புதன், 29 டிசம்பர், 2010

25. ரிக் வேதப் போர்களில் உள்ள இயற்கை உண்மைகள்



 ரிக் வேதம் 10 மண்டலங்களாகப் (பகுதிகளாக) பிரிக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு மண்டலத்திலும் பல பாடல்கள் உள்ளன. அவை ஒவ்வொன்றும் ஏதேனும் ஒரு தெய்வத்தைத் துதிப்பதாக உள்ளது. இந்தத் தெய்வங்கள் இன்றைக்கு நாம் கோவிலில் கும்பிடும் தெய்வங்கள் அல்ல. ஆனால் இந்த ரிக் வேதத் தெய்வங்களது பெயர்களை  ஒரு ஹிந்துவிடம் கூறினால் அவை தெய்வங்களது பெயர்களே என்று ஒப்புக் கொள்வான். அந்தப் பெயர்கள் வாஸ்து சாஸ்திரம், ஜோதிடம் போன்றவற்றில் சொல்லப்படும் பெயர்கள் என்று எளிதில் புரிந்து கொள்வான். ஆனால் இவை எதுவும் தெரியாத, அல்லது தெரிந்து கொள்ள விரும்பாத மாக்ஸ் முல்லர் போன்றவர்கள் இந்தத் தெய்வங்களின் மேல் இயற்றப்பட்ட பாடல்களிலிருந்து யுத்தத்தை கண்டு பிடித்தது, உலக மகா அபத்தம் என்று பட்டம் சூட்டத்தக்கது.


உதாரணத்துக்கு நம்மில் பலரும் அறிந்த கந்தர் சஷ்டி கவசப் பாடலை நினைவு கூர்வோம். அந்தப் பாடலில் எத்தனை இடங்களில் முருகப் பெருமான் அவர்கள், பகைவர்களை, நம்மைத்தாக்கும் பலவகைத் துன்பங்கள் என்னும் கூட்டங்களை அடிக்க வேண்டும், உடைக்க வேண்டும், அழிக்க வேண்டும் என்று பாடுகிறோம்? நம் தெய்வ வழிபாட்டைப் பற்றி அறியாத ஒருவர் தமிழ் ஆராய்ச்சி செய்வதாகக் கூறி, கந்தர் சஷ்டி கவசத்தைப் படித்து விட்டு, அதில் போர் பற்றிய வர்ண்ணை வருகிறது, முருகன் என்பவர் போர் வெறி பிடித்து எல்லோரையும் அழித்து, சிஷ்டர் என்னும் ஒரு சாராருக்கு உதவினார் என்று சொன்னால் எப்படி இருக்கும்? ரிக் வேதத்தைப் படித்து மாக்ஸ் முல்லர் போன்றவர்கள் சொன்னது அப்படிப்பட்டதுதான்.


நகரங்களை அழிப்பதைப் பற்றியும், மதில்களை அழிப்பதைப் பற்றியும் ரிக் வேதத்தில் பல இடங்களில் வருகிறது. அதிலும் விருத்திராசுரன் என்னும் அசுரனது 99 கோட்டைகளை இந்திரன் தகர்த்தான் என்றும் வருகிறது. அசுரன் என்றால் என்ன என்று முன்பே பார்த்தோம். தத்துவ ரீதியாகவும், உள்பொருள் வைத்தும், உருவகமாகவும், இந்தக் கதைகள் உள்ளன.


உதாரணமாக விருத்திராசுரனை அழித்ததைப் பார்ப்போம். விருத்திரன் என்றால் (போர்வை போல) மூடிக் கொண்டிருப்பவன் என்று பொருள். அவனை ஒரு பாம்பாகவும் வர்ணித்துள்ளனர். எப்பொழுதும் இந்திரன் நீரைக் கொடுப்பான். விருத்திரன் நீரைக் குடித்து விடுவான். இருவருக்குமே இதில்தான் சண்டை. இந்த விவரத்திலிருந்து தத்துவார்த்தமாக நாம் பொருள் காண வேண்டும்.

பொதுவாகவே பூமிக்குள் பாம்புகள் படுத்துக் கிடக்கின்றன என்பது நம் கதைகளில் சொல்லப்படுகிறது. அவை எப்பொழுது வெளியில் வரலாம் என்று காத்துக் கொண்டிருக்கின்றன. ராமாயணத்தில், அனுமன் கடலைக் கடந்தபோது, மைனாகம் என்னும் மலையைக் காண்பார். அந்த மலை பூமிக்குள்ளிலிருந்து பாம்புகள் வெளிவரும் ஒரு வாயிலை அடைத்துக் கொண்டு உட்கார்ந்திருப்பதாகச் சொல்லும். அப்படிச் சொன்னதன் பொருள் என்னவாக இருக்கும் என்று ஆராய்ந்தால், பூமி வெடித்து, எரிமலைக் குழம்புகள் வெளியே வராமல் இருக்க,  அப்படி வெடிப்பு ஏற்படக்கூடிய இடத்தில் ஒரு மலை உட்கார்ந்திருக்கிறது என்று சொல்லப்பட்டிருக்கிறது என்பது விளங்கும்.  


ராமர் சேதுப் பாலத்தை இடிக்க வேண்டும் என்று திராவிடவாதிகள் முனைப்பாக இருக்கிறார்களே, அந்த இடத்தின் அடிவாரம் எரிமலை வெடிப்புகள் நேரக்கூடிய இடம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். கடலடியில் இருக்கும் பழுதுபட்ட அடிவாரத்தை, மைனாக மலையும், ராமர் கட்டிய பாலமும், ஒட்டு போட்டு மூடி வைத்தாற்போல காப்பாற்றி வருகிறது. இயற்கையை ஒழுங்குபடுத்தி அதன் பயனாக மனித குலத்தையும் வாழ வைக்கிறது அந்தப் பாலம். மைனாக மலை அனுமனிடம் கூறுவதிலிருந்து, பூமிக்குள் இருக்கும் எரிமலைக் குழம்புகளைப் பாம்புகள் என்று சொல்லி வந்திருக்கின்றனர் என்று தெரிகிறது. நாம் பார்க்கும் நிலப்பகுதியே அப்படிப்பட்ட உள் குழம்புகள் வெளியேறி நாளடைவில் காய்ந்து, பொருக்கு தட்டினாற்போல ஆனதுதான். எனவே மூடியிருப்பவன் என்றும், பெரும் பாம்பு போன்றவன் என்றும் விருத்திராசுரனை வர்ணித்துள்ளதால், அது பூமியின் பொருக்கு போன்ற மேல்மட்ட நிலப்பகுதியே என்று அறியலாம்.


இன்னொரு கதையில் அந்தகாசுரன் என்னும் அசுரனை, ருத்திரன் போரிட்டு, வீழ்த்தி, பூமி மீது கவிழ்த்துப் படுக்க வைத்து விடுகிறார், அவன் மீண்டும் எழாத வண்ணம் 32 தெய்வங்கள் அவன் மீது உட்கார்ந்து விடுகின்றனர். அப்படிக் குப்புறப்படுத்த அசுரன் வாஸ்து புருஷன் என்று புராணம் கூறுகிறது. அந்தகாசுரன் என்றால் இருட்டானவன் என்று அர்த்தம். ருத்திரன் அவனை அடித்துக் குப்புறப் படுக்க வைத்தார் என்றால், இருள் குப்புற விழுந்தது, அதன் முதுகுப் புறம், அந்த இருளின் எதிர்பதமான ஒளி தெரியும் பகுதியாகும் என்றாகிறது. அதாவது ஒளி விழும் பூமியின் மேல் பகுதி என்று அர்த்தமாகிறது. அதாவது சூரிய மண்டலம் உண்டாகி, பூமியின் மீது வெளிச்சம் விழ ஆரம்பித்தது என்று பொருள் கொள்ள வேண்டும்.

இந்தப் படத்தில் குப்புறப் படுத்து இருப்பது அந்தகாசுரன். இவனே வாஸ்து புருஷன் ஆவான். எட்டு திசைத் தெய்வங்களும், 32 தெய்வங்களும் உலகைக் சூழ்ந்திருக்கின்றன. இவை எல்லாம் வேதத்தில் ஆங்காங்கே சொல்லப்பட்டுள்ளன. 

இந்தப் படத்தில் குறிக்கப்பட்டுள்ள எட்டு திசைத் தெய்வங்களில் வட திசைக்குரிய குபேரனைத் தவிர மற்ற தெய்வங்கள் ரிக்  வேதத்தில் அடிக்கடி பாடப்படுகின்றனர். அந்தப்  பாடல்கள் அடிப்படையில் முல்லரும், பிறரும் ஆரியப் படையெடுப்பையும், யுத்தங்களையும் 'கண்டு பிடுத்துள்ளனர்'. குபேரன் அதர்வண வேதத்தில் சொல்லப்படுகிறார். ரிக் வேதத்தில் குபேரனுக்குப் பதிலாக வட திசைக்கு சோமன் அதிபதியாகிறார். சோமன், இந்திரன் பற்றி வரும் வர்ணனைகளைக் கொண்டு, சோம பானம் என்பது ஒரு மது வகை என்றும், அதைத் தேவர்கள் விரும்பிப் பருகுவர் என்பதும், இந்த ஆராய்சியாளர்கள் மற்றும் திராவிடவாதிகள் கருத்து. ஆனால் வாஸ்து சாஸ்திரத்தை ஓரளவேனும் அறிந்தவர், இவற்றின் உள் பொருளை, உண்மைப் பொருளை நாம் சொல்லாமலே தெரிந்து கொள்வர்.

குப்புறப்படுத்த அந்தகாசுரனது முதுகுப்புறமான பூமியின் மீது விழும் ஒளியில் 32 தெய்வங்கள் குடி கொண்டுள்ளன என்கிறது வாஸ்து சாஸ்திரம். இவை உயிரினத்துக்கு உதவுகின்றன. அவற்றுள் ஒன்று இந்திரன். இந்த தெய்வங்களது சக்தியை வாஸ்து சாஸ்திரம் மூலம் அறிகிறொம். இந்த தெய்வங்கள் எல்லாம் ஆங்காங்கே வேதத்தில் வருகின்றன. அவை ஒவ்வொன்றுக்கும் ஒரு வேலை இருக்கிறது. அவை அடித்து விரட்டுகிறது என்ற பொருள் தொனிக்கும் இடங்களில், எதை அடித்து விரட்டுகிறது என்று கவனிக்க வேண்டும். தீய சக்திகளையோ, தீய குணங்களையோ, இயற்க்கைக்கு ஊறு விளைவிக்கும் சக்திகளையோ அவை அடித்து விரட்டும். இந்திரன் போன்ற தெய்வங்கள் ஆரியனுக்கு ஆதரவாக, அடித்து நொறுக்கி, தஸ்யூக்க்ளை விரட்டி விட்டனர் என்பதும் இவ்வாறு உட்பொருளுடன் ஆராய வேண்டிய கதைகளே.


ஒவ்வொரு தெய்வத்துக்கும் உள்ள பெயர், கதை போன்றவற்றின் அடிப்படையில், சில இயற்கை நிகழ்ச்சிகளை நாம் அடையாளம் கண்டு கொள்ள முடியும் வேதம், வாஸ்து, ஜோதிடம், புராணம் போன்றவை தரும் பல விவரங்களும், சுவாரசியமான புதிர் போலவே உள்ளன. அதனால்தான் இவற்றை அடக்கிய வேதத்தை வித்தை ஞானம் - என்கிறோம். வேதத்தை முன்னிட்டு இருக்கும் இந்து மதமானது அறிவுக்குப் புறம்பானது என்று கூப்பாடு போடுகின்ற - பகுத்தறிவு வாதிகள் என்று தங்களை அழைத்துக் கொள்ளும் திராவிடவாதிகளைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது.


விருத்திராசுரன் கதைக்கு வருவோம். திரவக் குழம்பாக பூமிக்கடியில் இருந்த லாவா என்னும் எரிமலைக் குழம்பு, பூமியின் மேலே மூடிக் கொண்டிருக்கிறது. இவனுக்கு விருத்திராசுரன் என்பது பெயர். இந்திரன் எவ்வளவு மழை பொழிந்தாலும், விருத்திராசுரன் குடித்து விடுவான் என்பது வேத, புராணக் கதை. ஆம். எவ்வளவு மழை பொழிந்தாலும் பூமி உள்வாங்கிக் கொண்டு விடும். இதை விருத்திராசுரன் இந்திரனை முழுங்கி விட்டான் என்கிறது கதை.


சில சமயங்களில் இந்திரன் விருத்திராசுரனை முழுங்கி விடுவான். அவனது 99 கோட்டைகளை நொறுக்கி அவனை அழித்துவிட்டான் என்றும் கதை இருக்கிறது. விருத்திராசுரன் ஒரு பிராம்மணன். அவனை அழித்து விடவே இந்திரனுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது, அதனால் அவன் பயந்து போய், ஒரு தாமரை மலரில் ஒளிந்து கொண்டான் என்று இந்தக் கதை சொல்கிறது.


மேற்சொன்ன இயற்கை விளக்கத்தை இதில் பொருத்திப் பாருங்கள். விருத்திராசுரனது கோட்டைகளை அழித்து, இந்திரன்  அவனைக் கொன்றுவிட்டான் என்றால், இந்திரனது மழையால், பிரளயம் போல எங்கும் வெள்ளக்காடாகி விட்டது என்று அர்த்தம் கொள்ளலாம். நிலப்பகுதி மேலே தெரியாதவண்ணம், எல்லா இடமும், நீரால் மூடப்பட்டிருக்க வேண்டும். அதனால் உயிர்கள் அழிந்து போயிருக்கும். முழு முதல் கடவுளான ப்ரம்மம், உயிரினங்கள் வாழ்வதற்காக உலகைப் படைத்து, நிலத்தைப் படைத்திருக்கிறது. இடைவிடாது மழை பொழிந்து அதன் காரணமாக நிலம் மறைந்துவிட்டால், அந்த பிரம்மத்துக்குத் தவறு இழைத்ததற்கு ஒப்பாகும். அதுவே பிரம்ம ஹத்தி தோஷமாகும்.


அப்படி ஒளிந்தவன் எங்கே ஒளிந்தான்? 
தாமரைப் பூவில் ஒளிந்தான். 
தாமரை என்பது தண்ணீரில் இருக்கும். 
அதனால் இந்திரிய சக்தியும் வெளிப்பட முடியாமல் மறைந்திருக்கிறது என்று அர்த்தமாகிறது. உலகமே வெள்ளக் காடாகி விட்டது என்ற சூழ்நிலையை இது உணர்த்துகிறது என்றும் சொல்லலாம்.


மீண்டும் உயிரினம் எப்படித் தோன்றுகிறது என்று ஹிந்து மதம் சொல்கிறது. 
தாமரையில் அமர்ந்துள்ள பிரம்மன் மூலமாக உயிரினப் படைப்பு ஆரம்பமாகிறது என்பது புராணக் கதை. உயிரினங்கள் அழிந்து போகவே, இந்திரிய சக்திகளுக்கு ஒரு வெளிப்பாடு கிடக்காததால், அந்த இந்திரிய சக்திகளின் தலைவனான இந்திரன் தாமரைத் தண்டில் ஒளிந்தான் என்று சொல்லப்படுகிறது. 
மீண்டும் உயிரினம் உண்டாக வேண்டி, 
தாமரைப் பூவில் பிரம்மன் தோன்றி 
படைப்பை ஆரம்பித்தான். 
அதன் மூலம், இந்திரிய வெளிப்பாடு (இந்திரனது ஆட்சி) எற்படுகிறது. 
இப்படி வேதக் கதைகள் எப்படி ஒன்றுக்கொன்று இயைந்து இருக்கின்றன என்று பாருங்கள்.


தாமரை என்பதற்கு இன்னொரு அர்த்தமும் உண்டு. 
தாமரையில் லஷ்மி இருப்பாள். 
ஜோதிடத்தில், சுக்கிரன் என்னும் கிரகத்துக்கு லஷ்மி தேவதை ஆவாள். சுக்கிரன் ராஜஸ எண்ணங்களுக்கு அதிபதி. இந்திரியங்கள், அதாவது ஐம்புலன் நுகர்ச்சிகளுக்கு சுக்கிரன் அதிபதி. லஷ்மியின் அருள் இருந்தால், இந்திரிய சுகங்களான, வீடு, வாசல், குடும்பம், சொத்து, சுகம் எல்லாம் கிடைக்கும் என்கிறது ஜோதிடம். சுக்கிர கிரகத்துக்கு லஷ்மி தேவதை, இந்திராணி அதி தேவதை, இந்திரன் ப்ரத்யதி தேவதை என்கிறது ஜோதிட சாஸ்திரம். உயிர்களது புலன் நுகர்ச்சிகளுக்குத் தேவையான இந்திரன் தாமரையில் ஒளிந்து கொண்டான் எவ்வாறு என்பது இதனால் தெரிகிறது.


இப்படிப் பகுத்து புரிந்து கொள்ளாத திராவிட ஜால்ராக்கள், லஷ்மி என்பதன் தத்துவத்தைப் புரிந்து கொள்ளாமல், அவளைக் கேவலப்படுத்தி, கவிதை என்ற பெயரில் உளறுகிறார்கள். தாங்கள் பகுத்தறிவாளர்கள் என்றும் சொல்லிக் கொள்கிறார்கள். அவர்கள் பேச்சிலிருந்து அவர்கள் சாத்திரங்களைப் படித்ததில்லை, உள்ளர்த்தங்களைப் புரிந்து கொள்ளும் பக்குவமும் அவர்களுக்கு இல்லை என்று தெரிகிறது.



இந்திர விருத்திராசுரன் பற்றிய இன்னொரு கதையில், வேறு ஒரு இயற்கை உண்மை மறைந்திருக்கிறது. விருத்திராசுரனது தந்தை பெயர் துவஷ்டா. அவர் முதலில் த்ரிசிரஸ் என்னும் மகனைப் பெற்றார். த்ரிசிரஸ் என்றால் மூன்று தலைகளை உடையவன் என்பது பொருள். அவன் இந்திரனை வெல்லப் படைக்கப்பட்டான். அவன்  ஒரு தலையால் உணவு உண்பானாம், மறு தலையால் சுற்றுப் புறத்தில் என்ன நடக்கிறது என்று பார்ப்பானாம். மூன்றாவது தலையால் வேதத்தைப் படிப்பானாம். அவனை இந்திரன் கொன்று விடுகிறான் என்பது கதை.


த்ரிசிரஸ் இரண்டு புலன் நுகர்ச்சிகளும் ஆராயும் அறிவும் மட்டுமே கொண்டவன் என்று தெரிகிறது. உண்ணுதல், பார்த்தல் இருந்திருக்கிறது. வேதம் படித்தல் என்பதால், புரிந்து கொள்ளும் மூளை அல்லது அறிவு இருந்திருக்கிறது என்று தெரிகிறது. அதாவது இரண்டறிவு படைத்த உயிரினத் தோற்றம் பற்றி இங்கு சொல்லப்படுகிறது. இந்திரன் காட்டுவதோ ஐந்து புலன்கள் மூலமான உணர்ச்சிகள் ஆகும். இந்திரன் த்ரிசிரஸை வென்றான் என்றால், நீரில் தோன்றிய இரண்டறிவு அல்லது இரண்டு புலன்கள் கொண்ட உயிர்கள் காலத்தைக் கடந்து, ஐம்புலன்களைக் கொண்ட உயிர்கள் தோன்றின காலம் ஆரம்பித்து விட்டது என்று பொருள் கொள்ளப்பட வேண்டும்.


த்ரிசிரஸை இந்திரன் கொன்று விடவே, துவஷ்டா கோபம் கொண்டு விருத்திராசுரனைப் படைத்தான் என்கிறது கதை. விருத்திராசுரன் என்பவன் பூமியின் நிலப்பகுதியின் உருவகமாவான். அவன் படைக்கப்பட்டு விட்டான் என்றால், நிலப்பகுதிகள் தோன்றிவிட்டன என்று சொல்வதாகிறது. இதெல்லாம் இட்டுக் கட்டி சொல்கிற கதை என்று சொல்லலாம்.
அங்குதான் ரிக் வேதம் மறை பொருளைக் காட்டுகிறது.


இந்தக் கதையில் வரும் துவஷ்டா என்னும் தெய்வம், வேதத்தில் சொல்லப்படும் தெய்வம். இந்தத் துவஷ்டா ஜோதிடத்திலும் வருகிறார். (வேதத்தின் முக்கிய அங்கமான ஜோதிடத்தை அறியாமல், வேதக் கருத்து பலவற்றுக்கும் பொருள் சொல்ல இயலாது.) சித்திரை நட்சத்திரத்துக்கு அதிபதி துவஷ்டா ஆவார். இந்த நட்சத்திரம் கன்னி ராசியில் உள்ளது. இன்றைய வானவியல் சாஸ்திரத்தில் கண்டுபிடித்தபடி, கன்னி ராசி முக்கியத்துவம் வாய்ந்தது. அதாவது, நாமிருக்கும் சூரிய மண்டலம், இந்த்க் கன்னி ராசிப் பகுதியிலிருந்து ஒருகாலத்தில் தோன்றியது. நமது மண்டலம் கன்னி ராசியைச் இன்றும் சுற்றி வந்து கொண்டிருக்கிறது. 

அதாவது நாமிருக்கும் பூமி சூரியனைச் சுற்றி வருகிறது.
சூரியனுடன் நாமும் சேர்ந்து, நமது பால் வெளி காலக்ஸியின் மையத்தைச் சுற்றி வருகிறோம். 
நம்மையும் சேர்த்து, இந்தப் பால்வெளி காலக்ஸி, அருகிலுள்ள மற்ற காலக்ஸிகளுடன் சேர்ந்து சித்திரை நக்ஷத்திரம் இருக்கும் கன்னி ராசியைச் சுற்றி வருகிறது.

இதுவரையான சுற்றுகளை இன்றைய அறிவியல் அறிந்திருக்கிறது. 
எதை மையமாகக் கொண்டு சுற்றுகிறோமோ, அதிலிருந்து அந்தச் சுற்றும் பகுதிகள் உண்டாகி உள்ளன என்று தெரிந்து கொள்ள வேண்டியது.
அதாவது நமது பூமி சூரியனைச் சுற்றி வருகிறது என்றால்,
நமது பூமி ஒரு சமயம், சூரியனது பகுதியாக இருந்தது என்று அர்த்தம்.
இதைப் படிப்படியாக எடுத்துக் கொண்டு போனால், 
இன்றைய நமது உலகம் முதலில் எங்கிருக்கிறது அல்லது எதன் அங்கமாக உள்ளிருந்தது என்று தெரியும்.
அது கன்னி ராசி இருக்கும் ‘விர்கோ சூப்பர் க்ளஸ்டர்’ ஆகும்.
எனவே உலகத்துக்கு முன் காரணம், கன்னி ராசி ஆகும்.



Virgo Cluster  என்று காணப்படும் பகுதியில் நாம் இருக்கிறோம். 
இந்தப் படத்தில் உர்ஸா மேஜர் ( Ursa Major) என்பது சப்த ரிஷி மண்டலம்.
அது குறிக்கப்படுள்ள பகுதியில் நமது உலகம் உள்ளது.
இது விர்கோ க்ளஸ்டரைச் சுற்றி வருகிறது.


அதன் முக்கிய நட்சத்திரமான சித்திரைக்கு அதிபதியாக சொல்லப்படும் துவஷ்டா, த்ரிஸிரஸையும், விருத்திராசுரனையும் படைத்த தகப்பன் என்றால், நாம் இருக்கும் இந்த பூமிப்பகுதியின் மூலக்கூறுகள் துவஷ்டாவில், அதாவது சித்திரை நட்சத்திரப்பகுதியில் ஒரு காலத்தில் இருந்தன என்றாகிறது.

சித்திரை நட்சத்திரத்தை முன்னிட்டு சித்திரை மாதமும், அந்த மாதமே வருட ஆரம்பமாகவும், அந்த மாதத்தில் சித்திரா பௌர்ணமியில் புகார் நகரில் இந்திர விழா ஆரம்பிக்கப்பட்டது என்பதும் எதேச்சையாக வந்தவை போல இல்லை. நன்கு ஆராய்ந்து, அறிந்து நமது ரிஷிகள் இந்தப் பததிகளைக் கொண்டு வந்திருக்கிறார்கள் என்று தெரிகிறது.

இப்படி ஒரு அறிவுச் சுரங்கத்தைக் கொண்ட வேதத்தையும், வேதக் கடவுளர்களையும் மொழிபெயர்ப்பு ஆராய்ச்சி என்ற போர்வையில் ஐரோப்பியர்கள் எப்படி சீரழித்து விட்டனர்?
அந்த சீரழிவையே ஒரு இயக்கமாகக் கொண்டு இந்தத் திராவிடவாதிகள் அறிவுக்கு சமாதி கட்டிவிட்டார்களே!. 



7 கருத்துகள்:

  1. ஸ்ரீமதி ஜெயஸ்ரீ சாரநாதன் அவர்களே,

    அருமையான தகவல்கள் அடங்கிய பிரமிப்பூட்டும் பதிவு.

    பதிலளிநீக்கு
  2. நன்றி திரு தனபால் அவர்களே.
    வாஸ்து மண்டல படத்தின் கீழ் ஒரு பத்தியைச் சேர்த்துள்ளேன். படிக்கவும்.

    பதிலளிநீக்கு
  3. ஒரு சில நாட்களுக்கு முன், நான் உங்கள் வலைப்பதிவுகளை படிக்க ஆரம்பித்தேன். இந்த எழுத்துக்களில் அற்புதமான வாசிப்பு உருவாக்குகின்றன மற்றும் எங்கள் உயர்ந்த வரலாறு நல்ல உணர்வை கொடுக்கிறது. நான் வேதங்கள் மற்றும் சங்க இலக்கியம் பின்னால் உண்மையான அர்த்தங்கள் படிக்க வாய்ப்பு பெறுவதற்கு என்னை அதிர்ஷ்டம் கருதுகிறேன். உண்மையை வெளியே கொண்டு உங்களுக்கு என் உண்மையான நன்றி.

    அன்போடு
    வைத்தியநாதன்

    பதிலளிநீக்கு
  4. நன்றி திரு வைத்தியநாதன் அவர்களே.

    பதிலளிநீக்கு
  5. That is a brilliant effort from you Madam Jayashree!! I am really proud of being born in India... Hats off to you!! A kind request, please release all this series as a book. Because it will reach millions and millions! Number of people still read magazines and newspapers are greater than internet users. Or this series can be published every week in magazines like Thuglak so that it reaches many more people.

    பதிலளிநீக்கு