சனி, 14 ஜனவரி, 2012

93. ஹரப்பாவின் ஆரிய அமைப்புகள்.


27 நக்ஷத்திரங்கள், 12 ராசிகளுக்குள் அடங்கும். இதையே வேறு விதமாகச் சொல்வதென்றால், 27  நக்ஷத்திரங்களைக் கொண்டு வானத்தைப் பகுத்தது போல, 12 ராசிகளைக் கொண்டு வானத்தைப் பகுத்தனர் எனலாம். இதிலுள்ள ஆச்சரியமான ஒற்றுமை என்னவென்றால், மொஹஞ்சதாரோவில் ஒன்பது ஒன்பதாக மூன்று வரிசைகளில் 27 தனித்தனி அஸ்திவார அமைப்புகள் இருக்கின்றன. மொஹஞ்சதாரோ உருவாகின அதே காலக்கட்டத்தில் உண்டான ஹரப்பாவில் ஆறு, ஆறாக இரண்டு வரிசைகளில் மொத்தம் 12 அமைப்புகள் இருக்கின்றன என்பதே.


இந்த இரண்டு இடங்களிலும், இந்த இரண்டு அமைப்புகளும் மிகப் பெரிய அளவில் அமைந்துள்ளன. அதாவது இவற்றுக்கு ஏதோ ஒரு முக்கியத்துவம் இருந்திருக்கிறது. இவற்றை ஆராய்பவர்கள் வெளிநாட்டவர்களாக இருப்பதால், அவர்களது நாட்டு வழக்கத்தில், இவற்றைத் தானியக் கிடங்குகள் என்கிறார்கள். ஆனால் இவற்றில் ஒரு மணியளவும் தானியம் கிடைக்கவில்லை. தானியத்தைச் சேகரித்து வைத்த அடையாளமும் இல்லை. இவற்றின் அமைப்புகள், தானியக் கிடங்குகள் போலவும் இல்லை. மேலும் இவை இரண்டுக்கும் அருகில் நீர்ப் போக்குவரத்து இருந்திருக்கிறது. நீரோடும் இடத்தில் தானியக்கிடங்கை அமைக்க மாட்டார்கள். இந்த காரணங்களால், இவை கிடங்குகள் அல்ல என்ற எண்ணத்துக்கு ஆராய்ச்சியாளர்கள் வந்துள்ளார்கள். கிடங்குகள் இல்லையென்றால், இவை என்ன என்ற கேள்விக்கு இவர்களுக்கு விடை தெரியவில்லை. ஆனால் ஹிந்து நாடான பாரதத்தின் பின்னணியில் நோக்கினால், விடை கிடைக்கிறது.


27 என்னும் எண், 27 நக்ஷத்திரங்களையே குறிக்கும். அது போல 12 என்னும் எண், 12 ராசிகளைக் குறிக்கும். இவை இரண்டும் ஜோதிடச் சொற்களாக மட்டும் இல்லாமல், வழிபாட்டுக்கு உரியவையாக மஹாபாரத காலத்தில் இருந்து வந்தன. இந்த வழிபாட்டில் தனுர் ராசிக்கு முதலிடம் இருந்தது. தனுர் ராசியின் முதல் நக்ஷத்திரமான மூல நக்ஷத்திரத்தைக் காலாக உருவகித்து, 27 நக்ஷத்திரங்களையும் ஒவ்வொரு உடலுறுப்பாகக் கொண்டு, 'நக்ஷத்திரப் புருஷன்' என்று உருவகித்தார்கள். சித்திரை மாதத்தில், மூல நக்ஷத்திரத்தில் சந்திரன் செல்லும் போது நக்ஷத்திரப் புருஷ விரதமாக ஆரம்பித்தார்கள். வாழ்நாள் முழுவதும் அந்த விரதத்தைச் செய்பவன், மறு பிறவியில், நக்ஷத்திரமாகப் பிறப்பான் என்றும், அந்த விரதத்தைச் செய்பவர்கள் உலகாளும் சக்கரவர்த்தியாகவும் பிறப்பார்கள் என்றும் பலவித பலன்களை வராஹமிஹிரர், பிருஹத் சம்ஹிதையில் (அத்- 105) கூறுகிறார். இந்த விரதத்தைப் பற்றி, நாரதருக்கு ருத்திரர் சொன்னதாகச் சொல்லப்படுகிறது. புராண காலத்திலிருந்து தொடரும் இந்த விரதம், வராஹமிஹிரர் காலம் வரை, அதாவது 1500 ஆண்டுகளுக்கு முன் வரை கடைப்பிடிக்கப்பட்டு வந்திருக்கிறது.


 

நக்ஷத்திரங்கள் அமையும் ராசிகளை எடுத்துக் கொண்டால், அவை 12 என்று அமையும். அவற்றுள் நக்ஷத்திரப்புருஷன் ஆரம்பிக்கும் மூல நக்ஷத்திரம் தொடங்கி 12 ராசிகள், அவற்றின் மாதங்கள் ஆகியவை, கிருஷ்ணனுக்கும், விஷ்ணுவுக்கும் முக்கியமானவை. மூல நக்ஷத்திரம் வரும் தனுர் மாதத்தை 'நக்ஷத்திர மாதம்' என்றே அழைத்தார்கள். அப்படி அழைக்கும் வழக்கம் கிருஷ்ணன் ஆண்ட துவாரகை இருக்கும் குஜராத்தில் இன்றும் இருக்கிறது. அந்த மாதத்தைத் தமிழில் மார்கழி மாதம் என்கிறோம். அந்த மார்கழிக்கு, அதாவது நக்ஷத்திர மாதத்துக்கு, அதாவது தனுர் ராசிக்கு முக்கியத்துவம் தரும் வண்ணம், 'மாதங்களில் தன்னை மார்கழி' என்று கீதையில் கிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளான். இதற்குப் பின்னால் ஒரு விண்வெளி உண்மை இருக்கிறது.


இந்தப் பத்தில் நாம் இருக்கும் பால்வெளி காலக்ஸி காட்டப்பட்டுள்ளது. அதன் மையத்தில் இருப்பது தனுர் ராசி. அதன் ஒரு புறம் முக்கால் பங்கு தொலைவில் நாம் இருக்கும் சூரிய மண்டலம் இருக்கிறது.




இந்த அமைப்பில் நாம் இருக்கும் இடத்திலிருந்து பார்க்கும் வானத்தை 12 ராசிகளாகப் பிரித்துள்ளோம். அதை ஜாதக்கட்டமாக அமைத்துள்ளோம். கீழுள்ள படத்தில் தனுர் ராசியில், நாமிருக்கும் காலக்ஸியின் அடர்த்தியான நக்ஷத்திரக் கூட்டங்கள் கொண்ட மையப் பகுதியைக் காணலாம்

.


மையப் பகுதியான தனுர் ராசியை நாமிருக்கும் சூரிய மண்டலம் உட்பட அனைத்து நக்ஷத்திரங்களும் சுற்றிவரவே, தனுர் ராசிக்கும், அது அமையும் மார்கழி மாத்துக்கும் முக்கியத்துவம் ஏற்பட்டது. தனுர் ராசி தொடங்கி, 12 ராசிகளையும், காக்கும் கடவுளான விஷ்ணுவின் 12 பெயர்களால் (துவாதச நாமங்கள்) அழைக்கப்படுதல் வேத மரபில் இருக்கிறது.

அதாவது, ஜாதகக்கட்டமாக நாம் பார்க்கும் வான் வெளி, நம்மைச் சூழ்ந்துள்ளது.

இப்படிச் சூழ்ந்துள்ள மொத்த வெளியையும்,

காக்கும் கடவுளான விஷ்ணுவானவர் -

தனது 12 விதமான அமைப்புகளால் பரவி, நம்மை வருட முழுவதும் காக்கிறார் என்பதே இதன் தாத்பரியம் ஆகும்.


இதன்படி மார்கழிக்கு அதிபதி கேசவன்.

தை – நாராயணன்

மாசி – மாதவன்

பங்குனி – கோவிந்தன்   

சித்திரை – விஷ்ணு

வைகாசி – மது சூதனன்

ஆனி – திரிவிக்ரமன்

ஆடி – வாமனன்

ஆவணி – ஸ்ரீதரன்

புரட்டாசி – ஹ்ருஷீகேசன்

ஐப்பசி – பத்மநாபன்

கார்த்திகை – தாமோதரன்.



நக்ஷத்திர புருஷ விரதத்தைக் கூறும் கடைசி அத்தியாயத்தில்,

இந்த 12 ராசிகளில், 12 ரூபங்களில் அமைந்துள்ள விஷ்ணுவை வழிபடுவதையும் வராஹமிஹிரர் கூறுவதால்   

இவை இரண்டையும் (27 நக்ஷத்திரங்கள், 12 ராசிகள்) இணைத்தே அந்த நாளில் வழிபட்டுள்ளார்கள்

என்று தெரிகிறது.

அதன் பிற விவரங்களைப் பார்ப்பதற்கு முன், ஹரப்பாவின் 12 பகுதி அமைப்பை ஆராய்வோம்.


 

கீழ்க்காணும் ஹரப்பா வரைபடத்தில் 12 பகுதிகள் கொண்ட 'கிடங்கு' என்னும் அமைப்பை ஒட்டி ராவி நதி ஓடியிருப்பதைக் காணலாம். நீர்நிலைக்கு அவ்வளவு அருகில் கிடங்கு அமைக்க மாட்டார்கள். ஆனால், நீர் நிலைக்கும், ஆற்றுக்கும் அருகே கோவில் அமைப்பது வழக்கமான ஒன்றாகும். நீர்நிலைகளுக்கு அருகில்தான் கோவில் அமைக்க வேண்டும் என்பதை ஒரு விதியாகவே வராஹமிஹரர் கூறுகிறார். (பிரு-சம் – அத் 56)





இந்தப் படத்தில் மஞ்சள் நிற வட்டத்தில் இருப்பது "கிடங்கு"ப் பகுதி. அதை ஒட்டி ராவி நதி ஓடியிருக்கிறது. இப்பொழுது அந்த இடம் வறண்டு இருக்கிறது.

 

 

'கிடங்கு' என்று சொல்லப்படும் இடத்தில், 12 அமைப்புகள் தென்படுகின்றன. அதன் வரைபடத்தைக் கீழே காணலாம்.




ஒன்றுக்கொன்று எதிர் எதிராக ஆறு, ஆறு அமைப்புகள் தென்படுகின்றன.

கிழக்கு- மேற்கைப் பார்த்து இவை அமைந்துள்ளன.

வடக்கு – தெற்காக 51 மீட்டர் நீளத்திலும், கிழக்கு- மேற்காக

மொத்தம் 41 மீட்டர் நீளத்திலும் அமைந்துள்ளன.




இவற்றின் ஒவ்வொரு பகுதியிலும், இரண்டு ஓரங்களில் மூன்று அடித்தளம் போன்ற அமைப்புகள் காணாப்படுகின்றன.




இவற்றைப் பார்த்து எந்த ஆராய்ச்சியாளராலும் ஒன்றும் ஊகிக்க முடியவில்லை. ஆனால் நம் நாட்டு கோவில்கள், அவற்றிலுள்ள சிறு சிறு சன்னிதிகளின் அமைப்பைப் பார்த்த நமக்கு, இவை பிரதிஷ்டை செய் பீடங்களின் அடித்தளம் போலத் தென்படுகின்றன.

இந்த 12 பகுதி அமைப்பை ஒட்டி, படிக்கட்டுடன் கூடிய வாயிலும் இருக்கிறது.



இதைப் பார்க்கும் போது இந்த மொத்த அமைப்புமே ஒரு கோவில் அமைப்பாகத் தென்படுகிறது. எதிரெதிராக, ஆறு, ஆறாக அமைக்கப்பட்டுள்ள இந்த அமைப்பு, 12 ராசிகளைக் குறித்து, அந்த நாளில் நடந்த வழிபாடாக இருக்க்கூடும் என்று நாம் சொல்வதற்கு ஒரு சான்று இங்கு கிடைத்துள்ளது.


இந்த அமைப்பின் ஒரு பகுதியில், மேடம் என்று சொல்லப்படும்

ஆட்டு உருவச் சின்னம் கிடைத்துள்ளது.

அப்படிக் கிடைத்ததும், AMULET  என்று சொல்லப்படும் தாயத்து போல இருக்கிறது

என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.





http://www.harappa.com/indus4/279.html


2.18 செ.,மீ நீளமுள்ள இதில் துளை போடப்பட்டுள்ளது.

தாயத்து அல்லது ரட்சை போலக் கட்டுவதற்காக இவ்வாறு இருக்கலாம்

என்று எண்ணத்தக்க வகையில் இது இருக்கிறது.

ஆனால் ஒரு மேட ஆட்டின் அமைப்பில் ஏன் இவ்வாறு இருக்க வேண்டும்?


ஹரப்பா போன்ற சிந்து சமவெளிப் பகுதிகளில் இப்படிப்பட்ட துளையிடப்பட்டுள்ள தாயத்துகள் கிடைத்துள்ளன.

அவையெல்லாம் ஆட்டின் உருவில் இல்லை.



http://www.harappa.com/indus/88.html

மேலே உள்ள பட்த்தில் உள்ளவற்றிலும் துளைகள் உள்ளன.

ஆனால் இவற்றின் பிற அமைப்புகளைப் பார்க்கையில்

இவை பொம்மலாட்ட பொம்மைகள் என்று எண்ணத் தோன்றுகிறது என்கிறார்கள்.





இந்த உருவத்திலும் துளை இருக்கிறது. இதில் நூலை விட்டு எதனுடனாவது கட்ட முடியும்.

முதலை உருவம் உள்ளதால், முதலை பயத்திலிருந்து தப்பிக்க இப்படி ஒரு தாயத்து உண்டாக்கியிருக்கலாம்.



இதிலும் துளைகள் உள்ளன.

பயம், காத்து, கருப்பு என்னும் காரணங்களுக்காகத் தரப்படும் தாயத்து போல

இதிலும் உருவங்கள் இருக்கின்றன.


ஆனால் மறியாடு போன்ற அமைப்பில் கிடைத்துள்ள தாயத்து,

எந்த காரணத்துக்காகப் பயன் பட்டிருக்க முடியும் என்ற கேள்வி எழுகிறது.

ஆடுகளைப் பார்த்து பயம் என்று சொல்ல முடியுமா?

இல்லையே.


ஆனால் இந்தத் தாயத்தானது


கிடங்கு எனப்படும் 12- பகுதி அமைப்பில் கிடைத்துள்ளதால்,

அந்தக் கிடங்கு அமைப்பே ராசிச் சக்கரமாக இருந்தால்,

அங்கு மறியாட்டின் அமைப்பில்

ரட்சை தரும் வழக்கம் இருந்திருக்குமல்லவா?


 

இந்த தாயத்து கிடைத்த இடமும் நமது ஊகத்துக்கு வலு சேர்க்கிறது.


அது 12-பகுதி 'கிடங்கின்' தென் மேற்கின் ஓரத்தில் கண்டெடுக்கப்பட்டது.

தென் மேற்குப் பகுதியை  இந்தப் படத்தில் கருநிற வட்டத்தில் காணலாம்.




 

 

தென் மேற்கில் கருவட்டம் காட்டும் பகுதி மேட ராசியைக் குறிப்பதென்றால், அதற்கு எதிர் திசையில் வட கிழக்கில் துலாம் இருக்க வேண்டும். அது சிவப்பு வட்டத்தில் காட்டப்பட்டுள்ளது. இந்த மொத்த அமைப்பும் 12 ராசிக் கோவில் என்றால், வடக்கிலிருந்து நுழைந்து, கிழக்கிலுள்ள துலாத்திலிருந்து ஆரம்பிப்பது வேத மரபுக்கு ஏற்றது. அந்த ராசி ஐப்பசி விஷுவைக் குறிக்கும்.


ஏற்கெனெவே 90 ஆவது கட்டுரையில் கூறப்பட்டுள்ள விவரம் இங்கு பொருந்துகிறது. பூமியின் தென் பகுதியில் வாழ்ந்த மக்களுக்கு, வருடப்பிறப்பு ஐப்பசி விஷு, அதாவது துலாமாத ஆரம்பத்தில் அமையும். அதைப் பின்பற்றிய சமுதாயமே, வைவஸ்வத மனுவுடன் துவாரகையிலும், குஜராத்திலும் வாழ்ந்தனர். அதைப் பின்பற்றியே இன்று வரை குஜராத் மக்கள் கார்தக் மாதத்திலிருந்து வருடத்தை ஆரம்பிக்கின்றனர்.


மேலும் கேசவனில் ஆரம்பித்து, மார்கழி என்னும் நக்ஷத்திர மாதம் முதலாக வழிபட்ட அந்த மக்கள் இப்படி ஒரு 12 பகுதி அமைப்பில் விஷ்ணுவின் துவாதச ரூபங்கள் அல்லது அவை குறிக்கும் 12 ராசிகளை வழிபட்டிருக்கக்கூடும். அதற்கேற்றாற் போல மறியாட்டின் தாயத்து அமைப்பு இங்கு கிடைத்துள்ளதால், இது ராசிச் சக்கரத்தின் மூலமாக, விஷ்ணுவை வழிபட்ட சமுதாயமாக இருக்க வேண்டும் என்று தெரிகிறது.


முன்னமே, இங்கு (ஹரப்பாவில்) வழிபாட்டில் பயன்பட்ட சங்குகள் கிடைத்துள்ளன என்று பார்த்தோம், (81 ஆம் கட்டுரை)



கிருஷ்ணன் ஆண்ட போது மக்கள் அனைவரும் சங்கு வைத்திருந்தார்கள்.

ஹரப்பா என்பதே ஹரிரூபா என்ற பெயரில் இருந்திருக்க வேண்டும் என்றும், அந்த இடத்தை நகுலன் வென்ற பிறகு, கிருஷ்ணனது நாட்டு மக்களைக் குடியேற்றினார்கள் என்றும் பார்த்தோம். அந்த மக்களாக இருந்திருந்தால்தான், நக்ஷத்திர வழிபாடும், ராசிகள் வழிபாடு மூலமாகக் கேசவன் முதலான துவாதச விஷ்ணு மூர்த்திகளை வழிபடும் வழக்கமும் இருந்திருக்க வேண்டும். அந்த மக்கள் பெருமளவில் யாதவ குல மக்களாகவும், ஆடு, மாடுகளை மேய்ப்பவர்களாகவும் இருக்க வேண்டும்.


 

இதையும் மெய்ப்பிக்கும் வண்ணம் அங்கு சில மேடை அமைப்புகள் காணப்படுகின்றன.

அவை வட்ட வடிவில், தாழ இருக்கின்றன.

கீழே காட்டப்பட்டுள்ள வட்ட அமைப்புகள்,

கிடங்கு என்று சொல்லப்படும், 12 ராசிக் கோவிலை ஒட்டி அமைந்துள்ளன.



இதே அமைப்புகள், வீடுகளுக்குள்ளும், வீட்டு முற்றங்களிலும் காணப்படுகின்றன.

அவற்றைக் கீழுள்ள படத்தில் காணலாம்.




மற்றும் சில இடங்களில் இவை மூன்று பக்க சுவர்களுக்குள் அமைக்கப்பட்டிருப்பது தெரிகிறது.

கீழுள்ள படம் அப்படிப்பட்ட ஒரு அமைப்பைக் காட்டுகிறது. 

 

 

 


இதன் ஒரு பக்கத்திலிருந்து கொண்டு மேடையில் என்னவோ செய்திருக்கிறார்கள்.

நீரைக் கொண்டு எதனையோ கலந்து செய்யும் செயலைச் செய்திருக்கலாம் என்று தெரிகிறது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

'டை' எனப்படும் வண்ணக் கலவை செய்ய இதைப் பயன் படுத்தியிருக்க்லாம் என்றும் நினைக்கிறார்கள்


ஆனால் இங்கு வாழ்ந்த சமுதாயமே, கிருஷ்ணன் காலச் சமுதாயம் என்றும், யாதவ சமுதாயம் என்றும்

நாம் நினைக்கும் வண்ணம் இந்த அமைப்பு இருக்கிறது என்பதே,

பாரதப் பாரம்பரியத்தின் நோக்கில் நமக்குத் தென்படும் ஒரு விவரமாகும்.

அது என்ன என்று சொல்வதற்கு முன் கீழுள்ள படத்தைப் பாருங்கள்.




 

இதிலும் தரைமட்டத்துக்குச் சற்று உயரமாக வட்ட வடிவ மேடை இருக்கிறது.

அதன்  மேல் ஒரு பெரிய வட்ட வடிவப் பாத்திரத்தில் ஒரு திரவம் இருக்கிறது.

இந்த அமைப்பும், மேலே நாம் கண்ட வட்ட வடிவ ஹரப்பா மேடைகளும் ஒரே மாதிரியாக இருப்பதைக் காணலாம்.


இது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இருந்து வந்திருக்கிறது.

ஆனால் இன்றைக்கு இந்தியாவில் ஒரே ஒரு இடத்தில் மட்டும் இருக்கிறது –

அந்தப் பழைய பாரபரியத்தை விடக்கூடாது என்பதற்காக.


இது என்ன தெரியுமா?


யாதவ மக்கள் கூட்டம் கூட்டமாக மாடுகளை வளர்க்கவே,

அவற்றின் உணவு தேவைக்காக

பெரிய பெரிய வட்டப் பாத்திரங்களில் கலக்கும்

கழுநீர் போன்ற 'தூலி" எனப்படும் உணவாகும்!



இவற்றை மாடுகளைப் பராமரிக்கும் கோசாலைகளில் அமைப்பார்கள்.

வீட்டுத் தோட்டத்தில் அமைப்பார்கள்.

கிருஷ்ணன் வாழ்ந்த கோகுலத்தில் இப்படித்தான் அமைத்து, 'தூலி' செய்தார்கள்.


 

அந்தக் கோகுலத்துக்கு, முகலாய அரசன் ஔரங்கசீப்பினால் அபாயம் ஏற்பட்டது. அப்பொழுது, அங்கிருந்த கோகுல மக்கள் 300 குடும்பத்தவர், தாங்கள் வழிபட்டு வந்த கிருஷ்ணன் விக்கிரகத்தையும், மாடுகளையும் ஓட்டிக் கொண்டு ராஜஸ்தானில் உள்ள உதயபூர் நகருக்கருகே குடியமர்ந்தார்கள். அந்த இடம் நாத் துவாரகை என்றழைக்கப்படுகிறது.


அவர்களிடம் இருந்த கிருஷ்ணன் விக்கிரகம், கிருஷ்ணனது கொள்ளுப் பேரனான வஜ்ரன் உண்டாக்கின மூன்று விக்கிரகங்களுள் ஒன்று என்று சொல்லப்படுகிறது. கிருஷ்ணன் வளர்ந்த பசுவின் வம்சாவளிப் பசுக்களை அவர்கள் பராமரித்து வந்திருக்கிறார்கள். அவற்றை ஓட்டிக் கொண்டு வந்து, அவர்கள் குடியமர்ந்த பகுதியில் கோகுலத்தில் எப்படி கிருஷ்ணனை ஆராதித்தார்களோ அப்படியே இன்று வரை ஆராதித்து வருகிறார்கள். கிருஷ்ணன் காலத்தில் எப்படி மாடுகளைப் பராமரித்து உணவிட்டார்களோ, எப்படி கோசாலைகள் இருந்தனவோ, அப்படியே தொடர்ந்து பின்பற்றுவதாகக் கூறுகிறார்கள் அந்த மக்கள். அதில் ஒரு விசேஷமான அமைப்புதான், மேற்காணும் பெரிய மேடையும், அதில் மாட்டு உணவைத் தயாரிப்பதும்

.

இவை ஹரப்பாவின் மேடைகளை ஒத்திருப்பதை மறுக்க முடியவில்லை. நாத் துவாரகையில் அவர்கள் அமைத்துள்ள பண்டைய அமைப்பிலான கோசாலையில் அந்த மேடைகளைப் பார்க்கிறோம். அங்குள்ள பிற அமைப்புகளைப் பாருங்கள்.


பசுக்கள் தங்க, அடுத்தடுத்து அமைந்துள்ள அறைகள்







நடுவில் வெட்ட வெளி அங்கு நீளமாக்க் கட்டப்பட்ட கால்வாய் போன்ற அமைப்பு.

அதில் தூலி போன்ற உணவு வகைகளைக் கொட்டுவார்கள்.

மாடுகள் அதை உண்ணும் காட்சியை மேலே காணலாம்.


மாடுகள் தங்கும் கொட்டகை அமைப்பு, ராஜ போகமாக, வரிசையாகப் பகுக்கப்பட்ட அறைகள் போல இருக்கிறது.



 




ஹரப்பா, மொஹஞ்சதாரோவின் அமைப்புகளில் இப்படியும் கட்டிடங்கள் அமையக் கூடிய சாத்தியங்கள் இருக்கின்றன

என்பதை நாம் மறுக்க முடியாது.



கோசாலையின் முகப்பு,





கோசாலையே ஒரு மாளிகையாகத்தானே தென்படுகிறது!



மாடுகளைத் தெய்வமாகக் கொண்டாடிய சமுதாயம் அது. கணக்கில்லாத மாடுகளை வளர்த்த சமுதாயம் அது. அவர்கள் வாழ்வில் மாடுகளுக்கு முக்கிய இடம் இருந்தது. அவர்கள் தங்களுக்கென ஒரு நகரத்தை அமைத்தால், அதில் மாடுகளுக்கும் விமரிசையாக கொட்டில்கள் அமைத்தார்கள்.


அதைச் செய்த அடையாளம், ஹரப்பாவின் மேடைகள் மூலமாகத் தெரிகிறது என்பதையும் நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.



கிடங்குப் பகுதியின் அருகே மேடைகள் அமைந்துள்ளதால், அங்கு மாடுகள் பராமரிப்பு நடந்திருக்க வாய்ப்புகள் இருக்கின்றன. கோவிலை ஒட்டி கோசாலைகள் அமைப்பது பாரத நாட்டில் என்றும் இருந்து வந்த வழக்கம். கோவிலுக்குத் தானமாகப் பசுக்களைக் கொடுப்பது ஒரு பழமையான வழக்கம் தான்.


இந்த மேடை அமைப்பைப் பற்றி இன்னொரு கருத்தையும் இங்கு சொல்லலாம்.

ஹரப்பா போன்ற பகுதிகளில், பல கட்டுமானங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

அவற்றைச் செங்கல் கொண்டு அமைத்திருக்கிறார்கள். அந்தச் செங்கல்லைக் கொண்டு கட்டிடம் கட்ட பூச்சு வேலை செய்ய வேண்டும்.

இன்றைக்கு நாம் சிமெண்ட் பயன்படுத்துவது போல அன்றைக்கு அவர்கள், மண் பூச்சு போலச் செய்திருக்கிறார்கள்.

அந்தப் பூச்சு வேலைக்கான சிமெண்ட் போன்ற பொருளை எப்படி உருவாக்கினார்கள் என்பதை அறிய மீண்டும்

வராஹமிஹிர்ரை அணுக வேண்டும்.


பிருஹத் சம்ஹிதையில் 57 ஆவது அத்தியாயத்தில் அவர்

அந்தக் கலவையை உண்டாக்கும் முறையை விளக்குகிறார்.

பண்டைய பாரதத்தில் பின்பற்றப் பட்ட முறை அது.

அதை உண்டாக்குவதற்கும், ஹரப்பாவின் மேடைகள் பயன் பட்டிருக்கலாம்.



சில செடிகளது சாறைக் கொண்டு அந்தக் கலவையை உருவாக்கினார்கள்.

அதை வஜ்ரலேபா என்றார்கள்.

கோவில், அரசன் இருப்பிடம், கிணறுகள் போன்றவற்றில் அந்தக் கலவையைப் பயன் படுத்தினார்கள்.

வேறு சில கலவைகளில், மிருகங்களின் எலும்புப் பொடியை உபயோகித்தார்கள்.

அதில் சில உலோகக் கலவைகளையும் சேர்த்தார்கள். அந்தக் கலவை மிகவும் உறுதியானது என்கிறார் வராஹமிஹிரர்.

அந்தக் கலவைகளை உருவாக்கவும் இந்த மேடைகள் பயன்பட்டிருக்கலாம்.


ஏனெனில் அங்குள்ள சில மேடைப் பகுதிகளில், செடித் துண்டுகள், மிருக எலும்புகள் ஆகியவை கிடைத்துள்ளன.

இவற்றைக் கொண்டு நீரில் காய்ச்சி கலவை செய்வார்கள்.

இதில் நமக்குக் கிடைக்கும் அதிசய விவரம், பழங்காலம் தொட்டு பயன்படுத்தப்பட்ட

இந்தக் கலவையைச் செய்யும் முறையைச் சொல்லித் தந்தவன் மயன் என்பதே.

இதையும் வராஹமிஹிர்ர் குறிப்பிட்டுள்ளார்.



எந்த மயன், பாண்டவர்களுக்கு அரண்மனை அமைத்துக் கொடுத்தானோ,

எந்த மயனைடமிருந்து, பல கட்டுமானக் கலைகளை பாரத மக்கள் கற்றுக் கொண்டார்களோ,

எந்த மயன், அரண்மனைக்குள் குளம் அமைக்கும் தொழில் நுட்பத்தை ஆரம்பித்து வைத்தானோ,

அந்த மயனின் காலக்கட்டமான மஹாபாரதக் காலக் கட்டத்தை ஒட்டி எழுந்த

மொஹஞ்சதாரோ, ஹரப்பாவில், அவன் கற்றுத் தந்த பாடம் செயல் முறைப்படுத்தப்பட்டது எனலாம்.

அதன் ஒரு பரிமாணம், அவர்கள் கட்டின வாஸ்து கோவில் போன்ற அமைப்புகள்.


குள அமைப்பை இனிமேல்தான் நாம் ஆராய வேண்டும்,

ஆனால் அதற்கு முன் இரண்டு விவரங்கள் சொல்லப்பட வேண்டும்,


ஒன்று ஹரப்பாவின் 12- ராசிக் கோவில்,

அதன் தொடர்ச்சியான விஷ்ணு வழிபாடு.

அது தமிழ் நாட்டு ஆயர்கள் வரை பரவியிருந்தமை,

அதன் ஒரு அங்கமே, மார்கழி நோன்பும்,

தையில் மாட்டுப் பொங்கலும என்பது.

ஆனால், அதைத்

தமிழ் வருடப் பிறப்பாகத் திராவிடவாதிகள் சுவீகரித்த அறிவீனத்தைப் பற்றி

அடுத்து சொல்வது பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.


 

அதை அடுத்து, மொஹஞ்சதாரோவின் இன்னோரு ரகசிய தெய்வம் இருக்கிறது.

அதைப் பற்றியும் சொல்லிவிட்டு, குளத்தின் விவரத்தை ஆரம்பிப்போம்

 



கோசாலைப் படங்கள் உதவி :- http://abhashahra.wordpress.com/2010/08/22/nathdwara-shreenathji-gaushala/

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக