வெள்ளி, 14 செப்டம்பர், 2012

105. தஸ்யு முதல் ட்ரூயிட் (DRUID) வரை.


 

முக்கோண வடிவ நிலங்களில் அதிசய அமைப்புகளாக க்ராப் சர்கிள்கள் உருவாகின்றன என்று கண்டோம். அவை அதிகமாக உண்டாகும் இடம் இங்கிலாந்து என்றும் பார்த்தோம். அவற்றில் ஒன்று ஸ்யாமாகாளி யந்திர வடிவில் அமைந்தது என்னும் விவரத்தையும் கண்டோம். அந்தக் காளி யந்திர அமைப்பு தென்பட்ட வில்ட்ஷையர் பகுதியில் இன்னொரு அதிசயமும் உண்டு. அங்குதான் ஸ்டோன்ஹென்ஞ் (STONEHENGE) என்னும் கல் அமைப்புகள் தென்படுகின்றன.



 

இந்த ஸ்டோன்ஹெஞ்சுகளின் காலம் இன்றைக்கு 4000 முதல் 5000 வருடங்களுக்கு முன் இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். அதாவது சிந்து சமவெளி நாகரிகம் தழைத்தோங்கியபோது. இங்கிலாந்தில் இவை எழுப்பப்பட்டன.



(1877 இல் எடுக்கப்பட்ட படம்ஸ்டோன்ஹென்ஞ்)



இவற்றின் விசேஷம் என்னவென்றால், பல டன் எடையுள்ள இந்தக் கற்கள், இந்தப் பகுதியைச் சேர்ந்தவை அல்ல. குறைந்த பட்சம் 220 கி.மீ தொலைவிலிருந்து இவற்றைக் கொண்டு வந்திருக்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். இவற்றை எப்படிக் கொண்டு வந்தார்கள்? ஏன் கொண்டு வந்தார்கள்? பளுவான இந்தக் கற்களைக் கொண்டு வந்து ஏன் இவ்வாறு ஒரு வட்டமாக அமைக்க வேண்டும் என்பது போன்ற கேள்விகள் எழுகின்றன. இந்தக் கேள்விகளுக்கு இன்னும் பதில்களைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். இதில் உள்ள ஒரு முக்கிய விவரம் என்னவென்றால், இவை இருக்கும்  இடத்துக்கருகே க்ராப் சர்கிள்கள் உருவாகின்றன என்பதே. கீழ்க்காணும் படத்தில் ஸ்டோன் ஹென்ஞ் பகுதியை அம்புக் குறி காட்டுகிறது, அதற்கு அருகில் க்ராப் சர்கிள் உண்டாகி இருப்பதைக் காணலாம்.


 


இங்கு ஒரு ஸ்டோன் ஹென்ஞ் மட்டுமல்ல, இந்த இடத்துக்கருகே பல ஸ்டோன்ஹென்ஞ் கல் அமைப்புகள் இருக்கின்றன.


ஸ்டோன்ஹெஞ்சுக்கு ஒரு கிலோமீட்டர் தெற்கில் உள்ள பகுதியில் பல கல் அமைப்புகள் அருகருகே காணப்படுகின்றன. நார்மண்டன் டௌன் கூட்டம் (NORMANTON DOWN GROUP)  என்று அழைக்கப்படும் இந்த அமைப்புகளை வரைபடமாகத் தந்துள்ளார்கள்.



 


 

இந்த வரைபடத்தில் காணப்படும் ஒவ்வொரு வட்டமும், தனித் தனியான கல் அமைப்புகளே. இவற்றை வானிலிருந்து பார்த்தால் இப்படித் தெரிகிறன:-



க்ராப் சர்கிள் அமைப்புகளைப் போல இவற்றில் ஒரு ஒழுங்கு தெரிகிறது. ஏன் இப்படி அவர்கள் அமைத்திருக்க வேண்டும் என்று ஆராய்ந்தால், இந்த அமைப்புகள் எல்லாமுமே இறந்தவர்களை அடக்கம் செய்த இடங்கள் ஆகும். இந்தக் கற்கள் எல்லாம் மயானக் கற்களே. அவற்றின் கீழ் இறந்தவர்களைப் புதைத்திருக்கிறார்கள். சில கல் அமைப்புகளில் கும்பலாகப் புதைத்திருக்கின்றனர். உட் ஹென்ஞ் (WOODHENGE) என்னும் அமைப்பில் நடுவில் கும்பலாகப் புதைத்துச் சுற்றிலும், ஒன்றையடுத்து ஒன்றாக 6 வட்டங்கள் வடிவில் மரக் கட்டைகளை எழுப்பியுள்ளனர்.



உட்ஹென்ஞ். (WOODHENGE)

 

ஸ்டோன்ஹென்ஞ்சுக்குத் தென் கிழக்கில் 1.6 கி.மீ தொலைவில் ப்ளூஸ்டோன்ஹென்ஞ் (BLUESTONEHENGE)  இருக்கிறது. அங்கு 27 கற்கள் வட்டமாக அமைக்கப்பட்டிருக்கின்றன. 27 என்பது 27 நக்ஷத்திரங்களைக் நினைவூட்டுகிறது. மொஹஞ்சதாரோவில் உள்ள அமைப்பு 27 நக்ஷத்திரக் கோவிலைக் காட்டுகிறது என்று 89 முதல் 92 ஆவது கட்டுரை வரை நாம் பார்த்தோம். வட்டமாகத் தெரியும் வானத்தில் கோள்கள் செல்லும் பாதையை 27 நக்ஷத்திரங்களால் அளக்கும் முறை பாரத நாட்டில் மட்டும்தான் உள்ளது. வேத ரிஷிகள் கொடுத்துள்ள ஜோதிட சாஸ்திரத்தில் மட்டும்தான் அவ்வாறு உள்ளது.


 

கிரேக்கர்களும் வான சாஸ்திரம் அறிந்தவர்கள் என்று சொன்னாலும், அவர்கள் சாஸ்த்திரம் நக்ஷத்திரங்களை அடிப்படையாகக் கொண்டதல்ல. அவர்கள் வானத்தில் ஆங்காங்கே இருக்கும் நக்ஷத்திரங்களைப் பற்றிச் சொல்லியுள்ளார்கள். ஆனால் கோள்கள் செல்லும் பாதையை 27 பகுதிகளாகப் பிரித்து, அவை ஒவ்வொன்ற்றிலும் ஒரு நக்ஷத்திரத்தைக் குறிக்கவில்லை. அந்த முறை பாரதத்தின் வேத ஜோதிடத்தில்தான் உள்ளது. 27 கற்கள் பதித்த ஸ்டோன் ஹென்ஞ் வட்டம் வில்ட்ஷையர் பகுதியில் 5000 வருடங்களுக்கு முன்பே அமைக்கப்பட்டது என்றால், ஒன்று வேத ஜோதிடம் தெரிந்தவர்கள் அங்கு இருந்திருக்க வேண்டும். அல்லது இன்னொரு காரணமும் இருக்கலாம். அது என்ன என்று சொல்வதற்கு முன் அந்த ஸ்டோன்ஹெஞ் அமைப்பைப் பற்றிய விவரத்தைச் சொல்ல வேண்டும்.


 

இந்தக் கல் அமைப்புகள் உள்ள எல்லா இடங்களுமே மயானங்கள் ஆகும். இந்தக் கற்களுக்குக் கீழும், அமைப்புகளுக்குள்ளும் பல சடலங்கள் புதைக்கப்பட்டிருக்கின்றன. ஸ்டோன்ஹென்ஞ் கல் அமைப்பில் புதைக்கப்பட்ட சடலங்களை ஆராய்ந்துள்ளார்கள். அதில் தெரிய வந்துள்ள அதிசய விவரம் என்னவென்றால் அங்கு அடக்கம் செய்யப்பட்ட எவருமே இயற்கை மரணம் அடையவில்லை, அவர்கள் உடல்களில் வினோதமான முறையில் சிதைக்கப்பட்ட அடையாளங்கள் தெரிகின்றன. அது மட்டுமல்ல அவர்கள் அனைவரும் ஒரே காலக்கட்டத்தில் இறக்கவில்லை, கார்பன் டேட்டிங் ஆய்வின்படி அவர்கள் வெவ்வேறு காலக் கட்டங்களில் இறந்து அங்கு புதைக்கப்பட்டிருக்கிறார்கள் என்று தெரிகிறது.


 

அதுபோல ஸ்டோன்ஹென்ஞ்சில் உள்ள எல்லாக் கற்களும் ஒரே காலக்கட்டத்தில் எழுப்பப்படவில்லை, அவை 1500 வருடங்களாக அவ்வபொழுது எழுப்பப்பட்டிருகின்றன. அதாவது அவ்வபொழுது மக்கள் இறந்திருக்கிறார்கள். அப்பொழுதெல்லாம் இறந்த இடத்தில் கற்களை எழுப்பியிருக்கிறார்கள். வெவ்வேறு காலக்கட்டத்தில் எழுப்பப்பட்டாலும் அவற்றின் மொத்த அமைப்பு, க்ராப் சர்க்கிளை உண்டாக்கும் சக்திகள் ஒரு ஜியோமிதி வடிவத்தை உருவாக்குவதை ஒத்திருக்கிறது. ஸ்டோன்ஹென்ஞ்சின் கற்கள் அமைப்பை இந்தப் படத்தில் காணலாம். அவற்றின் அமைப்பு ஒரு ஒழுங்கு முறையைக் கொண்டிருக்கிறது.


 


Plan of the central stone structure today. After Johnson 2008

http://en.wikipedia.org/wiki/Stonehenge

 

ஒரு வட்டத்துக்குள், ஐங்கரம் இருப்பது போன்ற வடிவத்தை இந்த அமைப்பில் காணலாம். அதனுள். 5- முனை நக்ஷத்திரத்தைப் பொருத்தினால் அது ஸ்யாமா காளி யந்திரமாகும்.



இந்தப் படத்தில் ஸ்டோன்ஹென்ஞ் அமைப்பை முழுமை செய்ய ஐங்கரத்தைச் சேர்த்து, அதன் நடுவில் 5 முனை நக்ஷத்திரத்தை அமைத்து ஸ்யாமா காளி யந்திரத்தைக் காட்டியுள்ளேன்.  முழுமை பெற்ற இதே அமைப்பில் ஆரம்பத்தில் கற்கள் இருந்திருக்கக்கூடும், ஆனால் அவை நாளடைவில் அழிந்திருக்கலாம்.

 

ஸ்டோன்ஹென்ஞ்சின் இந்த அமைப்பு கிராப் சர்க்கிளை ஒத்திருக்கிறது. க்ராப் சர்கிள் என்பதை ஒரு நூற்றாண்டுக்குள்தான் கவனித்தார்கள். அல்லது சமீப காலத்தில்தான் இவை நமது கவனத்துக்கு வந்துள்ளன. இதற்கு ஒரு காரணம், நம்மிடையே நவீன கருவிகள் இப்பொழுது உள்ளதால், வானிலிருந்து இந்த க்ராப் சர்கிள்களைப் பார்க்க முடிகிறது. முன்பு அப்படி இல்லை என்பதால் கவனித்திருக்க மாட்டார்கள்.


 

இன்னொரு முக்கியக் காரணம், ஆளுயரத்துக்குப் பயிர் வளரும் வண்ணம் அங்கு இப்பொழுது விவசாயம் நடக்கிறது. அதனால் அங்கு அதிசய சக்தி நடமிடும் பொழுது, அந்த விளை பயிர்களை வெட்டிச் சாய்த்து விடுகிறது. சாய்ந்து போன பயிர்கள் அந்த சக்தி நடமாடின வடிவத்தில் அமைகின்றன. அது ஒரு ஒழுங்கு வடிவையும் காளி யந்திரம் போன்ற வடிவத்தையும் காட்டுகிறது


உதாரணமாக, ஒரு குழுவாக மக்கள் குழுமியிருக்கும்போது, அந்தச் சக்தி தாக்குகிறது என்று வைத்துக் கொள்வோம். அந்தச்  சக்தி ஒரு குறிப்பிட்ட பாதையில்தான் வடிவங்களை உண்டாக்குவதால், அது ஒரு குறிப்பிட்ட பாதையில் செல்கிறது என்று புலனாகிறது. அந்தப் பாதையில், இருக்கும் நபர்கள் அதனால் தாக்குண்டு இறப்பார்கள், அவர்களுக்கு அருகில் இருப்பவர்கள் எந்தத் தாக்குதலும் இல்லாமல் நலமாக இருப்பார்கள். அவ்வாறு நடக்கும் போது, அதை அமானுஷ்ய சக்தியென்றும், பில்லி சூனியம் என்றும் சொல்லியிருப்பார்கள். பேயறைந்து இறந்து போனார்கள் என்றும் கருதியிருப்பார்கள்.  ஏனெனில் எது தாக்கியது என்பதை அவர்கள் கண்ணால் காணவில்லை.


 

பல நூற்றாண்டுகளில் அவ்வபொழுது அந்தச் சக்தியால் அங்கு மக்கள் இறக்கவே, அவர்களை இறந்த இடத்திலேயே புதைத்திருக்கிறார்கள். அது ஒரு ஒழுங்கான அமைப்பைக் காட்டியிருக்கிறது. அந்த அமைப்பு வானுக்கும், திசைகளுக்கும், சந்திரனுக்கும் ஏற்ப ஒரு குறிப்பிட்ட கோணத்தில் அமைகிறது. இப்படி ஒரு ஒழுங்கான கோணத்தில்தான் க்ராப் சர்க்கிள் உருவாக்கும் சக்தியும் செயல்படுகிறது.

 


உதாரணமாக வில்ட்ஷையரில் உள்ள ஏவ்பரி (AVEBURY) என்னுமிடத்திலும் கல் அமைப்புகள் உள்ளன. இவையும் பொ.மு 2600 இல் ஆரம்பித்து 1000 வருடங்கள் வரை எழுப்ப்பட்டிருக்கின்றன. இவற்றின் அமைப்பை ஒரு வரைபடமாகக் காட்டினால் அது இப்படி இருக்கிறது.



அதே அமைப்பில் 1994 ஆம் ஆண்டு ஜூலை 28 ஆம் தேதி, இதே வில்ட்ஷையரில் வெஸ்ட் ஒவர்டன் (WEST OVERTON) என்னும் இடத்தில் க்ராப் சர்க்கிள் உண்டானது. அதைக் கீழே காணலாம்.



 

இதனால் அந்த அதிசய சக்தி தோன்றும் இடங்களில் அந்நாளைய மக்கள் கல் பதித்திருக்கிறார்கள் என்று தெரிகிறது.


மேலே சொன்ன உட்ஹென்ஞ் பகுதியில் 27 மரக் கட்டைகள் வட்ட வடிவமாக அமைக்கப்பட்டிருப்பதால், அந்த அமைப்பும் க்ராப் சர்கிள் அமைப்பாக இருக்க வேண்டும். அங்கு வட்ட வடிவமாக 27 இடங்களில் அதிசய சக்தி தன்னைக் காட்டிக் கொண்டிருக்க வேண்டும். இதனால் வானத்தை 27 பகுதிகளாகப் பிரிக்கும் வேத ஜோதிடம், அறிவுக்கு அப்பாற்பட்ட அதிசய சக்தியைக் காட்டுவதே என்று தெரிகிறது. அதை வேத ரிஷிகள் கண்டு பிடித்தார்கள். வில்ட்ஷையரிலும் 5000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒரு மக்கள் கூட்டம் அதைக் கண்டு கொண்டு அங்கு ஏதோ வழிபாடு செய்திருக்கிறார்கள். அவர்கள் யார்? வேத ரிஷிகளைப் போல அவர்களும் இந்த சக்திகளை இனம் கண்டு கொண்ட மக்களா?  அல்லது வேத மதத்தின் இந்த அறிவைப் பெற்ற மக்கள் இங்கு வாழ்ந்தார்களா?

 


இந்தக் கோணத்தில் ஆராயும்போது, ஸ்டோன்ஹெஞ்சுடன் தொடர்பு கொண்ட மக்களுக்கும், பாரதத்தின் வேத மரபில் வந்தவர்களுக்கும் ஒரு தொடர்பு இருந்தது என்று தெரிய வருகிறது.


 

இந்த ஸ்டோன்ஹெஞ்சுகளில் ட்ரூயிட் (DRUID) என்னும் மக்கள் கடந்த பல நூற்றாண்டுகளாக வழிபாடு செய்து வந்திருக்கிறார்கள்.



1905 ஆம் ஆண்டு ட்ரூயிடுகள் வழிபாடு செய்த போது எடுத்த படம்.


இந்த ட்ரூயிடுகள் ஐரோப்பாவில் இருந்த ஆரம்ப மக்களான கெல்ட்டுகள் (CELTS) ஆவார்கள். கெல்டுகள் பிரிட்டிஷ் மக்களின் மூதாதையர் ஆவார்கள். இவர்கள் பிரிட்டனில் மட்டுமல்ல, வடக்கு ஐரோப்பா, மத்திய ஐரோப்பா, மேற்கு ஐரோப்பா ஆகிய இடங்களில் பரவலாக இருந்தவர்கள். இங்கிலாந்து, அயர்லாந்து, ஃப்ரான்ஸ் ஆகிய இடங்களில் இவர்கள் இருந்தார்கள் என்றும், வட ஐரோப்பாவிலிருந்து இங்கெல்லாம் பரவினார்கள் என்றும் சொல்லும் ஆராய்ச்சியாளர்கள் அவர்களுக்குக் கொடுக்கும் காலக்கட்டம் பொ.மு. 900 தான். ஆனால் கிரேக்க - ரோமானிய ஆதாரங்கள் மூலமும், இங்கிலாந்து, அயர்லாந்து பகுதிகளில் வழங்கும் ஆதாரங்கள் மற்றும் செவி வழிக் கதைகள் மூலமும், இவர்கள் 5000 ஆண்டுகளுக்கு முன்பே இங்கிலாந்துப் பகுதியில் இருந்திருக்கிறார்கள் என்று தெரிய வருகிறது.


ட்ரூயிடுகள் மத குருமார்களாகவும், ஆன்மீகத்தைப் பார்ப்புபவர்களாகவும், சாதுக்களாகவும், அறிஞர்களாகவும், ஆசிரியர்களாகவும், மருத்துவர்களாகவும், நீதிமான்களாகவும், மந்திர தந்திரம் தெரிந்தவர்களாகவும் இருந்தார்கள். அவர்களே அரசனுக்குப் பதவியேற்பு செய்தார்கள். கீழுள்ள படத்தில் எலிசபெத் ராணிக்கு ஒரு ட்ரூயிட் குருமார், பதவி ஏற்பு செய்வதைக் காணலாம்.



http://www.whale.to/c/druid.html#Symbols


கிரேக்கரோமானியப் பேரரசுகள் தலையெடுக்கும் வரை ட்ரூயிடுகளது தாக்கம் மேற்கு ஐரோப்பா முழுவதும் இருந்தது. அதற்கு 3000 ஆண்டுகளுக்கு மேலாக அவர்கள் கலாசாராமே மேற்கு ஐரோப்பாவில் நன்கு வேரூன்றி இருந்தது. ஆனால் ஐரோப்பியர்களால் அந்தக் கலாசாரத்தைப் பற்றி பெருமைப் பட்டுக்கொள்ள முடியவில்லை. அதற்குக் காரணம் வில்ட்ஷையர் பகுதியில் உண்டான ஸ்டோன்ஹென்ஞ்சில் இருக்கிறது. மற்றொரு காரணம் கிருஸ்துவத்தின் பிடியில் அந்த மக்கள் அனைவரும் வந்தது.

 


5000 வருடங்களுக்கு முந்தின இங்கிலாந்தில், க்ராப் சர்கிள் உண்டாக்கும் அதிசய சக்தியின் விளையாட்டைக் கண்டு மக்கள் மிரண்டிருக்கின்றனர். ஆனால் அதன் அமைப்பையும், அதன் தாக்குதலிலிருந்து தப்பும் முறையையும் மந்திரம், பில்லி சூனியம் என்று ஏதோதோ செய்து ட்ரூயிடுகள் அடக்கியிருக்கிறார்கள். ட்ரூயிடுகள் ஆலோசனையின்படியே ஸ்டோன்ஹென்ஞ் கற்கள் எழுப்பபட்டிருக்க வேண்டும். ஸ்யாமா காளி போன்ற சக்திகளைப் பற்றி அவர்கள் அறிந்திருக்கிறார்கள். அந்தக் காளி யந்திரத்தின் 5 முனை நக்ஷத்திரம் அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. தாயத்துகள் வடிவத்தில் பல நக்ஷத்திரக் குறிகளும், வடிவங்களும் மேற்கு ஐரோப்பாவில் ஆங்காங்கே கிடைத்துள்ளன. 6 முனை நக்ஷத்திரத்தை மிக அதிகமாக அவர்கள் பயன்படுத்தினர். தங்களுக்குப் பிடிக்காதவர்களை பில்லி சூனியம் வைத்து அழித்தார்கள் என்ற எண்ணம் இருக்கிறது. இந்தச் சக்தியின் தாக்குதலால் திடீரென்று மக்கள் இறந்ததால், தங்கள் மந்திர சக்தியால் இப்படி இறக்கச் செய்ததாக மக்கள் நம்பினார்கள். அப்படி ஒரு எண்ணத்தை ரோமானியர்கள் தலையெடுத்த போது பரப்பினார்கள்.



ட்ரூயிடுகளையும், அவர்களது கலாசாரத்தையும் அழித்துத்தான் ரோமானியப் பேரரசு எழுந்தது. தனது நாட்டில் ஒருவன் ரோமானியனாக இருக்க வேண்டும் அல்லது ட்ரூயிடாக இருக்க வேண்டும் என்று அகஸ்டஸ் சீசர் அறை கூவல் விடுத்தார். யாரெல்லாம் ட்ரூயிடுகள் என்று சொல்லிக் கொண்டார்களே அவர்களை எல்லாம் அழைத்தார்கள். அதனால் பல ட்ரூயிடுகளும் தங்கள் அடையாளத்தை மறைத்துக் கொண்டு உயிர் தப்பினர்.


 

இன்றைக்கு வரலாற்றைத் திரும்பிப் பார்க்கும்போது, பழமை, பாரம்பரியம், தொடரும் கலாசாரம் ஆகியவற்றை முதன் முதலாக அழிக்க முற்பட்டவர்கள் ரோமானியர்களும் கிரேக்கர்களுமே என்று தோன்றுகிறது. அவர்கள் ஐரோப்பிய (கெல்டிக்)  கலாசாரத்தின் ஆதாரமாக இருந்த ட்ரூயிடுகளைத் தங்கள் எதிரிகளாகப் பார்த்தனர். ட்ரூயிடுகள் சொற்படி மக்கள் நடக்கவே, அவர்களை அழித்தால்தான் தங்களால் அந்த மக்களை ஆள முடியும் என்று நினைத்தனர். கிரேக்க- ரோமானியர்களுக்குப் பிறகு உலகெங்கும் ஆங்காங்கே இருந்த பாரம்பரியக் கலாசாரத்தை அழித்த பெருமை, மற்றும் அழித்துக் கொண்டிருக்கும் பெருமை கிருஸ்துவத்தையே சாரும்.

 


இந்தியாவில் காலனி ஆதிக்கம் தோன்றிய காலக் கட்டத்தில் ஆங்கிலேயர்களுக்கும், பிற ஐரோப்பியர்களுக்கும் தங்கள் நாட்டில் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக இருந்து வந்த கெல்டிக் கசாசாரத்தைப் பற்றிய பெருமை இல்லை. ஏனெனில் அது உருவ வழிப்பாட்டையும், பல தெய்வ வழிபாட்டையும் போதித்தது. இவற்றை எதிர்க்கும் கிருஸ்துவம் ஐரோப்பாவில் வேரூன்றி, ஐரோப்பியர்களையெல்லாம் கிருஸ்துவர்களாக மாற்றிய பிறகு, பழமையான ட்ரூயிடுகளைப் பற்றிய பெருமை மக்களுக்கு இல்லை. அதாவது தங்கள் மூதாதையர்களைப் பற்றி அவர்களுக்கு நல்லெண்ணம் இல்லை. கிருஸ்துவம் அவர்களை அப்படி மாற்றி விட்டது. கிருஸ்துவத்தினால்தான் தாங்கள் உயர்ந்த கலாசாரப் பண்புகளை அடைந்தோம் என்று ஐரோப்பியர்கள் நினத்தனர். அப்படிப் பட்ட எண்ணத்துடன் இந்தியாவுக்கு வந்தவர்கள்,

இந்தியாவில் வேரூன்றியிருந்த கலாசாரம், ட்ரூயிடுகள் வழியில் வந்த மேற்கு மற்றும் மத்திய ஐரோப்பாவின் பழைய கலாசாரம் போல இருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டனர்.



எந்தெந்த அடையாளங்களெல்லாம் ஐரோப்பாவில் தென் படுகின்றனவோ, அவையெல்லாம் இந்தியாவிலும் இருக்கவே, மேற்கு ஐரோப்பாவிலிருந்து ரைன் நதி, டனுபே நதி என்று வரிசையாக ஏழு நதிகளைக் கடந்து (சப்த சிந்து) தங்கள் முன்னோர்களே இந்தியாவுக்கு வந்தார்கள்  என்று எண்ணினார்கள். ஆனால் தங்கள் நாடுகளில் வாழ்ந்த கெல்டுகள், ட்ரூயிடுகளைக் குறித்து நல்லெண்ணம் கொண்டிராத ஆங்கிலேயர்களும், ஐரோப்பியர்களும், ரிக் வேதத்தில் உயர்வாகச் சொல்லப்பட்ட ஆரியர்களைப் பிடித்துக் கொண்டார்கள். தங்கள் முன்னோர்கள் உயர்வாகப் பேசப்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்ற ஆசையில் அவர்கள் ரிக் வேத ஆரியர்களே என்று முடிவு கட்டி விட்டார்கள். ஆனால் தங்கள் நாடுகளில் வாழ்ந்த கெல்டுகளும், ட்ரூயிடுகளும் எக்கேடு கெட்டும் போகட்டும். அவர்கள் சரியில்லை. அவர்கள் சீரழிந்து போனவர்கள். ஆனால் அவர்களுக்கும், பாரத மக்களுக்கும் கலாசார ரீதியில் ஒற்றுமை இருக்கவே, வேதத்தில் சொல்லப்பட்ட ஆரியர்கள், தங்கள் முன்னோர்களே என்று முடிவு கட்டினர்.

 

இந்த எண்ணத்தை நிரூபிக்க ஐரோப்பியர்களால் எந்த் ஆதாரத்தையும் காண்பிக்க முடியாது. இதுவரை காண்பிக்கவுமில்லை, ஆனால் தஸ்யூ என்று சொல்லப்பட்டிருக்கிறதே அந்த தஸ்யூக்கள் யார் என்று அவர்கள் ஆராய்ந்திருந்தால், அவர்களது மூதாதையர் யார் என்பதை அவர்கள் கண்டு பிடித்திருப்பார்கள்.


அந்த தஸ்யுக்களே ட்ரூயிடுகள் ஆவார்கள்.


ரிக் வேதத்தில் ஆரிய- தஸ்யு போரைப் பற்றித் தெளிவான விவரங்கள் கிடையாது. விவரங்களுக்குப் புராண, இதிஹாசங்களைத்தான் பார்க்க வேண்டும். விஷ்ணு புராணத்திலும், மஹாபாரத்த்திலும் இந்தப் போரைப் பற்றிய விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதன் படி இந்த ஆரிய- தஸ்யு சண்டை என்பது, சரஸ்வதி நதி தீரத்தை ஆண்ட யயாதியின் ஐந்து மகன்களுக்கிடையேயான ஆட்சிச் சண்டை என்று தெரிகிறது. 30, 31 ஆவது கட்டுரைகளில் இதைப் பற்றிக் கண்டோம்.


அந்தச் சண்டையில் வென்ற புரு, ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டான். தோற்றுப் போன மீதி நால்வரும் வேறு வேறு இடங்களுக்குப் பெயர்ந்தனர். அவர்களுள் யதுவும் (கிருஷ்ணனது மூதாதையர்) துர்வர்ஸுவும் ஆரியவர்த்த்த்திலேயே தங்கள் நாடுகளை அமைத்துக் கொண்டனர். அநுவும், த்ருஹ்யுவும் ஆரிய வர்த்தத்தை விட்டு வெளியேறினர். த்ருஹ்யு வடக்கு ஐரோப்பாவுக்குச் சென்றான்.



மேலே காட்டப்பட்டுள்ள படம், என் வழியில் நான் ஆராய்ந்த்தில் உருவாக்கினது.


ஆரியப் படையெடுப்புக் கொள்கையை ஆராய்ந்த கிரேக்கரான நிக்கோலஸ் கஜானஸ் (NICHOLAS KAZANAS) என்னும் ஆராய்ச்சியாளரும் தான் ஆரய்ந்ததை வரைபடமிட்டுள்ளார். அதைக் கீழே காணலாம்:-





சிந்து- சரஸ்வதி நதி தீரத்தில் யயாதியின் நாடு இருந்தது. அதற்காகத்தான் சண்டை. அதில் புரு வெற்றி பெற்று தன் ஆட்சியை ஸ்தாபிக்கிறான். (இந்தப் புருவின் வழித்தோன்றலே அலெக்ஸாடரை எதிர் கொண்ட போரஸ் மன்னன் என்ற கருத்து இருக்கிறது. பாரத வரலாறு தொடர்ச்சியாக இருக்கிறது என்பதை இது காட்டுகிறது.)


இந்தப் படத்தில் காந்தாரம் வழியாக, வடக்கு ஐரோப்பாவுக்கும், அங்கிருந்து மங்கோலியாவுக்கும் (சீனா) ஒரு கிளையாக த்ருஹ்யு சென்றிருக்கிறான். அது மட்டுமல்ல, அவனும், அவனைச் சேர்ந்தவர்களும் மேற்கு ஐரோப்பாவுக்கும், காஸ்பியன் கடல் பகுதிக்கும் சென்றிருக்கிறார்கள். இங்கெல்லாம் வேத மதத்தின் சுவடும், சமஸ்க்ருதத்தின் சுவடும் இவன் மூலமாகச் சென்றிருக்கிறது.  அது மட்டுமல்ல தமிழின் சுவடும் சென்றிருக்கிறது. இங்குள்ள மொழிகளிலெல்லாம் தமிழ் வார்த்தைகளின் கலப்பு இருக்கிறது, காரணம் த்ருஹ்யுவின் காலக்கட்டத்தில் பாரதம் முழுவதும் தமிழ் மொழியே மக்களது பேசு மொழியாக இருந்திருக்கிறது. 66 முதல் 69 வரையிலான கட்டுரைகளைத் திருப்பிப் பார்க்கவும். ராமாயண காலத்தில் ராமன், சீதை முதல், பாமர மக்கள் வரை தமிழில் பேசியிருக்கின்றனர். அந்த ராமனுக்கு முந்தின காலத்தில் யயாதி வருகிறான். ராமனுடைய தாத்தாவுக்குத் தாத்தா யயாதியாவான் (பார்க்க 13 ஆவது கட்டுரை) அதனால் அப்பொழுது இன்னும் நன்றாகவே தமிழ் புழங்கியிருக்கிறது. த்ருஹ்யுவும், அநுவும், தங்களுடன், தமிழ், சமஸ்க்ருதம், வேதமத வழக்கங்கள் ஆகியவற்றை எடுத்துச் சென்றிருக்கின்றனர்.


ராமனது காலம் இன்றைக்கு 7000 ஆண்டுகளுக்கு முன் என்று ராமாயணத்தில் காணப்படும் விண்வெளிக் குறிப்புகள் மூலம் அறிகிறோம் (14 ஆவது கட்டுரை). ராமனுக்கு ஐந்து தலைமுறைகளுக்கு முன் யயாதி வரவே, இன்றைக்கு 7000 ஆண்டுகளுக்கு முன்னரே பாரதத்தை விட்டு ஒரு கூட்டம் ஐரோப்பாவுக்குச் சென்றிருக்கிறது.


அந்தப் பகுதிக்குச் சென்ற த்ருஹ்யுவே, தஸ்யுவாகக் கருதப்பட்டான் (தஸ்யு என்றால் யார், என்ன என்பதை 29 ஆவது கட்டுரையில் காணலாம்) என்று சொல்ல புத்த மதம் சாட்சியாக இருக்கிறது. புத்தர் போதித்த தர்மத்தை 'ஆரிய தர்ம்ம்' என்றும் 'ஆரிய மார்கம்' என்றும் பௌத்தர்கள் அழைத்தனர். அதை அவர்கள் யோனம் (யவனம்), காம்போஜம், காந்தாரம் போன்ற இடங்களில் போதித்தனர் என்று சொல்லுமிடங்களில், தஸ்யுக்களுக்குப் போதித்தனர் என்று சொல்லப்பட்டுள்ளது. தஸ்யுக்களுக்கு ஆரிய தர்மம் போதித்து அவர்களை ஆரியர்களாக பௌத்தர்கள் மாற்றினார்கள். தஸ்யுக்களைப் பற்றிச் சொல்லுமிடமான காந்தாரம் த்ருஹ்யு முதலில் குடியமர்ந்த இடமாகும்.


வேத நெறிகளைப் பின்பற்றாதவன் தஸ்யு எனப்பட்டான். அவன் 'அ-யஜ்வா' ஆவான். அதாவது யஞ்ய வழிபாட்டை மேற்கொள்ளாதவன். அப்படிப்பட்டவனை மிலேச்சன் என்றும் சொன்னார்கள். த்ருஹ்யுவையும் அவனது சந்ததியையும் பற்றிக்கூறும் விஷ்ணு புராணம் அவன் மிலேச்சனே என்று கூறுகிறது.


விஷ்ணு புராணம், 4-17 –இல் "த்ருஹ்யுவின் மகன் பப்ரு" என்று சொல்லப்படுகிறது. பப்ரு – ஹப்ரு – ஹீப்ரு (யூதர்) என்றான விவரத்தைப் பிறகு பார்ப்போம்.


பப்ருவின் மகன் 'அரத்வத்' (ARADWAT) இவனோ அல்லது இவனது வழித்தோன்றலோ 'அர்த்-ரி' (ARD RI) என்ற பெயரைக் கொண்ட அயர்லாந்து மஹாமன்னர்கள் பரம்பரையை ஆரம்பித்தார்கள், இந்தப் பரம்பரை பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அயர்லாந்தை ஆண்டது. இவர்களைச் சேர்ந்தவர்கள் அருகிலிருந்த இங்கிலாந்தில் வில்ட்ஷையரில் உலவிய அதிசய சக்தியை அடக்க ஸ்டோன்ஹென்ஞ் போன்றவற்றை எழுப்பியிருக்கிறார்கள்.


அர்த்வத்தின் மகன் காந்தாரன். இவனே காந்தார நாட்டை தனது பெயரால் நிறுவியிருக்க வேண்டும். இந்த நாட்டைப் பற்றிய குறிப்புகளை நாம் தேடினால், அது ராமாயண காலத்தில்தான் ஆரம்பிக்கிறது. யயாதியானவன் ராமனுக்கு ஐந்து தலைமுறைகள் முந்திவன், இந்த காந்தாரனானவன் யயாதியின் ஐந்தாவது தலைமுறையைச் சேர்ந்தவன். (யயாதி – த்ருஹயு- ப்ப்ரு – அர்த்வத் – காந்தாரன்) அதனால் ராமன் காலத்தில்தான் காந்தாரன் இருந்திருக்கிறான், அப்பொழுதுதான் காந்தார நாடு உருவாக்கப்பட்டிருக்கிறது என்று தெரிகிறது.


ராமன் ஆண்ட காலத்தில், ராமனது தம்பியான பரதன் இந்தக் காந்தாரப் பகுதியைத் தன் வசம் கொண்டு வருகிறான். அங்கு தனது இரண்டு மகன்களுக்காகவும் இரண்டு நகரங்களை நிறுவுகிறான். புஷ்கலன் என்னும் மகனுக்காக புஷ்கலாவதி (இன்றைய பெஷாவர்) என்ற நகரையும், தக்ஷன் என்னும் மகனுக்காக தக்ஷசீலத்தையும் நிறுவுகிறான். இவை இரண்டும் காந்தாரத்துக்கு (இன்றைய காந்தஹார்) அருகே இருக்கின்றன. இதனால், காந்தாரானை வென்றோ அல்லது விரட்டி விட்டோ அந்தப் பகுதியை பரதன், தங்கள் வசம் கொண்டு வந்திருக்கிறான் என்று தெரிகிறது.

காந்தாரன், ராமனுக்கும் பரதனுக்கும் பங்காளிதான். ஆனால் அவன் ஆண்ட இடத்தைத் தான் ஆக்கிரமிக்க வேண்டும் என்று பரதன் ஏன் நினைத்தான்? காந்தாரப்பகுதியில் தஸ்யு நெறி பரவக்கூடாது என்ற எண்ணத்தால், காந்தாரனை வடக்கு ஐரோப்பா நோக்கி விரட்டியிருக்கிறான் என்று தெரிகிறது. மேலும் அந்தப் பகுதி, பரதனது தாய் வீடான கேகய நாட்டுக்குச் செல்லும் வழியில் இருக்கவே, அந்த வழிப்பாதையை தங்கள் வசம் கொண்டு வருவது நல்லது என்று நினைத்திருக்கிறான்.



உபநிஷத்துகளிலும் காந்தார நாடு பற்றிய குறிப்பு வருகிறது. அங்கு நன்கு கற்றறிந்தவர்கள் இருந்திருக்கிறார்கள். அங்குள்ள தக்ஷசீலத்தில்தான் மஹாபாரத நூல் அரங்கேற்றப்பட்டது. அதே இடத்தில்தான் பிற்காலத்தில் புத்த தர்மம், ஆரிய தர்மம் என்று போதிக்கப்பட்டது. ஆரிய தர்மத்தை ஆரியர்கள், தஸ்யுக்கள் என்று அனைவருக்கும் போதித்தார்கள் என்று புத்த நூல்கள் கூறுவதால், அது நடந்த இடம் காந்தாரம், யவனம் ஆகிய இடங்களாதலால், தஸ்யுவுக்கும், தமிழ் மக்களுக்கும் சம்பந்தமே இல்லை என்று தெரிகிறது. ,


 

இனி காந்தாரனுக்குப் பிறகு யார் என்று பார்ப்போம். காந்தரன் மகன் தர்மன், அவன் மகன் த்ரிதன், அவன் மகன் துர்யுமான் (இவனும் ட்ரூயிட் என்றாகி இருக்கலாம்).


அவன் மகன் ப்ராசேதஸ். அவனுக்கு 100 மகன்கள், அவர்கள் அனைவருமே வடக்குப் பகுதிகளில் இருந்த, நெறிப்படி வாழாத மிலேச்சர்கள் மற்றும் காட்டுமிராண்டிகளுக்கு அரசர்களாக இருந்தார்கள் என்கிறது விஷ்ணு புராணம்.


த்ருஹ்யு, த்ரிதன் மற்றும் துர்யுமான் ஆகியோருக்கும் ட்ரூயிடுக்கும் ஒரு பெயர் ஒற்றுமை உள்ளது. ட்ரூயிட் என்ற சொல், த்ருவித் என்று பழைய கெல்டிக் மொழியில் வழங்கப்படுகிறது. த்ருவித் என்பது ஒரு சமஸ்க்ருத்ச் சொல். நிலையான, அல்லது ஸ்திரமான அறிவு என்பது அதன் பொருள். ட்ரூயிடுகள் அறிவுக்குப் பெயர் போனவர்கள். ட்ரூயிடைப் போல அறிவாளி என்று பெருமையாகச் சொல்லிக் கொள்வார்கள். பொ.பி 750 ஆம் ஆண்டில், ப்ளாத்மாக் (BLATHMAC) என்பவர் ஏசுகிருஸ்துவைப் பற்றித் தான் எழுதிய பாடலில் ட்ரூயிடைவிட கிருஸ்து அறிவாளி என்று சொல்லியுள்ளார் என்பது கவனிக்கத்தக்கது. ந்தப் பாடல் எழுதப்பட்ட காலக்கட்டத்தில் பல ட்ரூயிடுகளை மந்திரவாதிகள் என்றும் சூனியக்கார்கள் என்றும் சொல்லிக் கொன்றார்கள். அதே காலக்கட்டத்தில் கிருஸ்துவ மதம் தலையெடுக்க ஆரம்பித்து விட்டது. அதன் கதாநாயகனான ஏசு கிருஸ்து, ட்ரூயிடுகளைக் போல அறிவு மிகுந்தவர் என்று சொல்லியுள்ளதால், ட்ரூயிடுகளைப் பற்றி அந்த நாளைய மக்கள் குறைத்து மதிப்பிடவில்லை என்று தெரிகிறது


ஐரோப்பாவில் அவர்கள் பரப்பின கருத்துக்கள் வேத மரபின் கருத்துக்களே என்பதை அடுத்த கட்டுரையில் காண்போம்.

 

 

 

3 கருத்துகள்:

  1. தலை வணங்குவதை தவிர வேறொன்றும் சொல்வதற்கில்லை. எல்லாம் வல்ல இறை உங்களுக்கு நீண்ட ஆயுளும் ஆரோக்யமும் அருள பிரார்த்திக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  2. Many things are getting clear to me.Below the pic of Queen Elizabeth accompanied by a Druid, one site has been given. I found in that there is mention of a festival Samhein (pronounced sah-win). It reminds me of a festival in North India "sawan". Many hindi films and music are around this name. What are your learned views please?

    பதிலளிநீக்கு
  3. Yes you are right. Many habits and customs of Druids are similar to Hindu customs.

    Please go through all the articles in the following site. They were written by researchers on Druids and Celts, by digging their past. You will find them to be an extension of Vedic customs. Most of them are corrupted versions thereby showing us that they were the later developments not the originals. Originals are with us and we are the originals.


    http://druidnetwork.org/en/learning/courses/online/polytheist/one

    பதிலளிநீக்கு