வியாழன், 21 ஏப்ரல், 2011

49. மனு ஆண்ட திராவிட நாடு



மனு என்றால் மானவன், மனிதன், மானவ குலம் என்று
மனிதர்களது தோற்றத்திற்குக் காரணமானவன் என்று பொருள்.
நாம் இப்பொழுது பேசிக் கொண்டு வரும் மனு 7-ஆவது மனு ஆவான்.
அவனுக்கு முன், 6 முறை மனித குலம் நன்கு வளர்ந்து, வாழ்ந்து,
பிறகு ஊழிக் காலத்தில் பெருமளவு அழிந்திருக்கிறது.
வெள்ளத்தால் ஏற்படும் அந்த அழிவுக்குப் பிறகு,
எஞ்சி நின்ற மக்கள் மீண்டும் வாழ்கையைத் தொடங்கி,
நாளடைவில் பல்கிப் பெருகியிருக்கின்றனர்.
அவ்வாறு வாழ்ந்து, அழிந்து, மீண்டும் பெருகிய மக்கள் கூட்டம்,
7 ஆவது முறையாக வந்த வழியைச் சொல்வதுதான்
முந்தைய பதிவில் நாம் கண்ட மனுவின் தோற்றமாகும்.


தற்சமயம் பாரத தேசத்தில் காணப்படும் மக்களுக்கு முன்னோடியானவன்
7-ஆவது மனுவான ‘வைவஸ்வதன் ஆவான்.
அவன் வெள்ளத்தில் தப்பி, ஸரஸ்வதி நதி தீரத்தை அடைந்து,
புது வாழ்க்கையைத் தொடங்கினான்
என்பதை நாம் முன் பகுதியில் கண்டோம்.
அவன் தப்பி வந்த பகுதி
இன்றைக்கு அரபிக் கடலில் மூழ்கியுள்ள பகுதியாக
இருக்கக் கூடிய சாத்தியக் கூறுகளையும் கண்டோம்.
வெள்ளத்துக்கு முன் அவன் இருந்த நாடு திராவிட தேசம் என்பதே
நமக்குக் கிடைத்துள்ள ஒரு முக்கியக் குறிப்பாகும்.


அவ்வாறு கூறும் ஸ்ரீமத் பாகவதப் பகுதியை ஆராய்வோம்.

யோசௌ ஸத்யவ்ரதோ நாம ராஜரிஷி திராவிட ஈஸ்வர
ஞானம்யோதீத கல்பாந்தே, லேபே புருஷ சேவயா
ஸவை விவஸ்வத புத்ரோ, மனுர் ஆஸீத் இதி ஸ்ருதம்
த்வதஸ் தஸ்ய சுதாப்ரோக்தா இக்ஷ்வாகு ப்ரமுகா. (9-1.2&3)


இதன் பொருள் :-
ராஜ ரிஷியான ஸத்யவ்ரதன் என்றழைக்கப்பட்ட திராவிட தேசத்து அரசன்,
பரம புருஷனுக்குச் செய்த தொண்டின் காரணமாக,
முந்தின கல்பத்தின் முடிவில் ஞானம் பெற்றான்.
உண்மையில் அவன் விவஸ்வானின் மகனான மனு.
அவனுடைய மகனான இக்ஷ்வாகுவின் வழியில் வந்த மன்னர்கள்... “


விவஸ்வானின் மகனானதால் இந்த மனுவுக்கு, வைவஸ்வத மனு என்ற பெயர் வந்தது.

இந்த ஸ்லோகத்தின் மூலம் நாம் அறிந்து கொள்ளும் விவரங்கள் :-
  • மனித குல உற்பத்திக்கு இந்த மனு காரணமாவான் என்று சொன்னாலும், அவனுக்கு முன்னும் மனித குலம் இருந்திருக்கிறது.
  • இந்த மனுவுக்கு முந்தின காலக் கட்டத்தில் பல்லாயிரக் கணக்கான வருடங்களாக மக்கள் வாழ்ந்து வந்திருக்கிறார்கள். அந்தக் காலக் கட்டத்தின் முடிவு நேரிட்ட போது, அவர்களுள் தீரனாகவும், அரசனாகவும் இருந்தவன் வைவஸ்வதன்.
  • அவன் ஆண்ட நாடு திராவிட நாடு.
  • இந்தத் திராவிட நாட்டைக் கடல் கொண்டு விடவே, அவன் நாவாய் மூலமாக, மத்ஸ்யத்தின் துணை கொண்டு (மத்ஸ்யவதார அருளால்) ஸரஸ்வதி நதி தீரத்தை அடைந்திருக்கிறான்.
  • இவன் ஆண்ட திராவிட நாடு இன்று இல்லை!! அவன் வெள்ளத்திலிருந்து தப்பிய பிறகும் இல்லை. இதை நிச்சயமாகச் சொல்லலாம். ஏனென்றால், அவன் ஆண்ட அந்த நாடு கடலுக்குள் அமிழாமல் தப்பியிருந்தால், மீண்டும் அங்கு சென்று தன் ஆட்சியை நிலை நாட்டியிருப்பான் அல்லவா? அவன் ஆண்ட அந்த நாடு இருந்திருந்தது என்றால், 10 மகன்களோடு ஸரஸ்வதி நதி தீரத்தை ஆண்டு வந்தானே, அவர்களுள் ஒருவனாவது, அல்லது அவர்களது சந்ததியில் வந்தவர்களாவது, அதை மீட்டிருப்பார்கள் அல்லவா?
  • எனவே திராவிடம் என்று சொல்லப்பட்ட நாடு 14,000 ஆண்டுகளுக்கு முன்பே, முதல் ஊழிக் காலத்தில் கடலுக்குள் முழுகி விட்டது.
  • 14,000 ஆண்டுகளுக்கு முன் சோழர்கள் இல்லை, சேரர்கள் இல்லை. ஆனால் பாண்டியர்கள் மட்டும் எங்கோ தென் புலத்தில், பூமத்திய ரேகைக்குத் தெற்கில் இருந்தனர். அந்தப் பிரதேசத்தை மீனாட்சி அம்மையை முன்னிட்டு 11,000 ஆண்டுகளுக்கு முன் தொடங்கி அவர்கள் கௌரியர் என்ற சிறப்புப் பெயரில் ஆண்டிருக்கின்றனர். அதற்கும் முன் பாண்டிய குலமும், தமிழ் பேசும் மக்களும் அங்கு இருந்திருக்க வேண்டும். ஆனால் வைவஸ்வத மனு ஆண்ட திராவிட நாடு அங்கு இருக்கவில்லை. அதாவது திராவிட நாடும், தமிழர்கள் வாழ்ந்த நாடும் ஒன்றல்ல என்று தெரிகிறது.
  • அந்தத் திராவிட நாடு அரபிக் கடலில் இருந்திருந்தால்தான், வெள்ளத்தின் பொழுது ஸரஸ்வதி நதி வழியாக இமய மலை வரை மனுவும், அவனைச் சேர்ந்தவர்களும் சென்றிருக்க முடியும்.
  • அந்த மனு தொடங்கி, மக்கள் பெருக்கம் ஆரம்பித்திருக்க வேண்டும். அவர்கள் தற்போதைய இந்தியா முழுவதும் பரவி இருக்கிறார்கள். மனுவின் மகனான இக்ஷ்வாகுவின் பரம்பரையில் வந்தவர்கள் சோழர்கள் என்று முன்பே பார்த்தோம். இப்படிப் பரவியதன் மூலம், 7-ஆவது மனுவின் ஆதிக்கம், அதாவது வைவஸ்வத மன்வந்திரம் உண்டானது என்று சொல்லப்படுகிறது.


14,000 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த திராவிட நாட்டைக் கடல் கொண்டு விட்டது
என்பதே மனுவின் சரித்திரம் சொல்லும் செய்தி.
அப்படியென்றால், திராவிடம் என்றும்,
திராவிட மக்கள் என்றும் மஹாபாரதத்திலும், பிற நூல்களிலும் சொல்லப்பட்டுள்ளதே,
அத்ற்கு என்ன அர்த்தம்?
இதற்குப் பதில் தேட, அப்படிச் சொல்லப்படும் குறிப்புகளையும் ஆராய்வோம்.


பாகவதம் போல பழமை வாய்ந்த (எந்தக் காலம் என்று சொல்ல முடியாத) பத்ம புராணம் என்று ஒரு புராணம் இருக்கிறது.
அதன் 74-ஆவது அத்தியாயத்தில்,
திராவிட நாட்டில், பாலாறு நதிக் கரையில் காஞ்சி என்னும் நகரம் உள்ளது
என்று சொல்லப்பட்டுள்ளது.

இந்த நூலைப் போல யோகினி தந்திரம்என்னும் நூலின் 1-17 ஆம் பகுதியில்,
திராவிட நாட்டில் உள்ள காஞ்சியில் சக்தி குமாரன் என்னும் வணிகன் வாழ்ந்தான்
என்று அவனது கதையைப் பற்றிச் சொல்லப்படுகிறது.

மேலும் கி.பி.5 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சாந்திவர்மன் என்னும்
கடம்ப நாட்டு மன்னனால் பொறிக்கப்பட்டு,
தலகுண்டா என்னும் இடத்தில் (கர்நாடகாவில் உள்ள ஷிமோகா மாநிலத்தில் உள்ளது)
கிடைத்துள்ள ஒரு கல்வெட்டில்
திராவிட நாட்டின் தலைநகரமான காஞ்சி என்று ஒரு குறிப்பு காணப்படுகிறது.
இவற்றின் அடிப்படையில், காஞ்சிபுரம் இருக்கும் பகுதி திராவிட தேசம் என்றாகிறது.
அதுவே மனு ஆண்ட தேசமாக இருக்கலாமே என்று நினைக்கலாம்.
இங்கு ஒன்றைக் கவனிக்க வேண்டும்.




 மனு ஆண்ட பகுதியில் கடல் வெள்ளம் வந்து அழிந்தது.
அதிலிருந்து தப்பி அவன் இமய மலை வரை சென்றிருக்கிறான் என்பதே
அவனைப் பற்றிப் பல புராணங்களிலும்  சொல்லப்படுகிறது.
காஞ்சிபுரமோ, அதை ஒட்டிய பகுதிகளுக்கோ கடலாபத்து வரவில்லை.
அதிலும், பனியுகம் முடியும் தறுவாயில்,
14,000 ஆண்டுகளுக்கு முன் காஞ்சிபுரமும், அதன் கிழக்கில் உள்ள வங்கக் கடலும்,
வெள்ள ஆபத்தைச் சந்திக்கவில்லை.
கடலாபத்தைச் சந்தித்திருக்கலாம் என்று ஒரு ஊகம் கொண்டாலும்,
அங்கிருந்து இமய மலை வரை கடல் நீர் அடித்துச் செல்ல வாய்ப்பு இல்லையே.
சுற்றிலும், நிலப்பகுதிகள் தானே சூழ்ந்திருந்தது?
மனு ஆண்ட திராவிட நாடு காஞ்சிபுரம் அல்ல என்பதற்கு இதைத்தவிர வேறு சான்று தேவையில்லை.
எனினும், பிற சான்றுகளையும் பார்ப்போம்.



மேலே கூறப்பட்ட தலகுண்டா கல்வெட்டில்,
கடம்பர் ஆட்சியை நிறுவிய மயூரஸர்மன் என்னும் அரசன் (கி.பி. 4 ஆம் நூற்றாண்டு)
வேதம் கற்பதற்காகக் காஞ்சிபுரம் சென்றான் என்று எழுதப்பட்டுள்ளது.
அவன் சென்ற காலக் கட்டத்தில் காஞ்சிபுரம் பல்லவர் வசம் இருந்தது.
அவர்களுக்கு முன் அது சோழர் வசம் இருந்தது என்பதை
பெரும்பாணாற்றுப்படை என்னும் சங்க நூல் மூலம் அறிகிறோம்.
வேதம் படிக்க மக்களை வரவழைக்கும் பட்டினமாக,
காஞ்சிபுரம் சங்க காலத்திலேயே இருந்திருக்க வேண்டும்.


ஆரியர்களுக்கு உரித்தானது என்று
இன்றைய திராவிடப் பதர்கள் சொல்லும் வேதக் கல்வியை
திராவிட நாட்டின் தலைநகரம் என்று சொல்லப்பட்ட காஞ்சி மாநகரம்
வரையாது வழங்கியிருக்கிறது என்றால்,
திராவிடம் என்பது ஆரியத்துக்கு எதிரானது என்று இவர்கள் சொல்லும் கருத்துக்கு
சம்மட்டி அடி கொடுப்பது போலாகிறது.


திராவிடமோ, ஆரியமோ, இரண்டுமே
வேதத்துக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறது என்பது தெரிகிறது.
மேலும் மனு ஆண்ட தேசம் திராவிடம் என்றால்,
மனு நீதியும், வேதமும்
ஆரியக் கொள்கைகள் என்றோ,
திராவிடத்துக்குப் புறம்பானவை என்றோ எப்படிச் சொல்ல முடியும்? 


காஞ்சி இருந்த தேசம், திராவிட தேசம்
என்று சொல்லப்பட்ட விவரத்தைப் பார்ப்போம்.
அதைப் பல்லவர்களும்,
அவர்களுக்கு முன் சோழர்களும் ஆண்டிருக்கின்றனர்.
மனுவின் காலக்கட்டத்தில் சோழ வம்சமே உண்டாகவில்லை.
மனுவின் மகன் இக்ஷ்வாகு வந்து,
அவனுக்குப் பின்னால், உசீனரனும், சிபியும் வந்து,
அவர்களுக்கும் பின்னால்தான் காஞ்சிக்குத் தென் பகுதியில்
சோழ நாடே உண்டானது.
அதைபோலவே சேர நாடும்.
7000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ராமனுக்கு முன் இருந்த பரசுராமரால், தோற்றுவிக்கப்பட்டது
என்று புராணங்கள் கூறுகின்றன.
சோழர்களும், சேரர்களும் வாழ்ந்த, ஆண்ட பகுதி தமிழ் நாடு என்றால்,
அப்படிப்பட்ட பகுதிகள் மனுவின் காலத்தில் இருக்கவில்லை.
எனவே தமிழர் பகுதியிலிருந்து மனு வந்தான் என்று சொல்வதற்கும் சாத்தியமில்லை.
ஆயினும் காஞ்சிபுரம் இருக்கும் நாட்டுக்கு திராவிட நாடு என்ற பெயர் ஏன் வந்தது என்ற கேள்வி எழுகிறது.
அப்படிப் பெயர் வந்தது பின்னாளில் ஏற்பட்ட ஒரு சம்பவமாக இருக்க வேண்டும்.



இதை நிரூபிக்கும் வண்ணம் ஒரு விவரத்தை நச்சினார்க்கினியர் கூறுகிறார்.
தமிழ்ச் சங்க நூலான பெரும்பாணாற்றுப் படையில் கச்சிஎன்று காஞ்சிபுரத்தைப் பற்றிய குறிப்பு வருகிறது.
அதற்கு உரை எழுதிய நச்சினார்க்கினியர்,
காஞ்சி நகரம் இருந்த நாடு தொண்டை மண்டலம் என்றும்,
அந்த நாடு உண்டான விவரத்தையும் கூறுகிறார். அவர் கூறுவது வருமாறு:-


“நாகப்பட்டினத்துச் சோழன் பிலாத்துவாரத்தால் நாக லோகத்தே சென்று,
நாக கன்னிகையைப் புணர்ந்த காலத்து
அவள் யான் பெற்ற புதல்வனை என் செய்வேன் என்ற பொழுது,
தொண்டையை (தொண்டை கோவைக் கொடி / தொண்டங்காய்க் கொடி) அடையாளமாகக் கட்டிக்
கடலில் விட அவன் வந்து கரையேறின்,
அவற்கு யான் அரசுரிமையை எய்துவித்து நாடாட்சி கொடுப்பன் என்று கூற,
அவளும் புதல்வனை வரவிடத் திரை தருதலில் திரையன் என்று பெயர் பெற்ற கதை கூறினார்.


பெரும்பாணாற்றுப் படையின் பாட்டுடைத்தலைவன் “இளந்திரையன்என்ப்படுவான்.
திரையன் என்னும் அவனது குலப் பெயர் வந்த காரணத்தை இதன் மூலம் கூறியது மட்டுமல்லாமல்,
வேறொரு முக்கிய செய்தியையும் நச்சினார்க்கினியர் தருகிறார்.
தொண்டைக் கொடியால் சுற்றப்பட்ட அந்தக் குழந்தை
கரை ஒதுங்கின இடத்தை அவனுக்குக் கொடுத்து,
அதற்குத் தொண்டை மண்டலம் என்ற பெயரிட்டு,
அதற்கு அவனை அரசனாக்கினான்.
தொண்டைக் கொடியால் அடையாளம் காட்டப்பட்ட அவன் ‘ஆதொண்டைஎன்று அழைக்கப்பட்டான்.



நாளடைவில் அங்கு உருவாக்கப்பட்ட நகரமே கச்சி என்னும் காஞ்சியாகும்.
எனவே காஞ்சிபுரம் இருக்கும் நாடு, சோழர்கள் காலத்தில் ஏற்படுத்தப்பட்டது.
அதற்கு முன்னால் அங்கு மனித நாகரிகம் வளரவில்லை.
அந்த நாட்டுக்கு முதலில் இட்ட பெயர் ‘தொண்டை மண்டலம் அல்லது ‘தொண்டை நாடு என்பதே.


எனவே காஞ்சி இருக்கும் இடம் திராவிடம் என்று சொல்லப்பட்டது,
ஒரிஜினல் திராவிடமல்ல என்று தெளிவோம்.  
சோழர்கள் காலத்துக்கும் பின்னால்தான் அந்தப் பெயர் வந்திருக்கிறது.
அந்தப் பகுதியில் மனுவும், அவனைச் சேர்ந்தவர்களும் வாழவில்லை.
அந்தப் பகுதியை சேர, சோழ பாண்டியர்களும் ஆளவில்லை.
அந்தப் பகுதியில் சோழகுலத் தோன்றலான ஆதொண்டை வரும் வரை மக்களே இல்லை என்றும் தெளிவோம்.


மக்களில்லாத நாட்டை வைத்துக் கொண்டு மன்னன் என்ன செய்வான்?
அங்குதான் ஒரு ஒரு ரகசியம் புதைந்திருக்கிறது.
தனக்குக் கொடுக்கப்பட்ட நாட்டில் சில மக்களை, ஆதொண்டை குடி அமர்த்தினான்
என்று நச்சினார்க்கினியர் சொல்கிறார்.
அவர்கள் வேளிர்கள்!
அவர்களுக்கும் திராவிடத்துக்கும் சம்பந்தம் இருக்கவே,
அந்த மக்கள் குடியமர்ந்த பகுதி திராவிடம் என்றானது.
மேலும் விவரங்களைத் தெரிந்து கொள்ள
இந்தத் திராவிட ஆராய்ச்சியை நாம் இன்னும் தொடர வேண்டும்.



திராவிடம் என்னும் சொல் எங்கெல்லாம் வருகிறது என்று பார்த்தால்,
மனு ஸ்ம்ருதியிலும் இருக்கிறது,
மஹாபாரதத்திலும் இருக்கிறது,
கி.பி. 11 ஆம் நூற்றாண்டில் கல்ஹணர் என்னும் காஷ்மீர நாட்டவரால் எழுதப்பட்ட
‘ராஜ தரங்கிணி என்னும் நூலிலும் இருக்கிறது.
இவற்றுக்கெல்லாம் முத்தாய்ப்பாக, வராஹ மிஹிரர் என்னும் ஜோதிட மேதை
2000 ஆண்டுகளுக்கு முன் எழுதிய ‘ப்ருஹத் சம்ஹிதை என்னும் நூலில்
பாரதத்தின் நிலப் பகுதிகளை விவரிக்கும் பகுதியிலும் இருக்கிறது.
இவை எல்லாவற்றையும் பார்ப்போம்.


முதலில் மஹாபாரதம் கூறும் குறிப்புகளைப் பார்ர்ப்போம்.
மஹாபாரதத்தில், ‘திராவிடர்கள் என்ற மக்கள் பற்றிய குறிப்புகளை முன்பே கண்டோம். (பகுதி 38)
அவர்களைத் தமிழர்கள் என்று சொல்லவில்லை என்றும்,
சேர, சோழ, பாண்டியர்களைச் சொல்லி,
திராவிடர்கள், ஆந்திரர்கள் என்று பிற மக்களையும் சொல்லியுள்ளார்கள் என்றும் பார்த்தோம்.
திராவிடம் என்னும் நிலப்பகுதியைப் பற்றிய குறிப்புகளைத் தேடினால்,
மஹாபாரதத்தில் வன பர்வத்திலும், அஸ்வமேத பர்வத்திலும்,
திராவிடம் என்னும் நிலப் பகுதியைச் சொல்லும் குறிப்புகள் உள்ளன.


வன பர்வத்தில், பாண்டவர்கள் தீர்த்த யாத்திரை என்று
புண்ணிய நீராட்டுத் துறைகளுக்குச் சென்ற விவரங்கள்
114 முதல் 118 அத்தியாயங்கள் வரை வருகின்றன.
இவை எல்லாம் கடற்கரைத் துறைகள் ஆகும்.

முதலில் கங்கை ஆறு கடலில் கலக்கும் இடத்தில் புனித நீராடுகிறார்கள்.
அங்கிருந்து வைதரணி ஆறானது கடலில் கலக்கும் துறையில் நீராடுகிறார்கள்.
இந்த ஆறு ‘பைதரணிஎன்று இன்றும் ஒரிசா மாநிலத்தில் ஓடுகிறது.
அங்கு நீராடி விட்டு மஹேந்திரகிரிக்குச் சென்று இரவைக் கழித்தார்கள் சொல்லப்பட்டுள்ளது.


மஹேந்திரகிரி என்பதை நாம் முன்னமே பார்த்தோம்.
தமிழ் நாட்டின் தென் பகுதியில், அந்தப் பெயரில் ஒரு மலை உள்ளது என்றும்,
அதைப் பற்றிய குறிப்புகள் ராமாயணத்திலும் உள்ளன என்றும்,
அங்கிருந்துதான் அனுமன், இலங்கைக்குத் தாவிச் சென்றான் என்றும் கண்டோம்.

பாண்டவர்கள் ஒரிசாவிலிருந்த வைதரணி ஆற்றில் நீராடிவிட்டு,
இரவில் தங்க மஹேந்திரகிரிக்கு வந்திருந்தார்கள் என்று சொல்லப்படுவதால்,
வைதரணி ஆற்றுக்குப் பக்கத்தில் ஒரு மஹேந்திரகிரி இருந்தது என்றும்,
இந்த மஹேந்திரகிரி வேறு, தமிழ் நாட்டு மஹேந்திர கிரி வேறு என்றும் தெரிகிறது.

ஒரிசாவில் வைதரைணி ஆற்றுக்கு அருகே மஹேந்திரம் என்னும் பெயரில் ஒரு மலை இருக்கிறது.
அங்குதான் இவர்கள் தங்கி இருக்க வேண்டும்.
அங்கு பரசுராமரது வரலாறு அவர்களுக்குச் சொல்லப்படுகிறது.
பரசுராமரும், பாண்டவர்களுக்கு அங்கு காட்சி அளித்தார் என்று மஹாபாரதம் கூறுகிறது.
பரசுராமரது வாழ்வின் சம்பவங்கள் நடந்த பகுதி அங்கிருக்க வேண்டும் என்று தெரிகிறது.


மஹேந்திரகிரியிலிருந்து புறப்பட்டு,
பாண்டவர்கள் கோதாவரி நதிக்கு வந்தார்கள்.
தமிழ் நாட்டு மஹேந்திரகிரியாக இருந்தால்
இது சாத்தியப்படாது.
தெற்குப் பகுதிக்கு வந்து, மீண்டும் வடக்கு நோக்கி கோதாவரிக்குச் செல்ல வேண்டும்.
ஆனால் இந்தத் தீர்த்த யாத்திரையில், அடுத்தடுத்துச் செல்லும் இடங்கள் சொல்லப்படுகின்றன.
அதனால் அவை ஒரு சுற்றில் முடிக்கும் படி இருக்கும்.
குறுக்கும், நெடுக்குமாக செல்லும்படி அமையாது.
எனவே ஒரிசாவில் இருந்த மஹேந்திர கிரியிலிருந்து, கோதாவரிக் கரைக்கு வந்திருக்கின்றனர்
என்று தெரிகிறது.
மேலும் கோதாவரி கடலில் கலக்கும் இடம் என்று குறிப்பாக மஹாபாரதம் சொல்கிறது.


இதற்குப் பிறகுதான் நமக்கு சுவாரசியமான விவரம் வருகிறது.
கோதவரியிலிருந்து, அவர்கள் தென் பகுதிக் கடலுக்கு வந்தனர் என்கிறது பாரதம்.
அங்கு திராவிட நாட்டின் கடற்கரைப் பகுதிக்கு அவர்கள் வந்தார்கள்.

திராவிட நாட்டின்கண் இருந்த கடல் துறைக்கு அவர்கள் வந்தார்கள்.
அங்கு அகஸ்தியரது பெயரால் அமைந்த புண்ணிய க்ஷேத்திரத்துக்குச் சென்றார்கள்.
அந்தப் பகுதியில் இருந்த பெண்களுக்கு முக்கியமான புண்ணிய க்ஷேத்திரங்களுக்குச் சென்றார்கள்.
அந்தப் பகுதியில் அர்ஜுனன் ஒரு முறை வில் வித்தையில் சாஹசம் செய்தான்.
அங்கிருந்த புண்ணீய தீர்த்தங்களில் கிருஷ்ணனுடன், பாண்டவர்கள் நீராடி, தான தருமங்களைச் செய்தார்கள்.
அங்கிருந்து கடலோரமாக இருந்த புண்ணிய தீர்த்தங்கள் ஒவ்வொன்றிலும், நீராடி விட்டு,
ஸூர்ப்பாரகம் என்னும் இடத்தை அடைந்தார்கள்.
அங்கும் புனித நீராடி விட்டு,
பிரபாஸ க்ஷேத்திரத்தை அடைந்து, தங்கள் தீர்த்த யாத்திரையை முடித்தார்கள் என்கிறது மஹாபாரதம்.



கோதாவரி ஆறு கிழக்குக் கடலான வங்கக் கடலில் கலக்கிறது.
அதற்குப் பிறகு அவர்கள் செல்லும் இடம் திராவிட நாடு என்கிறது.
இந்தத் திராவிட நாடு கிழக்குப் பகுதியில்,
அதாவது தற்போதைய தமிழகத்தின் கிழக்குக் கரையில் இருந்திருக்க முடியாது.
ஏனெனில், அந்தக் கடல் தீர்த்தம் அகஸ்தியரது பெயருடன் சம்பந்தப்பட்ட இடம் என்று சொல்லப்பட்டுள்ளது.
அகஸ்தியருடன் சம்பந்தபட்டுள்ள இடங்கள் மேற்குக் கடல் பகுதியில் உள்ளன.
அவை மொத்தம் இரண்டு.
ஒன்று, தற்போதைய கர்நாடக மாநிலத்தில் குடகு மலையில், காவிரி நதி ஆரம்பிக்கும் இடம்.
மற்றொன்று திருநெல்வேலியில் உள்ள அகத்திய மலை.


முதலாவது கடலுக்கு அருகில் இருந்தாலும், அங்கு காவிரி கடலில் கலப்பதில்லை.
பிரம்மகிரி என்னும் மலையில் காவேரி ஆரம்பிக்கிறது.
காவேரி தோன்றும் அந்த இடத்தில் அகஸ்தியர் வாழ்ந்தார்.
அங்கு அவரது கமண்டலத்தில் வெளிப்பட்ட காவேரியை,
புகார் நகர் வரை அவர் அழைத்துச் சென்றார் என்று தமிழ் நூல்கள் கூறுகின்றன.
எனவே அகஸ்தியர் வாழ்ந்த அந்தத் தலைக் காவேரி ஸ்தானம்
ஒரு புண்ணிய பூமியாகக் கருதப்படுகிறது.
அந்த மலை அரபிக் கடலை ஒட்டி அமைந்துள்ளது.
இந்த மலை அரபிக் கடலை ஒட்டி செங்குத்தாக எழும்புகிறது.
அங்குக் கடலை ஒட்டி புண்ணிய தீர்த்தம் கிடையாது.


இரண்டாவது இடமான அகத்திய மலை அல்லது பொதிகை மலை,
கடல் துறையில் இல்லை.
எனவே பாண்டவர்கள் சென்ற
அகஸ்தியர் பெயரைக் கொண்ட கடல் தீர்த்தம் இவை அல்ல
என்பது தெளிவாகிறது.


அகஸ்தியருக்கு உரித்தான புண்ணிய ஸ்தலத்துக்குப் பாண்டவர்கள் சென்றனர்
என்று மஹாபாரதம் கூறுவது,
காவேரியின் உற்பத்தி ஸ்தானமாக இருக்க வேண்டும்.
தீர்த்த யாத்திரையில் புண்ணிய நதிகளில் அவர்கள் குளித்து வரவே,
காவேரியிலும் அவர்கள் குளித்திருக்க வேண்டும்.
அருகில் இருந்த பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கு
அவர்கள் சென்றார்கள் என்பது,
மைசூராக இருக்கலாம்.
மைசூரின் பழைய பெயர் மஹிஷூர்.
மஹிஷனது ஊர் அது.
அவனைப் பெண் தெய்வமான சாமுண்டேஸ்வரி வெல்லவே
அங்கு அவளுக்குக் கோவில் உண்டு.
பாண்டவர்கள் அங்கு சென்றிருக்கலாம்.


மேலும் மஹாபாரதப் போர் முடிந்தவுடன் அர்ஜுனன்,
தென் கடல் பகுதிக்கு வந்து,
திராவிடர்கள், ஆந்திரர்கள், மஹிஷர்கள், மற்றும் கொல்வ மலை வாழ் வீரர்களுடன்
போர் புரிந்து வெற்றி கொண்டான் என்று
மஹாபாரதம் 14- 83 கூறுகிறது.
இதன் மூலம், இந்தப் பகுதிகள் கடலை ஒட்டியும்,
ஒன்றுக்கொன்று அருகிலும் இருந்திருக்க வேண்டும் என்று தெரிகிறது.
பாண்டவர்களுக்கு,
பாண்டியர்கள்,, சோழர்கள், சேரர்கள் ஆகியோருடன் பகைமை இல்லை.
உதியன் சேரன் பெருஞ்சோறு படைத்ததையும்,
பாண்டியன் போரில் கலந்து கொண்டதையும் முன்பே பார்த்தோம்..
இந்த மூவேந்தர்களை, தமிழ் அரசர்கள் என்று அழைத்ததில்லை.
அவரவர் நாட்டின் பெயராலே அழைக்கப்பட்டிருக்கின்றனர்.
அவர்கள் நீங்கலான இடங்களில்
திராவிடர்களும், மஹிஷர்களும், ஆந்திரர்களும், கொல்வர்களும்
இருந்திருக்கின்றனர்.
இவர்களுள் கொல்வம் என்று மஹாபாரதம் அழைப்பது
கொல்லமாக இருக்க வேண்டும்.


பகுதி 41 இல் பார்த்தோம் பாண்டவர்கள் அஞ்ஞாத வாசத்தின் போது,
அவர்களைத் தேடிக் கொண்டு
துரியோதனன் கொல்லத்தில் உள்ள மலநாட்டுக்கு வந்தான்.
அந்நாட்டு மலை வாழ் வேடுவர்கள் அவனை உபசரித்தனர் என்றும் பார்த்தோம்.
அவர்கள் பாண்டவர் பக்கம் நிற்கவில்லை.
இதன் காரணமாக,
போர் முடிந்ததும், தங்களுக்கு எதிராக இருந்தவர்களை அடக்க வேண்டி,
அர்ஜுனன் தென் கடல் பகுதிக்கு வந்து
திராவிடர், மஹிஷர், ஆந்திரர், கொல்வர்களைப் போரிட்டு வென்றிருக்கிறான்.
திராவிடர் மீதும் அவனுக்குக் கோபம் இருந்திருக்கிறது.
மஹாபாரதப் போரில் திராவிடர்கள் இரண்டு பக்கமுமே போரிடிருக்கிறார்கள்.

ஆதாரம் :-
  • “அர்ஜுனன் திராவிடர்களைத் தன் படையில் இணைத்துக் கொண்டான் (5-22)
  • திராவிடர்கள், குந்தலர்கள், ஆந்திரர்கள், தலசரர்கள், ஷுசுபர்கள், வேணுபர்கள் பாண்டவர்களுக்கு ஆதரவாகப் போரிட்டனர் (5 -140)
  • திராவிடர்கள், பாண்டியர்கள், சோழர்கள், கேரளர்கள், ஆந்திரர்கள் ஆகியோர் திருஷ்டத்யும்னன், சிகண்டி, சாத்யகிக்கு ஆதரவாகப் போரிட்டனர்(8-12)
  • திராவிடர்கள், அந்தகர்கள், நிஷாதர்கள் ஆகிய காலாட்படையினர், சாத்யகியின் கட்டளைப்படி கர்ணனை நோக்கிப் போரிடச் சென்றனர்.(8-49)


அதே சமயம், திராவிடர்கள், ஆந்திரர்கள், காஞ்சி ஆகியோர் கௌரவர்களுக்கு ஆதரவாகப் போரிட்டனர் என்று
மஹாபாரதம் 5- 161 & 162 கூறுகிறது.
இங்கு காஞ்சி வீரர்கள், திராவிடர்களில் சேர்க்கப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
5000 ஆண்டுகளுக்கு முன் அதாவது மஹாபாரதக் காலத்தில்,
காஞ்சி மக்கள் திராவிடர் என்று கருதப்படவில்லை என்பதை இது காட்டுகிறது.
மேலும், திராவிடர்கள் இரு புறங்களிலும் போரிடவே,
திராவிடம் என்பது ஒரு நாடாக இல்லை.
சிறு சிறு ராஜ்ஜியங்களாகப் பல திராவிட நாடுகள் இருந்திருக்க வேண்டும் என்றும் தெரிகிறது.
இப்படிப்பட்ட பிரிவுகள் சேர, சோழ, பாண்டியர்கள் விஷயத்தில் இல்லை என்பது கவனிக்கத்தக்கது.
இதன் காரணமாக,
ஆங்காங்கே திராவிடர் என்ற பெயரில் மக்கள் இருந்திருக்கக் கூடிய சாத்தியம் வருகிறது.


ஆனால் இவர்களது நாடுகள் இருந்த இடம் என்பது
கடல் பகுதிகளில்,
அதிலும் மேற்குக் கடல் பகுதிகளில் இருந்திருக்கிறது.  

ஏனெனில், திராவிட நாட்டுப் பகுதிகளில் கடலில் இருந்த புண்ணிய தீர்த்தங்களில் நாராடி விட்டு,
அப்படியே கரையோரமாகச் சென்று சூர்ப்பாரகத்தைப் பாண்டவர்கள் அடைந்தார்கள் என்று பாரதம் சொல்கிறது.
இது மஹாராஷ்டிரத்தின் மேற்குக் கரையில் உள்ள சோபாரா என்பதாகும்.
இங்கு பரசுராமர் வாழ்ந்தார் என்று சொல்லப்படுகிறது.
இதை அடுத்து, பாண்டவர்கள் கரையேரமாகச் சென்று,
குஜராத் கரையில் உள்ள பிரபாஸ க்ஷேத்திரத்தை அடைந்து
தங்கள் தீர்த்த யாத்திரயை முடித்துக் கொண்டார்கள் என்று
மஹாபாரதம் கூறுகிறது.
பிரபாஸம் என்பது குஜராத்தில் உள்ள ‘சோமநாதபுரம்
இது அரபிக் கடலோரம் உள்ளது.


பாண்டவர்கள் சென்ற வழியைப் பின்பற்றினால்,
திராவிட நாடு என்பது மேற்குக் கரையில் இருந்திருக்கிறது.
அங்கு கடல் சார்ந்த தீர்த்தங்கள் இருந்திருக்கின்றன.
அந்தத் திராவிட நாட்டிலிருந்து மேற்குக் கரையோரமாக
மஹாராஷ்டிரம், குஜராத் என்று துவாரகை வரை செல்ல முடியும்.
இந்த இடங்கள் எல்லாம்,
ஊழிகளின் போது, கடலுக்குள் முழுகினவை.
அந்த மேற்குக் கடலில் இருந்த மனு வாழ்ந்த திராவிடத்தின் பகுதிகள்
லட்சச்தீவாக இருக்க வேண்டும்.



இந்தப் படத்தில் பாண்டவர்கள் தீர்த்த யாத்திரை சென்ற இடங்களைக் காணலாம்.

1-       கங்கையின் முகத்துவாரம்.
2-       வைதரணி ஆற்றுத்துறை
3-       கோதாவரி முகத்துவாரம்
(இதற்குப் பிறகு வருவது திராவிட நாட்டுப் பகுதிகள்)
4-       பிரம்ம கிரி காவேரி உற்பத்தி ஸ்தானம்
5-       அகத்தி (லட்சத்தீவு)
6-       கோகர்ணம்
7-       சூர்ப்பாரகம் (சோபாரா)
8-       பிரபாஸ க்ஷேத்திரம் (சோமநாதபுரம்)

அந்த நோக்கில் பாண்டவர்கள் சென்ற இடங்களை மறு பரிசீலனை செய்வோம்.

அகஸ்தியர் பெயரில் இருந்த இடந்த்துக்கு அவர்கள் சென்றார்கல் என்கிறது பாரதம்.
அகஸ்தியர் பெயரை ஒட்டி ஓரிடம் அரபிக் கடலில் உள்ளது.
அது லட்சத் தீவுகளில் ஒன்றான ‘அகத்தி (பகுதி 41) என்னும் பகுதியாகும்.
அந்த இடம் ஒரு காலத்தில் பரந்து விரிந்து இருந்திருக்க வேண்டும்.
பாண்டவர்கள் தங்கள் தீர்த்த யாத்திரையில் குளித்த இடம்
இந்த அகத்தியாகவும் இருக்கலாம்.




அகத்தி, கல்பேணி போன்ற இடங்களில் 3,500 வருடங்களுக்கு முன்
மக்கள் வாழ்ந்திருந்த சுவடுகள் உள்ளன
என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
3500 ஆண்டுகளுக்கு முன் கடைசி ஊழி வந்தது
என்பதை நினைவுப் படுத்திக் கொள்வோம்.
அந்த ஊழியில், குமரிமலை முழுதும் கடலுக்குள் சென்று விட,
கவாடபுரமும் மூழ்கிவிட,
பாண்டியர்கள், தற்போதைய மதுரைக்குக் குடியேறினார்கள்.
எனவே, 3500 வருடங்களுக்கு முன்,
லட்சத்தீவுப் பகுதிகள் பலவும், பெரிதாகவும்,
மக்கள் வாழத்தக்கதாகவும் இருந்திருக்க் வேண்டும்.
5000 வருடங்களுக்கு முன்னால் பாண்டவர்கள் அங்கு சென்ற போது
பல இடங்கள் புண்ணிய தீர்த்தங்களாக இருந்திருக்க வேண்டும்.
அந்தப் பகுதிகளில் 14,000 ஆண்டுகளுக்கு முன்
மனு முதலானோர் வாழ்ந்தார்கள்
என்பது உண்மையாக இருக்கும்பட்சத்தில்,
அவை அனைத்துமே புண்ணியத்தலங்களாகக் கருதப்பட்டிருக்க வேண்டும்.



லட்சத்தீவின் தலைநகரமான கவராட்டி என்பது காவடித்தீவு என்று அழைக்கப்பட்டது என்று பார்த்தோம்.
அதைக் கடம்ப மன்னன் வென்றான் என்றும் பார்த்தோம்.
தற்போதைய கொங்கண், கோவா என்பதே
அன்று கடம்ப நாடாக இருந்திருக்க வேண்டும் என்று ஆரய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்.
அங்கு வாழ்ந்த கடம்பர்கள் வேளிர்கள் ஆவர்!!
ஆதொண்டை, தொண்டை மண்டலத்தில் குடியமர்த்தின மக்களும் வேளிர்களே
என்பதை இங்கு நினைவு படுத்திக் கொள்வோம்.



இன்றைய கொண்கண் (கொங்கண், கோவா) பகுதி கடம்ப நாடு எனப்பட்டது.
தலகுண்டா கல்வெட்டில் 3-ஆம் நூற்றாண்டுக்குப் பின்னால் வந்த கடம்பர்களைப் பற்றி அறிந்தோம்.
அவர்களுக்கும் முன்னால், 2000 ஆண்டுகளுக்கு முன்
அங்கு இருந்த கடம்ப மன்னர்களைப் பற்றி சங்க நூல்கள் பேசுகின்றன.
சிறந்த தமிழ்ச் சொல் என்று நாம் நினைக்கும் ‘நன்னன் என்னும் பெயர் கொண்ட மன்னன்
கடம்ப நாட்டை ஆண்டு வந்தான். (இன்றைய கொங்கண், கோவா)
அந்த நாடு விந்திய மலைக்குத் தெற்கே இருந்தது.
அந்த நாட்டுக்குக் ‘கொண்கானம்என்று பெயர்.
பொன்னிறமுள்ள வாகைப் பூக்கள் கொண்ட கானகம் நிரம்பிய ஊர் அவனது ஊர்.
அவனைக் ‘கொண்கான நன்னன்என்றே நற்றிணை 361 கூறுகிறது.
கொண்கானம் என்ற அடை மொழியால் அந்தக் கடம்ப நாடு
கொங்கண் என்னும் பெயர் பெற்றிருக்கக்கூடும்.
நன்னனது செல்வத்தைக் கண்டு தமிழ் மன்னர்கள் பொறுத்ததில்லை.
பொதுவாகவே எந்த வேளிர் அரசனையும் தமிழ் மன்னர்கள் பொறுத்ததில்லை.



களங்காய்க் கண்ணி நார் முடிச் சேரல் என்னும் சேர அரசன்
அவனை (நன்னனை) அழித்தான்.
அவன் நாட்டுக் கடம்ப மரத்தை அழித்தான்.
நன்னன் மட்டுமல்ல, பொதுவாகவே கடம்பர்களைச் சேர மன்னர்கள் எதிரிகளாகப் பார்த்தனர்.


கடம்பர்களுக்கு மேற்குக் கடலில் இருந்த லட்சத்தீவுகள் மீது ஒரு கண் இருந்தது.
அங்கு வந்து அந்த இடஙகளை ஆக்கிரமித்துக் கொண்டார்கள்.
ஆனால் அந்தப் பகுதியோ சேர நாட்டுக்கு நேர் மேற்குப் பகுதியாகும்.
சேரர்கள் அங்கு கடம்பர்கள் இருப்பதை விரும்பவில்லை.
இமய வரம்பன் நெடுஞ்சேரலாதன் கடல் வழியாகச் சென்று கடம்பர்களை அழித்தான்
என்று பதிற்றுப்பத்து 88 கூறுகிறது.


கடம்பர்கள் வாழ்ந்த கொங்கண் என்பது
அரபிக் கரையில் இருந்த பெருமை வாய்ந்த தலமாகும்.
அதற்குப் பழைய பெயர் பாணாவாலி என்பது.
7000 வருடங்களுக்கு முன் வாழ்ந்த பரசுராமர்,
கடலுள் மூழ்கி இருந்த அந்தப் பகுதியை,
ஒரு பாணத்தை வீசி மீட்டெடுத்தார் என்பது புராணங்கள் சொல்வது.
அதனால் பாணாவாலி என்ற பெயர் பெற்றது.
வேளிர்கள் (கடம்பர்கள்) காலத்தில், கொண்கானம் என்ற பெயர் பெற்றிருக்க வேண்டும்.
அங்கு கங்காவல்லி, மயூரா என்னும்
பழம் பெருமை வாய்ந்த நதிகள் கடலில் கலக்கின்றன.




பரசுராமர் கடலை மீட்டெடுப்பதும்,  வருண பகவானும்.


இந்த இடம் மட்டுமல்ல,
சூர்ப்பாரகம் தொடங்கி, கன்யாகுமரி வரை
மேற்குக் கரையில் கடலில் மூழுகி இருந்த இடங்களைப்
பரசுராமர் மீட்டார்.
அதனால் கேரளத்துக்கு பரசுராம க்ஷேத்திரம் என்ற பெயர் வந்தது.
புராணங்கள் தரும் இந்தத் தகவலின் படி,
சேர நாடு என்பதும், சேர மன்னர் பரம்பரையும்,
7000 முதல் 8000 ஆயிரங்களுக்கு முன்தான்
உண்டாகி இருக்க வேண்டும் (பரசுராமரின் காலம்)



சேர நாட்டுக்கு வடக்காக வந்தால்,
துளு எனப்படும் இடம்,
கோகர்ணம் எனப்படும் இடம்,
பாணாவாலி (கொங்கண்) எனப்படும் இடம் என்று
சூர்ப்பாரகத்தையும் சேர்த்து,
பரசுராமர் கடலிலிருந்து மீட்டார் என்று பல புராணங்களிலும் வருகிறது.
முக்கியத்துவம் வாய்ந்த இடங்களாக இருந்திருந்தால்தான்
இப்படி மீட்டிருக்க வேண்டும்.
160 காத தூரம், கடலோரப் பகுதிகளை பரசுராமர் மீட்டார்
என்று புராணங்கள் சொல்கின்றன.
அதாவது 1700 முதல் 1800 கி.மீ தூரம் வரை
மேற்குக் கடலில் மீட்கப்பட்டது என்பது
பரசுராமர் கடைசி காலத்தில் வாழ்ந்ததாகச் சொல்லப்படும் சூர்ப்பாரகம் முதல்,
கேரளம் வரை இது பொருந்தும்.



துவாரகை நகரை மீண்டும் மீண்டும் மீட்டெடுத்துள்ளார்கள்
என்று முந்தின பகுதியில் பார்த்தோம்.
வெள்ளத்தில் தப்பிய மனு முதலானவர்களுக்கு
அது வாயில் கதவைத் திறந்தாற்போல இருந்ததால் அப்படி முக்கியத்துவம் பெற்றது.
அது போல அரபிக் கடல் பகுதியில், 14,000 ஆண்டுகளுக்கு முன் மனு முதலானோர்
சப்த ரிஷிகளுடன் சிரேஷ்டமாக வாழ்ந்த பகுதிகளில்
எவை எல்லாம் மீட்க முடிந்ததோ அவற்றை எல்லாம் மீட்டிருக்கின்றனர்.


பரசுராமர் மீட்டதாகச் சொல்லப்பட்ட காலக்கட்டம்
7000 வருடங்களுக்கு முன்னால்.
ராமர் வாழ்ந்தது 7000 ஆண்டுகளுக்கு முன் என்பதால்,
அவரது காலக்கடட்த்தில் முடிந்த பரசுராமரது காலமும்
அதுவாகத்தான் இருக்க முடியும். 
அந்த காலக்கட்டத்தில் தென்னன் நாட்டை 2-ஆம் ஊழி தாக்கி,
கவாடபுரத்துக்குப் பாண்டியர்கள் வந்தார்கள் என்பது நினைவிருக்கும்.
இந்தியக் கடலில் ஊழி ஏற்பட்ட அதன் விளைவால்,
அரபிக் கடலில், கடல் நீரானது உள்வாங்கி இருக்க வேண்டும்.
அதன் பயனாக, 14,000 ஆண்டுகளுக்கு முன் வந்த ஊழியில்
கடலில் மறைந்த பகுதிகள் வெளிப்பட்டிருக்க வேண்டும்.


அப்படி வெளிப்பட்ட பகுதிகள்,
துளு, கொங்கண், கோகர்ணம், சூர்ப்பாரகம் போன்றவை.
இவற்றுடன் லட்சத்தீவில் பல இடங்களும்,
இன்றைக்கு இருப்பதை விட கடல் மட்டத்துக்கு மேலாகத்
தென் பட்டிருக்க வேண்டும்.
மனு வாழ்ந்த அந்தப் பகுதிகள்
தீர்த்த யாத்திரைத் தலங்களாக முக்கியத்துவம் பெற்றிருக்க வேண்டும்.
அவற்றுக்கு பாண்டவர்கள் சென்றனர் என்பதே மஹாபாரத்ம் கூறுவது.



இன்றைக்கு நாம் அறிந்த சரித்திரத்தில்,
லட்சத்தீவுகளில் அகத்தி பகுதிக்கு அகத்தியருடன் தொடர்பு கிடையாது.
ஆனால் அந்தக் கடல் பகுதியில் அகத்தியருக்கு முக்கியமான இடம் இருந்திருக்க சாத்தியம் இருக்கிறது.
அகத்தியர் என்பவர் ஒருவராக இருக்கலாம்,
அல்லது அவரது வம்சாவளியில் வந்தவர்கள் அனைவருமே அகத்தியர் என்ற பெயருடன் இருந்திருக்கலாம்.
ஆனால், சப்த ரிஷிகளுடன் மனுவானவன், தப்பித்தான் என்றால்,
அங்கு அகஸ்தியரும் ஒரு ரிஷியாக இருந்திருக்க வேண்டும்.
அவர் வாழ்ந்த பகுதியே அவரது பெயரால் அகத்தி
என்று அழைக்கப்பட்டிருக்க வேண்டும்.
பெருமளவும் கடல் கொண்ட அந்தப் பகுதிகள்
ஒரு காலத்தில் மனுவும், ரிஷிகளும் வாழ்ந்த பகுதிகள்
என்று புண்ணிய இடங்களாகக் கருதப்பட்டிருக்க வேண்டும்.



அகஸ்தியருக்குப் புனிதமான தீர்த்தங்களுக்குப் பிறகு,
பாண்டவர்கள் பெண்களுக்குப் புனிதமான இடங்களுக்குச் சென்றனர் என்று மஹாபாரதம் கூறுகிறது.
இதனுடன் பொருந்தும் வகையில்,
அகத்தி அருகில் ‘கல்பேணிஎன்னும் தீவில்
பெண் தெய்வச் சிலை ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சிலை 3500 வருடங்கள் பழமையானதாக இருக்கலாம்
என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்.
இதில் ஒரு பெண்
கை கூப்பிக் கொண்டு ஒரு மகரத்தின் மேல் நிற்கிறாள்.
அவளுக்கு ஒரு புறம் ஒரு குடமும்,
மறு புறம், ‘T’ வடிவில் ஒரு அமைப்பும் உள்ளது.
அது ஏர்ப்படை போல இருக்கிறது என்கிறார்கள்.
இந்தச் சிலையின் தலை உடைந்திருக்கிறது.


பொதுவாக மகரம் என்பது கடல் தெய்வமான வருணனின் வாகனமாகும்.


அது போல கங்கா தேவிக்கும் மகரமே வாகனமாகும்.



கங்காதேவி கிழக்குக் கடலில் கலக்கிறாள்.
ஆனால் மேற்குக் கடலில் உள்ள கல்பேணியில்
அவளுக்குக் கோவில் இருந்தது என்றால் அது வியப்புக்குரியது.
மனு வாழ்ந்த காலத்திலிருந்து இருந்த பெண் தெய்வ வழக்கம்,
கங்கை தோன்றிய பிறகு தொடர்ந்திருக்கலாம்.


லட்சத்தீவுப் பகுதிகள் மலைத்தொடராக இருந்தாலும்
குளங்கள், நீர்த்தேக்கங்கள் இருக்க முடியும்.
ஆறுகளும் இருந்திருக்கலாம்.
லட்சத்தீவுகளில் ஒன்றான செரியம் என்னும் இடத்தில்
இன்று யாரும் வசிக்கவில்லை.
ஆனால் அங்கு ஒரு குளம் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. 
(பெண் தெய்வச் சிலை காணப்படும் கல்பேணிக்கு அருகில்,
குளம் காணாப்படும் செரியம் உள்ளதை 
இந்தப் படத்தில் காணலாம். இவை ஒரு சமயம் ஒருங்கிணந்த பகுதியாக இருந்திருக்க வேண்டும் என்பதை இது காட்டுகிறது.)



மலைமுகடுகளாக இன்று தெரியும் இந்தப் பகுதிகள்,
பரவலான பகுதிகளாக இருந்த காலக்கட்டத்தில்,
பல குளங்கள் இருந்திருக்கக் கூடிய சாத்தியத்தை இது காட்டுகிறது.


மனுவின் கதையில் குளத்தில் மீனை விட்டான் என்று வருகிறது,
எனவே அவன் வாழ்ந்த அந்த திராவிட நாட்டில்
குளங்கள் இருந்திருக்க வேண்டும்.
நீர் ஆதாரத்துக்குத் தெய்வமாக
அந்தப் பெண் தெய்வம் இருந்திருக்க வேண்டும்.
பொதுவாகவே நீர் நிலை, நதிகள் போன்றவற்றுக்குத் தெய்வமாகப்
பெண் தெய்வங்களைச் சொல்வார்கள்.
கடல் தெய்வமான வருணனுக்கு மகரம் வாகனம் என்பது போல
இந்தப் பெண் தெய்வத்துக்கு மகரம் வாகனமாக உண்டாக்கி இருக்க வேண்டும்.


பின்னாளில் மனுவின் வம்சத்தினர் (பாகீரதன்)
கங்கை ஆற்றைக் கொண்டு வந்த பிறகு,
வழி வழியாக இருந்த நீர் தெய்வமான பெண் தெய்வத்தைக்
கங்கை நதிக்கு உருவகித்துக் கொடுத்திருக்கலாம்.


இதில் இருக்கிற மற்றொரு ஆச்சரியமான ஒற்றுமை என்னவென்றால்,
பூமிக்குள் இருக்கும் நிலத்தடி நீரை எப்படி கண்டுபிடிப்பது
என்று இரண்டு பேர் மட்டுமே சொல்லியுள்ளனர்.
அவர்களுள் ஒருவர் ஸரஸ்வதர் என்னும் ரிஷி.
மற்றொருவர் மனு!!


வராஹமிஹிரர் தான் எழுதியுள்ள ப்ருஹத் சம்ஹிதையில்
‘ஜலநாடி என்று நிலத்தடி நீரைக் கண்டு பிடிப்பதைச் சொல்கையில்,
இவர்கள் இருவரது கருத்துக்களைத்தான் 100 க்கும் மேற்பட்ட ஸ்லோகங்களில் சொல்லியுள்ளார். (அத்தியாயம் 54)
நிலத்தடி நீரையே நம்பி வாழும் நிலையில் பல காலம் இருந்திருந்தால்தான்
இந்த நிலத்தடி நீர் சாஸ்திரத்தை அவர்கள் உருவாக்கியிருக்க முடியும்.


அவர்கள் வாழ்ந்த காலக்கட்டத்தில் பனி யுகம் நடை பெற்றுக் கொண்டிருந்தது.
கடல் மட்டம் மிகக் குறைவாக இருந்தது.
 மழை வளம் இருந்திருக்கவில்லை.
நிலத்தடி நீரைத் தேடி குளம் போன்றவை வெட்டியிருப்பார்கள்.
அத்துடன் உழவும் செய்து வந்திருக்கின்றனர்.
எல்லா பயிர்களின் விதைகளையும் அவர்கள் சேகரித்து எடுத்து வந்தார்கள் என்பதிலிருந்து இது தெரிகிறது.
நீர்த் தெய்வமான கங்கை போன்ற அமைப்பிலும், உழு கருவியுடனும் காணப்படும் சிலை அமைப்பு,
தொன்று தொட்டுவந்த வழக்கத்தின் காரணமாக ஏற்பட்டிருக்க வேண்டும்.



லட்சத்தீவுப் பகுதியில் தீவிர ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படவேண்டும்.
அந்தப் பகுதியும்,
மேற்குக் கடலில் மீட்கப்பட்ட பகுதிகளும் திராவிட நாடுகளாக இருந்திருக்க வேண்டும்.
சங்க நூல்களில் சொல்லப்படும் நன்னன்
போன்ற கடம்பர்கள் மீட்டெடுத்த பகுதியில் வாழ்ந்திருக்கின்றனர்.
அவர்கள் தமிழர்கள் அல்லர்.
அவர்கள் வேளிர்கள் எனப்பட்டனர்.
ஆனால் அவர்கள் தமிழ் பேசி இருக்கின்றனர்.
லட்சத்தீவுப் பகுதின் மீது அவர்களுக்கு ஆர்வம் இருந்திருக்கிறது.
அதைத் தங்கள் வசமாக்கிக் கொள்ள முயன்றிருக்கிறார்கள்.


அது போல ஆதொண்டை காஞ்சியை ஸ்தாபித்தபின்
அங்கு வேளிர்களைக் குடி அமர்த்தியிருக்கிறான்.
அந்த நாட்டின் மீதும் கடம்பர்களுக்கு ஈர்ப்பு இருந்திருக்கிறது.
அந்தக் காஞ்சி மக்களும் தமிழ் பேசினர்.
இந்த வேளிர்களுக்கும் திராவிடத்துக்கும் தொடர்பு இருக்கிறதா?
அதைத் தெரிந்து கொள்ளும் முன்
இன்னும் பிற விவரங்களை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

முதலில் திராவிடம் என்பது மேற்குக் கரையோரப் பகுதிகளில்தான் இருந்தது என்பதை சந்தேகமில்லாமல் உறுதிப் படுத்த வேண்டும். 


படத்தில் வட்டத்துக்குள் இருக்கும் பகுதிகள் வாழத்தகுந்த நிலப்பகுதிகளாக இருந்திருக்ககூடியவை.
14,000 வருடங்களுக்கு முந்தின ஊழியில் இவை எல்லாம் பாதிக்கப்பட்ட இடங்கள்.
இங்கிருந்துதான் மனு,  ஸரஸ்வதி நதியை அடைந்திருக்கிறான்.
இந்தப் பகுதிகளுக்குத்தான்
பாண்டவர்கள் திராவிட நாட்டுத் தீர்த்த யாத்திரை வந்திருக்கிறார்கள்.


இந்தப் பகுதிகளின் திராவிடத் தொடர்பை மேலும் நிலை நாட்ட
காஷ்மீர நாட்டு கல்ஹணர் எழுதியுள்ள பஞ்ச திராவிடம்
என்னும் பகுதிகளை அடுத்தக் கட்டுரையில் ஆராய்வோம்.


லட்சத்தீவு ஆராய்ச்சி பற்றிய கட்டுரை இங்கே:-



20 கருத்துகள்:

  1. அன்புள்ள ஜெயஸ்ரீ அவர்களே,

    சமீபத்தில் எனது குடும்பத்துடன் கன்னியாகுமரி சென்றிருந்தேன். அப்பொழுது நானும் எனது அக்காவும் உங்களைப் பற்றித்தான் பேசிக்கொண்டிருந்தோம். அங்கே இருந்து தெற்கு நோக்கி பார்த்து கவாடபுறத்தைப் பற்றியும், தென் மதுரையைப் பற்றியும் பேசிக்கொண்டிருந்தோம். மேலும் இந்த ஜன்மத்தில் இதை தெரிந்து கொண்டு அதைப் பற்றி பேசுவதால் நாங்களே ஒரு வேளை தென்னன் தேசத்தில் பிறந்து வாழ்ந்து இருப்போமோ என்று கூட பேசிக்கொண்டோம். மொத்தத்தில் இந்த முறை குமரி சென்ற பொழுது, ஒரு வித்தியாசமான அனுபவத்தை உணர்ந்தோம். அதற்கு உங்களுக்கு நன்றி தெரிவித்துகே கொள்கிறோம்.

    மேலும் நான் பிறந்த ஊர் நீங்கள் குறிப்பிடும் பொதிகை மலையடிவாரத்தில் தாமிரபரணிக் கரையோரதில்தான் இருக்கிறது. இடையிடையே இந்த ஊரும் உங்கள் ஆராய்ச்சியில் வருவதால், நாங்கள் மேலும் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

    அன்புடன்

    சிவா

    பதிலளிநீக்கு
  2. அன்புள்ள சிவா அவர்களே.
    உங்கள் கருத்துரை நெஞ்சைத் தொடுவதாக உள்ளது. மிக்க நன்றி.

    குமரி முனையிலிருந்து பெரும் பாறைகளாகக் கடலுக்குள் தெரிகின்றனவே, அவை ஒரு காலத்தில் மேடிட்டு இருந்து எத்தனை மக்களை வாழ வைத்ததோ?
    அன்று தட்டுத்தடுமாறிக் கரைஏறி வந்த மக்கள் ஜல சமாதியாகி விட்ட, தாங்கள் வாழ்ந்த இடங்களை ஏக்கத்துடன் எத்தனை தலைமுறைகள் பார்த்திருப்பார்கள் என்றெல்லாம் நானும் பல முறை எண்ணியதுண்டு.

    அந்தப் பகுதியில் கடலில் நெடுந்தூரம் சென்றும், தங்கள் வலை கடலடியில் எங்கோ சிக்கிக் கொள்கின்றன என்றும், கடலடியில் ஏதோ அமைப்புகள் இருக்கின்றன என்றும் மீனவர்கள் சொல்வதாக, ஆழ்கடல் ஆராய்ச்சி நிபுணர், ஸ்டீஃபன் ஹான்காக் அவர்கள் சொல்கிறார். அந்தப் பகுதியில் கடலாராய்ச்சி நடக்கவில்லை என்பது வருந்தத்தக்கது.

    நம்மைச் சுற்றியுள்ள மூன்று கடல்களில், பழைய சரித்திரத்தின் அடையாளங்கள் இருக்கின்றன. அவற்றை உறுதி செய்யும் வண்ணம் நமது வடமொழி, தெம்மொழி (தமிழ்) நூல்கள் இருக்கின்றன. இத்தனை இருந்தும் இந்தியர்கள் ஏன் இவற்றில் ஆர்வம் காட்டாமல் இருக்கிறார்கள்? இந்தியர்கள் தானே இவற்றை வெளிக் கொணர வேண்டும் என்று ஆரியப் படையெடுப்பு என்பது பொய் என்று நிரூபித்துள்ள டேவிட் ஃப்ராலே அவர்கள் சொல்லியுள்ளார்.

    ஆனால் அரசுக்கு அக்கறை இல்லையே.
    இந்த ஆராய்ச்சி காட்டும் விவரங்களில் இந்து மதத்தின் வீச்சும், தொன்மையும் இருக்கிறது. இந்து விரோத சக்திகள் ஆட்சியில் இருக்கும் வரை இவற்றை வெளிக் கொணர எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டார்கள்.

    உங்களது தாமிரபரணித் தொடர்பைப் பற்றி :-
    பல தலை முறைகளாக உங்கள் குடும்பம் அந்தப் பகுதியில் இருந்தது என்றால், நீங்கள் கொங்கு என்னும் பெயர்த் தொடர்புடையவராக இருந்தால், தாமிரபரணிக் கரையுடன் உங்கள் தொடர்பு 3500 வருடங்கள் வரைச் செல்லக் கூடும்.
    அதற்கு முன் உங்கள் மூதாதையர் துவாரகையிலும், அதற்கும் முன் கங்கைக் கரையிலும், அதற்கும் முன், நாம் இப்பொழுது அலசிக் கொண்டிருக்கும் மனுவுடனும், அதற்கும் முன் அரபிக் கடல் வழியாகத் தெற்குப் பகுதிக்கும் என, தென்னன் ஆண்டதற்கும் முன்னால் செல்கிறது.
    இந்தியாவின் பெரும்பான்மை மக்கள் மிக மிகத் தொன்மை வாய்ந்தவர்கள்.ஆண் வாரிசும், சமூகக் கட்டுத்திட்டமும் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக இருக்கவே, தொடர்பு அறுகாமல் சென்றிருக்கிறது. மரபணு ஆராய்ச்சி பற்றிய கட்டுரைகள் இடும் பொழுது அதிகம் தெரிந்து கொள்ளலாம்.

    பதிலளிநீக்கு
  3. அன்புள்ள ஜெயஸ்ரீ அவர்களே,

    தாமிரபரணிக் கரையின் தொன்மத்தை விளக்கியது சிலிர்ப்பாக உள்ளது. ஆனால் நீங்கள் சொல்வது போல் நாங்கள் கொங்கு பெயர் தொடர்பு கொண்டவர்கள் அல்ல. எங்கள் வம்சத்தின் தொடர்பு இன்னும் சுவாரஸ்யமானது. நாங்கள் தொண்டை மண்டல சைவ முதலியார் வகுப்பை சேர்ந்தவர்கள். எங்களுடைய பூர்விகம் இப்பொழுது நீங்கள் அலசும் காஞ்சிபுரம் என்று எனது அப்பா சொன்னதுண்டு. அதனால் நீங்கள் இப்பொழுது எழுதிக் கொண்டிருக்கும் கட்டுரையும் மிகவும் சுவாரசியமாக உள்ளது.

    மேலும் எழுதவும்.

    அன்புடன்

    சிவா

    பதிலளிநீக்கு
  4. அன்புள்ள ஜெயஸ்ரீ அவர்களுக்கு ,
    வணக்கம். நான் உங்களுடைய கட்டுரைகளை பல மாதங்களாக படித்து வருகிறேன். மிகவும் அருமையாக உள்ளது. நானும் சிவாவும் தினமும் உங்க கட்டுரைகளை பற்றி தான் பேசிக்கொண்டே இருப்போம்.மேலும் நிறைய விசயங்களை நீங்கள் எழுத தென்னாடுடைய சிவன் உங்களுக்கு எல்லா வழி வகைகளும் காட்டுவராக.உங்களுடைய கருத்துரையில் உள்ள 'கொங்கு என்னும் பெயர் தொடர்பு உடையவராக 'என்பதன் அர்த்தம் எதை குறிக்கிறது?நன்றி .இப்படிக்கு ,சு.சுதா,பாபநாசம், திருநெல்வேலி மாவட்டம்.

    பதிலளிநீக்கு
  5. மிக்க நன்றி சுதா அவர்களே.
    கொங்கு வேளிர் அல்லது கொங்கு வேளாளர் என்பவர்களுக்கு இந்தத் தொடர்பு செல்கிறது.

    பதிலளிநீக்கு
  6. dear mam, நான் சில மதங்களாக உங்கள் கட்டுரைகளை படித்து வருகிறேன் அருமையான தொடர்.வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  7. இதில் “நாவா” என்றால் படகு என்று சொல்லியிருகிரிர்கள், கிறிஸ்தவ மதத்தில் வரும் “நோவா” கதையும் மனுவின் கதை போல் உள்ளதே!!!!

    பதிலளிநீக்கு
  8. கவி அவர்களே, ’ராமன் விளைவு’ கட்டுரை படியுங்கள். பாரதத்திலிருந்து வெளியில் சென்றவர்கள் கொண்டு சென்ற நினைவுகள் அவை. மேலும், இனி வரப்போகும் ஒரு கட்டுரையில், ஒரு பிரிவினர் அரேபியா வழி சென்ற சாத்தியம் சொல்லப்படும். அவர்கள் குடியேறிய நாடு ‘பார்ஸ்வா” - இது பெர்சியாவின் பழைய பெயர். இன்றைக்கு இரான் என்ப்படுகிறது. பார்ஸ்வா என்றால் ’பக்கம்’- பார்ஸ்வ நாடி என்பது போல இடது பக்கம் சென்றவர்கள். பெர்சியாவும் பழைய பாரதத்தின் ஒரு பகுதியே. இந்தத் தொடரில் அந்த ஆதாரங்கள் எற்கெனெவே கொடுக்கப்பட்டு விட்டன. ஆனால் பார்ஸ்வத்தில் இருப்பவர்கள் ஏற்றுக் கொள்ளப்படத்தக்கவர்கள் அல்ல. அதனால்தான் சரஸ்வதிக்கு மேற்கே வேத மதத்தினர் பரவவில்லை. அந்த விவரங்களை இனி வரும் கட்டுரைகளில் காணலாம்.

    பதிலளிநீக்கு
  9. //இதில் ஒரு பெண்
    கை கூப்பிக் கொண்டு ஒரு மகரத்தின் மேல் நிற்கிறாள்.//


    இந்தப் படத்தில் பெண் மாதிரியே இல்லையே?மீசை வேறு தெரிகிறதே?
    தயவு செய்து தெளிவு படுத்தவும்.
    ஸாரநாதன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது பெண் உருவம் தான், இதை விக்கிபீடியாவில் கண்டேன்.

      http://en.wikipedia.org/wiki/Talk:Ganges/Archive_5

      நீக்கு
  10. தங்களின் கட்டுரைகளை ஆர்வத்துடன் படித்து வருகிறேன்.
    சிறு வயதிலிருந்து புராண இதிகாசங்களை விரும்பிப் படித்ததினாலும் வரலாறு தமிழ் சைவம் ஆகியவற்றின் மீதான
    ஆர்வத்தினால் நான் அறிந்த செய்திகள் தங்கள் கட்டுரைகளைப் படிக்க மிக உதவியாக இருந்தன.
    தமிழ் மீதான இணைய தேடல்களில் முதலில் திராவிட கருத்துக்கள் தான் என்னை ஈர்த்தது. அவ்வளவு கொட்டிக்
    கிடக்கின்றது. ஆயினும் தொடர்ந்த தன்னாய்வில் ஆரிய திராவிட பிரிவு ஒரு மாயை என்பதை கொஞ்சம் கொஞ்சமாக
    மனம் எண்ணத் தொடங்கிற்று. அத்தகைய வேளையில் தங்களுடைய இந்த வலைத்தலம் என் இணைய வலையில் சிக்கியது!
    ஏற்கனவே நானறிந்திருந்த என் மனதிலிருந்த பல செய்திகளைத் தாங்கள் கூறியதே என்னை வியப்பிற்கு ஆளாக்கியது.
    எனக்குத் தெரியாத பல செய்திகளையும் தாங்கள் கூறியுள்ளீர்கள். திராவிடம் நாத்திகம் பேசி வடமொழியை இகழ்ந்து
    புராண இதிகாசங்களை மறந்தவர் தங்கள் கட்டுரைகளை சரியாக பின் தொடர காலம் பிடிக்கும். எனக்கு அந்த நிலைமை வரவில்லை :)

    திருக்குற்றாலக் குறவஞ்சியில் 'தென்னாரிய நாடு' வருவதைப் பற்றி தங்களுக்கு குறிப்பு சொன்ன வாசகன் என்று என்னை
    அறிமுகப் படுத்திக் கொண்டால் தங்களுக்கு இன்னும் சரியாக நான் பரிச்சயமானவன் ஆவேன் என்று நினைக்கிறேன். :)

    1. *** கொங்கு வேளிர் அல்லது கொங்கு வேளாளர் பற்றிய கருத்துரையைக் கண்டேன்.
    அவர்களுக்கும் தாமிரபரணிக்கும் என்ன தொடர்பு என்று அறிந்துகொள்ள விரும்புகிறேன். ***
    கொங்கு வேளாளர்களின் கூட்டப் பெயர்கள் சிந்து சமவெளி வட இந்தியப் பகுதிகளின் ஊர்ப்பெயர்களில் இன்றும் உள்ளதாக
    இணையம் வாயிலாக அறிகிறேன்.
    கம்பரை ஆதரித்தவர் கொங்க வேளாள பண்ணை கூட்டத்தைச் சேர்த்த சடையப்ப வள்ளல்.
    ஆயிரம் பாடலுக்கு ஒரு பாடல் அவரைப் போற்றி கம்பர் பாடியுள்ளார்.
    அதில் ஒன்று இராமருக்கு முடி சூட்டிய சிறப்பு மிக்க பண்ணை கூட்டத்தில்
    பிறந்தவர் சடையப்ப வள்ளல் என்று கம்பர் பாடியுள்ளதாக அறிய வருகிறேன்.
    (பண்ணை என்பது கொங்க வேளாளர் கோத்திரத்தில்/கூட்டத்தில் ஒன்று).
    மூவேந்தருக்கும் கொள்வினை கொடுப்பினை, முடி சூட்டும் உரிமைகளை வேளிர் பெற்றிருந்தமையும் ஒப்ப நோக்குமாறு உள்ளது.
    சேர மரபினர் இன்றும் கொங்க வேளாளர்களின் ஒரு பாகமாக இருப்பதாக அறிகிறேன்.
    வேளிர்கள் அகத்தியருடன் கண்ணனின் துவாரகையிலிருந்து தென்னாடு வந்ததாகவும் இலக்கியத்தில் குறிப்புகள் உண்டு.

    இதுபற்றிய தங்களின் பதிலையும் கருத்துக்களையும் மேலதிக செய்திகளையும் அறிய ஆர்வமாயுள்ளேன்! :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தென்னாரிய நாடு குறித்து தகவல் கொடுத்தவர் நீங்கள்தான் என்றறிய மகிழ்ச்சி. நன்றி. உங்கள் கருத்துரை ஒன்றை நீக்கி விட்டீர்கள் போலிருக்கிறது. அது என்ன கருத்து என்று தெரியவில்லை. வேலைப் பளு காரணமாக உடனடியாகக் கருத்துக்களைப் படித்து பதில் எழுத முடியவில்லை. மன்னிக்கவும்.

      சிந்து சமவெளி நாகரிகம் என்பதே post- Mahabharta அதாவது மஹாபாரத காலத்துக்கு அடுத்த காலக்கட்டம் ஆகும். எனது இந்தக் கட்டுரையைப் படிக்கவும்:
      http://jayasreesaranathan.blogspot.in/2010/07/ivc-was-post-mahabharata-culture-world.html

      மஹாபாரதக் காலத்துக்கு செப்பேடு ஆதாரம் இருக்கிறது. அக்கட்டுரையை இங்கே படிக்கவும்:-http://jayasreesaranathan.blogspot.in/2011/11/inscriptional-evidence-for-mahabharata.html

      இதன் மூலம் என்ன தெரிகிறது என்றால், சிந்து சமவெளி காலம், மஹாபாரதத்தை ஒட்டி அமைந்துள்ளது என்பதே. இந்தியாவுக்குள்ளேயே போக்கு வரத்து அப்பொழுதே இருந்து வந்திருக்கிறது என்பதற்கு பாண்டிய அரசன் ஒருவன் பாரதப் போரில் கலந்து கொண்டதும், கிருஷ்ணன் தமிழ்ச் சங்கத்தில் கலந்து கொண்டதும், தமிழ்ப் பெண்ணான நப்பின்னையை மணந்து கொண்டதும் ஆகும். நப்பின்னை பற்றிய எனது கட்டுரை :- http://www.tamilhindu.com/2009/12/who-is-nappinnai/

      இந்தப் போக்குவரத்தில், பல சமயங்களில் மக்கள் வடக்கிலிருந்து தமிழ் நாட்டுக்கு வந்திருக்கிறார்கள். அதிலும் 3 ஆம் ஊழிக்குப் பிறகு, துவாரகையிலிருந்து 3500 ஆண்டுகளுக்கு முன் தமிழகத்துக்கு வர ஆரம்பித்த வருகை, 1000 வருடங்களுக்கு முன் தொடர்ந்த்திருக்கிறது. சென்ற 1000 வருடங்களாகத்தான் இருப்பிடம், ஜாதி போன்றவை வலுப் பெற்று மாறுதல் அடையாமல் இருந்திருக்கின்றன. கொங்கு நாட்டிலும் அப்படிப்பட்ட வரவு வடக்கு, வட மேற்கு இந்தியா, குஜராத், மஹார்ஷ்டிர கடலோரப் பகுதிகள் ஆகிய இடங்களிலிருந்து வந்திருக்கிறது. காங்கேயக் காளை, சிந்து சமவெளி சீல்களில் உள்ள காளையை ஒத்திருக்கிறது. மரபணு ஆராய்ச்சியின் படி சிந்து சமவெளிக் காளையே பழமையானது. கங்கேயக் காளை அதன் தொடர்ச்சியே. இதிலிருந்து எங்கிருந்து எங்கு இடப்பெயர்ச்சி, யார் செய்திருக்கிறார்கள் என்று அறியலாம்.

      அதே நேரம் தமிழ் நாட்டின் பல ஆயர் குடிகளும், தென்னன் பாண்டியனுடன் வந்தவர்களே, அவர்கள், சிந்து சமவெளி ஆயருக்கும் ஆதி. சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால், மேற்குத் தொடர்ச்சி மலை, ஆப்பிரிக்கா அருகே உள்ள மடகாஸ்கர் தீவு வரை செல்கிறது அல்லவா, அங்கு துவங்கி, ராஜஸ்தானம் வரை அம்மல்லைத் தொடர், மக்கள் சஞ்சரித்த தொடராக இருந்திருக்கிறது. இன்று அதன் பல பகுதிகள் இந்தியக் கடலில் முழுகி விட்டன. முழுகிய பகுதியில் இருந்த மக்கள் தென்னனுடன் கரையேறி மதுரையில் குடியமர்ந்தனர், ஏற்கெனெவே ராஜஸ்தானம் வரை பரவிய மக்கள் அதே ஆயர் கலாசாரத்துடன் அங்கேயே இருந்திருகின்றனர். ராஜஸ்தான் மலைவாசி மக்களான ‘மீனா’ மக்கள் மீனவன் என்று சொல்லத்தக்க வகையில், ஆதியில் இந்தியக் கடலில் இருந்த தொடரில் இருந்து, அவ்வப்பொழுது முழுக முழுக, மலை வழியாகவே ராஜஸ்தானம் வரை சென்றிருக்க வேண்டும், அவர்கள் வாழ்க்கை முறை குறிஞ்சித் திணை வாழ்க்கையை ஒத்திருக்கிறது. இவற்றையெல்லாம் இந்தத் தொடரில் எழுதுகிறேன். இவை போன்ற பல கருத்துக்களை ஆங்கிலத் தளத்தில் எழுதி உள்ளேன். Greek vs Vedic astrology என்னும் தொடரில் 10 ஆவது கட்டுரையிலிருந்து தமிழ் ஆதாரங்களை எழுதியுள்ளேன். http://jayasreesaranathan.blogspot.in/2013/09/is-vedic-astrology-derived-from-greek.html
      இது வரை 31 கட்டுரை எழுதி இருக்கிறேன். எல்லாவற்றிலுமே தமிழின் வீச்சு என்ன என்று எழுதியிருப்பேன். படிக்கவும். இன்னும் அந்தத் தொடர் முடியவில்லை. அதை முடித்தவுடன் இங்கே தொடர்கிறேன்.

      நீக்கு
    2. மன்னிக்கவும் சடையப்ப வள்ளல் கொங்க வேளாள சாத்தந்தை கூட்டத்தைச் சேர்ந்தவர்.

      சாத்தந்தை கோத்திரன் பண்ணைகு லேந்திரன் தமிழ்ச்சடையன்
      கோத்திரம் நாற்பத்தெண் ணாயிர மென்னுங் குலம்விளங்க
      ஆத்திப நல்லூர் கலியுக மாயிர மைம்பத் தொன்றில்
      வாழ்த்துவர் கங்கையின் வங்கிசத் தோர்கொங்கு மண்டலமே.
      -கொங்கு மண்டல சதகம் (65)

      நீக்கு
  11. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  12. தங்களின் பிற கட்டுரைகளை சற்று முன்னர் தான் படிக்க நேர்ந்தது.

    *** 'Paari of Parambu hills and Paari (caste) of Kashmir – Are they same?' என்ற கட்டுரையின்
    கருத்துரைப் பகுதியில் வேளிர் மற்றும் வேளாளர் வேறுபாடு அறிவேன் என்று வாசகர் ஒருவருக்கு பதிலளித்து உள்ளீர்கள்.
    அதாவது வேளாளர் வேறு வேளிர் வேறு என்று பொருள் கொள்ளும் விதம் அந்த பதில் உள்ளது.

    *** மேலே 'கொங்கு வேளிர் அல்லது கொங்கு வேளாளர்' என்று கூறியுள்ளீர்கள்.
    அதன்படி கொங்கு வேளாளரும் வேளிரும் ஒன்று என பொருள்படுகிறது - தெளிவு படுத்தவும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வேளிர் வேறு, வேளாளர் வேறு. கொங்கு என்னும் அடைமொழியுடன் வரும் வேளிரும், வேளாளரும் ஒன்றே என்பது என் கருத்து. கொங்கு என்பது ‘கொண்-கானம்’ > கொங்கணம் > கொங்கு என்றாகி இருக்க வேண்டும். எனது “முண்டா” தொடரில், இந்தக் கட்டுரையைப் படிக்கவும். http://jayasreesaranathan.blogspot.in/2014/04/munda-people-product-of-parashuramas.html

      மேற்குக் கரையோர துளு, கன்னர நாடுகள் ஆதியில் கொங்கணம் என்று அழைக்கப்பட்டன. கொங்கணி வர்மன் என்பது போன்ற கல்வெட்டுகள் அந்தப் பகுதிகளில் கிடைத்துள்ளன.

      நீக்கு
    2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
    3. Two probabilities exist. From Ganga and from Kon-kani. Check this site for spread of Ganga people https://archive.org/stream/gangasoftalkad035344mbp/gangasoftalkad035344mbp_djvu.txt

      Check this article of mine for 'kon-kani'> kongani > konga etc http://jayasreesaranathan.blogspot.in/2014/04/munda-people-product-of-parashuramas.html

      Basically people from Gangetic region had gone to the Dwaraka and western coast in Maharashtra and North Kanara. From there they had spread to south India and today;s kongu mandalam. In Kannada inscriptions, kon-kani, kongani, konga etc words take place.

      Kanna or Kannara means extension. The western coast was an extended coast. Particularly the Thulu and Kannara regions were retrieved lands of the west coast. Such lands are known as 'kanna' in Tamil.

      In my 8th article on Mundas you can read the meaning of this: http://jayasreesaranathan.blogspot.in/2014/04/toda-connection-to-word-munda-mundas-8.html

      நீக்கு
    4. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு