திங்கள், 19 நவம்பர், 2012

120. இன்காவில் (INCA) தமிழும், சமஸ்க்ருதமும்.


இன்கா மக்களது முக்கியக் கடவுள் விரகோசன். அவனது இரு மகன்களுள் ஒருவன் கடலோரப் பகுதியில் இருந்த ஒரு குகை வாயீல் வழியாக வெளி வந்தான். இன்னொருவன் அதற்குச் சற்று தொலைவில் உள்ள டிடிகாகா (TITIKAKA) என்னும் ஏரி இருக்கும் இடத்துக்கருகே குகை வாயில் வழியே வெளியே வந்திருக்கிறான் என்று முந்தின கட்டுரைக்ளில் கண்டோம். அந்த இரண்டு இடங்களும் கருப்பு நிறப்புள்ளியாகவும், (டிடிகாகா ஏரி) சிவப்புப் புள்ளியாகவும் இந்தப் படத்தில் காட்டப்பட்டுள்ளது.




டிடிகாகா ஏரியின் அருகில் உள்ள பச்சரிதம்போ (PACARI TAMBO) என்னும் இடத்தில் வந்திறங்கிய மன்கோ  காபக் என்பவனே விரகோசன் என்னும் சூரியக் கடவுளது வழிபாட்டை நிறுவுகிறான்.



Colonial image of Manco Cápac


இவனுடன் மேலும் மூன்று சகோதரர்கள் வந்தனர். அப்படி வந்த இவர்களை மானச புத்திரர்கள் என்று வேத மரபில் சொல்வதைப் போல 'மாரஸ் டோகோ' (MARAS TOCO)      என்கிறார்கள். அவ்வாறு வந்தவர்கள் மொத்தம் நான்கு ஆண்கள். நான்கு பெண்கள் அந்த ஆண்கள் ஐயா அல்லது ஆயர் என்ற பெயர் கொண்டவர்களாக இருக்கிறார்கள். (Ayar Auca, Ayar Cachi, and Ayar Uchu) பெண்கள் மாமா என்று அம்மா என்ற பொருளில் பெயர் கொண்டவர்களாக இருந்தனர். (Mama Ocllo, Mama Huaco, Mama Raua, and Mama Cura)


இவரகள் மூலமாக மக்கள் தொகை பெருகி ஒரு நாகரிகத்துக்கு அடிகோலியது.

இவ்வாறு தொடரும் இன்கா கதைகளில் நமக்கு வியப்பைத் தரும் விவரங்கள் பல இருக்கின்றன. அவற்றுள் முக்கியமானவை:-

·         ஐமர், ஐமரா, ஐயர்மரா, ஆயர்மாரா என அவர்கள் பெயர் இருக்கின்றது. இவற்றின் உண்மையான ஓசை அல்லது பொருள் யாருக்கும் தெரியாது. கெல்டுகள் விஷயத்தில் எவ்வாறு கிரேக்கர்கள், அவர்கள் பாரம்பரியத்தை அழித்து, பெயர்களை மாற்றினார்களோ, அவ்வாறே இன்கா மக்கள் உட்பட தென் அமெரிக்கப் பழங்குடி மக்களது பாரம்பரியத்தையும், பெயர்களையும் ஸ்பெயின் நாட்டவர்கள் மாற்றினார்கள். நம்மைப் பொருத்தவரையில், ஐயா அல்லது ஆய மார் என்னும் பெயர் தமிழ் மரபை ஒத்து இருக்கிறதே அது எதேச்சையானதுதானா?

 

·         அந்த ஐயமார் என்பதில் உள்ள 'ஐய' என்பதை அவர்களது பழைய மரபில் 'ஜய' (JAYA) என்கிறார்களே அது சமஸ்க்ருதச் சொல்லல்லவா? அல்லது தமிழில் எழுதப்படும் என்னும் எழுத்தைத் தவறாகப் புரிந்து கொண்டு என்றது போல அல்லவா இருக்கிறது? (விவரங்களுக்குப் பார்க்க :- http://en.wikipedia.org/wiki/Aymara_language#Etymology )

இதை இன்னொரு விதமாகவும் பார்க்கலாம். அவர்களது பழைய மொழியில் ஐய என்பதை ஜய என்றும், மாரா என்பதைக் காலம், நேரம் என்றும் கூறுகிறார்கள். மாரா என்பது மானா என்னும் சமஸ்க்ருதச் சொல்லை ஒத்திருக்கிறது. மானா / மான என்றால் காலக் கணக்கு என்றே பொருள். சௌரமானம், சாந்திரமானம் என்பது போல ஜயமானம் அதாவது வெற்றியின் காலம் அல்லது வெற்றியின் அளவு என்று இதை சமஸ்க்ருதத்தில் பொருள் காணலாம். அதுவே ஜயமாரா என்றாகி, ஐயமாரா என்றானதோ?

எது எப்படியாகினும், தமிழும், சமஸ்க்ருதமும் கலந்த ஒரு பேச்சை இது காட்டுகிறது.

·         இன்கா மக்கள் தாங்கள் இருந்த இடத்தை உரு அல்லது ஊரு, ஊர் என்று அழைக்கிறார்களே அது எப்படி? ஊரு, உருக் என்றெல்லாம் ஈரான் நாட்டில் காணப்படும் பெயர்கள் என்று அங்கிருந்தவன் திராவிடன் என்று திராவிடவாதிகள் கூறுவார்களே, தென் அமெரிக்காவிலும் ஊரு என்ற இடம் இருக்கிறதே, இதற்கு என்ன சொல்லப் போகிறார்கள்? தென் அமெரிக்காவிலிருந்து திராவிடன் வந்தானா, இல்லை தமிழ் நாட்டிலிருந்து அங்கு போனானா? அவர்கள் விளக்கம் என்ன?

 

·         அந்த மக்களுக்கே ஊரோஸ் (UROS) என்று பெயர். ஊரு பெண்மணியைப் படத்தில் பாருங்கள்.


இந்த மக்கள் இந்தியாவின் வடகிழக்குப் பகுதி, மற்றும் நாகாலாந்து மக்களை ஒத்திருக்கிறார்கள். சீன மக்களையும் ஒத்திருக்கிறார்கள். ஆண்களது சராசரி உயரம் 5 அடி 2 அங்குலம் தான். பெண்கள் ஐந்தடிக்கும் குறைவாகவே இருக்கிறார்கள். சீனர்களைப் போல உருவ ஒற்றுமையும், உயரமும் இருக்கிறது. இந்த மக்களில் பெண்கள் தமிழ்ப் பெண்களைப் போல பின்னல் இடுகிறார்கள். சீன மக்களும் பின்னல் இடுபவர்கள் தான்.

·         ஊரு என்னும் இந்தப் பெயரில் உள்ள மர்மத்தை அவிழ்க்க ஒரு விவரம் இருக்கிறது. ஊரு என்னுமிட்த்தில் இருக்கும் மக்கள் தாங்கள் புகினா (PUKINA) என்னும் நகரங்களிலிருந்து வந்தவர்கள் என்று சொல்லிக் கொள்கிறார்கள். (புகினா என்றால் புகுந்த இடம் என்பது போல ஒலிக்கிறது). உண்மையில் இன்கா நாகரிகம் வளர்ந்த நாடே பெரு (PERU) என்னும் நாடாகும். புரா என்பது பெரு என்றும் ஆகி இருக்கலாம். எனினும் புனாஸ் (PUNAS)  என்னும் இடத்தில் 9500 ஆண்டுகளுக்கு முன்பே பழைய இன்கா மக்கள் வந்திருக்க வேண்டும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். http://www.incas.info/view/archaeology/archaeology.html

 

·         நகரம் – ஊர் என்பவை மயமதத்தின் வாஸ்து சாஸ்திரப் பெயர்களாகும். புரா, புரம், பூர் என்பவை நகரங்களுக்கான பெயர்கள். அரசர்களும், வணிகர்களும் வாழும் இடங்கள் என்று மயமதம் கூறுகிறது (9-40). புரம் என்னும் நகரத்தை விடச் சிறியது ஊர் ஆகும். அங்கு பெருமளவில் வியாபார வேலைகள் நடக்காது. இந்த ஊர், புரம் என்னும் இரு சொற்களும் இந்தியாவில் எங்கு நோக்கினும் இருக்கும்.

 

·         ஊரு மக்கள் புகினா என்னும் நகரப்பகுதிகளிலிருந்து வந்தவர்கள் என்று அவர்கள் சொல்வதால், புகினா என்பது புனா அல்லது புரம் என்னும் சொல்லிலிருந்து உருவானது போலத் தெரிகிறது. இதே பகுதியில் உருகுவே நாடு இருக்கிறது. உரு மக்கள் வசித்ததால் அந்தப் பெயர் ஏற்பட்டிருக்கலாம். அதுபோல பராகுவே நாடும் புரா என்னும் நகரத்தின் பெயரால் உண்டாகி இருக்கலாம்.

 

·         இதில் இன்னொரு ஆச்சரியம் இருக்கிறது. உருக்ரமா என்பது சூரியனது பெயர். திதியின் சகோதரி அதிதி (ADITI) ஆவாள் (மற்றொரு சகோதரி வகை மரபணு) அவளுக்கு 12 சூரியர்கள் பிறந்தனர் என்பது புராண வழக்கு ஆகும். அதாவது தென் புலத்தில் விழுந்த சூரிய வெப்பம், ஒளி ஆகியவற்றின் அடிப்படையில் இந்தப் பெயர்கள் உருவான புவியியல் உருவகத்தைக் கூற முடியும். அவர்களில் கடைசிப் பெயர் உரு-க்ரமன். பெரிய பெரிய அடிகளை வைத்துச் செல்பவன் என்று இதற்குப் பொருள். அதாவது சூரியன் வேகமாக (இடப்பெயர்வு) நகர்ந்து செல்கிறான் என்பதை இது குறிக்கிறது. அப்படிப்பட்ட காலக் கட்டத்தில் இந்த மக்கள் இங்கு குடியேறியிருக்க வேண்டும்.

 

·         சூரியன் வேகமாக வடபுலம் நோக்கி நகர்ந்து செல்வதால், அந்திமத்தை நெருங்குகிறான் என்று சொல்லும் வண்ணம் சூரியனை அந்தி என்றழைத்து அதுவே இன்டி (INTI) என்றாகி இருக்க வேண்டும். இன்கா மக்கள் சூரியனை இன்டி என்றே அழைத்தனர். இந்த விளக்கத்துடன் கூடிய அந்தி என்னும் சொல்லை ஒட்டியும் ஆண்டி – ஆண்டிஸ் (ANDES) என்ற பெயர் உருவாகி இருக்கலாம்.

·         ஊரு மக்கள் வாழ்ந்த முக்கிய இடம் தீவநாகு (TIWNAKU) ஆகும். நாகத்தீபம் என்பதை இந்தப் பெயர் நினைவூட்டுகிறது. குகையிலும், பூமிக்கடியிலும் வசிப்பவர்கள் நாகர்கள் ஆவார்கள். அப்படி ஒரு வழிப் பாதையில் வந்த இந்த மக்கள் ஆதியில் இந்துமாக்கடல் பகுதியில் அப்படிப்பட்ட நாகத்தீவுகளில் வசித்தவர்களா?

 

 

·         வேத மரபில் மக்கள் எங்கு சென்றாலும் ஒரு மேருவை அடையாளம் கண்டு விடுவார்கள். இவர்களும் "அரம மூரு" (ARAMA MURU ) என்ற ஒரு மலையை, கற்களால் கட்டி, செயற்கையாக உண்டாக்கினார்கள். அரம மேரு என்பது அரம மூரு என்று திரிந்ததா?

 

·         இது அரவ ஊரு என்பது போலவும் இருக்கிறது. அரவம் என்றால் பாம்பு என்றும் அர்த்தம். நாகர்கள் போல குகைப் பாதையில் வந்ததால் இந்தப் பெயரா? இதன் அமைப்பை கீழ்க் காணும் படத்தில் காணலாம்.


 

·          இந்தப் பெயரில் அரம – அரவ இவை இரண்டில் எது சரி என்று இன்கா மக்களுக்கே தெரியவில்லை. ஆனால் அவர்கள் சொல்லும் ஒரு பழமையான மரபின் அடிப்படியில் அது அரவ மேரு என்றே இருக்க வேண்டும். அந்த மக்கள் இந்தப் பெயருக்கு 'பாம்புகளது நாடு' அல்லது பாம்புகளது மேரு என்றே பொருள் தருகிறார்கள். (http://www.labyrinthina.com/amaru.htm) எனவே இது அரவ மேரு என்றாகத்தான் இருக்க வேண்டும்.

 

·         இந்த அர்த்தம் வேத மரபில் நம் நாட்டில் இருந்து வருகிறது. உதாரணமாக வேங்கடேசப் பெருமான் குடி கொண்டிருக்கும் திருமலையை மேரு என்பார்கள். வாசுகி என்னும் பாம்பு அதைச் சுற்றிக் கொண்டிருக்கிறது என்பார்கள். இதைப் பற்றி 55 ஆவது கட்டுரையிலும் விவரித்தோம். எங்கெல்லாம் ஒரு மலையை ஆதாரமாகக் கொண்டு, பூமிக் குழம்புகள் வெளிப்படுகின்றனவோ அங்கு மேரு இருப்பதாகவும் வாசுகி என்னும் பாம்பால் பூமி கடையப்பட்டதாகவும் சொல்வது வழக்கம். ஆண்டிஸ் மலைப் பகுதியில் இப்படிப்பட்ட இயற்கை நிகழ்ச்சி எதுவும் சமீப கால பல்லாயிரமாண்டுகளில் நடைபெறவில்லை. ஆனால் இந்த மக்கள், தாங்களே ஒரு மலையைச் செதுக்கி அதற்கு இந்தப் பெயர் வைத்திருக்கிறார்கள்.

·         இதனால் ஒரு முந்தின நினைவில் இந்த மக்கள் இதைச் சொல்லியிருக்கிறார்கள் என்று தெரிகிறது. அந்த முந்தின நினவு என்னவென்றால், அவர்கள் நாஸ்கல் ரிட்ஜ் வழியாகத் தப்பித்து வந்த பாலினேசியப் பகுதியும், அதை ஒட்டி எப்பொழுது வெடிக்கும் என்று தெரியாமல் பயமுறுத்திக் கொண்டிருக்கும் இந்தோனேசியப் பகுதியும் என்பதே ஏற்புடைய பதிலாக இருக்கிறது.

·         1996 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட இந்தக் கல் மலையை அமர மூரு என்றும் பழைய மரபில் அழைத்தார்கள் என்றும் சொல்கிறார்கள். இந்தப் பெயரே உண்மையான பெயராக இருந்தாலும், அங்கும் வேத மரபின் தாக்கம் வந்து விடுகிறது. மேரு என்பது உயரமானது, ஆதாரமானது. பொதுவாக ஓரிடத்தில் தனிப்பட உயர்ந்து நிற்கும் மலையை மேரு என்று குறிப்பிடுவார்கள். ஆனால் இந்த மக்கள் வசிப்பதோ மலைப் பகுதியில்தான். அதனால்தானோ என்னவோ அந்த மலையிலும், தனிப்பட ஒரு அமைப்பை நிறுவி மேரு என்று அழைத்திருக்கிறார்கள்.

·         இந்த அமர மூருவில் ஒரு விசேஷம் இருக்கிறது.  நம் நாட்டில் கோவில்களில் சொர்க வாசல் இருப்பது போல இந்த அமர மூருவில் ஒரே ஒரு வாயில் மட்டும் உள்ளது. அதாவது வாயில் போல செதுக்கியுள்ளார்கள்.

 


·         இந்த வாயில் வழியாக மேலுலகம் செல்லலாம் என்னும் நம்பிக்கை இருக்கிறது. இதனால் அமர என்ற பொருளில் வந்திருக்க வேண்டும். அமர ஊரு என்பது அமர மூரு என்றாகி இருக்கலாம். இந்தப் பெயரும் வேத மரபின் அடையாளத்தையும், சமஸ்க்ருத – தமிழ் அடையாளத்தையும் காட்டுகிறது.

·         அமரன், அரவம், ஊரு, மேரு – இந்தச் சொற்களெல்லாம் எப்படி அவர்களிடத்தில் வந்தன? அந்த மக்கள்தாம் அந்தச் சொற்களை உருவாக்கினார்கள் என்று சொல்ல முடியாது. அவர்கள் உருவாக்கின சொற்களாக இருந்தால், அர்த்தத்துடனும், விளக்கத்துடனும் அவை நின்று நிலைத்திருக்கும். ஆனால் அரவ ஊரு என்ற பொருளிலும், அமர மேரு என்ற பொருளிலும் மாறி மாறி அவர்கள் சொல்லவே, இரண்டு விதமாக கருத்தாக்கங்களும் அவர்களுக்கு முன்பே தெரிந்திருக்கிறது என்பது புலனாகிறது. ஒரு விரிவான பழைய மரபைத் தாங்கி வந்தவர்களால்தான் இதைப் போல மாறி மாறி விளக்கம் கற்பித்துக் கொண்டிருக்க முடியும்.

·         இவரகளது மற்றொரு முக்கிய அமைப்பு 'சக்கனா' (CHAKANA http://en.wikipedia.org/wiki/Chakana) என்பது.  சக்கரா அல்லது சக்கரம் என்னும் ஓசையில் வருகிறது. அது இந்த அமைப்பில் காணப்படுகிறது.


இது வாஸ்து மண்டல அமைப்பே. இந்த அமைப்பில் யாக குண்டங்கள் அமைக்கப்படுகின்றன.

·         இதற்கும் வழிபாட்டுக்கும் தொடர்பு இருக்கிறது என்பதைக் காட்டும் வண்ணம் 4000 ஆண்டுகளுக்கு முந்தின கோயில் அமைப்பை இந்த வடிவத்தில் கண்டு பிடுத்துள்ளார்கள்


http://enperublog.com/2009/06/08/ancient-temple-wall-discovered-shaped-like-andean-chakana/


தீவநாகுவில் சக்கனா – கீழே உள்ள படத்தில்.


http://www.chakanatours.com/aboutchakanatours.htm

 

·         சக்கரா என்பதே சக்கனா என்றாகி இருக்க வேண்டும். இதைப் போல இன்னொரு ஆச்சரியமான ஒற்றுமை சுல்பா (chullpas) என்னும் அமைப்பில் இருக்கிறது. பெரு நாடெங்கிலும் ஆங்காங்கே சூளை போன்ற அமைப்பில் கல்லறைகள் இருக்கின்றன. அவற்றை சுல்பா என்கிறார்கள். படத்தில் காணலாம்.


பெரிய பெரிய கற்களால் இவற்றை எழுப்பி அதற்குள் இறந்தவர்களை அடக்கம் செய்துள்ளனர். இந்தக் கல்லறையில் ஒரே ஒரு சிறிய வாயில் மட்டுமே இருக்கிறது. மற்றபடி முழுவதும் மூடித்தான் இருக்கும். ஒரு கல்லறையில் ஒரு குடும்பத்தினர், அவர்களது உறவினர் என்று பலரையும் அடக்கம் செய்திருக்கின்றனர். அவ்வபொழுது ஒருவர் இறக்கும் போது அவரை இதில் உள்ளே தள்ளி அடக்கம் செய்வார்கள் போலிருக்கிறது.

·         சமீப காலம் வரை இப்படியே அடக்கம் செய்திருக்கிறார்கள். இதில் நம்மை சிந்திக்க வைப்பது எதுவென்றால் ஏன் இப்படிப்பட்ட அமைப்பில் கல்லறை எழுப்ப வேண்டும்? சுல்லா அல்லது சூளை போன்ற அமைப்பில் இருப்பதற்கும், சுல்பா என்னும் பெயருக்கும் தொடர்பு இருப்பது போல இருக்கிறது. சூளையில் சுடுவார்கள். இதில் அடக்கம் செய்யப்பட்ட சடலங்கள் அதிகம் கெடாமல் இருக்கின்றன.

 

·         இப்படிப்பட்ட ஒரு சுல்பா இருக்குமிடம் சில்லுஸ்தானி (Sillustani) என்பது சிலாஸ்தானம் என்பது போல இருக்கிறது. இது உமாயோ (Lake Umayo) ஏரிக்கருகே உள்ளது. இந்தப் பெயர் உமையம்மையை நினைவுறுத்துகிறது. இதனால் அந்த சுல்பா இருப்பது சிவஸ்தானம் என்பதாக இருக்கக்கூடும். சுல்பா அமைப்பும் லிங்க வடிவில் இருக்கிறது என்று சொல்லலாம். இன்கா மக்களுக்கு சிவன் தொடர்பு, ஆதியில் சுந்தாலாந்து பகுதியில் இருந்த பாதாளம் போன்ற தைத்தியப் பகுதியில்தான் ஏற்பட்டிருக்க முடியும்.


சில்லுஸ்தானில் உள்ள சுல்பா. அருகில் உமயோ ஏரி


இன்னொரு சுல்பா


http://www.perutoptours.com/index07cu_coporaque_chullpa.html

 

சுல்பாக்கள் இருக்கும் இடங்களைப் பற்றி ஆராயும் போது, குறிப்பிட்ட கோடுகள் பல சுல்பாக்களை இணைப்பது போல இருக்கிறது என்ற ஒரு கருத்து இருக்கிறது. அவை அருகில் உள்ள சஜமா எரிமலையை மையமாக வைத்து இருக்கின்றனவா என்ற ஆராய்ச்சியும் நடந்து கொண்டிருக்கிறது.


http://cml.upenn.edu/tierrasajama/Sajama_English/hypo/chullpa.htm

படத்தில் சஜமா எரிமலை இருப்பிடமும், அந்த எரிமலையும்.

·         இந்த சுல்பாக்களே எரிமலையைப் போன்ற அமைப்பில் இருக்கின்றன. இவை நமக்கு சுந்தாலாந்து எரிமலைகளை நினைவூட்டுகின்றன. தைத்தியர்களான விரோசனன், பலி ஆகியோர் அங்கு வாழ்ந்தனர். அங்கு பல எரிமலைகள் வெடித்துச் சிதறியிருக்கின்றன. மேலும் பல எரிமலைகள் கனன்று கொண்டிருக்கின்றன. அங்கு வாழத்தக்க இடங்கள் மிக்க் குறைவு. அப்படியிருக்க அங்கிருந்த தைத்தியர்கள் இறந்தவர்களை எப்படி அடக்கம் செய்தார்கள்? எரிமலைக் குன்றுக்குள் காணப்பட்ட குகை போன்ற ஓட்டைக்குள் போட்டு மூடி விட்டார்களா? அதே வழக்கத்தை பெரு நாட்டில் வந்த பின்னும் தொடரும் வண்ணம் இப்படிப்பட்ட எரிமலை போன்ற அமைப்பைக் கட்டி, சூளை என்னும் (தமிழ்ப்) பெயரையும் இட்டு அடக்கம் செய்தார்களா? அருகாமையில் உள்ள எரிமலையை (சஜமா எரிமலை போல) ஆராய்ந்து அதன் நிலத்தடி எரிமலைக் குழம்புகள் ஓடும் பாதையைக் கண்டறிந்து அதற்கேற்றாற்போல சுல்பாவைக் கட்டி அதில் அடக்கம் செய்தார்களா? அருகில் உள்ள எரிமலைக்கும் சுல்பாவுக்கும் தொடர்பு இருந்தால், இந்த மக்கள் நிச்சயமாக இந்தோனேசிய எரிமலை வெடிப்பு ஒன்றில் தப்பி வந்தவர்களாகத்தான் இருக்க முடியும். அந்தப் பகுதியில் வாழ்ந்த மக்களுக்குத்தான் எரிமலைகளுக்கு நடுவிலும் வாழ்வையும், சாவையும் சமாளிக்கத் தெரிந்திருக்கும்.

 

·         இங்கு உள்ள அடுத்த விவரம் என்னவென்றால் இப்படி அடக்கம் செய்யப்பட்ட மக்கள் ஐமாரா மக்கள். அவர்களை அடக்கம் செய்ய சுல்பா கட்டுவதற்கு அமர்த்தப்பட்டவர்களைக் 'கொல்லா' (Colla people) என்றனர்.

 

·         கொல்லா என்பது கொல்லும் தொழிலைச் செய்வதற்குச் சொல்லப்படுவது. பொற் கொல்லன் என்கிறோம். பொன் வேலை செய்பவர் என்பதால் அந்தப் பெயர் என்று நினைக்கிறோம். உண்மையில் பொன்னை அடித்து, சுட்டு, வதைப்பது போன்ற செயலைச் செய்வதால் கொல்லன் என்ற பெயர் ஏற்பட்டது.

·         கொல்லம், குமரி என்று குமரிக் கண்டத்துடன் இணைத்துச் சொன்னார்களே அந்தக் கொல்லம் என்பதற்கு என்ன அர்த்தம்? கொல்லும் தொழிலால் உண்டானதுதான் கொல்லன் என்னும் பெயர் என்று அகராதி கூறுகிறது. கொல்லிப் பாவை, கொல்லி மலை என்னும் பெயர்களெல்லாம் கொல்லுதலை அடிப்படியாகக் கொண்டே எழுந்தன. கொல்லம், கொல்லன் என்ற பெயர்கள் முழுகின தென்னன் தேசத்தில் ஏன் இருந்தன? எந்த்த் தருணத்தில் அந்தப் பெயர்களைப் பயன் படுத்தினார்கள். அந்தப் பயன்பாட்டுக்கும், இன்கா மக்களில் கொல்லா என்னும் மக்கள் இருப்பதற்கும் தொடர்பு இருக்கிறதா? ஆராயப்பட வேண்டிய விவரம் இது.

 

·         முன்பே 118 ஆவது கட்டுரையில் பத்தமடையில் காணப்படும் பாய் முடையும் தொழில், பாலினேசியாவில் காணப்படுகிறது, அங்கிருந்து டிடிகாகாவுக்கும் சென்றிருக்கிறது என்று கண்டோம். இதனால் தென் கடலில் இருந்த பண்டைய நாகரிகமே இந்தியாவிலும், இந்தோனேசியாவிலும், தென் அமெரிக்காவிலும் பரவியிருந்தது என்று அர்த்தமாகிறதல்லவா? அதில் தமிழும் இருந்திருக்கிறது. சமஸ்க்ருதமும் இருந்திருக்கிறது என்பதை மேலே கூறினோம். இவற்றினூடே வேத மரபும் தழைத்திருக்கிறது.

இல்லையெனில் விரோசனனுக்கு  இன்காவில் என்ன வேலை? இந்திய சிற்ப சாஸ்திர முறையில் இன்காவில் ஏன் சூரியக் கடவுள் இருக்கிறான்? அது மட்டுமல்ல, பலியின் பாதாளத்திலிருந்து தப்பிய மக்கள் தாங்கள் சென்ற தென் அமெரிக்காவிலும் பெயர் சூட்டிய அடையாளம் இருக்கிறது. பெலிஸ் (Belize), பொலிவியா (Bolivia) என்னும் இடப்பெயர்களில் பலி என்னும் பெயர் தொக்கி நிற்கிறதே? பொலிவியா என்னும் பெயரைத் தாங்கள் இட்டதாக ஸ்பானியர்கள் கூறுவார்கள். ஆனால் அதற்கு முன் அங்கு பலியின் பெயர் இல்லை என்று சொல்ல முடியாது. பலி இருந்த இடத்தில் தானவ மயனும் இருந்ததால்தான், அவர்களும், இன்கா தைத்தியர்களைப் போல அமெரிக்காவில் குடியமர்ந்திருக்கிறாகள்.

இவற்றுக்கும் அப்பால் இன்னுமொரு முக்கிய வேத மரபின் அடையாளம் இன்காவில் இருக்கிறது.  அது பச்சமாமா என்னும் அவர்களது முதல் தாய் தெய்வம். அவள் இப்படி இருக்கிறாள்.


http://en.wikipedia.org/wiki/Pachamama

இவளைப் பூமித் தாயாகவும், உயிரினம் வளரச் செய்யும் தாயாகவும் இன்கா மக்கள் பார்த்தார்கள். இன்று இவளைக் குறித்த கருத்தாக்கத்தை உணர்ந்து கொண்ட தென் அமெரிக்க மக்கள், சுற்றுப்புறப் பாதுகாப்பு, பூமியை மாசு படுத்தாமை, தாவர இனங்களைப் பாதுகாத்தல் என, பூமி சார்ந்த அனைத்து விவரங்களுக்கும் இவளே தாய் என்னும் இன்கா கொள்கையை உணர்ந்து அதைச் செயல்படுத்தியும் வருகிறார்கள். மனித உரிமை என்பது போல பூமித்தாயின் உரிமை என்று பச்சமாமாவின் பெயரால் உரிமையை நிலைநாட்ட பொலிவிய அரசு சட்டம் இயற்ற முன் வந்துள்ளது. (http://www.guardian.co.uk/environment/2011/apr/10/bolivia-enshrines-natural-worlds-rights?INTCMP=SRCH


இங்கு நாம் சொல்ல வரும் கருத்து என்னவென்றால், இதே தோற்றத்தில் பாரதத்தின் வேத மரபில் ஒரு பெண் தெய்வம் இருக்கிறது. ஆந்திரப் பிரதேசத்தில் கர்னூல் மாவட்டத்தில் குடவெள்ளி என்னுமிடத்தில் உள்ள சங்கமேஸ்வரர் கோயிலில் காணப்படும் அந்த்த் தெய்வச் சிலையைக் கீழுள்ள படத்தில் காணலாம்.


 

இந்தத் தெய்வம் வேதத்தில் பேசப்படுகிறது. சிந்து சமவெளி நாகரிகச் சின்னங்களிலும் இந்தத் தெய்வம் காணப்படுகிறது. உலகெங்கும் பரவின பெண் தெய்வ வழிபாட்டுக்கு இந்த்த் தெய்வமே ஆரம்பம் என்றும் சொல்லலாம். அவளைப் பற்றி அறிய வேண்டுமென்றால் வேத மரபுக்கு வரவேண்டும். அவளே இன்காவிலும் இருந்தாள் என்றால் அவள் எங்கிருந்து எப்படிச் சென்றாள் என்பதையும், அவள் குறிக்கும் வேத மரபின் வீச்சும், பழமையும் எப்படிப்பட்டது என்பதையும் அறிய நம் புராண இதிஹாசங்களே உதவுகின்றன. அதைப் பற்றி அடுத்த கட்டுரையில் காண்போம்.