வெள்ளி, 4 மார்ச், 2011

42. பாண்டியன் தேசமான குமரிக்கண்டம்




மஹாபாரதத்தில் பாண்டிய நாட்டில் அகஸ்தியர், குமரி, வருணன் ஆகிய மூன்று தீர்ததங்கள் இருந்தன என்று சொல்லப்பட்டுள்ளது.
அவற்றைக் கொண்டு குமரிக் கண்டத்தைக் கண்டு பிடிப்போம்.


அகஸ்தியருடன் தொடர்பு கொண்ட இடங்கள் மூன்று.
காவிரி தோன்றிய குடகும், பொதிகை மலையும் மஹாபாரதத்திலும், தமிழ் நூல்களிலும் அகஸ்தியரைத் தொடர்புபடுத்தி வருகின்றன.
மூன்றாவது இடம் கடல் கொண்ட பகுதியில் இருனதது என்று ராமாயணத்தில் அடையாளம் காட்டப்பட்டுள்ளது.
முதல் சங்கம் நடைபெற்ற பாண்டியன் தலைநகரமான தென் மதுரை அந்த அகஸ்திய தீர்த்தத்தின் அருகே இருந்திருக்க வேண்டும்.


அகஸ்தியர் குறித்த விவரங்கள், சின்னமனூரில் கிடைத்துள்ள செப்பேடுகளில் காணப்படுகின்றன.
அவற்றில் தமிழ், வடமொழி என்று இரண்டு மொழிகளிலும் கொடுக்கப்பட்டுள்ள விவரஙகளில், அகஸ்தியர் பாண்டியர்களது குல குரு என்று  எழுதப்பட்டுள்ளது.
பாண்டியர்களது பழைய வரலாற்றைத் தரும் இந்த ஏடுகளில், ஆரம்பத்திலேயே இந்த விவரம் வருகிறது.
அதாவது குடகு, பொதிகை போன்ற இடங்களுக்கு முன்பே, தென் பகுதியில், பாண்டியர்கள் ஆண்ட பொழுது அவர்களுக்கு அகஸ்தியர் குலகுருவாக இருந்திருக்கிறார்.



இந்தப் படத்தில் இந்தியக் கடலில் இருக்கும் கிழக்குப் பகுதி மலையில் அகஸ்தியர் வாழ்ந்தார் என்று ராமாயணம் கூறுகிறது என்று பார்த்தோம். இந்த மலைக்கு ஒரு முக்கியத்துவம் உண்டு.
இதை 90-டிகிரீ மலை என்பார்கள்.
உலகின் வரைபடத்தில் செல்லும் தீர்க்க ரேகையில்,
90-ஆவது டிகிரியின் மீது இந்த மலை அமைந்துள்லதால் இந்தப் பெயர். இந்தப் பெயர் சமீப காலத்தில் விஞ்ஞானிகளால் வைக்கப்பட்ட பெயர்.



ஆனால் இந்தத் தீர்க்கரேகைக்குப் பழங்காலத்து பாரத விஞ்ஞானத்திலும் ஒரு முக்கியத்துவம் உண்டு.
நமது பூமியின் அச்சானது செல்லும் பாதையில் இந்த மலை உள்ளது. அதாவது, இலங்கை, உஜ்ஜயினி, குரு‌ஷேத்திரம் ஆகிய இடங்களை இணைத்தால் செல்லும் கோடு உலகத்தின் வட துருவத்தையும், தென் துருவத்தையும் இணைக்கும்.
இதுவே பூமியின் அச்சு ஆகும்.
இந்தக் கோடு செல்லும் பாதையில் இந்த மலையும் இருக்கிறது,
அங்கு அகஸ்தியர் வாழ்ந்த இடமும் இருக்கிறது.
இதில் அதிசயம் என்னவென்றால், இந்தக் கோட்டின் நீட்சியாகப் பார்த்தால் வானில் தெரியும் நட்சத்திரத்தின் பெயரும் அகஸ்தியர் என்பதே!
இது தென் திசையில் தெரியும்.
இந்தக் கோட்டின் வடக்குப் புற நீட்சியில் தெரிவது வசிஷ்டர் நட்சத்திரம்! 






புராணக் கதையின் படி வசிஷ்டரும், அக்ஸ்தியரும் ஒரே கும்பத்தில் இடப்பட்டுப் பிறந்தவர்கள்.
அந்தக் கதையை மிகக் கேவலமாக திராவிடவாதிகள் விமரிசிப்பார்கள். ஆனால் வானில் அந்த நட்சத்திரங்களின் அமைப்பைப் பார்த்தால்,
பூமிக் குண்டத்தின் வடபாகத்தில் என்றும் வசிஷ்டர் நட்சத்திரம் நிலை கொண்டுள்ளது (வட பாகத்தில் இருப்பவர்களுக்கு என்றும் இந்த நட்சத்திரம் தெரியும்)
பூமிக் குண்டத்தின் தென் பாகத்தில் என்றும் அகஸ்தியர் நட்சத்திரம் தெரியும்.
தென்பாகத்தில் இருப்பவர்களுக்கு என்றும் இந்த நட்சத்திரம் தெரியும்.



மகரரேகையை ஒட்டி அகஸ்தியர் இருப்பிடம் இருந்திருக்க வேண்டும்.
இதை நிரூபிப்பதற்கு ஒரு சான்று உண்டு.
கடக ரேகையை ஒட்டி அமைந்துள்ள மலை விந்திய மலை ஆகும்.
விந்திய மலை உயர்ந்து வளரவே, அதை அடக்க அகஸ்தியர் தென் திசைக்குப் போனார் என்று பல புராண, பாரதக் கதைகளிலும் வந்துள்ளது.


விந்திய மலை வளர்ந்து கொண்டு போகவே அதற்கு வடக்கில் இருந்த மக்களால் சூரியனைப் பார்க்க முடியவில்லை.
எனவே அதன் வளர்ச்சியைத் தடுத்து, வடபால் மக்களுக்குச் சூரியன் தென்படவேண்டி, அகஸ்தியர் அதனிடம் வந்தார்.
அவரைக் கண்டவுடன் அந்த மலை தலை குனிந்து வணங்கியது.
அகஸ்தியர் தான் திரும்பி வரும் வரை அந்த மலை அப்படியே குனிந்து இருக்க வேண்டும் என்று சொல்லி விட்டுச் சென்றார்.
ஆனால் தென் பகுதிக்குச் சென்ற அவர் மீண்டும் திரும்பவே இல்லை. அதனால் அந்த மலை அப்படியே, அதே உயரத்தில் நின்று விட்டது என்பது கதை.


இந்தக் கதையில் ஒரு அறிவியல் மறைந்திருக்கிறது.
விந்திய மலை என்பது கடகரேகைப் பகுதியில் உள்ளது.
பூமியின் சுழற்சி காரணமாக சூரியன் செல்வது போலத் தெரியும் பாதை வடக்கில் கடக ரேகையுடனும், தெற்கில் மகர ரேகையுடனும் முடிந்து விடும். அவற்றுக்கு அப்பால் உள்ள இடங்களில், சூரியன் உச்சந்தலை மேல் தெரியாது.
பூமி தன் அச்சில் சாய்ந்து இருப்பதால் இப்படி அமைகிறது.
இந்த சாய்மானம் தற்சமயம் 23-1/2 டிகிரியாக இருக்கிறது.
இது 22 முதல் 25 டிகிரி வேறுபடுகிறது என்று முன்னமே பார்த்தோம் (பகுதி 35)
தற்போது இருப்பதை விட அதிகமாக சாய்ந்திருந்தால்,
கடகரேகையானது விந்திய மலைக்குத் தெற்கே வந்து விடும்.
அப்பொழுது அந்த மலைக்கு வடக்கே இருப்பவர்கள் உச்சியில் சூரியன் சஞ்சரிக்காது.
அப்படிப்பட்ட ஒரு காலத்தை இந்தக் கதை சொல்லியிருக்கும்.
அது 13,000 முதல் 17,000 வருடங்களுக்கு முன்னால் இருந்த நிலையாகும்.


அந்த சாய்மானம் சிறிது சிறிதாகக் குறைந்து கொண்டே வரும் போது கடக ரேகை தற்போதைய நிலையை அடைந்திருக்கும். இதனால் அம்மலைக்கு வடக்கில் இருக்கும் இடங்களிலும் தற்சமயம் சூரியன் உச்சிக்கு வருகிறான்.
இதைக் கதை ரூபமாகச் சொல்லி இருக்கிறார்கள்.


இங்கு அகஸ்தியர் பெயர் அடிபடக் காரணம், கடக ரேகைக்கு நேர் எதிரான மகர ரேகைக்கு அப்பால் இருப்பவர்களுக்கு அகஸ்தியர் நட்சத்திரம் வருடம் முழுவதும் கண்ணுக்குத் தெரியும்.
வட துருவ நட்சத்திரத்தைக் கொண்டு வடக்கை அடையாளம் காட்டுவது போல,
அகஸ்தியர் நட்சத்திரத்தைக் கொண்டு தென் துருவப் பகுதியை அடையாளம் காட்டுகிறார்கள்.
இன்று விண்வெளிப் பயணங்களிலும்,
இந்த நட்சத்திரம் திசை காட்டும் கருவியாகப் பயன் அளிக்கிறது.


கடக ரேகையில் அமைந்துள்ள விந்திய மலைக்குத் ‘தண்ணி காட்டியஅகஸ்தியர், அதைச் சமன் படுத்த மகர ரேகைப் பகுதியில் தங்கினார் என்பதுதான் பொருத்தமாக இருக்கும்.
ராமாயணம் கூறும் விவரமும் இதனுடன் ஒத்துப் போவதால்,
அகஸ்திய மலையும், அகஸ்திய தீர்த்தமும் முதன் முதலில் மகர ரேகைப் பகுதியில் குறைந்தது 13,000 வருடங்களுக்கு முன் தோன்றி இருக்க வேண்டும்.


இந்திரனைப் பற்றிய வர்ணனையில் முன்பு சொன்னது போல, இயற்கையிலும், உண்மையிலும் அகஸ்தியர் என்பவர் வாழ்ந்திருக்கிறார்.
அகஸ்தியர் முதலில் வாழ்ந்த அந்த இடம் கடலுக்குள் மறைந்த பின்னாளில், குடகும், பொதிகையும் அவருக்கு இருப்பிடங்களாக ஆகி இருக்கும்.
மஹாபாரத காலத்தில் இந்த மலை முழுவதும் நீருக்குள் மறைந்து விட்டது.
எனவே மஹாபாரதக் காலத்தில்,
பொதிகை மலையே அகஸ்திய தீர்த்தம் இருக்கும் இடமாகக் கருதப்பட்டிருக்கும்.

குமரி ஆறு

மஹாபாரதத்தில், குமரி அல்லது கன்னி ஆற்றைப் பாண்டிய நாட்டுடன் தொடர்பு படுத்திச் சொல்லப்பட்டுள்ளது.
சூடாமணி நிகண்டில் முக்கிய ஏழு நதிகள் என்று
கங்கை, யமுனை, நர்மதை, சரஸ்வதி, காவேரி, குமரி, கோதாவரி என்று குமரி அல்லது கன்னி நதியையும் சேர்த்தே சொல்லப்பட்டுள்ளது.
திராவிடவாதிகள் விரும்பும் சிந்து நதி இந்தத் தொகுதியில் இல்லை என்பது கவனிக்கத்தக்கது.
தமிழனைப் பொருத்த வரையில் காவேரி, குமரி என இவை இரண்டும்தான் ஆதியிலிருந்து முக்கியமாக இருந்து வந்திருக்கின்றன.
அவன் சிந்து சமவெளிப் பகுதியில் இருந்திருந்தால், சிந்துவுக்கு சிந்து பாடியிருப்பான்.
அவன் எங்கே சிந்து நதி தீரத்தில் இருந்தான்??
இன்றைக்கு சிந்து இருக்கிறது,
ஆனால் குமரி ஆறு இல்லை.
எனினும், குமரியைப் பற்றி நூல்கள் பேசுகின்றன.
சிந்து நதிக்கும் இவனுக்கும் சம்பந்தமில்லை என்பதற்கு இந்தச் சான்று ஒன்றே போதும்.


குமரி என்னும் கன்னி நதிக்கு வருவோம்.
இது கன்னித்தீர்த்தம் என்றே சொல்லப்பட்டுள்ளது.
மஹாபாரதத்தில் நான்கு இடங்களில் கன்னி தீர்த்தம் பற்றிய விவரம் வருகிறது.


காவிரி நதிக்குச் சென்று விட்டு, கன்னி தீர்த்தம் செல்ல வேண்டும், என்று தீர்த்த யாத்திரை பற்றி ஒரு குறிப்பு வருகிறது (3-85)

கடுமையான விரதங்கள் இருந்து, அரிசியையோ, வேறு எந்த பொருளையோ கன்னி தீர்ததத்தில் விட்டால், அழியாத பலன்கள் கிடைக்கும். (3- 84)

கன்னி, அஸ்வம், கோ போன்ற தீர்த்தங்களில், கௌரவர்கள் பித்ருக்களுக்கு அர்க்கியம் விட்டார்கள் (3-95)

கடற்கரையில் அமைந்துள்ள கன்னி தீர்த்தத்தைத் தொட்டாலே பாவங்கள் நசித்துப் போகும் (3-85)


இங்கு கன்னி தீர்த்தம் என்பது கடலோரப்பகுதி என்று தெரிகிறது.
கன்னியாறு கடலில் கலக்கும் இடத்தில் இது இருந்திருக்க வேண்டும்.
ஆனால் இன்று இந்தப் பெயரில் இப்படி ஒரு ஆறு தென் கடலில் கலக்கவில்லை.
மஹாபாரத காலத்தில் நில நீட்சி இருந்திருக்கவே,
தென் குமரிக் கடலில் இப்படி ஒரு தீர்த்தம் இருந்திருக்கலாம் என்று எண்ண வாய்ப்பிருக்கிறது.


மேற்சொன்ன நான்களுள், கடைசிக் கருத்து தமிழ் நூல்களிலும் காணப்படுகிறது.
மணிமேகலையின் 13-ஆவது அத்தியாயத்தில்,
வாரணாசியைச் சேர்ந்த ஒரு பெண் கற்பிலிருந்து பிறழ்ந்து விடவே,
தான் செய்த பிழைக்கு என்ன தண்டனை வருமோ என்று அஞ்சி
அதை நிவர்த்தி செய்ய “தென் திசைக் குமரி ஆடிய வருவோள் என்று சொல்லப்பட்டுள்ளது.
அதாவது மஹாபாரதத்தில் சொல்லப்பட்டபடி, பாவத்திற்குப் பரிகாரமாக,
அந்த நாளில் குமரித் தீர்த்தத்தில் நீராட வந்திருக்கின்றனர் என்று தெரிகிறது.


மஹாபாரதத்திலும், மணிமேகலையிலும், கன்னிதீர்த்தத்தில் குளித்து பாவத்தைப் போக்கிக் கொண்ட செய்தி வருவதால்,
இன்றைய குமரி முனையைத் தீர்த்தமாகக் கருதி இருக்கலாம் என்று என்று எண்ண வாய்ப்பிருக்கிறது.
அல்லது தற்போது குடி கொண்டுள்ள குமரிக் கோவிலை அடுத்தும்
இந்த ஆறு ஓடியிருக்கலாம்.
அப்படி ஒரு குமரித்துறை இருந்தது என்பதை புறநானூறு 6 ஆம் பாடல் மூலம் ஊகிக்க முடிகிறது.
அது இன்று மறைந்திருக்க வேண்டும்.
கடந்த 2000 வருடங்களில் பெரிய அளவில் கடல் கோள் நடக்கவில்லை. ஆயினும், பல கடலோர இடங்கள் கடலுக்குள் மறைந்து விட்டன.


உதாரணமாக, கண்ணகியும், கோவலனும் மதுரைக்குப் புறப்படும் முன்,
மணி வண்ணன் கோட்டத்துக்குச் சென்றனர்.
அதற்குக் கிழக்கில் காமதேவன்  கோட்டம் இருந்தது.
அதை ஒட்டி சோம குண்டம், சூரிய குண்டம் என்னும் இரண்டு தீர்த்தங்கள் இருந்தன.
அங்கே நீராடும் வழக்கம் இருந்தது என்று தேவந்தி என்னும் பெண் கண்ணகியிடம் தெரிவிக்கிறாள்.
அங்கே நீராடி, காம தேவனை வணங்கி, கணவனைக் குறித்து வழிபட்டிருக்கின்றனர்.
இன்று அவை இல்லை.
சமீபத்தில் நடந்த ஆராய்ச்சிகளின் மூலம், அவை கடலுக்குள் மறைந்து விட்டன என்றும்,
மீந்து இருப்பது மணிவண்ணன் கோட்டமாக இருக்க வேண்டும் என்றும் புலனாகிறது.
அந்தக் கோட்டம் நாளடைவில் மருவி,
இன்று புதன் க்ஷேத்திரமாக திருவெண்காடு என்னும் கோவிலாக உருமாறியிருக்கிறது.


கடலுக்குள் காணப்படும் அமைப்புகள் சிலப்பதிகாரத்தில் விவரிக்கப்படும் இரு தீர்த்தங்களாக இருக்கின்றன.
இவை இன்று கடலுக்குள் 3 மைல் தூரத்தில் இருக்கின்றன என்கிறார்கள். புயல் காற்று காரணமாகவோ அல்லது கடல் அரிப்பினாலோ அல்லது கடல் நீர் மட்டம் உயர்ந்ததினாலோ இவ்வாறு ஆகி இருக்கக்கூடும்.
சிலப்பதிகாரம் நடந்த 1800 ஆண்டுகளுக்கு முன் இருந்த இந்த தீர்த்தங்கள் இன்று கடலுக்குள் மறைந்து விட்டன. 
குமரி முனையிலும், இது போலவே குமரித்தீர்த்தம் இருந்து அது இன்று கடலுக்குள் மறைந்திருக்கலாம்.


இந்த விவரங்களின் மூலம் திராவிடவாதிகளுக்கு நாம் கொடுக்கும் செய்தி என்னவென்றால்,
குமரிக்கும், கிருஸ்துவத்துக்கும் சம்பந்தமில்லை.
புண்ணிய பூமியாக, புண்ணிய தீர்த்தமாக
தமிழர்களுக்கும், ஏனைய பாரதீயர்களுக்கும் இருந்த அந்த பூமியில்
இன்று அன்னிய மத சக்திகளுக்கு இடம் கொடுத்து,
தமிழ் மண்ணின் மரபையே மாற்றச் செய்வது
மன்னிக்க முடியாத குற்றமாகும்.
இந்தக் குற்றத்தைச் செய்பவர்க்ளுக்கு
இன்னொரு ஊழி காத்திருக்கிறது
என்றுதான் சொல்ல முடியும்.


கன்னி அல்லது குமரி ஆற்றுக்கு பாவம் தீர்க்கும் சக்தி எப்படி உருவானது என்பதற்கும் ஒரு விளக்கத்தை நாம் மஹாபாரதத்தில் காண்கிறோம்.
கன்னி என்ற சொல் சமஸ்க்ருதத்தில் கன்யா எனப்படும்.
காமம் என்ற சொல்லிலிருந்து கன்யா என்ற சொல் வந்தது என்று
குந்தி, கன்னியாக இருந்து கர்ணனைப் பெற்ற விவரத்தைச் சொல்லுமிடத்தில் வருகிறது.
காம என்பது நினைத்ததெற்கெல்லாம் ஆசைப்படுதல் என்று பொருள்.
இளம் பெண்ணுக்கும் அப்படி ஆசைகள் அதிகமாதலால் அவள் கன்னி எனப்படுகிறாள் என்று விவரம் வருகிறது.
அந்தப் பெயரைத் தாங்கியுள்ள நதியை முன்னிட்டு விரதம் இருந்து,
அதில் நீராடினால்,
நினைத்தவை நடக்கும் என்றும் விரதம் இருந்திருக்க வேண்டும்.


பாவங்களைப் போக்கும் கன்னியாறாக அவள் ஆனது,
எங்கோ இருந்த தென் மதுரைக் குமரியில்தான்.
அதை திருவிளையாடல் புராணம் விவரிக்கிறது.
அதில் வரும் சம்பவங்கள் சங்கத்தமிழில் கடல் கொண்ட பாண்டிய நிலத்துக்கு ஒப்பாக வருகிறது.


பாண்டியர்கள் வம்சத்தில் வந்த மலயத்துவஜ என்னும் பாண்டிய மன்னன், மகப்பேறு இல்லாததால் வேண்டிக் கொள்ளவே,
பார்வதி தேவி அவனுக்கு மகளாகப் பிறந்தாள்.
அவள் சோமசுந்தரப் பெருமானையே மணந்து கொண்டாள்.
அவர்களுக்குப் பிறந்தவன் உக்கிர குமார பாண்டியன் என்பவன்.
அவன் வம்சாவளியில் வந்தவர்கள் ‘கவுரியர் எனப்பட்டனர். (புறநானூறு -3) 
கௌரியின் வம்சத்தில் வந்தவர் என்று பொருள்.
அதாவது பாண்டியர்கள் தங்களைக் கௌரியின் வம்சத்தில் வந்தவர்கள் என்று சொல்லிக் கொண்டனர்.
கௌரி என்னும் உமையே அவர்கள் பரம்பரையில் பிறந்தாள் என்பதை இது காட்டுகிறது.
விஷ்ணுவே ராமனாக, கிருஷ்ணனாகப் பிறந்தது போல,
பார்வதி, பரமேஸ்வரன் இருவரும், மீனாட்சி, சோமசுந்தரராகப் பிறந்தனர். 




இதை மேலும் வலியுறுத்தும் வண்ணம் சங்கப்பாடலில் ஒரு செய்தி உண்டு.
பாண்டியர்களுக்குப்
‘பஞ்சவர் என்றும் ஒரு பட்டப்பெயர் உண்டு (புறநானூறு 58).
அதிலும் ‘பஞ்சவரேறு என்று பஞ்சவன் என்னும் எருதாக சித்தரிக்கபப்டுகிறான்.
பார்வதிக்குப் பஞ்சபாணி என்று ஒரு பெயர் உண்டு.
சிவ்னைப் பஞ்சமுகன் என்பார்கள்.
பஞ்சாட்சரம் என்னும் ஐந்தெழுத்து மந்திரம் சிவனுக்கு உரியது.
சிவ- பார்வதிக்குப் பிறந்தவர்களாதலால், பாண்டியர்களுக்குப் பஞ்சவன் என்ற் பெயர் ஏற்பட்டிருக்கலாம்.
மேலே குறிப்பிட்ட புறநானூற்றுச் செய்யுளில், பஞ்சவன் என்னும் எருது என்று சொன்னது எருது போன்றவன் என்று பாண்டியனைச் சொல்லி வந்தது, சிவனுக்கு உரியதான எருது மலையில் (ரிஷப மலை) அவர்கள் வாசம் கொண்டதும் காரணமாக இருக்கலாம்.



தென்னாட்டுடைய சிவன் என்று சிவ பெருமானையும்,
தென் புலம் ஆண்டதால் தென்னவன் என்று பாண்டியனையும்
தமிழ் நூல்களில் பல இடங்களிலும் சொல்லியும்,
சிந்து சமவெளிப் பகுதியில் கிடைத்த ஒரு உருவ முத்திரை சிவனாக இருக்கலாம் என்று,
அதனால் அங்கிருந்தவர்களையும், தமிழர்களையும் தொடர்புபடுத்திக் கூறுகின்றனர் சிலர்.



வட நாட்டுக் கைலாசத்தில் உள்ள சிவன்,
நடமாடும் தெய்வமாக வந்து ஆண்டது தென் திசையை.
அவனைப் பல திசைகளிலும் இருந்தவர்கள் வழிபட்டனர்.
அவனுக்குப் பல தலங்கள் விசேஷ தலங்களாக இருந்தன.
அவற்றுள் 68 தலங்கள் உயர்ந்தவை.
அவற்றுள் 16 மிகச் சிறந்தவை.
அவற்றுள் 4 மிக மிகச் சிறந்தவை.
அவற்றுள் பெயரைக் கேட்டாலே போகத்தைக் கொடுக்கும் ஒரே இடம் பாண்டிய நாட்டு ஆலவாய் என்கிறது திருவிளையாடல் புராணம்.
சிவனுக்கு உகந்த இடஙகளில் சிந்து சமவெளி வரவில்லை!
அங்கு இருந்தவர்கள் சிவனை வழி பட்டிருக்கலாம்.
ஆனால் அவனுக்கு உகப்பாக இருந்தது தென்பதியான ரிஷப மலையும், தென் மதுரையுமே ஆகும்.
இந்தத் தென் பதியின் காலக் கட்டம் ராமாயணக் காலக் கட்டத்திற்கும் முன்னால்,
அதாவது குறைந்தது 7000 ஆண்டுகளுக்கு முன்னால் செல்கிறது.
சிந்து சமவெளியின் காலம் வெறும் 5000 ஆண்டுகள் மட்டுமே.


குமரி தீர்த்த விவரங்களுக்கு வருவோம்.
பார்வதி தேவி, மீனாட்சி அம்மையாக தென் மதுரையில் இருந்த காலத்தில் ஒருமுறை எல்லா தீர்த்தங்களிலும் நீராட வேண்டும் என்று விரும்பிய தன் தாயின் விருப்பத்தைச் சிவனுக்குச் சொன்னாள்.
அதற்கு அவர், அதே இடத்தில் அத்தனை தீர்த்தங்களையும் வரவழைப்பதாகக்கூறி ஏழு கடலையும் அங்கே வரவழைத்தார். திருவிளையாடல் புராணம் கூறும் வர்ணனையில் வரும் மதுரை,
கடல் சூழ்ந்தது என்பதை நினைவில் வைக்க வேண்டும்.
இன்றைய மதுரை அல்ல அது.
அங்கு ஏழு கடலின் வண்ணமும்,
எட்டாவதாக சிவ பெருமானது வண்ணமும் சேர்ந்து ஒரு தீர்த்தமானது.


மேலும் 931 ஆவது பாடலில்,
முதன் முறையாகக் கன்னி என்ற பெயரைக் காணலாம்.
கன்னித் தேயம் பண்ணியஅதாவது
‘இவ்வாறு கன்னி நாடான அங்கு அறநெறியில் வரும் பயனை அடைய வேண்டி, முனிவர்கள், பண்டிதர்கள் முதலாக அனைவரும், மாதந்தோறும் விழா எடுத்தன்ர்.
அதிலும் திங்க்ட்கிழமையும், திருவாதிரையும் சேர்ந்த நாள் வரும் போது விசேஷ பூஜைகள் செய்தனர்.
சித்ரா பௌர்ணமியிலும் கொண்டாடினர்.


திருவிளையாடல் புராணத்தின்படி,
கன்னி என்பது சிவ பெருமானது திருவிளையாட்டால்
கடல்கள் சங்கமிக்கும் இடத்தில் ஏற்படுத்தப்பட்ட தீர்த்தமாகும். மஹாபாரதத்தில் சொல்லப்பட்ட கன்னி என்னும் பொருளின்படி,
இந்தக் கன்னியும்,
விருப்பங்களை நிறைவேற்றுமிடம் என்பதாக உருவாக்கப்பட்டது.


அது உருவான காலக்கட்டத்திலேயே முதல் முறையாகக் கடலிலிருந்து ஒரு தொந்திரவு வந்தது.
அது இந்திரனுடைய செய்கையால் வந்தது.
இந்திரன் என்றால் மழை அங்கு இருக்க வேண்டும்.
அதாவது அதிக மழையும், அதன் காரணமாகக் கடல் கொந்தளிப்பும் ஏற்பட்டிருக்கிறது.
அதுவே முதல் ஊழி எனப்பட்டது.

அப்பொழுது, மீனாட்சி அம்மையின் புதல்வனான உக்கிரகுமார பாண்டியன், தன் தந்தையான சோமசுந்த்ரேஸ்வரர் கொடுத்த வேல் படையால்,
கடலை வற்றச் செய்தான்.
அதனால் கடல் நீர் அவன் நின்ற இடத்தில் அவன் காலின் வடிவை அடுத்து நின்றது.
கடலின் இந்தச் செய்கையால், அவனுக்குக்
‘கடல் வடிம்பலம்ப நின்ற பாண்டியன் என்ற பெயர் வந்தது.


இந்தச் செய்தி திருவிளையாடல் புராணத்தில், ‘கடல் சுவற வேல் விட்ட படலத்தில்’ விவரிக்கப்படுகிறது. 
உக்கிர குமாரன் விடுத்த வேலால் கடல் கட்டுப்பட்டு 
அவனது ‘கணைக்காலின் மட்டமானதே’ என்று 
அந்தப் புராணம் சொல்கிறது. (1046)  


இது ஒரு கற்பனைக் கதையோ, கட்டுக் கதையோ அல்ல என்று மெய்ப்பிக்கும் வண்ணம், இந்தச் செய்தி சங்க நூல்களிலும் சொல்லப்பட்டுள்ளது.
புறநானூறு உரையிலும் (9ஆம் பாடல்),
சிலப்பதிகாரத்திலும் (அடியிற்றன்னள வரசர்க்குணர்த்தி 11-17)  
நளவெண்பாவிலும் ( ஆழி வடிம்பலம்ப நின்றானும்),
வில்லி பாரதத்திலும் (கடல் வடிம்பலம்ப நின்ற கைதவன்)
மற்றும் வேறு நூல்களிலும் இதே செய்தி சொல்லப்படவே
இது உண்மையே என்பது புலனாகிறது.


முதல் ஊழி என்று சொல்லப்பட்ட இந்தக் கடல் கொந்தளிப்பில்,
நிலம் அழியவில்லை.
இந்தக் கடல் கொந்தளிப்பும், கன மழை பெய்தபோது ஏற்பட்டிருக்கிறது.


இதற்குப் பிறகு, ஒருமுறை வருணன் சீற்றம் கொண்டு மதுரை நகரைச் சீண்டியிருக்கிறான்.
அந்தச் சமயத்தில் சிவ பெருமான் தன் சடையில் குடி கொண்டுள்ள மேகங்களை அனுப்பிக் கடல் நீரை வற்றச் செய்தார் என்று
வருணன் விட்ட கடலை வற்றச் செய்த படலத்தில் சொல்லப்படுகிறது.


அதாவது பொங்கி வந்த கடல், வந்த வேகத்தில் வற்றிப்போய் விட்டது. இயற்கையில் சுனாமி போன்ற கடல் கொந்தளிப்பு ஏற்படும்போது,
கடல் நீரானது முதலில் கடலுக்குள் இழுத்துக் கொள்ளப்படும்.
ஆனால் அது சுனாமியாக வேறு ஒரு இடத்தில் தாக்கி இருக்ககூடும்.
மதுரை நகர் இருந்த பகுதி, சுனாமி மறைவுப் பகுதியாக இருந்திருக்கும்.
சமீபத்தில் இந்தியாவைத் தாக்கிய சுனாமியின் போது,
திருச்செந்தூரில் இப்படி கடல் உள்வாங்கியது.
ஆனால், திருச்செந்தூரைத் தாக்கவில்லை.
அதுபோல தென் மதுரையிலும் ஆகி இருக்க வேண்டும்.
அந்த நிகழ்ச்சியை,
மேகமானது கடல் நீரை உறிஞ்சிக் கொண்டது என்று சொல்லி இருக்கலாம்.

இதன் அடிப்படையில், தென் மதுரை இருந்த இடத்தை ஆழ்கடல் வரைபடத்தில் காணலாம்.



அந்த மதுரை நகரம் கிழக்குக் கரையில் இருந்தது என்று திருவிளையாடல் புராணம் கூறுகிறது.
குமரி ஆறு தென் கடலில் கலந்தது என்று சொல்லபப்டுகிறது.
இது அம்புக் குறி காட்டும் பகுதியாக இருக்கலாம்.
சோம சுந்தரப் பெருமான் ஏழு கடல்களை வரவழைத்து கன்னித் தீர்த்தமாக அமைத்தது இந்தப் பகுதியே.
இது அம்புக் குறி காட்டும் சிவப்புப் புள்ளியாகும்.
இந்த இடத்தில் பல திசைகளிலிருந்தும் கடல் கூடுவதைக் காணலாம்.
பொதுவாகவே இந்தப் பகுதிக்குக் கிழக்கில் உள்ள தெற்காசியப் பகுதியில் பூமித்தட்டு உராய்வு அதிகம்.
சமீபத்திய சுனாமியும் அந்தப் பகுதியிலிருந்து வந்தது.


முதல் ஊழி என்று சொல்லப்பட்ட அந்த காலக் கட்டத்தில், தெற்காசியப் பகுதியிலிருந்து (இந்தோனேசியா போன்ற பகுதிகள்) சுனாமி வந்திருந்தால்,
அம்புக் குறி காட்டும் பகுதியில், கடல் நீர் உள் வாங்கி இருந்தாலும்,
மீண்டு வரும் பேரலையாக வந்திருக்க முடியாது.
அந்தப் பகுதியின் அமைப்பில், மலை ஒரு தடுப்பாக இருந்திருக்கும்.
எனவே முதல் ஊழியில் தப்பித்தத் தென் மதுரை,
மலைத்தொடரின் அந்த வளைவுப் பகுதியில் இருந்திருக்க வேண்டும்.


சுனாமி போன்ற இயற்கைச் சக்திகள் ஏற்படுத்தும் கோர தாண்டவத்தின் விவரணையாக, ’வருணன் விட்ட கடலை வற்றச் செய்த படலம்’ அமைந்துள்ளது.
அதிலிருந்து பாண்டிய நாட்டையும், அதன்  மக்களையும் காப்பதற்காக, 
பாண்டியர்களைக் காக்கும் தெய்வமான சிவ பெருமான் 
தன் சடையிலிருந்து நான்கு முகில்களை விடுத்தார்.
அவை மதுரையைச் சுற்றி,
குன்று போல அரணாக அமையச் செய்தார் என்று 
அடுத்த படலம் கூறுகிறது. (நான் மாடக் கூடலான படலம்.)




அப்படிச் சூழ்ந்த முகில்களைப் பற்றி விவரிக்கையில், 
அவை மதுரைக்கு நான்கு புறமும் மாட வரிசைகளாக, கோபுரங்களாக, மலைகளாக, தூண்கள் போல நின்று பாதுகாப்பு அளித்தன (தி- பு 1321)


அந்த மாடங்களில், மக்களும், மன்னனும், மந்திரிகளும், சேனைகளும், எல்லா உயிரினங்களும் வந்து தங்கினார்கள் என்றும் (தி-பு- 1322),
மலை மீது விழுந்து சிதறும் மழை நீர் போல, 
அந்த மாடத்தின் மீது விழுந்த கடல் துளிகளும் வெடித்துச் சிதறின என்றும் (தி-பு 1323) சொல்லப்பட்டுள்ளதால், 
உண்மையில் அந்த நகரைச் சுற்றி வலுவான மாடங்களும், மதிள் சுவரும் எழுப்பப்பட்டது என்று புலனாகிறது. 
கடலால் ஆபத்து நேரும் காலத்தில் அதின் மீது மக்கள் ஏறி, தங்க வசதியும் இருந்தது என்று தெரிகிறது.
அதாவது சீனச் சுவரைப் போல வலிதாகவும், பெரிதாகவும், தங்கும் வசதியுடனும் நான்கு திசைகளிலும், நான்கு மாடங்கள் இருந்தன என்று தெரிகிறது.
அப்படி நான்கு மாடங்கள் கூடி அமைந்ததாலே 
மதுரை என்னும் மூதூர் நான்மாடக் கூடலாயிற்று (தி-பு 1332)

இந்த விவரங்களின் மூலம், 
கடல் தொல்லையிலிருந்து காத்துக் கொள்ள, 
மதுரையைச் சுற்றி பாதுகாப்புச் சுவர் எழுப்பபட்டிருக்கிறது என்று தெரிகிறது.
அதனால் மதுரை நான்மாடக் கூடல் என்று அழைக்கப்படலாயிற்று.


8 கருத்துகள்:

  1. //இந்த சம்பவத்திற்குப் பிறகு, மதுரையைச் சுற்றி சுவர் எழுப்பிப் பாதுகாப்பு கொடுத்திருக்கிறார்கள்.
    அதுமுதல் மதுரை நான்மாடக் கூடல் என்று அழைக்கப்படலாயிற்று என்று திருவிளையாடல் புராணம் கூறுகிறது.
    //

    அது சிவபெருமான் திருவிளையாடல் இல்லையா. புது அர்த்தமா இருக்கே

    பதிலளிநீக்கு
  2. சிவனையும் முற்காலப் பாண்டியர்களையும் பிரிக்க முடியாது. சிவனில்லாமல் பாண்டியன் இல்லை. கவுரியர், பஞ்சவர் என்று புறநானூறில் வரும் பாண்டியர் பட்டப் பெயர்கள் மீனாட்சி- சுந்தரேஸ்வரருடன் அவர்களுக்கு இருந்த வம்சாவளித் தொடர்பைக் காட்டுகிறது. சிவ- பார்வதிக்குப் பிறந்த உக்கிர குமார பாண்டியன் வடிவேல் எறிந்து கடலை அடக்கினான் என்பது திருவிளையாடல் சொல்வது. அதையே சிலப்பதிகாரத்திலும்
    ‘ வடிவேல் எறிந்த வான் பகை பொறாது
    பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்
    குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள
    வடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு
    தென்றிசை யாண்ட தென்னவன் வாழி (சிலப். 11:17-22)
    என்று கி.பி. 2ஆம் நூற்றாண்டிலும் மக்களால் நினைவு கூறபட்டுள்ளது.

    இந்தக் கட்டுரையில் அந்த விவரத்தைச் சொல்லும் பிற நூல்களையும் மேற்கோள் காட்டி இருக்கிறேன்.

    திருவிளையாடல் புராணத்தில் வருகின்ற ஊழி, கடலை வெல்லுதல், வருணனது தொந்திரவு போன்ற அனைத்தும், சங்க நூல்களுடன் ஒத்துப் போகின்றன. அடுத்த இரு கட்டுரைகளிலும், அப்படி ஒத்துப் போகும் சம்பவங்களையும், அந்த சம்பவங்கள் இந்தியப் பெருங்கடல் ஆராய்ச்சிகளுடன் ஒத்துப் போவதையும் படிக்கலாம்.

    திருவிளையாடல் புராணம் சொல்லும் வரலாறு வெறும் கதையல்ல என்பதை அவற்றில் வரும் கடல் கோள் பற்றிய செய்திகள் நிரூபிக்கின்றன.

    மேலும் பாண்டிய வம்சாவளியையும், அவர்கள் செய்த அரிய செயல்களையும் அறிய திருவிளையாடல் புராணத்தையும், இறையனார் அகைபொருள் உரையையும், சின்னமனூர் செப்பேடுகளையும் சேர்த்தே ஆராய வேண்டும். திராவிடத்தில் ஊறிய தமிழ் பேசும் ஆராய்ச்சியாளர்களுக்குப் புராணம் என்பதே அலர்ஜியாக இருக்கவே அதை அவர்கள் தொடுவது இல்லை.

    உண்மையில், வால்மீகி ராமாயணம், மஹாபாரதம், திருவிளையாடல் புராணம் இந்த மூன்றும் தான் இந்தியக் கடலில் மறைந்து விட்ட நிலப்பகுதிகளைப் பற்றிப் பேசுகின்றன, பல விவரங்களையும் தருகின்றன. இன்னும் சாகத் தீவைப் பற்றி விவரங்கள் வருகின்றன. இவை அனைத்தையும் அறிந்துகொண்டால் மரபணு ஆராய்ச்சியில் இருக்கும் missing link -ஐயும், கடந்த லட்சம் வருடங்களில் மனித வளர்ச்சியும், அவனது இடப்பெயர்வும் எப்படி அமைந்தன என்றும் தெரிந்து கொள்ளலாம். அப்பொழுது தெரியும், யார், எங்கு, எப்படி இடபபெயர்வு செய்தார்கள், அவர்களுள் யார் திராவிடன், யார் தமிழன் என்று...

    பதிலளிநீக்கு
  3. /இந்த சம்பவத்திற்குப் பிறகு, மதுரையைச் சுற்றி சுவர் எழுப்பிப் பாதுகாப்பு கொடுத்திருக்கிறார்கள்.
    அதுமுதல் மதுரை நான்மாடக் கூடல் என்று அழைக்கப்படலாயிற்று என்று திருவிளையாடல் புராணம் கூறுகிறது.
    //

    நான்மாடக் கூடல் என்று அப்படித்தான் முதலில் பெயர் வந்தது.
    சங்கம், சங்கப் பலகை போன்ற சொற்கள் எப்படி வந்தன என்றும் திருவிளையாடல் புராணமே கூறுகிறது. அவை அடுத்த கட்டுரையில்.

    சிவனில்லாமல் தமிழ்ச் சங்கமில்லை.
    முதல் சங்கத்தைத் தொடங்கி வைத்தது இறையனார் என்ப்பட்ட சிவனே.
    தொகுக்கப்பட்ட எல்லா சங்கப் பாடல்களிலும் கடவுள் வாழ்த்து இறையனார் மீதுதான் இருக்கும்.

    தருமிக்கு அவர் எழுதிக் கொடுத்த பாடல் அவர் பெயருடனேயே சங்க நூலான குறுந்தொகையில் 2- ஆவது பாடலாக வைக்கப்பட்டுள்ளது.
    தருமியுடனான அந்தச் சம்பவமும் திருவிளையாடல் புராணத்தில் வருகிறது.

    திருவிளையாடல் புராணத்தை ஒரு முக்கிய வரலாற்றுப் பதிவு எனலாம். அது முழுவதும் ஆய்வுக்குரியது.

    பதிலளிநீக்கு
  4. திருவிளையாடல் புராணத்துல எங்க மதில் சுவர் கட்டினாங்கன்னு வருது. அதுல சிவபெருமான் நான்கு மேகங்களை அனுப்பி மழையை தடுத்ததாத்தான் வருது

    பதிலளிநீக்கு
  5. கூடல் காண்டத்தில் ’நான்மாடக் கூடலான படலம்’ படிக்கவும்.
    மதுரைக்கு நான் மாடக் கூடல் என்று பெயர் வந்த காரணம் இதில் வருகிறது.

    வருணன் அனுப்பிய மாரியை விலக்க,மதுரைக்கு நான்கு புறமும் குன்று போல இருந்து காபாற்றியது சிவனார் சடை முடியில் இருந்த முகில்கள் என்று சொல்வது, மழை, வெள்ளத்திலிருந்து நகருக்குப் பாதுகாப்பு கொடுக்க செய்யப்பட்ட செயல் என்று தெரிகிறது. இது உண்மையில் சுவரெழுப்பியும், கடல் அரிப்பிலிருந்து காப்பாற்றவும் செய்யப்பட்ட பாதுகாப்புகள்.

    2-ஆம் ஊழிக்குப் பிறகு அவர்கள் குடி அம்ர்ந்த கவாடபுரத்தைச் சுற்றியும் சுவர் எழுப்பியிருக்கிறார்கள். ராமாயண வர்ணனையில் குறிப்பாக மதிகளால் சூழப்பட்ட தன்மை சொல்லப்பட்டுள்ளது.

    பதிலளிநீக்கு
  6. enna kodumai ithu.... ramayaname oru poi kathai, athil eppadi unmai irrukum?
    nalla kelapurangada peethiya.....

    பதிலளிநீக்கு
  7. //பெயரில்லா சொன்னது…

    enna kodumai ithu.... ramayaname oru poi kathai, athil eppadi unmai irrukum?
    nalla kelapurangada peethiya.....//

    ராமாயணம் பொய்க் கதை என்று சொல்கிற திராவிடவாதி வந்துட்டாரய்யா.
    கொஞ்சம் அறிவியல் அறிவையும், ஆராய்ச்சி அறிவையும் வளர்த்துகிட்டுப் பேச வாங்க.
    இல்லாட்டி, இந்தத் தொடரில் ஆரம்ப முதல் படிச்சிட்டும், ராமாயணக் கதை பற்றி பேசுங்க.

    பதிலளிநீக்கு
  8. அன்புள்ள ஜெயஸ்ரீ அம்மா அவர்களே,

    இது போன்ற பெயரில்லா சொன்னது என்ற பெயரிலே தொடை நடுங்கி திராவிடவதிகள், 6000 வருடங்களுக்கு முன் உலகம் தோன்றியது என்று பைபளில் சொன்னால் கூசாமல் ஆமாம் சாமி போடுவார்கள். நீங்கள் கொடுக்கும் அறிவியல் வரலாற்று ஆதாரங்களை ஒத்து கொள்ளும் பக்குவம் கிடையாது.

    பதிலளிநீக்கு