செவ்வாய், 28 டிசம்பர், 2010

24. ரிக் வேதப் போர்களும், மாக்ஸ் முல்லர் தோல்வியும்.




ரிக் வேதத்திலிருந்து ஆரியப் படையெடுப்புக் கதையை எடுத்தவர் மாக்ஸ் முல்லர். ஆரியக் கதையை நம்பும் தமிழ் மக்கள், முல்லர் அவர்கள் தானே ரிக் வேத மூலத்தைப் படித்து, மொழி பெயர்த்து இந்த ஆரியப் படையெடுப்பைக் கண்டு பிடித்தார் என்று நினைக்கிறார்கள். ரிக் வேதத்தின் மூலத்தைப் படித்து அவர் இந்தக் கதையைக் கண்டு பிடிக்கவில்லை. வேதத்துக்கும், வேதம் ஓதுதலுக்கும் நம் நாட்டில் கொடுக்கப்பட்ட மரியாதையை அவர் ஒருபோதும் அறிந்ததில்லை. ஒரு முறைகூட அவர் இந்தியாவுக்கு வந்ததில்லை. இந்து மதத்தின் தத்துவ மரபை நேரில் கேட்டு, கண்டு அவர் அறிந்ததில்லை. அவரது கவனம் வரலாற்று ஆராய்ச்சியில் இருந்தது. ரிக் வேத மொழிபெயர்ப்புகளைப் படித்து அவர் உருவாக்கின வரலாற்றுச் சிந்தனையே ஆரியக் கதை.


‘A History of Ancient Sanskrit Literature – The primitive religion of the Brahmans’ என்னும் நூலை 1859 ஆம் ஆண்டு வெளியிட்டார். அதன் முன்னுரையில் மொழி ஆராய்ச்சியின் மூலம், வரலாற்றைக் கண்டு பிடிக்க வேண்டும் என்று கூறுகிறார். இந்தியாவில் சமஸ்க்ருத மொழியில் ஏராளமான நூல்கள் இருந்தன. எல்லா நூல்களிலும், வேதத்தைப் பற்றி புகழ்ந்து ஒரு குறிப்பாவது இருந்தது. யாரைக் கேட்டாலும், எந்த சமஸ்க்ருத நூலைப் படித்தாலும் வேதமே ஆதியானது என்று சொன்னர்கள். இது முல்லரின் கவனத்தைக் கவர்ந்தது. வேதம் என்பது ஆதி என்றால் அதில்தான் இந்திய வரலாற்றின் மூலம் இருக்க வேண்டும் என்று முன்னுரையில் வாதிட்டுள்ளார்.


இப்படி நினைத்தற்கு இன்னொரு காரணமும் உண்டு. அவர் பின் பற்றிய கிறிஸ்து மதத்தில் அவர்கள் மத நூலான பைபிளை முன்னிட்டே வரலாற்றை ஆராய்ந்தனர். கி-பி- 1654 ஆம் ஆண்டு, ஐயர்லாந்தைச் சார்ந்த உஷர் என்னும் ஆர்ச்பிஷப் அவர்கள் பைபிளில் உள்ள விவரங்கள் அடிப்டையில் கி-மு. 4004 ஆம் ஆண்டு அக்டோபர் 23 ஆம் தேதி காலை 9 மணியளவில் இந்த உலகம் தோன்றியது என்று கூறியுள்ளார். அதனால் அது முதற்கொண்டே உலகமும், மக்களும் இருந்திருக்கின்றனர் என்பதே அவர்கள் கோட்பாடு.


கி-மு- 4004 ஆம் ஆண்டு உலகம் தோன்றியிருந்தால், அதற்குப் பின் வந்த பைபிள் கூறும் பெரு வெள்ளம், கி- மு- 2448 ஆம் ஆண்டில் வந்திருக்க வேண்டும். பிறகு வெள்ள நீர் வற்றி மக்கள் வாழ்க்கையைத் தொடங்கி, அதன்பின் ஆங்காங்கு குடி பெயர, அடுத்த 1000 ஆண்டுகள் ஆகியிருக்கும். இந்தக் கணக்கின் அடிப்படையில் கி-மு- 1500 இல் ஆரியப் படையெடுப்பு நிகழ்ந்திருக்கும். இதுவே முல்லர் போன்றவர்களது கருத்து. இவர்கள் இந்திய நூல்களைப் படிக்கவில்லை. இந்தப் பிரபஞ்சம் தோன்றின வரலாற்றைச் சொல்கின்றன நமது நூல்கள். அவை சொல்லும் காலக் கணக்கை அறிவியல் ஆமோதிக்கிறது. இதையெல்லாம் அறியாத காலத்தில், முல்லர் புகுத்திய குழப்பத்துக்கு ஆதரவு தரும் திராவிட அறிவிலிகளிடத்தில் இன்னும் நாம் பலி கடா ஆகிக் கொண்டிருக்கிறோம்


பைபிளைப் படித்த முல்லர் போன்றவர்களுக்கு  இந்தியாவில் இருந்த பல நூல்கள் குழப்பத்தைத் தந்தன. மத நூல் என்று ஒரே ஒரு நூல் ஹிந்து மதத்தில் இல்லை. ஒரே ஒரு தெய்வம் இல்லை. தாங்களே இதற்கெல்லாம் விடை கண்டு பிடிப்பதற்கு முன், அவர்கள் ஹிந்து ஞானிகளை அணுகி விவரங்கள் கேட்டிருக்க வேண்டும். யஞ்ஞவாக்கியர் பாணியில் ஞானிகள்  சொல்லியிருப்பார்கள். தெய்வங்கள் மொத்தம் 3,003, 303, 33, 6, 3, 1-1/2, 1 என்று இயற்கை வழியில், தத்துவ நெறியில் கூறியிருப்பார்கள். ரிக் வேதத்தில் வரும் எல்லா தெய்வங்களும் இவற்றுக்குள் அடங்கி விடும். அப்படிக் கேட்காமல் ரிக் வேதத்தில் தாங்களாகவே இந்திய வரலாற்றைத் தேடினார்கள்.


முதலில் இந்திய சமஸ்க்ருதப் பண்டிதர்களிடம், இந்திய வரலாற்றைப் பற்றிக் கேட்டிருக்கிறார்கள். அந்தப் பண்டிதர்கள் ராமாயண, மஹாபாரதத்தையே உரைத்துள்ளார்கள். அவைதான் உண்மையில் நமது சரித்திரப் புத்தகங்கள். ஆனால் முல்லர் போன்றவர்கள் அவற்றுள் வேதம் இல்லையே என்றும், வேதத்தில் ராமாயண, மஹாபாரதம் வரவில்லையே என்றும் குழம்பியுள்ளனர். வேதம் ஞான வழி என்பதெல்லாம் அவர்களுக்குப் புரிபடவில்லை. ஐரோப்பியப் பல்கலைக் கழகங்களில் தாங்கள் படித்த சமஸ்க்ருத அறிவைக் கொண்டு, வேதத்தையும், உபநிஷத்தையும் ஆராய்ந்து, அவை தங்களுக்குள் ஒன்றுக்கொன்று முரணானவை என்றுகூட சொல்லி இருக்கிறார்கள். அவர்கள் புரிதலுக்கு ஒத்தாற்போல, இந்தியப் பண்டிதர்கள் கருத்து தெரிவிக்கவில்லை என்பதால், இந்தியர்களுக்கே வரலாற்று அறிவும், சிந்தனையும் கிடையாது என்று முடிவு செய்து விட்டனர். முல்லர் அந்த முடிவுக்கு வந்து விட்டார்.


ரிக் வேதத்தை ஆராய்ந்தால் மட்டுமே இந்திய வரலாற்றைக் கண்டு பிடிக்க முடியும் என்று தேட ஆரம்பித்ததன் விளைவாக ஆரியக் கதை பிறந்தது. திறந்த மனத்துடன், மாக்ஸ் முல்லர் அவர்கள் ரிக் வேதத்தைப் படித்திருந்தால், அதிலிருக்கும் அறிவியலைக் கண்டிருப்பார். அவர் வாழ்ந்த ஐரோப்பாவில் கோபர்னிகஸ் காலம் வரை சூரியனே பூமியைச் சுற்றி வந்தது என்று எண்ணியிருந்தனர். ஆனால் இந்தியாவில் அந்தக் கருத்து இல்லை. அதிலும் ரிக் வேதத்தில் குறிப்பாக, விஸ்வதேவஸ் பற்றி வரும் ஸ்லோகங்களில் (1-164) பூமி சூரியனைச் சுற்றி வருதலும், ராசி மண்டலமும் விவரிக்கப்பட்டுள்ளன. திறந்த மனத்துடன் அவர் ரிக் வேதத்தைப் படித்திருந்தால், வேதம் என்பது விஞ்ஞானம் என்பதைப் புரிந்து கொண்டிருப்பார்.


ஆனால் அதில் வரலாற்றைத் தேட முற்படவே அவர் கண்ணில் பட்டது, குதிரைகளும், ரதங்களும்தான். அன்றைக்கு அவர்கள் தெரிந்து வைத்திருந்த வரலாற்றின்படி. மத்திய ஐரோப்பியாவில் வெள்ளை இன நாடோடி மக்கள் இருந்தனர். ரிக் வேதத்தில் வெள்ளை நிறத்திலும், மஞ்சள் நிறத்திலும் இந்திரனும், ஆரியனும் சொல்லப்படவே, இவர்கள் அந்த நாடோடிகள் என்று முடிவு கட்டினர். இப்படி எல்லாம் முல்லர் எடுத்த முடிவுகளில் அவர் தோல்வியே கண்டுள்ளார் என்பதைக் காலமும், திறந்த கண்ணோட்டத்துடன் கூடிய ஆராய்ச்சிகளும் காட்டுகின்றன.


முதலில் முல்லர் கூறிய நாடோடிகளைப் பற்றிப் பார்ப்போம்.
நாடோடி மக்களுக்கு ரதமும், குதிரைகளும் எங்கிருந்து வந்தன?
அவர்களிடம் ரதங்களும், குதிரைகளும் இருந்திருந்தால் அவர்களை நாடோடிகள் என்று எப்படி அழைக்கலாம்?
ஐரோப்பியாவில் அந்தக் காலக் கட்டத்தில் நாடோடிகள் இருந்தனர் என்பது ஐரோப்பிய நூல்கள் மூலம் அவர்கள் தெரிந்து கொண்ட விவரம் என்றால், அந்த நாடோடிகளும், இவர்களும் எப்படி ஒன்றாவர்?


அடுத்து முல்லர் கூறுவது, குதிரைகள் மீதும் தேரில் பயணித்தும் இவர்கள் சிந்து நதியைக் கடந்தனர் என்பது. இந்த விவரங்கள் ரிக் வேதத்தில் வருவது. நதியைக் கடக்க படகுதான் வேண்டும். இந்திரனும், ஆரியனும், சுதாஸும் சிந்து நதியைப் படகில் கடந்து வந்து போரிட்டனர் என்று ரிக் வேதம் சொல்லவில்லை. படையெடுப்பு நடந்ததாகச் சொல்லப்படும் இடத்தில், தேருக்கும், குதிரைகளுக்கும் பயன் கிடையாது. அவற்றைக் கொண்டு போர் புரிந்திருந்தால், அவற்றைக் காப்பாற்றி, நதியைக் கடப்பதற்கு சிரமம் இருந்திருக்கும். அவை படை பலமாக இருந்திருக்க முடியாது. இதையெல்லாம் முல்லர் சிந்தித்துப் பார்க்கவில்லை.


ஹிந்து மதத்தைப் பற்றிப் புரிந்து கொள்ளாமல் முல்லர் செய்த பெரிய அபத்தம், சப்த சிந்துவைத் தாண்டி ஆரியர்கள் வந்தனர் என்பது. ரிக் வேதத்தில் சப்த சிந்து என்ற பதம் அடிக்கடி வருகிறது. இதை சிந்து நதி என்று முல்லர் உட்பட பல ஐரோப்பியர்கள் பொருள் கொண்டனர். சப்த என்றால் ஏழு என்பது பொருள். சிந்து நதியில் எங்கே ஏழு என்பது வருகிறது? சிந்து நதி என்பது ஒரு நதி. அதன் கிளைகள் ஐந்து. ஆக மொத்தம் ஆறு நதிகள்தான் உள்ளன. அப்படியானால் சப்த சிந்து என்பது சிந்து நதியைக் குறிக்கிறது என்று எப்படிச் சொல்ல முடியும்?


அடுத்து ‘ஆயம்என்னும் சொல் ரிக் வேதத்தில் அடிக்கடி வருகிறது. இதனை இரும்பு என்று மொழி பெயர்த்துள்ளன்ர். ஆயத்தின் அடிப்படையில் நகரங்களை நிர்மாணித்தனர் என்னும் பொருளில் இந்தச் சொல் வருகிறது. முல்லர் போன்ற ஐரோப்பியர்கள் கண்டு வைத்த வரலாற்று ஆராய்ச்சி இதை ஒரு காலக் கட்டமாகப்பார்த்தது. அதாவது, மனிதன் தோற்றத்தையும் வளர்ச்சியையும், மனிதன் பயன்படுத்திய பொருட்களது அடிப்படையில் வகைப்படுத்தினர். கற்காலம், செப்புக் காலம், பித்தளைக் காலம் என்று தாதுக்களை மனிதன் படிப்படையாகப் பயன் படுத்தத் தெரிந்து கொண்டான். அதைப்போல இரும்பைப் பயன்படுத்திய காலம் என்று இந்த ரிக் வேத காலத்தை முடிவு செய்தனர். ஆயம் என்னும் சொல் ரிக் வேதத்தில் வரவே இந்த முடிவுக்கு வந்தனர்.


இதைப் பற்றி நான் இங்கு கூறப்போகும் கருத்து இன்றைக்கு ஆரியப் படையெடுப்பு பற்றி ஆராயும் அறிஞர்கள் கவனத்துக்கு வர வேண்டும் என்று விரும்புகிறேன்.


ஆயத்தைக் கொண்டு நகரத்தை நிர்மாணித்தனர் என்பது ஆரியர்கள், த்ஸ்யூக்கள் என்று இரு தரப்பாருக்குமே சொல்லப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது. இரும்பை உபயோகித்து நகர நிர்மாணம் செய்தனர் என்று இதற்குப் பொருள் கொண்டுள்ளனர். ஆயம் என்ற சொல் நகர நிர்மாணத்தில் வருவதால் அங்கு அதற்கு ‘இரும்புஎன்ற பொருள் சரிவராது. ஏனெனில், நகரமோ, நாடொ, வீடோ, தோட்டமோ, வயலோ, எந்த ஒரு இடமாக இருந்தாலும் அதில் ஆயம் என்ற ஒன்று இருக்கும் என்பது வாஸ்து சாஸ்திர விதி.


ஆயப் பிரகரணம் என்னும் ஒரு பிரிவு வாஸ்து சாஸ்திரத்தில் உண்டு. ஒரு நில அமைப்பின் நீள அகலத்தை அளந்து, சில கணித வழக்குகள் அடிப்படையில் அந்த நில அமைப்பு ஒருவருக்கு எந்த அளவு ஆயம் தரும் என்று அளவிட முடியும். ஆயம் என்னும் இந்தக் கணக்கிலிருந்துதான் ஆயத் தீர்வை என்பது வந்தது. அதாவது ஒரு நில அமைப்பு அதன் சொந்தக் காரருக்கு ஆயம் தருவது மட்டுமல்லாமல், அதன் அடிப்படையில் ஆயம் என்னும் வரும்படியை அரசுக்கும் தருகிறது. வீட்டு வரி போல என்று இதைக் கூறலாம். ஆயக் கணக்கு செய்தவன் ஆய் அண்டிரன் என்னும் வேள் அரசன். இவனைப் பற்றிப் புற நானூறில் பாடல்கள் உள்ளன. மெகஸ்தனிஸ் எழுதியுள்ள குறிப்புகளில் 7 வித மக்கள் இந்தியாவில் இருந்தன்ர் என்கிறார். அவர்களுள் ஒரு வகையில் ஆயம் கணக்கிட்டு, அதை வசூலிப்பவர் வருகிறார். சிந்து சமவெளிப் பகுதியில் ஆயம் கணக்கிடுபவர்கள் இருந்திருக்கிறார்கள். அவ்வலவு ஏன், இந்தியாவில் எல்லா இடஙளிலும் இருந்திருக்கின்றார்கள். இந்த ஆயம் ஆலயம், க்ருஹம் (வீடு), சிற்பம், யானம் ( கருவிகள்) என்று எல்லாவற்றுக்குமே உண்டு. அவ்வவற்றுக்கான கணக்கின் அடைப்படையில் ஆயம் அமைத்து இவற்றை அமைப்பர்.

ஆயம் ஒழுங்காக அமைய வேண்டும். அதாவது ஒரு கருவி செய்வதாக இருந்தாலும், அதற்கு சில கணக்கு, அளவுகள் உள்ளன. அதன்படி ஆயம் என்பதை அளவிடுவர். அது இந்திராம்சம், ராஜாம்சம், யமாம்சம் என்று வரலாம். இந்திராம்சம் இருந்தால் புகழும், மதிப்பும் கிடைக்கும். ராஜாம்சம் என்றால், செல்வம் பெருகும், யமாம்சம் என்றால், துக்கம், நஷ்டம் ஏற்படும். எனவே ஆயம் கணக்கிட்டு, யமாம்சத்தைத் தவிர்க்கும் வண்ணம் நீள, அகலம் போன்ற அளவீடுகளை அட்ஜஸ்ட் செய்து ஆயம் அமைப்பார்கள்.


அது போல ஒரு நகரம் அமைக்க வேண்டும் என்றால், அதன் நீள அகலங்களைப் பெருக்கி பரப்பளவு கண்டுபிடித்து, அதைப் பலவிதமான விதங்களில் பெருக்கியோ, வகுத்தோ, வெவ்வேறு ஆயங்களைப் பெறுவர். அப்படிப் பெரும் ஆயங்கள் மொத்தம் 8 உள்ளன. நகரம் அமைந்த திசை, மக்கள் தொழில் (இதை வருணம் என்றனர். தொழில் ரீதியாகவே மக்களைப் பிரித்தனர் என்பதை வாஸ்து சாஸ்திர ஆயப் பிரிவில் பார்க்கலாம், மெகஸ்தனிஸ் எழுதிய குறிப்புகளிலும் பார்க்கலாம்.) ஆகியவற்றின் அடைப்படையில் ஆயம் கணக்கிடப்படும்.  


ஆயம் என்பதற்குச் சரியான ஆங்கிலப் பதம் கிடையாது. அதை வருவாய் என்று மொழி பெயர்க்கலாம். ஆதாயம் என்ற சொல் ஆயத்தில் இருந்து வந்தது. ஒரு நில அமைப்பில் கிடைக்கும் ஆதாயம் ஆயம் ஆகும். அதற்கு எதிர்ப்பதம் விரயம் ஆகும்.


பலருக்கும் வியப்பைத்தரும் செய்தி, இந்த ‘ஆயம்என்னும் சொல்லுக்குத் தமிழில் பதம் உண்டு. சங்கத் தமிழில் உண்டு. அது ‘யாணர் என்பதாகும். புறநானூற்றில் 3 இடங்களில் யாணர் என்னும் சொல் வருகிறது. அதற்குப் ‘புது வருவாய்என்று உரை ஆசிரியர்கள் அர்த்தம் எழுதி உள்ளனர்.


இந்தச் சொல், ரிக் வேதத்தில் ஆயம் என்பது எப்படி நகரம், ஊர் என்பதை முன்னிட்டு வந்துள்ளதோ அவ்வாறே வந்துள்ளது.


உதியன் சேரலாதனைப் பற்றிய 2- ஆம் பாடலில் (புற நானூறு)
“யாணர் வைப்பின் நன்னாட்டுப் பொருந  என்று வருகிறது.
இதற்கு உரைஆசிரியர் (டா. உ.வே.சா அவர்கள் கண்டெடுத்த உரை)
“புது வருவாயை உடைய இடையறாத ஊர்களையுடைய நன்னாட்டிற்கு வேந்தே


ஊர்கள் ஆயம் கொண்டு அமைக்கப்பட்டுள்ளன. அதனால் மக்களுக்கும், அரசுக்கும் வருவாய் கிடைத்த்து. இன்றைக்கு வீட்டு வரி வசூலிப்பது போல, ஆயம் வசூலித்தார்கள்.


பாடல் 42 இல் “யாணர்த்தாகிய அரிநர் என்று வருகிறது.
இதன் உரை “புது வருவாயுடைத்தாய் நெல் அறுப்பர்.
வயல்காட்டுக்கும் ஆயம் உண்டு.
நெல் விளைச்சலுக்கும் ஆயம் வசூலிப்பர்.


பாடல் 375 இல் “யாணர் வரையணி படப்பை நன்னாட்டுப் பொருந என்று வருகிறது. இதன் உரை, இடையறாத செல்வ வருவாயையுடைய தோட்டங்களை உடைய நன்னாட்டு அரசனே என்பதாகும்.
படப்பை என்றால் தோட்டம் என்பது பொருள்.
தோட்டத்திலும் ஆயம் கிடைத்தது.


இன்று தமிழ் அறிந்தவர்களுக்கே யாணர் என்றால் என்ன என்று சொல்லத் தெரியாது. காரணம், ஆயப் பிரகரணம் அறிந்திருந்தால்தான் இதைப் பற்றித் தெரிந்து கொண்டிருக்க முடியும். ஆயப் பிரகரணம் வாஸ்து நூல்கள் எல்லாவற்றிலும் உள்ளது. தமிழ் நாட்டில் திராவிடவாதிகள் என்றைக்கு சமஸ்க்ருதத்தை ஒழித்தார்களோ அன்றிலிருந்து ஆயம் பற்றிய அறிவும் மறைந்து விட்டது.


முல்லர் தோல்வியைத் தழுவிய மற்றொரு கருத்து நகரங்களை அழிப்பது பற்றியும், மதில்களை அழிப்பது பற்றியும் ரிக் வேதத்தில் சொல்லப்பட்டுள்ள வர்ணனைகள். இந்த வர்ணனைகள் படையெடுப்பைக் குறிப்பதாகவே முல்லரும், அவரைச் சேர்ந்தவர்களும் நினைத்தனர். இவற்றின் உண்மை நிலவரத்தையும் பார்ப்போம்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக