீர்த்தங்களையும் தென் மதுரையிலேயே கொண்டு வருகிறார் சிவ பெருமான்.


இந்த கங்கை உண்டான காலம் தெரிந்தால்,
எந்தக் காலக் கட்டத்தில் திராவிடப் பகுதியிலிருந்து மக்கள் வடக்குக்குக் குடி பெயர்ந்தனர் என்று கண்டு பிடிக்க முடியும்.
ஏனெனில் அப்பொழுது குடி பெயர்ந்தவன் மனு ஆவான்.
அவனது வம்சத்தில் வந்தவன் இக்ஷ்வாகு.
அவனுடைய வம்சத்தில் வந்த பாகீரதன்.
அந்த பாகீரதனே இமய மலையிலிருந்து கங்கையைக் கொண்டு வருகிறான்.


கங்கோத்திரி என்னும் பனிக் கருவிலிருந்து கங்கை உண்டாகிறது. 

                 கங்கோத்திரி இருக்கும் மலை


பனியுகம் உச்சம் அடைந்த காலமான 20,000 ஆண்டுகளுக்கு முன்
இமயமலையிலும் பனிப் போர்வை அதிகரித்தது.
கங்கையின் உற்பத்தியைப் பற்றிச் சொல்லும் ராமாயணம் தரும் விவரங்கள்
கங்கோத்திரி என்னும் பனிக் கரு உயரமாக வளர்ந்ததைக் கதை ரூபமாகத் தருகிறது.
(வால்மீகி ராமாயணம் 1- 35 முதல் 43 வரை)



இமயமலையை இமவான் என்னும் அரசனாகச்  சித்தரிக்கிறது.
அவனுக்கு இரண்டு மகள்கள்.
அவர்களுள் மூத்தவள் கங்கை, இளையவள் உமை.
மூத்தவளான கங்கை மேலுலகத்துக்கு வர வேண்டும்
என்று மேலுலகவாசிகள் கேட்டுக் கொள்ளவே
அவள் மேலுலகம் நோக்கிச் சென்றாள்.
பனியுகத்தின் போது மேலும் மேலும் கங்கோத்திரி என்னும் பனிக் கரு வளர்ந்ததை இது குறிக்கிறது.
மேல் நோக்கி வளரவே,
மேலுலகம் என்று பொருள் படும் தேவ லோகம் என்று பொருள் படுகிறது.
அதனால் அந்த நிலையில் கங்கைக்கு ‘தேவ கங்கை என்று பெயர்.


கங்கையின் தங்கையான உமை, சிவனைக் கணவனாக அடையத் தவம் இருந்தாள்.
இதன் மூலம், கங்கோத்திரி போலவே மற்றுமொரு பனிக் கருவும் இமயமலையில் இருந்தது என்று தெரிகிறது.
அவள் சிவனுடன் கூடும் நேரத்தில்,
அந்தச் சேர்க்கையால் உண்டாகும் குழந்தையை உலகத்தால் தாங்க இயலாது
என்று ரிஷிகள் தடுத்து விடுகின்றனர்.
அதை சிவனும் ஏற்றுக் கொள்கிறான்.
இதனால் கோபமுற்ற உமை உலகுக்குக் குழந்தை பிறக்கக்கூடாது என்று சாபமிடுகிறாள்.


இந்தக் கதை இயற்க்கையில் நடந்ததை எடுத்துக் காட்டுகிறது.
பனியுகத்தின் போது இமயமலையில் உண்டான
ஒரு பனிக் கருவை உமை என்று உருவகப்படுத்தி இருக்கிறார்கள்.
அவளுக்கும், சிவனுக்கும் ஏற்ப்ட்ட சேர்க்கையால் பிறக்கும் பிள்ளை நதியாகும்.
சிவன் வெப்பத்துக்குப் பெயர் போனவன்.
பனி யுகம் முடிந்து இமய மலையில் வெப்பம் பரவும் போது,
பனிக் கரு உடைந்து, ஆறாகப் பெருக்கெடுக்கும்.
அப்படி நடக்க இருந்த ஒரு சாத்தியம் நடக்காமல் போனது என்பதை இந்தக் கதை காட்டுகிறது.
அதாவது உமை என்னும் பனிக் கரு உருகுவதற்கு ஏற்றவாறு அவள் உண்டான பகுதியில் வெப்பம் இல்லை.



இந்தப் பகுதி காஷ்மீரத்தில் இருக்கும் அமர்நாத் மலையாக இருக்கலாம். 

காஷ்மீரத்தில் அமர்நாத் மலை இருக்குமிடம் புள்ளியாக இந்தப் படத்தில்

அந்த இடத்தைப் பருப்பதம் என்று என்று தமிழில் வழங்கி இருக்கிறார்கள்.
அங்குள்ள குகையில் பனி லிங்கம் வளருவதும், பிறகு குறைவதும்
இந்தக் கதையுடன் ஒத்துப் போகிறது.



வால்மீகி ராமாயணத்தில் விஸ்வாமித்திரர் விவரிக்கும் இந்தக் கதையில்
அடுத்து நடந்த சம்பவங்களைப் பார்ப்போம்.
சிவனது வீரியம் வீணாகக் கூடாது என்று
அந்த வீரியத்தை அக்கினி பகவான் எடுத்துக் கொள்கிறான்.
அப்படி எடுத்துக் கொண்ட அக்கினி பகவான்,
உமையின் அக்காவான கங்கையை அடைந்து
அவள் மீது பரவச் செய்கிறான்.


இந்த வர்ணனை மிகத் தெளிவாக கங்கோத்திரி வெப்பம் அடைந்தைக் காட்டுகிறது.
அதாவது பனியுக முடிவில்
முதலில் ஒரு பெரும் ஆறு
அமர்நாத் பகுதியில் உருவாக சாத்தியம் இருந்தது.
ஆனால் அது நடக்கவில்லை.


மாறாக அந்தப் பனிக் கருவுக்கும் பழமையான கங்கோத்திரி இருக்கும் பகுதியில்
வெப்பம் பரவ ஆரம்பித்திருக்கிறது.
அதன் காரணமாக கங்கோத்திரியின் பனிக்கரு உடைந்தது.
அதில் வெளிப்படும் ஆற்று நீர் மிகவும் வேகமாகப் பூமியில் விழுந்து நாசம் செய்து விடும்.
எனவே அதை சிவன் தனது முடியில் தாங்கிக் கொண்டு,
அவள் வேகத்தை மட்டுப்படுத்தி,
நிதானமாகப் பூமியில் விழச் செய்தார்.
இந்த விவரஙகளும் உண்மையில் இயற்கையில் இருக்கின்றன.
அதி வேகமாக வெளிப்படும் கங்கை மலையிலிருந்து கீழே இறங்கும் வழியில்,
ஜடாமுடியைப் போல சுருண்டு சுருண்டு மலைப் பாதை இருக்கிறது.


அதன் வழியாக இறங்கும் போது கங்கையின் வேகம் குறைந்து விடுகிறது.
முடிவில் அவள் பூமியை அடையும் போது,
மக்கள் எளிதில் அணுகும் வண்ணம் அவள் அமைதியாக வருகிறாள்.



அப்படி அவள் முதன் முதலில் இறங்கி வந்த போது,
இக்ஷ்வாகு குல அரசனான பாகீரதன் பின்னால் வந்து
அவன் அழைத்துச் சென்ற இடத்தை அடைந்து
தான் எந்த காரணத்துக்காகப் பிறந்தாளோ அந்த காரணத்துக்காக
அதாவது இறந்தவர்களுக்கு விமோசனம் தருவதற்காகத்
தன் முதல் பணியை ஆற்றினாள்.



அப்படி அவள் முதலில் விமோசானம் தந்த இடம் தமிழ் நாட்டில் உள்ள ராமேஸ்வரம்.
கங்கை முதலில் கால் பதித்த அந்த இடத்தில்
என்றென்றும் அவளைப் பணிந்து மக்கள் பயன் பெற உதவுவது ராமர் சேதுவாகும்.


இது என்ன புதுக் கதை என்று ஆச்சரியப்பட வேண்டாம்.
கங்கையின் உற்பத்தியை விளக்கும் ராமாயண விவரங்களுடன்,
சங்கத் தமிழும் தரும் செய்தி இது.



ராமனது வம்சாவளியில் பாகீரதன் 24 ஆவது அரசன் (பகுதி 13).
அவனுக்கு முன்னால் 20 ஆவது அரசன் சகரன் என்பவன்.
அந்த சகரன் அஸ்வமேத யாகம் செய்தான்.
அந்த யாகத்தின்போது  குதிரை காணாமல் போய் விட்டது.
அதைத் தேட தனது மகன்களை அனுப்பினான் சகரன்.
அவர்கள் மொத்தம் 60,000 பேர்.
அவர்கள் குதிரையைத் தேடிக் கொண்டு செல்லும் வழியெல்லாம்,
பூமியை வெட்டி, உடைத்துக் கொண்டும் தேடினார்கள்.
அதனால் பல உயிரினங்களும் துன்பப்பட்டன.
அந்த நேரத்தில் பூமி பிளப்பது போன்ற சப்தமும் கேட்டது.
இது ஒரு பூகம்பம் நடந்து என்பதைக் குறிக்கலாம்.


பூமியில் தேடிக் கொண்டே அவர்கள் கடலருகே வருகிறார்கள்.
அங்கும் அவர்கள் பூமிக்கடியில் தோண்டித் தேடினார்கள்.
பூமிக்கடியில் அவர்கள் தோண்டிக் கொண்டு சென்ற திசைகளும் சொல்லப்பட்டுள்ளன.


முதலில் கிழக்கே சென்றார்கள்.
ஆனால் அங்கு கிழக்குத் திசை யானை இருந்தது.
இங்கு மேலும் சொல்லப்படும் விவரம் முக்கியமானது.
அந்த யானை தன் தலை மீது கிழக்குத்திசை பூமியை வைத்துக்கொண்டுள்ளதாம்.
அவ்வபோது அதற்கு சிரமாக இருக்கும் போது தன் தலை மீதுள்ள பாரத்தை இறக்கி வைக்குமாம்.
அதனால் நிலநடுகக்ம் ஏற்படும் என்று சொல்லப்பட்டுள்ளது. (வா. ராமாயணம் 1-10-15)
தமிழில் பூகம்பம் என்கிறோமே அதுவே சமஸ்க்ருதத்திலும்.
பூமி கம்ப ததா பவேத்  என்கிறது ராமாயணம்.
அதாவது பூமித்தட்டின் எல்லைப்பகுதியை இது குறிக்கிறது.
அதை உடைக்கப் பார்த்தால் என்ன விளைவுகள் ஏற்படுமோ, அதனால்
அவர்கள் தென் திசை நோக்கித் திரும்பினார்கள்.


கடலுக்குள் அவர்கள் தோண்டிச் சென்று கொண்டிருந்தார்கள்.
தென் திசையில் பல தூரம் சென்றதும், அங்கும் தென் திசை யானைக் கண்டார்கள்.
இதுவும் பூமித்தட்டோ அல்லது ஃபால்ட் (Fault) எனப்படும் விரிசலாகவோ இருக்க வேண்டும்.
இந்த விரிசல் பகுதியில் நிலநடுக்கங்கள் ஏற்படும்.


எனவே அவர்கள் மேற்கு நோக்கித் திரும்பினார்கள்.
அங்கும் திசை யானை இருக்கவே,
வடக்கு நோக்கித் திரும்பினார்கள்.
அங்கும் திசை யானை இருக்கவே, வட கிழக்கு நோக்கித் திரும்பினார்கள்.
அங்கு கபில முனிவரது ஆஸ்ரமத்தில் அஸ்வமேத யானையைக் கண்டார்கள்.


கபிலர் அதைத் திருடி வந்திருக்கிறார் என்று கருதி அவரைத் தாக்கச் சென்றனர்.
அப்பொழுது அவர் ‘ஹூம்என்று ஒலி எழுப்பினார்.
அதில் அவர்கள் அனைவரும் சாம்பலாகி விட்டனர்.
60000 சகர மகன்கள் சாம்பலானது ஒரு பெரும் குன்றாக அங்கு இருந்தது.


தன் மகன்கள் வரவில்லையே என்று பேரன் அம்ஷுமானை அனுப்புகிறான் சகரன்.
சகர மகன்கள் தோண்டிச் சென்ற அடையாளத்தைக் கொண்டே
அவன் தேடிச் சென்று கபிலர் இருப்பிடத்தை அடைந்தான்.
அங்கு நடந்ததைக் கேள்விப்பட்டு கபிலரிடமிருந்து குதிரையைப் பெற்றான்.
ஆனால் அகாலமாக, கோர மரணம் அடைந்த தன் முன்னோர்களான சகர மகன்கள்
நற்கதி அடைய பித்ரு தர்ப்பணம் செய்ய விரும்பினான்.
நடந்த துர் மரணத்துக்கு நற்கதி கிடைக்க வேண்டுமென்றால்,
கங்கையில் தர்ப்பணம் செய்ய வேண்டும்.
அந்தக் கங்கையோ இமய மலை முகட்டில் பனிக்கருவில் இருக்கிறாள்.
எனவே அவளை பூமிக்குக் கொண்டு வர வேண்டும் என்று அவன் முயன்றான்.
அவனது வாழ் நாளில் அது நடக்கவில்லை.
அவனது மகன் திலீபனும், தவமிருந்து கங்கை வரப் பிரார்த்திக்கிறான்.
அப்பொழுதும் கங்கை வரவில்லை.
அவனது மகனான பாகீரதன் பிரயத்தனப்பட்ட போது கங்கை வெளிப்பட்டாள்.


பூமியில் விழுந்த கங்கை சகர மகன்கள் வெட்டிச் சென்ற பள்ளத்தில் விழுந்து
பாகீரதன் பின்னால் செல்லத் தொடங்கினாள்.
அந்தப் பாதை கடலுக்குள்ளும் சென்றதால்
அதில் தொடர்ந்து சென்று
அவள் கபிலர் ஆஸ்ரமத்துக்கு அருகே
குன்றாக இருந்த சாம்பலைக் கரைத்தாள்.
அதனால் துர் மரணம் அடைந்த சகர மகன்கள் விடுபட்டு
இறந்தவர்கள் செல்ல வேண்டிய உலகங்களுக்குச் சென்றனர்.
கங்கை கரைத்த அந்த இடத்திலேயே பாகீரதன் பித்ரு தர்ப்பணம் செய்து வழிபட்டான்.
அந்த இடம் சேதுப் பாலம் இருக்கும் பகுதியில் உள்ள ராமேஸ்வரமாகும்.



இந்தக் கதை இருக்கட்டும்.

உண்மையில் இப்படி நடந்திருப்பது சாத்தியமா?
ராமாயணம் சொல்லும் தோண்டிய வழியைப் பார்த்தால் இது சாத்தியம்.
சகர மகன்கள் கடலுக்கு வந்தது என்பது வங்காள விரிகுடாக் கடலாகும்.
அதில்தான் கங்கை கலக்கிறது.
அதற்கு மேல் கடலில் நமக்கு ஒன்றும் கண்ணுக்குத் தெரிவதில்லை.
ஆனால் பனியுகம் இருந்த காலத்தில் இந்தக் கடலில் நீர் அதிகம் இல்லை.
வங்காள விரிகுடாக் கடலின் மட்டம் உயரமானது.
அது கலக்கும் இந்தியக் கடலின் மட்டம் தாழ்வானது.
இந்தியக் கடல் 20,000 ஆண்டுகளுக்கு முன்னால்
இப்பொழுது இருப்பதை விட 150 மீட்டர் முறைவாக இருந்தது என்று பார்த்தோம்.
அந்தக் கடலில் நீர் மட்டம் குறையக் குறைய,
வங்கக் கடலின் நீரும் இந்தியக் கடலை நோக்கிச் சென்று விடவே குறைந்திருக்கும்.
அதனால் கரையோரப் பகுதிகளில் நிலப் பாகம் வெளியில் தெரிந்திருக்கும்.


எனவே இன்றைக்கு இருக்கும் இந்தியக் கிழக்குக் கடற்கரை
இன்னும் கடலுக்குள் நீண்டிருக்கும்.
அந்தப் பகுதியில் சகரர் மகன்கள் வெட்டிச் சென்றிருக்கிறார்கள்.


இதை உறுதி படுத்தும் வண்ணம்
வங்கக் கடலின் அடித்தள வரைபடம்
ஒரு ஆச்சரியமான அமைப்பைக் காட்டுகிறது.
வங்கக் கடலின் அடித்தளத்தை ஆராய்ந்து,
அதன் அடிவாரத்தின் அமைப்புகளைத் தரும் விஞ்ஞானிகள் கொடுத்துள்ள இந்த வரை படத்தைப் பாருங்கள்.





இதில் கடலோரத்தில் கால்வாய் போன்ற அமைப்புகள் தெரிகின்றன.
இவற்றின் ஆழம் 130 மீ, 80 மீ, 60 மீ, 30 மீ ஆகும்
என்று இந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இவை பனியுக கால முடிவில் ஏற்பட்டவை என்கின்றனர்
(18,000 ஆண்டுகள் தொடஙகி 15,000 ஆண்டுகளுக்குள் எற்பட்டிருக்க வேண்டும்)
இந்தியக் கடலில் இந்த ஆழத்தில் அப்பொழுது கடல் நீர் இல்லை.
இந்தியக் கடலை விட வங்கக் கடல் உயரம் அதிகம்.
எனவே இந்தியக் கடலில் 150 மீ ஆழத்தில் நீர் இருந்த போது
வங்கக் கடல் இந்தியாவுக்குக் கிழக்கே தொலைவில் இருந்திருக்க் வேண்டும்.


இந்தப் படத்தில் அந்தக் கால்வாய்கள் செல்லும் வழியைப் பாருங்கள்.



கடலோரமாக இலங்கையை ஒட்டிச் என்று,
பிறகு இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே புகுந்து
ராமர் சேது பாலத்தை அடைந்து
பிறகு தென் திசை நோக்கித் திரும்புகிறது.
(இந்தப் படஙளைக் கொண்ட வங்கக் கடல் அடிவார ஆராய்ச்சியை இந்த லிங்கில் படிக்கலாம்



ராமாயணம் சொல்லும் விவரத்தையும், இதையும் ஒப்பிடுவோம்.
சகர மகன்கள் வெட்டிய மொத்த நிலப்பரப்பைப் பற்றி குறிப்பு இருக்கிறது.
60,000 மகன்களும் ஆளுக்கு ஒரு சதுர யோஜனை (ஏக ஏகம் யோஜனா’)
வெட்டினர் என்கிறது.
ஒரு யோஜனை என்பது ஏறத்தாழ 8 மைல்களாகும்.
எனவே 60,000 மகன்களும் 4,80,000 சதுர யோஜனை வெட்டியிருக்க வேண்டும்.
இதை நீளவாக்கில் எடுத்துக் கொண்டால்
மொத்தமாக சுமார் 700 மைல் தொலைவுக்குள் வெட்டியிருக்க வேண்டும்.
அதாவது 1000 கி.மீட்டருக்குக் குறையாமல் தோண்டியிருக்க வேண்டும்.
மேலே காட்டப்படட் படத்தில் உள்ள தூரம் ஏறக்குறைய அவ்வளவு இருக்கும்.
கல்கத்தாவுக்கும் கொழும்புவுக்கும் இடையே விமானப் பயணத் தூரம் 1965 கி.மீ.
எனவே கடலில் காட்டப்பட்டுள்ள தூரம் 1000 கி.மீட்டருக்குக் குறையாமல் இருக்கும்.


முதலில் சகர மகன்கள் தோண்டும் போது நில நடுக்கம் உண்டாகியிருக்கிறது.
அதன் சப்ததையும், அதிர்வையும் அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள்.
அவர்கள் கடலில் நுழைந்தார்கள் என்று சொன்னது,
ஒரு காலத்தில் கடலாகப் பரவியிருந்து,
நீர் மட்டம் குறைந்து விட்ட வங்கக் கடலில் நுழைந்திருக்கிறார்கள் என்பது புலனாகிறது.
அதில் முதலில் கிழக்கு நோக்கிச் சென்றிருக்கிறார்கள்.
அங்கு 90 டிகிரி மலை இருக்கிறது.
இன்றைக்கு அந்த மலை கங்கையாற்றுடன் வந்து விழும் வண்டல் மண்ணினால்
பல கி.மீ தூரம் புதைந்து விட்டது.
இந்தப் பகுதியில், நிலநடுக்க அபாயம் உள்ளது.
மேலும் இந்த ஆராய்ச்சியில் கிழக்கு முகமாக ஒரு நீள் பள்ளம் இருப்பது தெரிய வந்துள்ளது.
அது உண்டான காலக் கட்டத்தை அறிய முடிந்தால்,
அது சகரர் காலத்தில் கடலில் எற்பட்ட பூகம்பத்தால் விளைந்ததா என்று தெரியும்.


எனவே சகர மகன்கள் தெற்கு நோக்கியே வந்திருக்கின்றனர்.
அங்கு இலங்கைதீவு ஒரு பூகம்ப விரிசல் (Fault) பகுதியில் இருக்கவே அதைச் சுற்றி வெட்டியிருக்கின்றனர்.
அங்கிருந்து மேற்கில் திரும்பி,
பிறகு வடக்கில் வெட்டிச் சென்று
அங்கும் பூகம்பப் பகுதிகளாக இருக்கவே
வட மேற்காக தற்போதைய ராமேஸ்வரத்தை அடைந்திருக்கின்றனர்.
அங்கு குதிரைக் கண்டிருக்கின்றனர்.
அவர்கள் அனைவருமே கபில முனிவரது ஹூங்காரத்தினால் சாம்பலாயினர் என்று சொன்னது,
அங்கிருந்த பூகம்ப விரிசலால் வெப்பம் ஏற்பட்டு இறந்திருக்கலாம் என்று தெரிகிறது.



இதை நிச்சயமாக நாம் சொலல்லாம்.
ஏனெனில் ராமர் சேதுவுக்குக் கீழே எரிமலை புதைந்திருக்கிறது.
ஜியலாஜிகல் சர்வே ஆஃப் இந்தியாவின் ஓய்வு பெற்ற மேலாளரான திரு கே. கோபால கிருஷ்ணன் என்பவர்
சேது சமுத்திரத் திட்டத்தை அமல் படுத்தக் கூடாது
என்று கொடுத்துள்ள காரணங்களில் முக்கியமான ஒன்று,
அந்தப் பகுதியில் வென்னீர் ஊற்றுக்களில் இருப்பது போல வெப்பம் உண்டாகிக் கொண்டிருக்கிறது என்பதே.
அதனால் உள்ளுக்குள் எரிமலை வாய் இருகக்கூடும்.
அங்கு மன்னார் பகுதியில் கடலுக்குள் எரிமலை இருக்கிறது
என்றும் அவர் கூறியுள்ளது முக்கியத்துவம் வாய்ந்தது.


பூமிதட்டின் எல்லைகளில் மட்டுமல்லாது,
அந்தத்தட்டுகளின் பல இடஙகளிலும்,
பூமியின் அடிவாரம் பிளந்து பூகம்பம் வரக்கூடிய அறிகுறிகள் நிறையவே உள்ளன.
அப்படிப்பட்ட இடங்களில் எரிமலைகள் உண்டாகலாம்.
நில நடுகக்மும் ஏற்படலாம்.


சகர மகன்கள் வங்கக் கடலைத் தோண்டியபோது
எங்கெல்லாம் பூமி விரிசல்கள், (ஃபால்ட்) இருந்தனவோ
அந்த இடங்களைத் தவிர்த்திருக்கிறார்கள்.
அப்படி அவர்கள் தவிர்த்த ஒரு பகுதி ராமர் சேது.
கடல் மட்டம் குறைவாக இருந்த காலக்கட்டத்தில்
அந்த இடத்தில் எரிமலையின் உஷ்ணம் நன்கு வெளிப்பட்டிருக்க வேண்டும்.
அதனால் சகர மகன்கள் எரிந்து சாம்பலாயிருக்கின்றனர்.


அவர்கள் வெட்டிய வழியில் கங்கை நதி ஓடி வந்திருக்கிறது.
அவள் முதலில் விமோசனம் கொடுத்தது இந்த சகர மகன்களுக்குத்தான்.
சிவனது வெப்பத்தைத் தாங்கியவள் அவள் என்று முன்னமேயே சொல்லப்பட்டது.
அழிக்கும் தொழிலுக்கு அதிபதியாக சிவன் இருக்கவே,
எங்கெல்லாம் அழிவிலிருந்து விமோசனம் தேவையோ
அங்கெல்லாம் அந்த சிவனது தலையிலிருந்து இறங்கிய கங்கையும் இருப்பாள்.
சிவனும் குடி இருப்பான்.
கங்கையின் முதல் பாப விமோசனம் நடந்த ராமேஸ்வரத்தில்
பாகீரதன் லிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டிருக்க வேண்டும்.
கடல் மட்டம் ஏறாத பல வருடங்கள் வரை
மக்கள் அந்த இடத்தில்தான் பித்ரு தர்ப்பணம் செய்திருப்பர்.
ராமேஸ்வரப் பகுதியில் கடலுக்குள் வெப்பம் இருக்கவே
இன்றும் அந்தப் பகுதி கடலுக்கு ‘அக்கினி தீர்த்தம் என்றே பெயராகும்.




வங்கக் கடல் மட்டம் மிகவும் குறைவாக இருந்தது என்றும் 
அதை கங்கை நதி நிரப்பியது என்றும் 
சொல்லும் ஒரு விவரம் மஹாபாரதத்தில் இருக்கிறது.
இந்த விவரம் பனியுகத்துடன் தொடர்பு கொண்ட ஒரு இயற்கை நிகழ்வைக் காட்டுகிறது.

பூமியின் அச்சின் சாய்மானம் மாறிக்கொண்டே இருக்கவே
பனியுகம் ஏற்படுகிறது என்று கண்டோம்.
விந்திய வளர்ந்து போனதும், 
அதை அகஸ்தியர் அடக்கியதும் பற்றி
பகுதி 42 இல் கண்டோம்.
அகஸ்தியர் தென் பகுதிக்கு வந்த போது நடந்த அந்த நிகழ்ச்சியின் 
இயற்கை தாத்பர்யத்தயும் கண்டோம்.
தற்சமயம் இருப்பதை விட கடகரேகை சற்று வடக்கில் இருந்தது என்றும் கண்டோம்.




அப்படி இருந்த காலக்கட்டம் 17,000 தொடங்கி 13,000 ஆண்டுகளுக்குள் 
இருந்திருக்க வேண்டும் என்றும் கண்டோம். 
அந்த அமைப்பு இருந்த காலக்கட்டத்தில் 
வங்ககடல் வற்றிப் போன நிலையில் இருந்திருக்கிறது.
அதற்குப் பிறகு கடல் மட்டம் படிப்படியாக உயர்ந்து 7000 ஆண்டுகளுக்கு முன் தற்போதைய மட்டத்தை எட்டியது என்று ஆய்வுகள் கூறுகின்றன. 


அகஸ்தியர் விந்திய மலையைத் தாண்டி தெற்கே செல்லும் போது
அடுத்த சம்பவமாக கடல் நீரைக் குடித்தார் என்கிறது மஹாபாரதம் 
(வன பர்வம் - 104,105 & 106) 

காலகேயஸ் என்னும் அசுரன் தொந்திரவு கொடுத்ததாகவும், 
அவன் கடலில் ஒளிந்து கொண்டதாகவும்,
அந்த அசுரனைப் பிடிக்க அகஸ்தியர் கடல் நீரைக் குடித்தார் என்றும்
விவரங்கள் தரப்பட்டுள்ளன.

அந்தக் கடல் வங்க கடல் என்று தெளிவாகிறது. 
ஏனெனில் கடல் நீர் வற்றி விடவே கவலை வேண்டாம். 
இக்ஷ்வாகு குலத்தில் பாகீரதன் என்னும் அரசன் வருவான், 
அவன் கங்கையைக் கொண்டு வருவான். 
அந்தக் கங்கை நீரால் இந்தக் கடல் நிரம்பும் என்று 
மஹாபாரதம், வன பர்வம், 106 முதல் 109 அத்தியாயங்களில்
வரை விவரிக்கப்படுகிறது. 
சகரனின் கதையும், 
கங்கை வந்த கதையும் 
ராமாயணத்தில் இருப்பதைப் போலவே சொல்லப்பட்டுள்ளது. 


இதன் மூலம் கடக ரேகை அதிக பட்ச வடக்குத் தொலைவை எட்டிய போது, 
வங்கக் கடலில் நீர் மட்டம் மிகவும் குறைந்து 
நில பாகங்கள் தோன்றியிருக்கின்றன என்றும், 
அங்கு பிற்காலத்தில் சகர மகன்கள் தோண்டி 
கங்கை நதி ஓட ஏதுவாக இருந்திருக்கின்றனர் என்றும் தெரிகிறது. 
இவ்வாறு உள் சாட்சியாக (internal evidence) நம் இதிஹாஸங்களிலும், 
ஒன்றுக்கொன்று முரணில்லாமல், 
இயற்கை சம்பவங்களை கதை ரூபமாக விவரித்திருக்கின்றார்கள் 
என்பது தெரிகிறது.

வெட்டப்பட்ட கால்வாய் போன்ற அமைப்பில் வந்த கங்கை
பனியுகம் முடிந்து வெப்பம் அதிகமாக அதிகமாக,  
காட்டாற்று வெள்ளமாக வந்திருப்பாள். 


அதனால் அவளால் வங்கக் கடல் நிரம்ப ஆரம்பித்திருக்கும்.
வங்கக் கடல் என்பதே ‘கங்கா சாகர் என்பதன் உருமாற்றம் ஆகும்.
சகர மகன்களால் அது தோண்டப்படவே அது சாகரம் என்று ஆயிற்று.
8000 ஆண்டுகளுக்கு முன் கடல் மட்டம் ஏறத்தாழ தற்போதைய நிலைக்கு வந்து விட்டது.
அதனால் தனியாக கங்கை சென்ற பாதை தெரியவில்லை.
கடல் மட்டம் ஏறினதால்.
கங்கை நீர் ராமேஸ்வரத்தைத் தாண்டி இந்தியக் கடலுக்குள் சென்று விட்டிருக்கும்.
எனவே அந்தப் பகுதியில் இருக்கும் நீர்
முழுவதும் கங்கை நீராக இருக்காது.
இதன் காரணமாக,
வட இந்தியப் பகுதியில் கங்கை ஓடி வரும் பகுதிகளில்
மக்கள் தர்ப்பணம் செய்ய ஆரம்பித்திருப்பார்கள்.
கயாவும், காசியும் அந்த சமயத்தில் முக்கியத்துவம் பெற்றிருக்கும்.


காசி ராமேஸ்வரம் யாத்திரை ஹிந்துக்களுக்கு மிகவும் முக்கியமானது.
காசியில் கங்கையில் நீராடினால் மட்டும் இந்த யாத்திரை முடிவடையாது.
அங்கு கங்கையில் குளித்த பின்,
அங்கிருந்து கங்கை நீரை எடுத்துக் கொண்டு ராமேஸ்வரத்துக்கு வர வேண்டும்.
ராமேஸ்வரத்தில் இருக்கும் சிவனுக்கு அதைக் கொண்டு அபிஷேகம் செய்து,
ராமேஸ்வரக் கடலிலிருந்து ஒரு பிடி மண்ணை எடுத்துக் கொண்டு
மீண்டும் காசிக்குச் செல்ல வேண்டும்.
அங்கு கங்கையில் அந்த மண்ணைக் கரைத்த பிறகுதான் யாத்திரை முடிவு பெற்றதாகிறது.
இன்றைக்கும் மக்கள் அதைச் செய்கிறார்கள்.
அதற்கு என்ன காரணம் இருக்க முடியும் என்பதில் நமக்கு சந்தேகமில்லை.


வங்கக் கடல் மட்டம் ஏறின பிறகு
காசியில் ஓடும் கங்கையில் பாப விமோசனம் செய்ய ஆரம்பித்தார்கள்.
ஆயினும் முதன் முதலில் கங்கை தொட்ட இடம் சேதுக் கரையில் உள்ள ராமேஸ்வரம்தான்.
இன்றைக்குக் கங்கை நமக்கு இருப்பதற்குக் காரணமே
அந்த சகர மகன்கள் தோண்டிச் சென்றதால்தான்.
எனவே அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக
அவர்கள் ராமேஸ்வரக் கரையிலிருந்து அவர்களது சாம்பலை எடுத்துக் கங்கையில் கரைக்கும் விதமாக,
ராமேஸ்வரக் கரையிலிருந்து மண்ணை எடுத்து,
காசிக்குச் சென்று கங்கையில் கரைக்கிறார்கள்.
சேதுக் கரையில் ஆரம்பித்தே
கங்கைக்கு,
அவள் உண்டான இமய மலை வரை பாப விமோசன வேலை தொடங்கவே
‘ஆசேது ஹிமாசலா  (சேதுவிலிருந்து இமயமலை வரை)
என்ற சொற்றொடர் பிரபலமாகி இருக்கும்.

இந்தப் படத்தில், வங்காள விரிகுடாவில் சென்ற  கங்கைத் தடம் காட்டப்பட்டுள்ளது. 
இமயம் முதல் சேது வரை கங்கை வந்தாள். 
அந்த சேது முதல் கொண்டே,  அவளது பெருமை இமயம் வரை செல்கிறது. 
இதைக் குறிக்கும்  ‘ஆ சேது ஹிமாசலா’ என்பது அம்புக் குறிகளால் காட்டப்பட்டுள்ளது.

ராமேஸ்வரப் பகுதியில் கடல் நீரும் வந்து விடவே,
அங்கு சகர மகன்களால் தொடப்படாத, வெப்பப்பகுதியில் ராமன் அணை கட்டியது
தர்ப்பணம் என்னும் ஹிந்து மதசசடங்கில் பெரிதும் பயனாகிரது



ராமன் கடலைக் கடக்க விரும்பிய போது,
சமுத்திரராஜன் அந்தப் பகுதியில் கடல் நீரைக் குறைத்து வழி விடவில்லை.
அதனால் கோபமுற்ற ராமன் பிரம்மாஸ்திரத்தைத் தொடுத்தான்.
அப்பொழுது சமுத்திரராஜன் அதைத் தடுத்தான்.


அந்தப் பகுதி ஏற்கெனவே விரிசல் கண்ட பகுதி.
அதை சகர மகன்களும் உடைக்கவில்லை.
ராமனது அஸ்திரத்தால் அங்கு அழிவு ஏற்படும்.
எனவே வேறு ஒரு இடத்தில் அஸ்திரத்தை விட்டார்.
அதன் பயனாக சேதுப் பகுதியில் நீர் மட்டம் குறைந்தது.
வானரங்களும் அங்கு ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்குகளைப்போல
பவழப் பாறைகளையும், கற்கள், மரம் போன்றவற்றையும் கொண்டு சுவர் போல எழுப்பினர்.
இன்று அதை ஆராய்ச்சியாளர்கள் அது சுவர் போல இருக்கிறது என்கிறார்கள்.


                            93 கி.மீ உயரத்திலிருந்து  பார்த்தால்  ராமர் சேது  இவ்வாறு  தெரிகிறது.


அப்படி உண்டாக்கியதில், இலங்கைக்குத் தரை வழியும் ஏற்பட்டது.
வங்கக் கடல் அடிவாரக் கால்வாய் வழியாக வரும் நீர்ப்போக்கும்
அங்கேயே தடை செய்யப்பட்டு விடுகிறது.
கங்கை மட்டுமல்ல.
கிழக்குக் கடலில் கலக்கும், கிருஷ்ணா, கோதாவரி போன்ற பல நதிகளின் நீரும்
சேரக்கூடிய இடமாக இருக்கவே அது புண்ணிய தீர்த்தமாகிறது.
இதன் காரணமாகவே
ராமனே சேதுவின் பெருமையை வால்மீகி ராமாயணத்தில் சொல்கிறான்.


அதை உடைத்தால்
ஒரு மாபெரும் பெருமை உடைய தீர்த்தம் தன் இயல்பை இழக்கும்.
அது மட்டுமல்ல.
அதை உடைத்தால்
முதலில் தமிழ் ஈழப் பகுதிகளும்,
மேற்கு இலங்கையும் நீருக்குள் முழுகி விடும்.
கால் பங்கு இலங்கை கடலுக்குள் மூழ்கும் அபாயம் இருக்கிறது
என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்.
அப்படியும் இந்த சேதுப் பாலத்தை இடிக்க வேண்டும்
என்று சொல்லும் திராவிடவாதிகள்
தமிழ்த் துரோகிகள் மட்டுமல்ல.
மனித இனத்துக்கே துரோகிகள் ஆவார்கள்.


இனி சகர மகன்களால் இந்த வங்கக் கடல் தோண்டப்பட்டது உண்மை
என்று சொல்லும் விவரங்களைப் பார்ப்போம்.


ராமாயணத்தில் அனுமான் கடலைக் கடக்கும் போது
மைனாகம் என்னும் மலை எழும்பி வருகிறது.
அதுவரை அது கடலுக்குள் இருந்திருக்கிறது.
அனுமன் தங்கி சிரம பரிகாரம் செய்து கொள்ளட்டும் என்று,
அது அவனுக்கு அதிதி பூஜை செய்வதற்காக எழும்பியது.
கடலுக்குள் முழுகியிருந்த எரிமலை அமைப்பை இது சித்தரிக்கிறது.
பாதாளத்தின் வாயிலை அடைத்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறது என்றும்
அதனால் பாதாளத்தில் இருக்கும் அசுரர்கள்
வெளியே வராமல் அது பார்த்துக் கொள்கிறது என்றும் வர்ணனை வருகிறது.
பூமியின் அடியில் திரவ நிலையில் பூமிக் குழம்புகள் இருப்பதையும்,
அது வெடிப்பு மூலமாக வெளியே வரமுடியாமல்,
அதன் மீது மைனாக மலை அமர்ந்திருப்பதையும் இது காட்டுகிறது.



அனுமன் கடலைக் கடந்தபொழுது,
அபாயகரமாக இல்லாமல்
அது கடல் மட்டத்துக்கு மேலே தெரிந்திருக்க வேண்டும்.
அது அவ்வாறு எழும்பினதற்குக் காரணம் சமுத்திர ராஜன்.


ராம காரியமாக அனுமன் வரவே,
எந்த ராமனுடைய முன்னோனான சகர மன்னனது மகன்கள் செயலால்
அந்த சமுத்திரத்தில் நீர் அதிகமானதோ,
அதற்குக் கைமாறாக ராம காரியத்தில் தானும் ஏதேனும் செய்ய சமுத்திர ராஜன் விரும்பினான்.
அதனால் மைனாக மலையில் அனுமன் இறங்கி சிரம பரிகாரம் செய்து கொள்ள வேண்டும் என்று சமுத்திர ராஜன் சொன்னான்.
இதன் மூலம் வங்கக் கடலில்தான் சகர மகன்கள் தோண்டியிருக்கிறார்கள் தெரிகிறது.


இதற்குப் பிறகும் சகர மகன்கள் செய்த செய்கையைப் பற்றிய குறிப்பு வருகிறது.
அதைச் சொல்பவன் விபீஷணன்.
வானரப் படைகளுடன் எப்படிக் கடலைக் கடப்பது என்று ராமன் யோசித்தபோது,
விபீஷணன் சமுத்திர ராஜனை உதவச் சொல்லிக் கேடகச் சொல்கிறான்.
ராமனது முன்னோனான சகரர்களால் அந்தக் கடல் தோண்டப்படவே,
அந்தக் கடலுக்கு அரசனான சமுத்திரராஜன் இப்பொழுது உதவிக்கு வருவான்.
எனவே கடலில் வழி விடுமாறு அவனை ராமன் கேட்கட்டும் என்கிறான்.



தமிழ் நூல்களிலும் இது சகரரால் தோண்டப்பட்ட கடல் என்று வருகிறது.
தமிழில் கடலுக்குப் பல வர்ணனைகள் உள்ளன.
வட கடல், தென் கடல், குண கடல், குடக் கடல் என்பவை முறையே
வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு என்னும் திசைகளில் உள்ள கடல்களுக்குச் சொல்வது.


இவை தவிர விரிகடல், தொடுகடல், அகழ் கடல் என்று
வினைப் பெயர்களாக கடல் விவரிக்கப்பட்டுள்ளது.
பரந்து விரிந்த கடல் விரிகடல் ஆகும்.
ஆனால் தொடு கடல் என்றால் ‘தோண்டப்பட்ட கடல் என்ப்படும்.
அகழ் கடல் என்றால் அகழப்பட்ட அதாவது தோண்டப்பட்ட கடல் என்பது பொருளாகும்.
இந்த இரண்டு சொற்களும், கிழக்கில் உள்ள வங்கக் கடலுக்குச் சொல்லப்பட்டுள்ளது.


வடாஅது என்று ஆரம்பிக்கும் புறநாநூறு 6- ஆம் பாடலில்
தொடு கடல் குணக்கு என்று வந்துள்ளது.


டா. உ.வே.சா. அவர்கள் கண்டெடுத்த உரையில்,
கீழ்க்கண்ணது கரையைப் பொருகின்ற சகரரால் தோண்டப்பட்ட சாகரத்தின் கிழக்கும
 என்கிறார் பழைய உரையாசிரியர்.
தோண்டப்பட்ட இடத்துக்கும் கிழக்கில் கடல் இருந்தது.
தோண்டப்பட்ட பகுதி நிலமாக இருந்தது.
கரையோரமாகத் தோண்டியிருக்கிறார்கள் என்பது புலனாகிறது.
ஆராய்ச்சியாளர்கள் கொடுத்துள்ள வரைபடத்திலும் இதையே காண்கிறோம்.


மேலும் அந்த உரையில்
சகரரால் தோண்டப்பட்டமையின் கீழ்க் கடலைத் தொடு கடலென்றார்
என்றும் சொல்லப்பட்டுள்ளது.
இந்தக் கருத்தே வில்லி பாரதத்திலும்
“தொட்ட பைங்கடல் சூரியன் தோன்றுமுன் தோன்றிஎன்று வருகிறது ( வி-பா- நிரை மீட்சி 24)


சிலப்பதிகாரத்தில் இரண்டு இடங்களில் ‘அகழ் கடல் என்று சொல்லப்பட்டுள்ளது.
“அகழ் கடல் ஞாலம் ஆள்வோய் வாழி(நடுகல் காதை. வரி 127)
என்பதற்கு அடியார்க்கு நல்லார் உரையில்
“சகரரால் தோண்டப்பட்ட கடல்என்று சொல்லப்பட்டுள்ளது.


கால் கோள் காதையில் 237 ஆம் வரியில்
கடல் அகழ் இலங்கையில் என்று வருகிறது.
கடலை அகழ்ந்து உருவாக்கப்பட்ட இலங்கையில் என்பது பொருள்.
இதை கடலே அகழி போல இருந்த இலங்கை என்று பொருள் கொள்வாறும் உள்ளனர்.
ஆனால் ஒன்றைத்தெரிந்து கொள்ள வேண்டும்.
அகழி என்ற சொல்லே
அகழ்ந்து அதாவது தோண்டப்பட்டு வந்தது என்பது பொருள்.
இலங்கையைச் சுற்றியுள்ள கடல் அகழப்பட்டு வரவே,
அகழ்கடல் இலங்கை என்கிறார் இளங்கோவடிகளார்.


சிலப்பதிகாரம் கூறும் இந்த வரிகளில் இன்னொரு விசேஷம் இருக்கிறது.
கண்ணகி கோவிலுக்காக கல் எடுத்து வெற்றியுடன் திரும்புகிறான் சேரன் செங்குட்டுவன்.
அதைக் கொண்டாடும் வண்ணம்
முன்தேர்த்தட்டில் முதல்வனை வாழ்த்திக் குரவை ஆடுகிறார்கள்.
பின் தேர்த்தட்டில் கூளிச் சுற்றம் குரவை ஆடுகிறார்கள்.
இதற்குத் தொல்காப்பிய சூத்திரம் இருக்கிறது (பொருள் -76)
வென்ற அரசனது வெற்றிக் களிப்பில்
அவனிருக்கும் தேர்த்தட்டின் முன்னும் பின்னும் நடனம் ஆடுகின்றனர்.
முன் தேர்த்தட்டில் ஆடுபவர்களுடன் அரசனும் கை கோர்த்து ஆடுவான்.
அந்த ஆட்டத்தில் முதல்வன் என்று இறைவனது வெற்றியைப் பாடி ஆடுவர்.
யார் அந்த இறைவன்?
செங்குட்டுவன் ஆடிய  முன் தேர்த்தட்டுக் குரவையில்,
திருமால் கடல் வயிறு கலக்கிய பாங்கும்,
கடல் அகழ் இலங்கையில் போரிட்டுப் பெற்ற வெற்றியும்,
பாண்டவர் பொருட்டு தேரூர்ந்து சென்று பெற்ற வெற்றியும் பாடப்பட்டது.


ராமன் யார் என்று கேட்ட திராவிடமூடவாதிகள்
சிலப்பதிகாரம் படித்த பட்சணம் அவ்வளவுதான்.
ராமன் வாழ்ந்தான் என்பது மட்டுமல்ல,
அவன் இலங்கையில் வெற்றி கொண்டான் என்பதையும்,
அவனது முன்னோர்கள்
இந்தக் கிழக்குக் கடலைத் தோண்டியிருக்கிறார்கள்
என்னும் முக்கியச் செய்தியையும் சிலப்பதிகாரம் சொல்கிறது.


இதை விடவும் முக்கியமானது நமது தொடருக்குத் தேவையானது
சகரரது மகன்கள் கடலைத்தோண்டவே
கடல் ஊழி வந்து விட்டதோ என்று
முதல் ஊழிக்குப் பிறகு தென் மதுரை மக்கள் பேசிக் கொண்டார்கள்
என்று நச்சினார்க்கினியர் உரையில் காணப்படுகிறது என்கிறார்கள்.
அந்தப் பகுதி கிடைத்தும் அதை இங்கே குறிப்பிடுகிறேன்.


ஆனால் சகரரால் தோண்டப்பட்ட கடல் என்னும் விவரம்
சிலப்பதிகார காலம் வரையிலும் மக்களிடையே புழங்கி இருக்கிறது.


இனி அது நடந்த காலக்கட்டத்தைப் பார்ப்போம்.
கங்கை நதிப் படுகையை ஆராய்ச்சி செய்தால்
அது உண்டான காலக்கட்டத்தைச் சொல்லி விடலாம்.
இதுவரை அப்படி ஒரு ஆராய்ச்சியை சிறிய அளவில்
ஐ.ஐ.டி. கான்பூர் குழுவினர் செய்திருக்கின்றனர்.
கான்பூர் அருகே இருக்கும் கங்கைப் பகுதியில் ஆராய்ந்துள்ளனர்.
அதன்படி பனியுகத்தின் போது கங்கை ஓடவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பனியுகம் முடிந்த பிறகு,
கங்கை ஓடிய அடையளங்கள் இருக்கின்றன.
(ஆராய்ச்சிக் கட்டுரையை இங்கு படிக்கலாம் :-


இந்தியாவைப் பொருத்தவரை,
இந்தியக் கடலில்தான் கடல் கோளினால் அபாயம் வந்திருக்கிறது.
இந்தியாவின் தெற்குப் பகுதியில் இருந்த கடலிலிருந்தும் (இந்தியப் பெருங்கடல்), 
கிழக்குப் பகுதியில் இருந்த கடலிலிருந்தும் (வங்காள விரிகுடா)
12,000 ஆண்டுகளுக்கு முன்னால் அபாயம் வரவில்லை.
மீதம் இருப்பது மேற்குப் பகுதியில் உள்ள அரபிக் கடல்.
அந்தக் கடலில் அபாயம் வந்ததா?
அதனால் மனுவைச் சேர்ந்த மக்கள் தப்பி வட இந்தியாவுக்குக் குடி பெயர்ந்தார்களா?
அதையும் தேடுவோம்.