சனி, 19 பிப்ரவரி, 2011

38. நாவலந்தீவில் திராவிட தேசம்.




ஆரிய-தஸ்யூக்களின் முன்னோனார்கள் வாழ்ந்த இடம் இளாவ்ருதம்.
பாரதத்தையும், அதற்கும் அப்பால் சைபீரியா போன்ற வட பகுதிகளையும், திராவிடத்தையும், தமிழையும் இணைக்கும் ஒரு முக்கிய இடம் இளாவ்ருதம் எனப்படும் இளாவ்ருத வர்ஷம்.


இந்த இளாவ்ருதம் எதிர்பாராத இடத்தில் தன்னை அடையாளம் காட்டிக் கொண்டுள்ளது.
எந்த சிந்து சமவெளி நாகரிகம் தமிழனின் மூலம் என்று திராவிடவாதிகள் நினைக்கிறார்களோ, அங்கு கிடைத்த பானை ஓட்டில் காணப்படும் எழுத்துக்களை, ஆரியப் படையெடுப்பு ஒரு கட்டுக்கதை என்று நிரூபித்துள்ள என்.எஸ். ராஜாராம், மற்றும் நட்வர் ஜா என்னும் பெங்காலிய ஆராய்ச்சியாளர் ஆராய்ந்தபோது அவற்றுள் ஒரு சொல் “இளாவ்ருத வரஎன்று இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டது.
இளாவ்ருதத்தின் வரம் என்பது இதன் பொருள்.
‘The deciphered Indian Script” என்னும் அவர்களது நூலில் குறிக்கப்பட்டுள்ள இந்த விவரத்தைப் பற்றி 1999 ஆம் வருடத்திய மே 13-ஆம் தேதியிட்ட டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிக்கையில் செய்தியும் வந்தது.
இந்த இளாவ்ருதம் பாரதத்தின் வடபாகத்தில், இமயமலைக்கும் வடக்கே இருந்த ஒரு பகுதி.
இதுவே ஆரிய, தஸ்யூக்கள் என்று சொல்லப்பட்ட பஞ்ச மானவர்கள் எனப்பட்ட, யது முதாலானவர்களது முன்னோர்கள் வசித்த இடம்!


அந்த முன்னோனின் பெயர் புரூரவஸ்.
இது மஹாபாரத, புராணங்களில் பல இடங்களில் சொல்லப்பட்டுள்ளது.
இந்தப் புரூரவஸின் வம்சாவளியில் வந்தவர்கள் நஹுஷன், அவன் மகன், யயாதி, அவன் மகன்களான ஆரிய தஸ்யூக்கள் (பகுதி 30) அவர்களது வம்சாவளியில் வந்தவன் துஷ்யந்தன். (துஷ்யந்தன் - சகுந்தலை கதை பலருக்கும் தெரிந்திருக்கும்.) அவர்களுக்குப் பிறந்தவன் பரதன், அந்த வம்சாவளியில் மேற்கொண்டு வந்தவர்கள் பாண்டவர்கள் என்று தொடர்பு செல்கிறது.
பரதன் வரை அதே வம்சாவளியைத் தங்கள் செப்பேடுகளில் சோழர்கள் (பகுதி 11) பொறித்து வைத்தார்கள்.
புரூரவசின் வழித் தோன்றலான யயாதியின் மகள் வழிப் பேரன் சிபி.
அந்த சிபியின் வம்சத்தில் சோழர்கள் வரவே இப்படி தொடர்பு செல்கிறது என்று பார்த்தோம். (பகுதி 32)
இவ்வாறாக, இளாவ்ருததை ஆண்ட புரூரவசுவிடமும் சோழர்களது ரத்த உறவு செல்கிறது.


இந்தப் புரூரவஸ் யார்?
இவனை ஐலன் என்று பல இடங்களிலும் மஹாபாரதம் கூறுகிறது.
ஐலன் என்ற ஒரு பரம்பரையே இருந்திருக்கிறது.
ஐலன் பரம்பரையிலிருந்து ஒரு நூறு வம்சாவளிகளும், இக்ஷ்வாகுவின் பரம்பரையில் ஒரு நூறு வம்சாவளிகளும் உண்டாகி அவர்கள் ஆங்காங்கே இந்த பாரத வர்ஷத்தை ஆண்டனர் என்று மஹாபாரதத்தில் சபாபர்வத்தில் 14 ஆவது அத்தியாயத்தில் கிருஷ்ணர் சொல்கிறார்.
பாரதத்தில் எங்கு திரும்பினாலும், எந்த மன்னன் எந்தப் பகுதியை ஆண்டாலும் அவர்களது மூலம் இந்த இரண்டு பரம்பரைகளில் ஏதேனும் ஒன்றில்தான் ஆரம்பித்திருக்கும்.


ஐலன் பரம்பரை சந்திர வம்சம், இக்ஷ்வாகு பரம்பரை சூரிய வம்சம்.
இந்தப் பெயர்கள் தாய் வழி வம்சம், தந்தை வழி வம்சம் என்று தொடர்பு கொண்டதில் உண்டானது என்பதை மரபணு ஆராய்ச்சி முடிவுகளை ஆராயும்போது அறிவோம்.
இவை ஆரிய-தஸ்யூக்கள் என்று மாக்ஸ்முல்லர் சொன்ன மக்களுக்கும் முன்பே இருந்த பரம்பரைகள் என்பதைக் கவனிக்க வேண்டும்.
ஆரிய- தஸ்யூ என்பவர்களுக்கு முன்பே இந்த நாட்டில் பரவலாக இரண்டு பரம்பரைகளும் வாழ்ந்துள்ளனர்.
ஆரிய- தஸ்யூ போரில் ஈடுபட்ட சகோதரர்கள், ஐலன் வம்சத்தில் வந்தவர்களே.


ஐலன் வம்சத்தில் முக்கியமாகச் சொல்லப்பட்டவன் புரூரவஸ்.
இந்தப் புரூரவசின் மனைவியின் பெயர் ஊர்வசி!!
ஆம், தேவருலக அப்சர மங்கைகளுள் ஒருத்தியான ஊர்வசி.
மாதவியின் பரம்பரையில், மாதவி என்னும் பெயருடனே பிறந்தவள் என்று இரு முறை சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகளால் சொல்லப்பட்ட ஊர்வசி! (பகுதி 10)
பல இடங்களிலும் இந்தப் பெயர் வரவே, ஒரு பெண்ணே பல காலக் கட்டங்களில் இருந்தாள் என்று எடுத்துக் கொள்ளக்கூடாது.
ஊர்வசி என்னும் அப்சர மங்கையின் வம்சாவளியில் வந்தவர்கள் இவர்கள் என்று பொருள் கொள்ள வேண்டும்.
ஒரு குடும்பத்தில் ஒரே பெயரே மீண்டும் மீண்டும் வருவது நம் நாட்டில் வழக்கில் இருந்திருக்கிறது.
சென்ற தலைமுறை வரை, பாட்டன் பெயரை, மகனுக்கு வைத்தார்கள். இரண்டு அல்லது மூன்று பெயர்களே மாறி மாறி குடும்பத்தில் வரும். அவ்வாறே ஊர்வசியின் பெயரும் வந்திருக்கிறது.


இந்த ஊர்வசி தேவ லோக மங்கை.
புரூரவசும் தேவருலகத்துடன் தொடர்பு கொண்டவன்.
அவன் இந்திர சபைக்கு அடிக்கடி போய் வருவான்.
அப்படிப்போய் வந்த காலத்தில் ஊர்வசியைக் கண்டு அவள் மீது காதல் கொண்டான். அவர்கள் இருவர் மீதும் ரிக் வேதத்தில் ஒரு பாடலே உள்ளது. அப்சர மங்கைகள் தங்கள் விருப்பம் போல் வாழ்ந்தவர்கள் என்று பார்த்தோம் (பகுதி 33).
ஊர்வசியும் அதேபோல திடீரென புரூரவசை விட்டு நீங்கி விட்டாள்.
அவர்கள் இருவரைப் பற்றிய கதை பழைய நூல்களில் சொல்லபப்ட்டுள்ளது. அவர்கள் சரித்திரத்தை ‘விக்ரம ஊர்வசீயம்என்னும் ஒரு காவியமாகக் காளிதாசர் எழுதியுள்ளார்.


ஊர்வசி, ஐலன் புரூரவசை விட்டு நீங்கிய காட்சி ரவி வர்மாவின் கை வண்ணத்தில்.


ஒருகாலத்தில் தேவர்கள் என்ற பெயருடன் மக்கள் வட துருவத்துக்கு அருகே வாழ்ந்தனர் என்று பார்த்தோம்.
20,000 வருடங்களுக்கு முன்னால் பனியுகம் முடிய் ஆரம்பித்தபோது, அந்த இனம் மறைந்து விட்டது.
அதைப் பற்றி தமிழில் கிடைத்துள்ள செய்திகளை முன்பு பார்த்தோம்.(பகுதி 36). தமிழ் நிகண்டுகளில் அறுவகைப் போக பூமி என்று குறிப்பிடும் இடங்களில் தேவகுருவம், உத்தரகுருவம் என்னும் அந்த இரு இடங்களும் சொல்லப்பட்டுள்ளது (சூடாமணி நிகண்டு -12-66).
தேவருலகத்துக்குத் தெற்கே இளாவ்ருதம் இருந்தது.
இளாவ்ருதத்துக்கும், தேவருலகத்துக்கும் தொடர்பு இருந்திருக்கிறது. புரூரவசின் பேரனான நகுஷன் ஒரு சமயம் தேவருலகத் தலைவனாக தேவேந்திரனாக இருந்திருக்கிறான்.
பல நியமங்களையும், யாகங்களையும் செய்து தேவருலகத் தலைவனான அவன், அகந்தையால் அந்தப் பதவியிலிருந்து வீழ்ந்தான்.
பூகோள ரீதியாக இளாவ்ருதமும், தேவருலகமும் அருகருகே இருக்கவே இப்படி தொடர்புகள் சாத்தியமாகி இருக்கின்றன.
இதை விளக்கும் பூகோள விவரங்கள் மஹாபாரதத்தில் வருகின்றன.


மஹாபாரதத்தில் பீஷ்ம பர்வத்தில் 6-ஆம் அத்தியாயத்தில் வரும் பூகோள வர்ணனை நாம் இருக்கும் ஆசிய, ஐரோப்பாக் கண்டங்களை ஒத்திருக்கிறது.  இந்த விவரங்களின் படி பாரதம், தமிழகம் போன்றவற்றின் இருப்பிடமும், அதை ஒட்டியே மரபணு ஆராய்ச்சி முடிவுகள் இருப்பதும் தெரிய வருகிறது. முதலில் நமது பூகோள அமைப்பு எப்படி இருந்தது என்று தெரிந்து கொள்வோம்.

த்வீபங்கள் ஏழு. இவற்றுள் நாம் இருப்பது ஜம்புத்வீபம்.
புகாரில் குடிகொண்ட சம்பாபதி தெய்வம் பற்றிய கட்டுரையில் இந்தத் த்வீபத்தில்தான் நாம் இருக்கிறோம் என்று அறிந்தோம். (பகுதி 17)
இந்தத் த்வீபத்துக்கு இன்னொரு பெயர் உண்டு.
அது சுதர்சன த்வீபம்.
சுதர்சன சக்கரம் போல வட்டமாக இது இருப்பதால் இந்தப் பெயர்.
சக்கரம் போல இருக்கவே இந்த நிலம் முழுவதையும் (சுதர்சன த்வீபம் என்னும் ஜம்புத் த்வீபம் என்னும் நாவலந்தீவு) தன் குடை கொண்டு வரும் மன்னன் சக்கரவர்த்தி எனப்பட்டான்.
சக்கரவாளச் சக்கரவர்த்திகள் என்று தமிழில் இருப்பதைக் கண்டோமே (பகுதி 36) அது தேவருலகத்தையும் உள்ளடக்கிய இந்த வட்டப்பகுதி.


இந்த நாவலந்தீவு முயல் வடிவாக இருந்தது.
நடுவில் அகன்றும், உயர்ந்தும் (மலைகள் இருந்ததால்) வடக்கிலும், தெற்கிலும் தாழ்ந்தும் இருந்தது.
இன்றைய ஆசியாக் கண்டத்தின் அமைப்புக்கு இது ஒத்துப் போகிறது.
இதில் பல நாடுகள், வர்ஷங்கள் என்னும் பெயரால் இருந்தன.
அமைப்பு ரீதியாக ஐராவத வர்ஷம் வடக்கிலும், பாரத வர்ஷம் தெற்கிலும், இவற்றுக்கிடையே இளாவர்ஷம் நடுவிலும் இருந்தது.
இவற்றின் அமைப்பை விளக்கும் போது,
தெற்கிலும் வடக்கிலும் உள்ள பாரத வர்ஷம், ஐராவத வர்ஷம் என்கிற இரண்டு வர்ஷங்களும் நன்றாக வளைத்து ஒன்று சேர்க்கப்பட்டிருக்கிற வில்லின் இரண்டு   நுனிகளைப் போலச் சேர்ந்திருக்கின்றன.
மத்தியில் உள்ளது இளாவர்ஷம்”, என்று சஞ்சயன் மஹாபாரதத்தில் கூறுகிறான்.



ஐராவத வர்ஷம் என்பது இந்திரன் இருந்த தேவ லோகம்.
ஆசியாவின் வட பகுதி. ஐராவதம் என்பது இந்திரனது யானையின் பெயர். 10,000 வருடங்களுக்கு முன் வரை அந்தப் பகுதியில் ஒரு குறிப்பிட்ட யானை வகை இருந்தது என்று பார்த்தோம் (பகுதி 34).
10,000 வருடங்களுக்கு முன் வட சைபீரியாவில் வாழ்ந்த யானை. வுல்லி மம்மொத்.

அந்த யானைகளை, ராமனின் தம்பி பரதனுக்கு அவனது தாத்தாவான கேகய நாட்டு மன்னன் கொடுத்தான் என்றும் பார்த்தோம்.
(இவையெல்லாம் ஒன்றுக்கொன்று முரண்படாமல் பலவித உள்ளூறை சாட்சிகளாக internal evidence - இருக்கின்றன என்று காட்டவே இப்படி தொடர்புகளைக் காட்டுகிறோம்.).
அந்த யானைகள் இப்பொழுது அழிந்து விட்டன.
அந்த வித யானைகள் உலாவிய சைபீரியப் பகுதி ஐராவதவர்ஷம் எனப்பட்டது. அது இந்திர லோகம் என்று அழைக்கப்பட்டது.


தெற்கில் உள்ள பாரத வர்ஷம் நாம் வாழும் பாரத நாடாகும்.
இதில் சீனா முதல் மத்திய ஆசியா வரையிலான நாடுகள் இருந்தன என்று முன்பு பார்த்தோம். (பகுதி 31)
ஐராவத வர்ஷத்துக்கும், பாரதவர்ஷத்துக்கும் இடையே ஒரு நதி ஓடுகிறது. இதற்கு இன்றும் இளி நதி என்று பெயர்.
நமது இதிஹாச, புராண நூல்களில் இதை இளை நதி என்றார்கள்.
இளை நதிகரையில் வாழந்தவர்கள் ஐலர்கள் எனப்பட்டார்கள்.
அவர்கள் வாழ்ந்த பகுதி இளாவ்ருதம் எனப்பட்டது.


இந்தப் பகுதி மக்களுக்கு, இதற்கு வடக்கிலும், தெற்கிலும் இருந்த ஐராவத, பாரத வர்ஷங்களுடன் தொடர்பு இருந்தது.
ஐராவத வர்ஷத்தை ஒட்டி, அதற்குத் தெற்கில் இருந்தது உத்தரகுரு வர்ஷம்.


நாவலந்தீவின் பகுதிகளான இவை அனைத்திலும் மக்கள் வேத மதத்தைப் பின்பற்றி வாழ்ந்தனர்.
இங்கு ஓடிய நதிகள், புண்ணிய நதிகளாகக் கருதபட்டன.
இங்கு தேவர்களும், மனிதர்களும் ஒன்று கூடி வாழ்ந்தனர், இவ்வாறெல்லாம் சஞ்சயன் மஹாபாரதத்தில் கூறுகிறான்.


இவற்றுள் தேவருலகமும், உத்தரகுருவும் போக பூமி எனப்பட்டது.
அங்கே மக்களுக்குத் துன்பமில்லை.
பாரத வர்ஷம் கர்ம பூமி எனப்பட்டது.
கர்ம பலனிலிருந்து விடுபட உதவும் புண்ணீய நதிகளும், புண்ணீய க்ஷேத்திரங்களும் இங்குதான் இருக்கின்றன.


இந்த நாவலந்தீவின் நடுவில் முயலின் முதுகு போல இருப்பது ஹேமகூடம் என்னும் கைலாச மலை.
அதாவது இமயமலை முதுகு போலவும் அதற்கு வடக்கிலும், தெற்கிலும் இருந்த நிலங்களும் நாவலந்தீவு ஆகும்.
இந்த அமைப்பையே முயல் போன்ற அமைப்பு என்று திருதராஷ்டிரன் கூறுகிறான். இதுவே சக்கர வடிவானது என்று சுதர்சனத் த்வீபம் என்றும் அழைக்கப்பட்டது.
இந்தப் பகுதிக்குள் இருந்த மக்களுக்குள் போக்குவரத்து இருந்தது.
பாரத வர்ஷத்தின் தென் பாகத்தில் இருந்த இலங்கை அரசன், ஐராவத வர்ஷத்தில் இருந்த இந்திர லோகம் சென்று வந்தான்.
அவன் மகனான இந்திரஜித் இந்திர லோகம் சென்று இந்திரனை வென்று, இலங்கையில் சிறை வைத்தான். இந்திரனை ஜெயிக்கவே அவனுக்கு இந்திரஜித் என்ற சிறப்புப் பெயர் கிடைத்தது.
இளாவ்ருத்தத்தில் வசித்த புரூரவஸ் வழியில் புரு வம்சம் பாரத நாட்டில் ஆட்சி செய்தனர்.
ரிஷிகளைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். அவர்கள் இந்த வர்ஷங்கள் எல்லாவற்றிலும் சஞ்சரித்துக் கொண்டிருந்தார்கள்.
இங்கு வாழ்ந்த மக்களுக்குள் அவன் ஒரு இனம், இவன் ஒரு இனம் என்ற பாகு பாடு இல்லை.
எல்லோருக்கும் ஒரே கலாச்சாரம்.
அதற்கு வேதம் தான் ஆதாரமாக இருந்தது.
இன்றைக்கு நாம் பார்க்கும் இந்தியா, அதன் மக்கள், அவர்கள் கடைபிடித்த கலாச்சாரம் ஆகிய எல்லாம் இந்த முழுப் பகுதியிலும் பரவி இருந்தது.
இதில் சிந்துவைத் தாண்டி ஆரியன் வந்தான் என்பது சிறிதும் ஆராயாமல் சொல்லப்பட்ட ஒரு விபரீதக் கருத்து ஆகும்.



சிந்துவைத்தாண்டி வட பகுதியில் இருந்த வர்ஷங்களுக்குச் செல்ல வேண்டும். கங்கைக் கரையில் வசித்த உத்தாலக ஆருணி என்னும் ரிஷியானவர், சிந்துப் பகுதியில் பாஞ்சாலத்தில் வசித்துவந்த ரிஷிகளுடன் சேர்ந்து, சிந்துவுக்கு அப்பால், சக்க்ஷுஸ் நதியருகே (சாஸ்பியன் கடலருகே) இருந்த கேகய நாட்டுக்குச் சென்று அந்நாட்டு மன்னனிடம் வேதக் கருத்துக்களைக் கேட்டு வந்ததை, சாந்தோக்கிய உபநிஷத்தில் காண்கிறோம். சிந்துவுக்கு அப்பால், புண்ணிய நதிகளும், புண்ணிய க்ஷேத்திரங்களும் இல்லாத இடங்களில் வேத வாழ்க்கை வாழாத மிலேச்சர்கள் வாழ்ந்தனர். மஹாபாரத காலத்தில், இந்த மிலேச்சர்கள் அதிக அளவில் ஐரோப்பா முழுவதும் பரவி விட்டனர்.


இனி அடுத்த முக்கிய பூகோள விவரத்துக்கு வருவோம்.
பீஷ்ம பர்வம் 6-ஆம் அத்தியாயத்தின் முடிவில் சஞ்சயன் சொல்கிறான் “பாரத வர்ஷமும், ஐராவத வர்ஷமும் (முயல் போன்ற) இந்தப் பகுதிக்கு இரண்டு விலாப்பக்கங்கள்.
சாகத்தீவும், காஸ்யபத்தீவும் காதுகள்.
தாமிரபரணிக்கு உற்பத்தி ஸ்தானமும் சம்பத்துமுள்ள மலய பர்வதமானது, நாவலந்தீவுக்கு முயல் போன்ற இரண்டாவது த்வீபமாகக் காணப்படுகிறது.” 

இந்தப் படத்தில் தற்போதைய ஆசியப் பகுதி காட்டப்பட்டுள்ளது. வட்ட வடிவமான அமைப்பின் காரணமாக சுதர்சன த்வீபம் எனப்பட்டது. முயல் வடிவமானது என்றும் சொல்லப்படுகிறது. நடுவில் இரண்டு கோடுகளாக இமயமலைப் பகுதி. இது ஹேம கூடம் எனப்பட்டது. அது முயலின் முதுகாக வர்ணிக்கப்பட்டது. அதற்குத் தெற்கே இருப்பது பாரத வர்ஷம். அதற்கு வடக்கே சிவப்புப் பெட்டியில் இளாவர்ஷம். அதற்கும் வடக்கே ஐராவத வர்ஷம். இளாவர்ஷத்தின் மேற்கே காஸ்பியன் கடல் பகுதி காஸ்யபத்வீபம். அது முயலின் ஒரு காது என வர்ணிக்கப்பட்டுள்ளது. பாரதத்தின் தெற்கே தாமிரபரணி ஆற்றிலிருந்து முயல் வடிவில் ஒரு நிலப்பகுதி இருந்தது. அது முயலின் மற்றொரு காது என வர்ணிக்கப்பட்டது. அது சாகத்த்வீபம் என்பபட்டது. 

ஆசியப் பகுதி என்னும் முயல் வடிவ ஜம்புத்தீவின் ஒரு புறம், காஸ்யபத்தீவு முயலின் ஒரு காது போல இருந்தது. இது காஸ்பியன் கடலாக இருக்கலாம். இது வட புறத்தில் இருக்கிறது.
மற்றொறு காது போன்ற அமைப்பில் இருந்த சாகத்தீவு பாரத வர்ஷத்தின் தென் புறம் இருந்தது என்கிறார் சஞ்சயன். அது எங்கே?


தாமிரபரணி ஆறும், அது ஆரம்பிக்கும் மலய பர்வதமும், பொதிகை மலைப் பகுதியாகும். அந்தப் பகுதியுள்ள மேற்குத் தொடர்ச்சி மலையை மலய பர்வதம் என்று இன்றும் சொல்கிறோம்.
அதை உள்ளடக்கிய முயல் போன்ற நிலப்பகுதி சாகத்தீவு என்கிறார்.
 
அது எங்கே இன்று இருக்கிறது? அப்படி முயல் வடிவத்தில் தாமிரபரணியின் தென் பகுதியில் நிலப்பகுதி இன்று இல்லை.
பாரதத்தின் தென் கோடியில் முயல் வடிவில் அப்படி ஒரு நில அமைப்பு இருந்தது என்று சஞ்சயன் கூறுவது இன்று கடல் மூடிய பகுதியாக அல்லவா இருக்கிறது?
அப்படி ஒரு பகுதி இருந்தால் அது இந்தப்படத்தில் தமிழ் நாட்டின் தென் கோடியில் வரையப்பட்டுள்ள கோடுக்குத் தெற்கே இருக்க வேண்டும்.


இந்த அமைப்பு இன்று இல்லை. வடக்கே ஒரு காது போல காஸ்பியன் பகுதி இருக்கிறதே அது போல தெற்கே இருந்ததாகச் சொல்லப்பட்ட சாகத்தீவு எங்கே போனது?

மஹாபாரதத்தில் வரும் இந்தக் குறிப்பு, குமரிப் பகுதி என்ற பகுதி கடலில் மறைந்தது என்று தமிழ் நூல்களில் வழங்குவதை உறுதிப்படுத்துகிறது.
இந்தத் தொடரில் சாகத்தீவை விவரிக்கும் போது குமரியைப் பற்றித் தெரிந்து கொள்வோம்.
இப்பொழுது இந்தக் கட்டுரையில் சொல்ல வந்த முக்கிய விஷயம், இவ்வாறாக சஞ்சயன் விவரித்த நாவலந்தீவில் உள்ள பாரத வர்ஷத்தில் தமிழ் நாடு எங்கே இருந்தது என்பதாகும்.


சஞ்சயன் ஒவ்வொரு பகுதியாக பாரதவர்ஷத்தை விவரிக்கிறான்,
அதன் தென்புறத்தில் உள்ள நாடுகள் என்று அவன் சொல்லும் நாடுகள் இவை:-
திராவிடம்
கேரளம்
கீழ் நாடுகள்
பூஷிகம்
வனவாஸிகம்
கர்ணாடகம்
மஹிஷம்
விகல்பம்
மூஷிகம்
ஜில்லிகம்
குந்தலம்
சௌஹ்ருதம்
நபகானனம்
கௌகுட்டம்
சோளதேசம்
கொங்கணம்
மாலவம்
நரம்
சமங்கம்
கரகம்
குகுரம்
அங்காரம்
மாரிஷம்
த்வஜினி
உத்ஸவசங்கேதம்
த்ரிகர்த்தம்
ஸாலவசேனி
வ்யுகம்
கோகபகம்
புரோஷ்டம்
சர்மம்
வேகவசம்
விந்தியசுலிகம்
புளிந்தம்
வல்கலம்
வல்லவம்
அபரவல்லவம்
குளிந்தம்
காலதம்
குண்டலம்
கரடம்
தன பாலம்
நீபம்
கடஸ்ருஜ்சயம்
அடிதம்
பாசிவாடம்
தநயம்
ஸுநயம்
ரிஷிகம்
விதபம்
தங்கணம்
பரதங்கணம்.

இந்தத் தொகுதியில் திராவிடம், கேரளம் (சேர நாடு), சோளதேசம் (சோழ நாடு) என்று தனித்தனியே நாட்டின் பெயர்கள் வந்துள்ளன.
எனவே திராவிட நாடு வேறு, சேர சோழ நாடுகள் வேறு என்று தெளிவாகிறது.

பாண்டிய நாடு என்ற பெயர் இல்லை. ஆனால் தங்கணம் என்னும் பெயர் உள்ளது.
கடல் கொள்வதற்கு முன் இருந்த குமரிக் கண்டத்தில் தெங்க நாடு இருந்தது என்று அடியார்க்கு நல்லார் சிலப்பதிகார உரையில் கூறியுள்ளார்.
தங்கணமும், பரதங்கணமும் கடல் கொண்ட பாண்டி நாட்டுப் பகுதிகளாக இருக்ககூடும்.
பிற இடங்களும் இன்று பெயர் மாறி இருக்க வேண்டும்.
தங்கணம் என்பதே தக்கணம் அல்லது தக்காணப் பீடபூமி அல்லது ஆங்கிலத்தில் டெக்கான் என்று மறுவி இருக்க வேண்டும்.
ஏனெனில் மணிமேகலையில் பல இடங்களில் மதுரை நகரைக் குறிக்கையில் ‘தக்கணப் பேரூர் என்றே சொல்லப்பட்டுள்ளது.
தக்கணம் என்பதை தக்கிணம் அல்லது தக்‌ஷிணம் என்று இருக்கலாம். அல்லது தெங்கணம் என்பது மருவியதாகவும் எடுத்துக் கொள்ளலாம்.
தக்‌ஷிணம் என்றால் தெற்கு என்று அர்த்தம்.
தக்‌ஷிணப் பகுதியை ஆண்டதால் பாண்டியனைத் தென்னவன் என்றே சங்க காலம் தொட்டு அழைத்து வந்திருக்கிறார்கள்.
தெங்கணம் என்ற பழைய குமரிக் கண்ட நகரத்தின் பெயராக இருக்க வேண்டும்.


ஆக தமிழ் நிலங்கள் மூன்றும் தனித் தனியே சஞ்சயனால் சொல்லப்பட்டுள்ளன.
அவை தவிர்த்து திராவிட நாடு என்று சொல்லப்படவே, திராவிடம் என்ற நிலப்பகுதி வேறு, தமிழ் மன்னர்கள் ஆண்ட நிலப்பகுதிகள் வேறு என்றும் தெரிகிறது. 


இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் சொன்ன இளாவ்ருதத்துக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?

சம்பந்தம் இருக்கிறது.

இக்ஷ்வாகு பரம்பரை வட இந்தியாவில் இருந்ததே அதன் ஆரம்பம் மனுவில் ஆரம்பிக்கிறது.
ஆனால் எந்த மனுவை திராவிடவாதிகள் வெறுக்கிறார்களோ அந்த மனுவும் அவனைச் சேர்ந்தவர்களும் வட இந்தியவைச் சேர்ந்தவர்கள் அல்லர்.
கடல் கோள் வந்தபோது, திராவிட நாட்டுப் பகுதியிலிருந்து, வெள்ளத்திலிருந்து தப்பி வடக்கில் குடி அம்ர்ந்தவர்கள் என்று ஸ்ரீமத்பாகவதம் (9.1.2-3) கூறுகிறது.
அந்த மனுவின் வழித்தோன்றல் இக்ஷ்வாவாகு ஆவான்.
அவன் பரம்பரையில் வந்தவர்கள் ராமனும், சோழனும் என்று பார்த்தோம்.


திராவிட நாடு என்ற பகுதி தென்னிந்தியாவில்தான் இருந்திருக்கிறது என்று சஞ்சயன் கூறுவதால், தென்னிந்தியப் பகுதிகளில் கடல் கோள்கள் நடந்திருக்கிறது என்பதைக் கடல் ஆராய்ச்சியாளர்களும் சொல்வதால், பாகவதம் கூறும் கருத்து உண்மையே என்று தெரிகிறது.
திராவிட தேசம் தெற்கில் இருக்க, வடக்கில் சிந்து நதிக்கரையில் திராவிடர்கள் வாழ்ந்தார்கள் என்பதும், 
அந்தப் பகுதியே அவர்களது மூலப் பகுதி என்பதும் தவறு என்றும் தெரிகிறது.
இதனால் அங்கிருந்தவர்கள் திராவிடர்கள் என்பதும், அவர்கள் ஆரியப் படையெடுப்பு காரணமாக தெற்குக்கு விரட்டியடிக்கப்பட்டவர்கள் என்பதும் சாத்தியமே இல்லை என்பதும் தெளிவாகிறது.
மேலும் ஆரியர்கள் என்று மாக்ஸ்முல்லர்வாதிகள் அடையாளம் காட்டியவர்கள் எல்லோருமே, திராவிட தேசத்திலிருந்து வடக்கே சென்ற மக்களது வழித்தோன்றல்களாக இருந்திருக்கிறார்கள்.
அப்படி இருக்க இந்த மக்களுக்குள் இனப்பாகுபாடு எப்படி இருக்க முடியும்?



இன்னொரு விவரமும் இருக்கிறது.
எந்த மனுவின் பெயரைக் கேட்டாலே எரிந்து விழுகிறார்களோ அந்த மனுவின் மகள் இளை என்பவள்.
அவளுக்குப் பிறந்தவன் புரூரவஸின் வம்சாவளியினர்.
அவர்கள் குடி அம்ர்ந்தது இளாவ்ருதம்.
அதாவது இது வரை நாம் சொன்ன எல்லா மக்களும் ஒரே மூலத்திலிருந்து, தென்னிந்தியாவின் ஒரு பகுதியிலிருந்து சென்று, பல்கிப் பெருகியவர்களே என்று தெரிகிறது.
மனுவின் வழி சூரிய வம்சமும், இளையின் வழித் தோன்றல்கள் சந்திர வம்சம் என்றும் இந்தப் பாரத வர்ஷம் முழுவதையுமே ஆக்கிரமித்திருந்தனர். சோழனும், சேரனும் அவர்களுக்குள் அடக்கம்.

அவர்கள் முன்னோர்கள் பிரளயத்திலிருந்து தப்பி, தென் பகுதியில் திராவிடம் என்னும் இடம் இருந்த பகுதியிலிருந்து, வடக்கிற்குச் சென்றனர்.
பிறகு அவர்கள் பல்கிப் பெருகி அவர்கள் சந்ததியினர் தெற்குக்குத் திரும்பியிருக்கின்றனர்.
அப்படி வந்த சோழவர்மன் சோழப்பேரரசை நாட்டியிருக்கிறான்.
அதாவது, திராவிட தேசத்திலிருந்து மக்கள் வடக்கில் சென்றபோது சோழ நாடு என்ற நாடே இருந்திருக்கவில்லை!
சோழ நாடு பிறகுதான் வந்திருக்கிறது.
ஆனால் பாண்டியனைப் பற்றி இந்தக் குறிப்புகளில் ஒரு விவரமும் இல்லை. அப்படி என்றால் பாண்டியன் ஆண்ட குமரிப் பகுதி, திராவிடம் எனப்பட்டதா??
விடை தேடுவோம்.


5 கருத்துகள்:

  1. Dear Jayasree Madam,
    Astonishing information in this article, I have never new these before.I regret why I didn't learn sanskrit and why I didn't go beyond the school syllabus in Tamil. Anyway know I got the opportunity to know the facts.

    Regards
    Chalam

    பதிலளிநீக்கு
  2. @ Chalam,

    Thanks.
    Even my sanskrit knowledge is elementary. But a reading of old scriptures give better insight. Mahabharatha is a treasure trove of knowledge of the past and Hindu wisdom. Initial chapters of Bheeshma parva that deal with countries of the world and Shanthi parva in which Bheeshma gives discourse of Dharma are enough to get a good insight into Dharma and India's past.

    பதிலளிநீக்கு
  3. By any chance, mam is screen play writing your main profession? If not you should try. Iam not sure if it is your narrative or the very subject, you have tied me for several days now. I am reading,or rather consuming blog after blog.

    பதிலளிநீக்கு
  4. Dear Mr Venky,

    No no, I am not even a professional writer. If the narration is gripping, I am happy because it means that I am conveying what I wanted to convey. Thanks for the complement.

    பதிலளிநீக்கு
  5. கடல் என்னும் சொல் பலவாறு பயண்படுத்தப்பட்டுளது! இதிகாச புராண வேதங்களில் கடல் சென்ற சொல்லும் பிரளயம் என்ற சொல்லும் பெரும்போர் நடந்து ஆட்சிமாற்றம் நிகழ்ந்தையே குறிப்பதாகப் பொருள்கொள்ளவேண்டும்! கடல் என்பது பெரும்படையையும்; பிரளயம் என்பது பெரும்போரையும் குறிக்கும்; அத்துடன் இறுதியில் நிகழ்ந்த ஆட்சிமாற்றத்தையே குறிக்கும் படிமமாகக்கொள்ளவேண்டும்!

    பதிலளிநீக்கு