செவ்வாய், 28 ஆகஸ்ட், 2012

102. மொஹஞ்சதாரோவிலிருந்து ஐரோப்பா வரை பரவிய கொம்புத் தலைக் கடவுள்.


தமிழன் திராவிடனா? தொடருகிறது. இதன் முந்தைய கட்டுரையை இங்கே படிக்கலாம்.

http://thamizhan-thiravidana.blogspot.in/2012/02/101.html


தொடருவதற்கு முன், நாம் கடைசியாக அலசிய சில விவரங்களை நினைவில் கொண்டு வருவோம்.


மொஹஞ்சதாரோவில் கிடைத்துள்ள முத்திரைச் சின்னம் ஒன்றில், சிவன் என்னும் தெய்வம் உருவான ஆரம்பக் கருத்தாக்கம் கிடைத்துள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். அந்த உருவ முத்திரையைக் கீழே காணலாம்.


 


 

இதில் உள்ள உருவம் பசுபதி என்றும், இதிலிருந்துதான் சிவன் என்னும் கருதுகோள் தோன்றியது என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.


இவர்கள் சொல்வதை நாம் ஒத்துக் கொள்வதாக இருந்தால், மொஹஞ்சதாரோவில் இருந்த கலாசாரம், திராவிடமல்ல, அது வேத கலாசாரம் தான் என்று ஏற்றுக் கொள்ள வேண்டும்.


ஏனெனில் சிவன் என்னும் தெய்வம், வேத ஆரியர்களது தெய்வம்தான்.


மும்மூர்த்திகளில் ஒருவன் சிவன்.


சிவனது பிரபஞ்ச ரூபத்தை விவரிக்கும் 'ஸ்ரீ ருத்ரம்' என்னும் பகுதி யஜூர் வேத்த்தில் இருக்கிறது. ஹிந்து மதத்தில் எந்த தெய்வத்தை வழிபடுபவர்களாக இருந்தாலும், இந்த வேத ருத்ரத்தைச் சொல்லும் மரபு இன்று வரை இருக்கிறது.


இதில்தான் மரண பயத்தை வெல்லும் 'மிருத்யுஞ்சன மந்திரம்' இருக்கிறது.


சிவ மந்திரம் என்று சொல்லப்படும் ஐந்தெழுத்து மந்திரமான ஓம் சிவாய நமஹ என்பது யஜுர் வேதத்தின் கிளையான தைத்திரிய சம்ஹிதையில் காணப்படுகிறது.

இந்த மந்திரம் மக்களுக்கிடையே புழங்க ஆரம்பித்து பல ஆயிரம் வருடங்கள் ஆகியிருக்கும். ஏனெனில், 1800 ஆண்டுகளுக்கு முன் நடந்த சிலப்பதிகாரத்தில், கண்ணகியுடன் கோவலன் மதுரைக்குச் செல்லும் போது, வழியில் அவன் கண்ட மாங்காட்டுப் பார்ப்பனன், இந்த ஐந்தெழுத்து சிவ மந்திரத்தையும், எட்டெழுத்து மந்திரமான விஷ்ணு மந்திரத்தையும் சொல்லிக் கொண்டு காட்டைக் கடக்குமாறு அறிவுறுத்துகிறான்.


இதிலிருந்து 2000 வருடங்களுக்கு முன்பே இந்த மந்திரங்களை மக்கள் சொல்லி இருந்தார்கள் என்று தெரிகிறது. ஆனால் அதற்கு 1500 வருடங்களுக்கு முன்புதான் மொஹஞ்சதாரோவில் சிவன் என்னும் கருத்தாக்கம் உண்டானது என்றால், அதற்குப் பிறகுதான் மாடு மேய்த்த ஆரியர்கள் வந்து, பிறகு வேதத்தைக் கொடுத்தனர் என்றால், சிவ மந்திரம் உருவாகி மக்களிடையே புழங்க ஆரம்பிக்க, இந்தக் கால இடைவெளி போதாது.


 

மேலும் மேலை நாட்டு ஆராய்ச்சியாளர்களுக்கு தவம், ஜபம், மந்திரம், யோகம் என்பவையெல்லாம் தெரியாது. அவர்களைப் பொருத்த வரையில் கற்கால மனிதன், தட்டுத்தடுமாறி தானே உருவகித்த கொள்கைதான் தெய்வம் என்ற எண்ணம் இருக்கிறது. அவர்கள் நாடுகளில் தென்படும் அடையாளங்களைக் கொண்டு அவர்கள் அப்படி இருக்கிறது என்று சொல்கிறார்கள். ஆனால் நம் நாட்டில் நன்கு வளர்ந்த கடவுள் கொள்கையைத்தான் நாம் காண்கிறோம். ஐரோப்பாவில் மக்கள் கற்கால வாழ்க்கை வாழ்ந்த காலக் கட்டத்திலேயே, பாரத நாட்டில் அறிவு பூர்வமாக விவரிக்கும்படியான தெய்வக் கொள்கை வேரூன்றி இருந்திருக்கிறது. ஆராய்ந்தும், விவாதித்தும் தெய்வத்தை அறியுங்கள் என்றுதான் ஹிந்து மதம் கூறுகிறது. அந்த வழியை 'ஞான யோகம்' என்பார்கள். அந்த ஞானம் பெறுவதற்கான அடிப்படைகள் பல இருந்தன. அவற்றுள் ஒன்று யோகத்தில் அமர்ந்து, மூச்சுப் பயிற்சி செய்து, குண்டலினையை எழுப்பும் முறையாகும். அந்த வழிமுறையைத்தான் நாம் மொஹஞ்சதாரோவின் முத்திரைகளில் உருவமாகப் பார்க்கிறோம்.


உண்மையில், இந்தத் தவ முறையை ஆரம்பத்தில் பின்பற்றி, பிறகு நாளடைவில் மறந்து போய், அதன் காரணமாக தாறுமாறாக மாறிப் போன கடவுள் கொள்கைகளையே நாம் ஐரோப்பாவில் காண்கிறோம், அந்தக் கொள்கைகளைக் காப்பியடித்தும், உருமாற்றியும் உருவான மதமே கிருஸ்துவம் ஆகும். பொ.பி 4 ஆம் நூற்றாண்டுவாக்கில் உருவாக்கப்பட்ட கிருஸ்துவ பைபிள் சொல்லும் கருத்துக்கள் இந்தியாவிலிருந்து எகிப்து வரை சென்று, பிறகு கிரேக்கர்களால் உருமாற்றப்பட்டு, அதன் பிறகு சின்னாபின்னமாக்கப்பட்ட கருத்துக்களே ஆகும். இதை மெய்ப்பிக்க ஹிந்து மத நூல்கள் சொல்லும் கருத்துக்களுடன் நாம் ஒப்பிட்டுக் காட்டலாம். ஆனால் அவற்றை அன்னிய ஆராய்ச்சியாளர்களும், அவர்களுக்கு வால் பிடிக்கும் இந்திய ஆராய்ச்சியாளர்களும் ஏற்றுக் கொள்ள தயாராகவில்லை


ஆனால் உண்மை சாகாது. தொல்லியல் ஆதாரங்களாக அந்த உண்மைகள் மொஹஞ்சதாரோவில் இருக்கின்றன. அந்த ஆதாரங்கள் திராவிடத்தைப் பற்றிப் பேசவில்லை. அப்பொழுதே தொடர்ந்து வந்த வேத வாழ்க்கையைப் பற்றித்தான் பேசுகின்றன. அவை என்னவென்று காண்போம்.


அவற்றில் முதலாவதாக திணிக்கப்படும் பொய் மொஹஞ்சதாரோவில் காணப்படும் தவ வடிவம் பசுபதி என்பதும், அதுவே PROTO SIVA  எனப்படும் சிவன் என்பதன் கருத்தாக்கம் என்பதும் ஆகும்.

அது பசுபதியோ அல்லது வேறு எந்த தெய்வமோ அல்ல.


அந்த உருவம் தவயோகத்தில் ஈடுபட்டிருப்பவரது உருவம் என்பதை முந்தைய கட்டுரைகளில் கண்டோம். அதன் முக்கிய ஆதாரமாக புத்தரது உருவத்துடன் ஒப்பிட்டோம்.


புத்தர், காலத்தால் மொஹஞ்சதாரோவுக்குப் பிற்பட்டவர். அவர் ராமன் பிறந்த இக்ஷ்வாகு குலத்தில் பிறந்து துறவு மேற்கொண்டவர். அவர் இன்றைய பீஹாரில் கயை என்னுமிடத்தில் ஒரு அரச மரத்தடியில் தவம் இருந்து ஞானம் பெற்றார். அரச மரத்துக்கு போதி மரம் (போதிபோதனைஅறிவு) என்றே பெயர் உண்டு. அதை அஸ்வத மரம் என்று வடமொழியில் வழங்குவார்கள். அந்த மரத்துக்கும் ஞானம் பெறுவதற்கும் தொடர்பு உண்டு என்பது ஹிந்து மத நம்பிக்கை. இந்தப் பிரபஞ்சமே கவிழ்ந்த நிலையில் வளரும் அரச மரத்தைப் போன்றது என்பதே வேத, உபநிஷதக் கருத்து ஆகும். அந்த மரத்தின் வேர்கள் பிரபஞ்ச வெளியிலும், அதன் கிளைகள், இலைகள் ஆகியவை உயிர்கள் வாழும் இந்த உலகிலும் இருக்கின்றன என்றே அந்தக் கருத்து உருவகிக்கிறது.



தோற்றம் மற்றும் வளர்ச்சியின் உருவகமாக அது இருப்பதால், பிரளய காலத்தில் இந்த உலகம் நீரில் முழுகி இருக்கும் போது அந்த அஸ்வத மரத்தின் இலையில் கண்ணன் தவழுவான். அப்பொழுது மீண்டும் உலகம் தோற்றம் பெறும், உயிர்கள் வளர ஏதுவா சூழ்நிலை ஏற்படும். ஆண்டாள் பிறந்த ஸ்ரீ வில்லிபுத்தூரில் மார்கண்டேய முனிவர் தவம் செய்து கொண்டிருந்தபோது, நீர் பிரவகித்து, எல்லாம் முழுகி விட்டன. அப்பொழுது மார்கண்டேருக்கு ஆலிலை மேல், கண்ணன் காட்சி அளித்தார். அந்தக் காட்சியை அவர் வட பத்ர சாயி என்ற பெயரில் தெய்வமாக அதே இடத்தில் பிரதிஷ்டை  செய்தார்.




ஸ்ரீ வில்லி புத்தூர் ஒரு காலத்தில் நீரில் முழுகி இருந்த தொல்லியல் ஆதாரம் ஒரு புறம் இருக்க, இந்த ஆலிலைக் கிருஷ்ணன் நம்பிக்கை கொண்ட சமுதாயமாக சிந்து சமவெளி நாகரிகம் இருந்திருக்கிறது என்பதை நாம் காணலாம்.


தியானத்திலும், தவத்திலும் இருந்த மார்க்கண்டேயர் ஆலிலையைக் கண்டது போல, தவ யோகத்தில் வெற்றி அடைந்தவர்கள் தலையில் ஆலிலை வளர்ந்தது போல உணர்கிறார்கள். அவர்களுக்குத் தெய்வத்தின் சொரூபம் தெரிகிறது அல்லது தோற்றத்தின் ரகசியம் புரிகிறது என்னும் நிலை ஏற்படுவதால், அதைச் சித்தரிக்கும் விதமாக, மொஹஞ்சதாரோ சிற்பிகள் அந்த்த் தவ யோகியின் தலையிலிருந்து வராஹக் கொம்புகளையும், அவற்றுக்கிடையே ஆலிலை அமைப்பையும் காட்டியுள்ளார்கள். தனிப்பட்ட சின்னமாகவும் அதை அவர்கள் வடித்துள்ளதை மொஹஞ்சதாரோவில் காணலாம்.


(படம் : மொஹஞ்சதாரோ ஆலிலையும், உண்மையான ஆலிலையும்.)


 

அந்த இலைக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் இருந்திருந்தால், அவர்கள் தோண்டின கிணற்றையும் ஆலிலை வடிவத்தில் அமைத்திருப்பார்கள்!

ஆலிலை வடிவத்தில் ஒரு கிணறும் மொஹஞ்சதாரோவில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.



இது திராவிடப் பழக்கமா, அல்லது ஆரிய வேத வழக்கமா?


தவ யோகத்தின் முடிபை எட்டியவர்கள் ஆலிலை தவழும் இறைவனது நிலையை எய்துபவர்கள் என்பதைக் குறிக்கும் வண்ணம், அப்படிப்பட்ட யோகத்தில் வென்ற கௌதம புத்தரையும், ஆலிலை மீது இருப்பது போன்ற அமைப்பில் வடிக்கும் வழக்கம் பௌத்தர்களிடையே இருந்து வந்திருக்கிறது. அப்படி ஒரு அமைப்பைக் கீழே காணலாம்.



 

மொஹஞ்சதாரோவில் காணப்படும் தவக் கோலம், புத்தர் செய்த்து போன்ற யோக முறையே என்று சொல்லும் வண்ணம் ஒரு அமைப்பு ஹரப்பாவில் காணப்படுகிறது என்று முன்னம் பார்த்தோம்.



இந்த உருவ அமைப்பு, யோகத்தின் கடைசிக் கட்டத்தை அடைவதற்கு முன் வருவது. இதை பூமி ஸ்பரிச முத்திரை என்பார்கள்.

இதே முத்திரையுடன் பல இடங்களில், புத்தர் சிலைகள் காணப்படுகின்றன. அவற்றில் ஒன்றை கீழே காணலாம். இது குறித்த பிற விவரங்களை 101 ஆவது கட்டுரையில் காணலாம்.

 

 


இதன் மூலம், புத்தர் மேற்கொண்ட தவ முறை, மொஹஞ்சதாரோ காலத்தில், அதாவது இன்றைக்கு 5000 ஆண்டுகளுக்கு முன்பே சிந்து சமவெளிப் பகுதிகளில் இருந்து வந்திருக்கிறது என்று தெரிகிறது.


5000 ஆண்டுகளுக்கு முன்னால் உருவான மொஹஞ்சதாரோ, ஹரப்பா போன்ற நகரங்கள் நன்கு உருவாக்கப்பட்டவையாகத் தெரிகின்றன. அவை ஒரு வளரும் சமூகத்தினால், தட்டுத்தடுமாறி உருவாக்கப்பட்டவை அல்ல. ஏற்கெனெவே நாகரிக வளர்ச்சி பெற்ற மக்கள் அங்கு குடியமர்ந்த அடையாளங்களைத்தான் நாம் மொஹஞ்சதாரோ, ஹரப்பா என்று பார்க்கிறோம். அந்த மக்களுக்குக் குண்டலினி சக்தியை எழும்பச் செய்யும் தவ முறை தெரிந்திருக்கிறது. ஏற்கெனெவே அந்த முறையைத் தெரிந்தவர்கள்தான் அங்கு இருந்திருக்கிறார்கள். அந்த முறை வேத மரபில் இருந்த பல முறைகளுள் ஒன்று என்பது நாம் கவனிக்க வேண்டிய விவரமாகும்.


தவம் செய்யும் பல முறைகள்  மொஹஞ்சதாரோ காலத்துக்கு முன்பே இருந்திருக்கின்றன. உதாரணமாக, கிருஷ்ணனது மனைவியருள் ஒருத்தியான ஜாம்பவதிக்குக் குழந்தைகள் இல்லை. அவள் கிருஷ்ணனிடன் தன் வருத்தத்தைத் தெரிவிக்கிறாள். அவள் குறையைத் தீர்ப்பதாகச் சொல்லும் கிருஷ்ணன் இமய மலையில் ஆஸ்ரமம் வைத்திருந்த உபமன்யுவிடம் தீக்ஷை பெற்று ஆறு மாதம் தவம் இருந்தார். அதன் பயனாக ஜாம்பவிக்குப் பத்து குழந்தைகள் பிறந்தன என்று பாகவத புராணம் கூறுகிறது. அவர்களுள் ஒரு மகனது பெயர் திராவிடன்!! அவனைப் பற்றிய விவரங்கள் கிடைக்கவில்லை.


இந்தத் திராவிடனை முன்னிட்டும் திராவிடர்கள் என்பவர்கள் உருவாகி இருக்கலாம் என்று சிலர் கூறலாம். ஆனால் மஹாபாரதப் போரில் திராவிடர்கள் கலந்து கொண்டார்கள் என்றும் முன்பே கண்டோம். இதனால் கிருஷ்ணனது மகனான திராவிடன் வேறு என்று தெரிகிறது. இவனை முன்னிட்டுத் திராவிடர்கள் உண்டானார்கள் என்றால், திராவிடம் வேறு, ஆரியம் வேறு என்று சொல்வது அடிபட்டுப் போய் விடும். அல்லது ஆரியன் வந்து திராவிடனைத் துரத்தினான் என்பதும் பொய்யாகி விடும். ந்த்த் திராவிடன் வேத மரபின் ஒரு கிளையானவன். இவனுக்கு முன்பே இருந்த ஆரிய வர்த்த்த்தில் மதுரையில் பிறந்து, துவராவதியை ஆண்ட கிருஷ்ணன் என்னும் வேத மரபு நாயகனின் மகனாகத்தான்  இந்தத் திராவிடன் இருந்திருக்கிறான்.


இனி மீண்டும் மொஹஞ்சதாரோவின் 'பசுபதி' முத்திரைக்கு வருவோம்.


தவ நிலையில் அமரும் கோலத்தையே மொஹஞ்சதாரோவின் 'பசுபதி' என்று சொல்லப்படும் அமைப்பு காட்டுகிறது.

குண்டலினியை எழுப்புகிறவர் இப்படி அமர்ந்திருப்பார்.



இதையேதான் மொஹஞ்சதாரோ அமைப்பும் காட்டுகிறது.




இந்த யோகத்தைச் சித்தர்கள் செய்தார்கள். தமிழ் நாட்டவர்களான நமக்குப் பல சித்தர்களைப் பற்றித் தெரியும். தமிழ் நாட்டில் இருந்தாலும் சரி, இமய மலையில் இருந்தாலும் சரி, மொஹஞ்சதாரோவில் இருந்தாலும் சரி, எல்லா யோகிகளும், சித்தர்களும், இப்படிப்பட்ட அமைப்பில் அமர்ந்து மூச்சுப் பயிற்சி செய்து குண்டலினியை எழுப்பி இருக்கிறார்கள்.

 

இந்த்த் தவ யோகத்துக்கு விதி முறைகள் அமைத்தவர் பதஞ்சலி முனிவராவார். அவரைக் காட்டும் சிற்பங்கள் அவர் உடலையே ஒரு பாம்பாகக் காட்டுகின்றன.





இன்றைக்கும் நமது கோவில்களில் உள்ள பதஞ்சலியின் உருவச் சிலை மேற்கண்டவாறுதான் இருக்கின்றன. தவ யோகத்தில் ஆழ்ந்தவர்கள் உடலில் பாம்பும் இருக்கும், அந்தப் பாம்பேம் தலையைப் பிளந்து கொண்டு வெளியேறுவது போலவும் இருக்கும். தூங்கிக் கிடக்கும் குண்டலினியை பாம்புக்கு ஒப்பிடுவார்கள். அது சீறி மேலெழும்புவதுபோல குண்டலினியும் எழும்பும். தலைக்கு மேலே வரும் போது அது கருடனாகப் பறக்கும். அதில் விஷ்ணு ஆரோஹணிப்பார். இதன் பொருள், தவ சித்தி பெற்ற ஒருவர் பந்தங்களிலிருந்து விடுபட்டுப் பறப்பது போன்ற நிலையை அடைவார். அந்த நிலையில் பிரபஞ்சக் கருவைத் தாங்கியுள்ளவரும், மோக்ஷத்துக்கு அதிகாரியாகவும் உள்ள  நாராயணனை சுமப்பது போன்ற நிலையை அடைகிறார்.



இவ்வாறு பாம்பு, கருடன் போன்ற மிருகங்கள் சொல்லப்பட்டாலும், அவை உருவகங்களாகவும், உட்பொருளைத் தருவனவாகவும், ஹிந்து மரபில் அமைந்துள்ளன. அது மட்டுமல்ல, ஒரே தவ யோகத்தில், சிவன், விஷ்ணு என்பது போல பல தெய்வங்களும் இணைந்துள்ளன. அது ஏனெனில், ஒவ்வொரு நிலைக்கும், ஒவ்வொரு உருவகம் சொல்லப்படுகிறது. அந்த உருவகத்தின் அடிப்படையில் குறிப்பிட்ட ஒரு கடவுள் உருவமும், அதன் செயலும் சொல்லப்படுகிறது. எளிதாகப் புரிந்து கொள்ள வேண்டுமென்றால், இதை நமது உடலுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம். உடல் ஒருங்கிணைந்து வேலை செய்கிறது. மொத்த இயக்கத்தையும் உடல் செய்வது போல இருக்கிறது. ஆனால் உடலின் ஒவ்வொரு பகுதியையும் கவனித்தால், அந்த ஒவ்வொரு பகுதியும், ஒவ்வொரு இயக்கத்தில் ஈடு பட்டிருக்கும். மேலோட்டமாகப் பார்த்தால் அவற்றுக்கிடையேயான தனித்துவம் தெரியாமல், ஒரே அமைப்பாக இந்த உடல் இயங்குவது தெரியும். இதுவே, ஹிந்து மதத்தின் ஒன்றேயான முழுமுதல் கடவுளுக்குள் பல-கடவுளர்கள் அமைந்த கொள்கையாகும்.



இந்த மரபில் ஊன்றி, இதைப் புரிந்து கொண்டு, அறிந்து கொண்டு பின்பற்றினால், வாழையடி வாழையாக இந்தக் கருத்துக்கள் மறையாமல் இருக்கும். ஆனால் எதற்காகச் செய்கிறோம் என்று தெரியாமல் இவற்றைப் பின்பற்றினால் அவை அறைகுறையாகத் தான் இருக்கும். இவ்வாறு பல தலைமுறைகள் தொடரும் போது, இவற்றின் உண்மைப் பொருளே மறைந்து போய் விடும். அப்படி உரு மாறிய கருத்துக்களை, மொஹஞ்சதாரோவின் காலத்துக்குப் பல நூற்றாண்டுகள் கழித்து, எகிப்திலும், ஐரோப்பாவிலும் காண்கிறோம்.



அதன் முக்கிய உதாரணமாக 'கேர்னூனாஸ்' (CERNUNNOS) என்னும்  கெல்டிக் தெய்வத்தைச் சொல்லலாம்.  கெல்டிக் தெய்வங்கள் என்பவை கெல்டிக் நாடுகளில் வணங்கப்பட்டன. (CELTIC NATIONS) கெல்டிக் நாடுகள் என்பவை மேற்கு மற்றும் வடக்கு ஐரோப்பாவில் இருப்பவை. இங்கிலாந்து, ஸ்பெயின், வடக்கு ஐரோப்பா ஆகியவை இவற்றுள் அடங்கும்.





இந்தப் படத்தில் இளம் நீலம், பச்சை ஆகிய வர்ணங்களில் காட்டப்பட்டுள்ள இடங்கள் கெல்டிக் நாடுகள் ஆகும். இன்றைக்கு பொ.மு 6 ஆம் நூற்றாண்டு முதல் பொ.மு 3 ஆம் நூற்றாண்டு வரை கெல்டிக் கலாசாரம் செழித்தோங்கியது. இதில் இங்கிலாந்தும் அடக்கம். நடுவில் பச்சை நிறமாகக் காட்டப்பட்டுள்ள இடத்தில், கண்டெடுக்கப்பட்ட கெல்டிக் கலாச்சாரம் மற்ற இடங்களை விட பழமையானது.




கிரேக்கரோமானியப் பேரரசுகள் உருவாவதற்கு முன் இந்த நாடுகள் தங்களுக்கென கலாசார, வழிபாட்டு முறையைப் பின்பற்றியிருக்கின்றன. அதன் முக்கிய அம்சம், பல தெய்வ வழிபாடு, உருவ வழிபாடு, ஆகியவை. அவையெல்லாம் வேத மரபில் அமைந்துள்ள வழக்கங்களை ஒட்டியே இருந்துள்ளன. இதைக் கொண்டுதான், ஆங்கிலேயர்கள் இந்தியாவுக்கு வந்த போது, மேற்கு ஐரோப்பாவிலிருந்து, இந்தியாவுக்குக் கலாச்சாரம் வந்திருக்கிறது என்றும், அப்படி அவற்றைக் கொண்டு வந்தவர்கள், தங்கள் முன்னோர்களான கெல்ட் என்றும் நினைத்து விட்டார்கள். இந்தியாவில் ஆரியர்கள் என்ற பெயர் வழங்கப்படவே, ஆரியதஸ்யு யுத்தம் என்ற ஒன்று ரிக் வேத்த்தில் காணப்படவே, அந்த ஆரியர்கள் தங்கள் முன்னோர்களான கெல்ட்டுகள் என்று நினைத்து விட்டார்கள். ஆனால் உண்மையில், அந்த கெல்ட்டுகள் பின்பற்றிய கலாச்சாரம், இந்தியாவிலிருந்து வெளியில் சென்ற கலாச்சாரம் தான்.




அதற்கான முக்கிய ஆதாரம் கேர்னூனோஸ் என்னும் கெல்ட் தெய்வம். அந்தத் தெய்வம் கீழ்க்காணும் படத்தில் காட்டப்பட்டுள்ளது.



இந்தச் சிற்பத்தின் காலம் பொ.மு 2 ஆம் நூற்றாண்டு முதல் பொ. பி 2 ஆம் நூற்றாண்டுவரை என்று சொல்லப்படுகிறது. இது ஐரோப்பாவில் உள்ள டென்மார்க்கில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை க்ளிக் செய்து பெரிதாக்கி, ஊன்றிப் பாருங்கள். தோலுடை உடுத்தி காட்டில் ஒருவன் தவக் கோலத்தில் இருக்கிறான். மொஹஞ்சதாரோ முத்திரை போலவே சுற்றிலும் மிருகங்கள். தலையில் இரண்டு கொம்புகள், அவற்றுக்கிடையே அரச இலைகளைப் பாருங்கள்.

 

மொஹஞ்சதாரோ சின்னத்திலும், கொம்புக்கிடையே மூன்று ஆலிலைகளைக் காணலாம். (கீழே படம்)




இந்த இலை வளரும் அஸ்வதம் என்னும் அரச மரம், இந்தியாவில்தான் காணப்படுகிறது. இது ஐரோப்பாவில் வளருவதில்லை. அங்கு வளராத இந்த மரத்தின் இலையை  கேர்னூனோஸ் தலையில் எப்படி அவர்கள் காட்டியிருக்க முடியும்?


பாரத நாட்டில்தான் இந்த மரம் முக்கியத்துவம் வாய்ந்தது. இன்றைக்கும் அரச மரத்தைச் சுற்றும் வழக்கம் பாரத நாட்டில்தான் இருக்கிறது. அரச மரத்தைப் பார்த்தாலே, அதன் அடியில் ஒரு பிள்ளையார் விக்கிரகத்தைப் பிரதிஷ்டை செய்யும் வழக்கம் இன்றும் இங்குதான் இருக்கிறது. அரசும், வேம்பும் இணைந்து வளர்ந்திருந்தால், அதன் அடியில் நாக பிரதிஷ்டை செய்யும் வழக்கமும் நம் நாட்டில்தான் இன்றும் தொடர்ந்து வருகிறது.


அதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது, அரச மரம் இருக்கும் இடத்தின் அடியில், நிலத்தடி நீரோட்டம் இருக்கும். அதன் காரணமாக அருகில் பாம்புப் புற்றும் இருக்கும். நிலத்தடி நீரை அறிந்து கொள்ள அரச மரம் ஒரு கருவி என்று மனு, சரஸ்வதர் போன்றோர் கூறினர் என்ற நூல் ஆதாரம் இருக்கிறது. மக்கள் அரச மரத்தை வெட்டாமல் இருந்தால், அதைக் கொண்டே பூமிக்கடியில் நீர் செல்லும் போக்கை அறிந்து கிணறு, ஏரி என வெட்டி நீரைப் பயன் படுத்திக் கொள்ளலாம் என்னும் கருத்தில் அரச மரம் உள்ளிட்ட பல மரங்கள் பாதுகாக்கப்பட்டன.


இந்த வசதி ஐரோப்பாவில் கிடையாது. வானம் பார்த்த பூமியாக இருக்கும் பாரத நாட்டில்தான், வானம் பொழிந்தவுடன், பூமிக்குள் செல்லும் நீர் நிலத்தடி நீராகத் தங்குகிறது. பூமியின் மேல் மட்டத்துக்கு அருகே அந்த நீர் தங்கும் போது, இயற்கையாகவே அங்கு அரச மரம் வளரும். இப்படிப்பட்ட சூழ்நிலை ஐரோப்பாவில் இல்லை. அது கடக ரேகைக்கு வடக்கே, மித வெப்பப் பகுதியில் அமைந்துள்ளது. அங்கு அரச மரச் சின்னங்கள் தென்பட்டால், அவை இந்தியாவிலிருந்து கடன் வாங்கப்பட்ட கருத்துக்களாக இருக்க முடியுமே தவிர, அங்கேயே தோன்றி, பிறகு அங்கிருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்பட்ட கருத்துக்களாக இருக்க முடியாது.


பசுபதி எனப்படும் தவக்கோலச் சின்னத்தில் மட்டுமல்ல, ஒற்றைக் கொம்பு வராஹ முத்திரைகளிலும், வராஹம் காட்டும் தர்மச் சக்கரத்துக்குள் ஆலிலை அமைக்கப்பட்டுள்ளதைக் கீழ்க் காணும் முத்திரைகளில் காணலாம். (வராஹத்துக்கும், தர்மச் சக்கரத்துக்கும் உள்ள தொடர்பை 95 ஆவது கட்டுரையில் படிக்கலாம்.)


 

தவயோகத்தை மேற்கொண்ட புத்தரும் உலகுக்கு அளித்த செய்தி 'தம்மம்' எனப்படும் தர்மம் ஆகும். இதைச் சக்கர வடிவில்தான் புத்த மதம் போதிக்கிறது.




வேத தர்மச் சக்கரத்தை, புத்த தர்மமாக்கி, அதை அசோக தர்மச் சக்கரம் என்று சொல்லி இன்று நம் நாட்டுக் கொடியிலும் சக்கரம் வைத்தாகி விட்டது. வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் என்ன குளறுபடி செய்தாலும், நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், யோகமும், அதன் பயனாக முகிழும் அறிவை (ஞானம்) ஆலிலையாகவும், அது காட்டும் உயர்வை வராஹக் கொம்பாகவும், அது உருவகிக்கும் தர்ம நெறியை, சக்கரமாகவும் உருவகிப்பது வேத மரபில் மட்டுமே காணப்படுகிறது. இதே உருவகத்தை கேர்னூனோஸ் உருவத்தில் ஆலிலை மற்றும் கொம்புகளாகவும் நாம் காண்கிறோம். தலையில் சக்கரத்துடனும் நாம் காண்கிறோம்.


ஆம், தலையில் சக்கரத்துடன் கூடிய கேர்னூனோஸ் உருவமும் கிடைத்திருக்கிறது.




பீட்டர்ஸ்ஃபீல்டு என்னும் இடத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ள இந்த நாணயத்தில் கேர்னூனோஸ் உருவம் காணப்டுகிறது. அதன் தலையில் கொம்புகளுக்கிடையே சக்கரம் அமைக்கப்பட்டுள்ளதைப் பாருங்கள். இந்தக் கருத்து மொஹஞ்சதாரோவிலும், வேத மரபிலும் வரும் கருத்து அல்லவா?


நாணயத்தின் மறு பக்கத்தைப் பாருங்கள் யூனிகார்ன் என்னும் ஒற்றைக் கொம்பு மிருகத்தை ஒத்திருக்கிறதல்லவா? இதன் ஆரம்பம் 5000 ஆண்டுகளுக்கு முன் பாரதப் பகுதியில் இருந்த மொஹஞ்சதாரோவுக்குச் செல்கிறதல்லவா? இதன் கருத்து எங்கிருந்து எங்கே போயிருக்கிறது? பாரதத்திலிருந்து அல்லவா? இந்தக் கருத்தின் விவரம் பாரதத்தில்தானே இருக்கிறது?


ஆரம்பத்தில் இந்தக் கருத்துக்களைக் கொண்டிருந்த கேர்னூனோஸ் நாளடைவில் உருமாறத் தொடங்கி விட்டார். அதாவது உட்பொருள் தெரியாத மக்களாதலால், எதற்காக, ஏன் உருவகப்படுத்திகிறோம் என்பதையும், அதைக் கொண்டு என்ன செய்ய வேண்டும் என்பதையும் அறியாமல், வெவ்வேறு உருவத்தையும், உருவகத்தையும் தர ஆரம்பித்தார்கள். அந்த உருவப் படைப்பே உக்கிரமாக மாறத் தொடங்கியது. மிருகமும், மனிதனும் இணைந்தாற்போல உருமாற்றங்கள் வர ஆரம்பித்தன.


அப்படி எற்பட்ட ஒரு மாற்றத்தை இந்தப் படத்தில் காணலாம்.



 

ஒரு கையில் பாம்பும், மறு கையில் ஒரு கங்கணமும் தொடர்கின்றன. ஆனால் சுற்றி இருக்கும் மிருகங்களில் உயர்ரக மானை மட்டும் காட்டியுள்ளனர். ஒற்றைக் கொம்பு வராஹத்தைப் பின்பற்றி, யூனிகானாக்கி, பிறகு அதை ஒற்றைக் கொம்பு குதிரையாக்கி, பிறகு ஒற்றைக் கொம்பு மாடாக்கி, பிறகு இவை எதுவுமே இயல்பாக இல்லாததால், நன்கு வளர்ந்த கொம்புகளை உடைய கலை மானாக்கி, அப்படிப்பட்ட கொம்புகளை கேர்னூனோஸுக்கும் அளித்து, மனித மிருகமாக வழிபட ஆரம்பித்திருக்கிறார்கள்.


இந்த கேர்னூனோஸ் தெய்வம் 'காத்து, கடுப்பி'லிருந்து காக்கும் ஒரு தெய்வமாக்க் கருதப்பட்டு, தாயத்தாக அணியும் வழக்கமும் ஏற்பட்டது.



இதன் கையில் இருக்கும் கங்கணம், நம் நாட்டில் புழங்கி வருவதுதான். கைக்குக் கங்கணம் கட்டும் வழக்கம் ராமாயண காலத்திலேயே இருந்திருக்கிறது. ராமன் – சீதை கல்யாணத்தில், திருமணத்துக்கு முன், கையில் கங்கணக் கயிறு கட்டியிருக்கிறார்கள்.


கங்கணம் என்பது ஒரு காப்பு. குழந்தைக்குக் காப்பிடுகிறோம்,



 

கருவுற்ற காலத்தில் வளை காப்பு என்றே ஒரு சடங்கு செய்கிறோம், அதில் கங்கணம் போன்ற காப்பு வளையலை இடுகிறோம். கருவுக்கும், கருவுற்ற பெண்ணுக்கும் எந்த கெடுதலும் வரக்கூடாது என்று இவ்வாறு செய்கிறோம். பெண்கள் வளையல் அணிவதே ஒரு காப்பு போல ஆரம்பித்ததோ என்றும் தோன்றுகிறது.


புதிய இடம், வனாந்தரமான இடம், மக்கள் புழக்கம் அதிகம் இல்லாத பாலை நிலம் போன்ற இடங்களில் மக்களுக்கு அடிக்கடி பயம் ஏற்படும், அதிலிருந்து தங்களைக் காத்துக் கொள்ள தாயத்து, காப்பு, கங்கணம் என்று பயன் படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள்.


ராஜஸ்தான் பாலைவனத்துக்கருகே இருக்கும் மொஹஞ்சதாரோவில் கண்டெடுக்கப்பட்ட  பெண் சிற்பத்தின் ஒரு கையில் மட்டும் வரிசையாக வளைகளை அடுக்கியிருப்பது, அப்படி ஏற்பட்ட ஒரு வழக்கமாக இருக்கலாம்.



இவளைப் போலவே இன்றும் அந்தப் பகுதியில் வாழும் பெண்கள் கை முழுவதும் வளைகளை அணிகிறார்கள்.


இப்படி வளை அணியும் வழக்கம் தமிழ் மக்களுக்குக் கிடையாது. இந்த ஒரு செய்தியே போதும், சிந்து சமவெளி மக்களுக்கும், தமிழ் மக்களுக்கும் தொடர்பில்லை என்று சொல்வதற்கு.


இங்கு நாம் ஆராய எடுத்துக் கொண்டது கேர்னூனோஸ் கையில் உள்ள கங்கணம். அதே அமைப்பில் தமிழ் மக்கள் சிலம்பு அணிந்திருக்கிறார்கள்.



சங்கத் தமிழ் மக்களுக்கிடையே சிலம்பு கழி நோன்பு என்னும் வழக்கமும் இருந்திருக்கிறது. திருமணம் ஆகும் வரை ஒரு பெண் பெற்றோர் இட்ட சிலம்பை அணிந்திருப்பாள். கன்னியான அவளுக்கு அது ஒரு காப்பு போன்றது. திருமணம் முடிந்த பிறகு, பிறந்த வீட்டில் சிலம்பு கழி நோன்பு செய்து, அந்தச் சிலம்பை நீக்கி விடுவார்கள். திருமணத்துக்குப் பிறகு கணவன் காப்பாகி விடுகிறான். திருமணமான பெண்ணுக்கு அந்த சிலம்பு முக்க்கியமான ஆபரணமாக இல்லாததால், கண்ணகி தனது சிலம்பை விற்கச் சம்மதிக்கிறாள்.


இதையெல்லாம் சொல்வதற்குக் காரணம், கங்கண அமைப்பில் கையிலும், காலிலும் அணியும் வழக்கம், மொஹஞ்சதாரோவிலும் இருந்திருக்கிறது, சங்க காலத்திலும் இருந்திருக்கிறது. மொஹஞ்சதாரோவுக்குப் பிற்பட்ட காலத்தில்தான் கேர்னூனோஸ் வழிபாடு தென்படுகிறது. அதன் கையில் இருக்கும் கங்கணமும் பாரதத்திலிருந்து பின்பற்றப்பட்ட பொருளாக இருக்கிறது என்பதைக் காட்டி, இதன் மூலம், மக்கள் பெயர்ச்சியும், கருத்துப் பெயர்ச்சியும், ஐரோப்பாவிலிருந்து வரவில்லை, இந்தியாவிலிருந்துதான் வெளியே சென்றிருக்கிறது என்பதையும் காட்டுகிறோம்.


கேர்னூனோஸின் மற்றொரு கையில் இருக்கும் பாம்பைப் பற்றி  வேறொரு இடத்தில் ஆராய்வோம். ஆயினும், பதஞ்சலி முனிவரைக் காட்டி நாம் சொன்னது போல தவ யோகத்தில் ஈடுபட்டவர்களுக்கும் பாம்புக்கும் தொடர்பு உண்டு என்பதை இங்கு நினைவில் கொள்வோம்.


இனி கேர்னூனோஸின் தலையில் காட்டப்பட்ட சக்கரம் என்னவாயிற்று என்று பார்ப்போம்.


சக்கரம் உருமாறின விதத்தை இந்தப் படத்தில் காணலாம்.


 

சக்கரத்துக்குள் ஒரு நக்ஷத்திரம், அதற்குள் கேர்னூனோஸ் உருவம் என்றும் மாறியிருக்கிறது.


2300 ஆண்டுகளுக்கு முன் ரோமானியர்கள் கெல்டிக் நாடுகளைத் தங்கள் ஆட்சிக்குக்கீழ் கொண்டு வந்தபோது, கெல்டிக் வழக்கங்களில் பல மாறுதல்களைக் கொண்டு வந்தார்கள். ரோமானியர்களால் ஒரேடியாக கெல்டிக் வழக்கங்களைப் பின்பற்றவும் பிடிக்கவில்லை. அவை பழமையானவை என்பதால் விடவும் முடியவில்லை. எகிப்து நாட்டு தீபெஸ் (THEBES) என்னும் இடத்தின் பழம் பெருமையை ஒட்டி, தங்கள் நாட்டிலும் ஒரு தீபெஸை நிர்மாணித்த அவர்கள் அங்கு இந்த கேர்னூனோஸுக்கு புது அமைப்பைக் கொடுத்தார்கள். அது இப்படி இருக்கிறது (படம்)



நாம் மேலே பார்த்த கேர்னூனோஸுக்கும், இந்த உருவத்துக்கும் சம்பந்தமில்லை, ஆனால் இந்த உருவத்தின் கீழே தீபஸ் மொழியில் கேர்னூனோஸ் என்று எழுதியிருக்கிறது. தலையில் கொம்புகள் போன்ற வடிவில் ஒரு சக்கரம். அதற்குள் நக்ஷத்திரம்.


குபேரனைப் போல இவர் காசுகளை அள்ளிக் கொடுக்கிறார். இந்த அமைப்பை ரோமானியர்கள் ஜூபிடர் என்னும் வியாழன் கிரக தேவனாகச்  சித்தரித்தனர். பாரத மரபில், வியாழன் தன காரகன் எனப்படுவான். இந்த உருவம் அதைச் சித்தரிக்கிறது.


பாரத மரபில் வியாழன் பிள்ளை பேற்றுக்குக் காரகனாவான். இந்தத் தெய்வமும் பிள்ளைச் செல்வத்துக்கான தெய்வம் என்று என்று ரோமானியர்கள் சொன்னார்கள். தவமிருந்து கிருஷ்ணன் ஜாம்பவதிக்குப் பிள்ளை பெற்றுத் தரவே, தவத்தின் மூலம் சிறந்த பிள்ளைகளைப் பெற முடியும் என்ற எண்ணம் ஐரோப்பாவில் பரவியிருக்க்கூடும். அதைத் தவக் கோலத்தின் பிரதிபலிப்பாக தோன்றிய கேர்னூனோஸுக்கு ஏற்றியிருக்கிறார்கள்.


தலையில் இருக்கும் சக்கரத்தின் அர்த்தம் என்னவென்று தெரியவில்லை போலும். அதனால் பருவச் சுழற்சி என்று சொல்லி விட்டார்கள். இன்றைக்கும் எந்த மேலை நாட்டு ஆராய்ச்சியாளராக இருந்தாலும், சக்கரம் அல்லது வட்ட வடிவ அமைப்பு என்றால், பருவச் சுழற்சி உட்பட என்னென்னவோ சொல்வார்கள். ஆனால் பாரத மரபில் தர்மச் சக்கரம், விஷ்ணுவின் சக்கரம் இருக்கிறது என்று சொல்ல அவர்களுக்கு வாய் வராது. அவர்களைப் பின்பற்றிப் பேசும் இந்தியர்களில் இந்தத் திராவிட ஆதரவாளர்கள் முக்கியமானவர்கள். எந்த ஒரு கருத்தும் பாரதத்திலிருந்துதான் உண்டானது என்பதை ஒத்துக் கொள்ள அவர்களுக்கு மனதும் கிடையாது. அறிவும் கிடையாது.


சக்கரம் மட்டுமல்ல, தலையில் இருக்கும் நக்ஷத்திரத்துக்கு வேத மரபில் சில விளக்கங்கள் இருக்கின்றன. அவற்றைப் பற்றிய அரைகுறை அறிவுடன் கேர்னூனோஸின் தலையில் நக்ஷத்திரத்தை அமைத்து விட்டார்கள். இந்த நக்ஷத்திரத்தைக் கிருஸ்துவம் காப்பி அடித்துக் கொண்டது.


ஆனால் தங்கள் செய்து வந்த ஆக்கிரமிப்பு ஆத்திரத்தில், அதுவரை மக்களிடையே நிலவி வந்த பழக்கங்களையும், சின்னங்களையும் கிருஸ்துவம் அழித்தது. கெல்டிக் மக்கள் தங்களுக்குப் பாதுகாப்பாக எண்ணிய கேர்னூனோஸை அழித்தது. அந்தத் தெய்வத்தை வணங்கிய மக்களை பில்லி சூனியக்காரர்கள் என்று சொல்லி அவர்களை ஈவு இரக்கமில்லாமல் அழித்தது.


கெல்டிக் மக்களிடையே உலவி வந்த அந்த தெய்வத்தை, சாத்தான் என்று அழைத்தது.


இந்த தெய்வத்தின் ஆரம்பக் கருத்தாக்கம் மொஹஞ்சதாரோவில் உண்டானது. மொஹஞ்சதாரோவில் காணப்படும் தவக்கோலச் சின்னமானது, மிகவும் பண்பட்ட ஒரு உயர்ந்த ஆன்மீகக் கருத்தின் உருவகமாகும். அதையெல்லாம் தேடிப் புரிந்து கொள்ள இடம் கொடுக்காத ஒரு மதம், மதம் பிடித்து, உலகின் தொன்மை எல்லாவற்றையும் அழிக்கும் அசுரனாகவே இந்தியாவில் நுழைந்தது. அதன் பிடியில் ஆடும் மிஷனரிகள் ஆரிய- திராவிடப் போரைக் 'கண்டுபிடித்து' வேத மதத்தை அழித்து, அதற்குப் பதிலாக, அழிவையே செய்து வந்த மதத்தை இங்கு விதைக்க வேலை செய்கிறார்கள். அதற்கு நீரீற்றுவதுதான் திராவிடப் பேச்சு.

இனியாவது தமிழர்கள் விழிக்கட்டும். மொஹஞ்சதாரோ காட்டும் ஆதாரத்தைக் கொண்டே அந்த விழிப்பைப் பெறட்டும்.


மொஹஞ்சதாரோ பசுபதி, கேர்னூனோஸ் ஆனார். அவரைச் சாத்தான் என்று கிருஸ்துவம் முத்திரை குத்தியது. இனி அவர் தலையில் ரோமானியர்கள் சூட்டிய நக்ஷத்திரம் என்னவாயிற்று, அதன் பின்னணியில் வேத மரபிலிருந்து எவை எவற்றைக் கிருஸ்துவம் களவாடியது என்பதை அடுத்த கட்டுரையில் காண்போம்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

2 கருத்துகள்:

  1. அப்பா! மீண்டும் தொடர்வதற்கு நன்றி. தங்கள் ராஜிவ் மல்ஹொத்ரா அவர்களை அறிவீர்கள் என்று நினைக்கிறேன். தங்கள் இருவரது ஆராய்ச்சியும் இணைந்தால் மேலும் பல முடிசுகள் அவிழவும், ஒவ்வொரு இந்தியனும் தனது பாரம்பரியம் சார்ந்த தனித்துவத்தை ( identity)யை உணரவும் வழி செய்யும் என நம்புகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காக்க வைத்ததற்கு மன்னிக்கவும்.

      ராஜீவ் மல்ஹோத்ராவை அறிவேன். எனது ஆங்கிலக் கட்டுரைகளை அவரது பார்வைக்கு அனுப்புவேன். அவரும் அவரது பேச்சுப் பதிவுகளை அனுப்புவார். ஆனால் இந்தத் தொடர் தமிழில் இருப்பதால், தமிழ் தெரிந்த ஐராவதம் மஹா தேவன் போன்றவர்களுக்கு மட்டுமே அனுப்புகிறேன். அவ்வபொழுது நேரம் கிடைக்கும் போது, இவற்றை ஆங்கிலத்தில் எழுதி அவருக்கும் மற்றவர்களுக்கும் அனுப்புகிறேன்.

      நீக்கு