செவ்வாய், 31 மே, 2011

55. வராஹமிஹிரர் காட்டும் திராவிட நாடு -1



பாரத நாட்டில் இருந்த நாடுகள் எவை எவை என்று பல் வேறு காலக் கட்டங்களில் எழுந்த பல நூல்கள் குறிப்பிட்டுள்ளன. 5000 ஆண்டுகளுக்கு முன்பான சரித்திரத்தைச் சொல்லும் மஹாபாரதத்தில் திராவிடம் என்னும் ஒரு நாடு சொல்லப்பட்டுள்ளது என்பதை இந்தத் தொடரில் பல இடங்களில் கண்டோம்.  


1000 வருடங்களுக்கு முந்தினதாகக் கருதப்படும் தமிழ் அகராதியான திவாகர நிகண்டில் திராவிடம் என்னும் ஒரு நாட்டை, தமிழ் நாட்டுக்கு வெளியே இருந்த 18 நாடுகளுள் ஒன்று என்று குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் கண்டோம். (பகுதி 50).

இந்த இரு காலக்கட்டங்களின் இடையில் எழுந்த ப்ருஹத் சம்ஹிதையிலும், திராவிடம் என்று ஒரு நாட்டின் இருப்பிடம் சொல்லப்பட்டுள்ளது. அதிலும், மிகத் தெளிவாக அந்த நாடு இருக்கும் திசையைச் சொல்கிறது.
 
இந்த ப்ருஹத் சம்ஹிதை, வராஹ மிஹிரர் என்னும் ஜோதிட மேதையால் எழுதப்பட்டது. விக்கிரமாதித்த அரசனது அவையில் இருந்த நவரத்தினங்களுள்ஒருவரான வராஹமிஹிர்ர் கி.பி 1 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். எனவே 2000 ஆண்டுகளுக்கு முன்பு வரை திராவிடம் என்ற நாடு இருந்தது என்பது ஒப்புக்கொள்ளப்படவேண்டியது

                                                                  வராஹமிஹிரர்


இதையே வேறு விதமாகச் சொல்வதென்றால், 5000 ஆண்டுகளுக்கு முன் மஹாபாரதக் காலத்தில் இருந்த திராவிடம் என்னும் நிலப்பகுதி, 2000 ஆண்டுகளுக்கு முன் வரை நீடித்திருக்கிறது. ஆனால் இந்த திராவிடத்தை, சேர, சோழ, பாண்டியர்கள் ஆண்ட தமிழ் நாட்டுப் பகுதியில் சொல்லவில்லை என்பது கவனிக்கப்பட வேண்டியது.
ப்ருஹத் சம்ஹிதையைப் பொருத்தவரை அதற்கு ஒரு முக்கியத்துவம் உண்டு. மற்ற நூல்களில் கொடுக்கப்பட்டுள்ள நிலம், நாடுகள் அமைப்பை விட இந்த ப்ருஹத் சம்ஹிதையில் கொடுக்கப்பட்டுள்ள நாடுகளும், அவற்றின் அமைப்பும் ஆதாரமானவை. ஏனெனில், இன்று வரை இந்த சம்ஹிதை கொடுத்துள்ள அமைப்பின் அடிப்படையில்தான், நாடுகளைப் பாதிக்கக்கூடிய பூகம்பம், வெள்ளம், மழை போன்ற இயற்கை நிகழ்ச்சிகளைப் பற்றி ஜோதிட ரீதியான கணிப்பைச் செய்து வருகிறார்கள்


இந்த அமைப்பு வராஹமிஹிரரால் தன்னிச்சையாக ஏற்படுத்தப்பட்டது அல்ல. அவருக்கும் முன்பே புழக்கத்தில் இருந்து வந்த அமைப்பை அவர் கொடுத்துள்ளார்.
பொதுவாகவே சம்ஹிதை என்றாலே தொகுப்பு என்பது பொருள். பல முனிவர்களும், பல்வேறு விஷயங்களைப் பற்றிச் சொன்னவற்றைத் தொகுத்து, வராஹ மிஹிரர் இந்த நூலைத் தந்துள்ளதாக அவரே இந்த நூலில் குறிப்பிட்டுள்ளார்.
 
அவற்றுள் ஒன்று, நாடுகளின் அமைப்பான கூர்மச் சக்கரம் ஆகும்.
 
கூர்மம் என்றால் ஆமை என்பது பொருள். மத்ஸ்ய அவதாரத்தின் போது (மீன்) வைவஸ்வத மனுவும், அவனுடன் தப்பி வந்த மக்களும் சரஸ்வதி நதி தீரத்தில் குடி அமர்ந்தனர். மத்ஸ்ய அவதாரத்துக்கு அடுத்து வருவது கூர்ம அவதாரம். கூர்மச் சக்கரத்தின் அமைப்பைப் பார்க்கையில், கூர்ம அவதாரத்தை ஒட்டி அது அமைந்துள்ளது என்று தெரிகிறது. கூர்ம அவதாரம் என்பது என்னவாக இருக்கும் என்று தெரிந்துகொண்டால் இந்த கூர்மச் சக்கரம் அமைக்கப்பட்ட விதத்தைப் புரிந்து கொள்ள முடியும்.

கூர்ம அவதாரமும், கூர்மச் சக்கரமும்.

விஷ்ணுவின் 10 அவதாரங்களில் 2-ஆவது அவதாரமான கூர்ம அவதாரத்தில், விஷ்ணுவே கூர்மமாக, ஆணித்தரமான ஒரு அச்சாக இருந்து மேரு மலையைத் தாங்குகிறார். அதை வாசுகி என்னும் பாம்பால் சுற்றி, தேவர்களும், அசுரர்களும் மாறி மாறி இழுத்துக் கடைகின்றனர். அதன் காரணமாக முதலில் ஆலஹால விஷமும், பிறகு லக்ஷ்மியும் உண்டாகின்றனர் என்பது கூர்ம அவதாரக் கதை செல்கிறது. வராஹமிஹிரர் தரும் கூர்மச் சக்கரம்இந்த அவதாரத்தின் தாத்பரியத்தை விளக்குகிறது.

 
கூர்மச் சக்கரம் பூமியின் அச்சு செல்லும் திசையில் அமைந்துள்ளது. இலங்கை, உஜ்ஜயினி, குருக்ஷேத்திரம் ஆகிய இடங்களை இணைத்து வடக்கு, தெற்காகச் செல்லும் கற்பனைக் கோடு இந்த அச்சின் மீது உள்ளது என்று இந்திய விண்வெளி முன்னோடியான பாஸ்காராச்சாரியார் (கி.பி 12 ஆம் நூற்றாண்டு) எழுதியுள்ளார். இந்த அச்சில் உஜ்ஜயினிக்கு வடக்கே, குருக்ஷேத்திரம் வரை மத்திய தேசம் என்றும், கூர்மத்தின் ஆதாரமான முதுகு  என்றும் வராஹமிஹிரர் கூறுகிறார்.

 
இந்தப் பகுதியில்தான் சரஸ்வதி நதி ஓடியது. சரஸ்வதி நதி தீரமும் இந்தக் கூர்மச் சக்கரத்தின் மத்தியப்பகுதியில் உள்ளது என்கிறார் வராஹமிஹிரர். இந்த இடத்தையே மத்திய தேசம் என்று முன்னாளில் அழைத்தனர். (இன்றைய மத்தியப் பிரதேசம் அல்ல).
இனி அவதாரக் கதையின் அர்த்தத்தையும் பார்ப்போம்.

 
இந்த அச்சின் வடக்கு உச்சி வட துருவப்பகுதியாகும். அதுவே மேருவின் உச்சி எனப்பட்டது. அது சப்த ரிஷி மண்டலத்தை நோக்கி உள்ளது. அங்கிருந்து பார்த்தால், நம்மைச் சுற்றியுள்ள அண்டம் முழுவதும் அந்த மேருவைச் சுற்றி வருவது போலத்தோன்றும்.

 
தற்சமயம் 23-1/2 டிகிரி சாய்ந்துள்ள இந்த அச்சை ஆதாரமாகக் கொண்டு பூமியானது இடை விடாது சுழன்று கொண்டிருக்கிறது. இதனால் இரவும், பகலும் மாறி, மாறி வருகின்றன. பூமியின் வட பகுதிக்கும், தென் பகுதிக்கும் பருவ காலங்கள் மாறி மாறி வருகின்றன. பகலும், ஒளியும், பூமியின் வட பாகமும் தேவர்கள் வசம் எனப்படும். இரவும், இருட்டும், பூமியின் தென் பாகமும் அசுரர்க்ள் வசம் எனப்படும். பகலும், இரவும், பருவ காலங்களும் மாறி மாறி வருவதால், தேவர்களும், அசுரர்களும், மேரு மலையைக் கொண்டு கடலைக் கடைகின்றனர் என்று உருவகப்படுத்தப்பட்டுள்ளது.

 
இந்தக் கடைதலுக்குப் பயன்படுவது ஒரு பாம்பு எனப்படுகிறது. பூமிக்குள் இருக்கும் பூமிக் குழம்புகள், பாம்புகள் என்று வருணிக்கப்படுகின்றன என்று முன்பே அறிந்தோம். (பகுதி 25). பூமியின் அச்சு சுழல்வதால், பூமிக் குழம்புகள் கடையப்பட்டு அவ்வபொழுது வெளியே வருகின்றன. அப்படி வரும்போது பூமிக்குள் இருக்கும் விஷ வாயுக்களும் வெளி வருகின்றன. (ஆலஹால விஷம்) வெளியே வரும் தாதுக்குழம்புகள் நாளடைவில் குளிர்ந்து, திட வடிவமடைந்து, விலை மதிப்பற்ற ரத்தினங்களாகவும்,மணிகளாகவும் ஆகின்றன. (லக்ஷ்மி / செல்வம்) இந்த விதமான நிகழ்ச்சிகள்,பூமி உண்டான காலத்தில் அதிக அளவில் நடந்தன. அவ்வப்பொழுதும், ஆங்காங்கே நடந்து கொண்டு வருகின்றன.  14,000 ஆண்டுகளுக்கு முன் சரஸ்வதிப் படுகையிலும், இமயமலையிலும் நடந்தன.

சரஸ்வதி நதியை ஒட்டி பூமித்தட்டு செல்லவே அடிக்கடி பூமிச் சலனங்கள் நடை பெற்றிருக்க வேண்டும். இமயமலைப் பகுதிகளில் பலவித ரத்தினங்கள் புதைந்துள்ளன. எங்கெல்லாம் ரத்தினங்கள் அதிகமாகக் கிடைக்கின்றனவோ அங்கு குபேரன் வாசம் செய்கிறான் என்றனர்நவநிதிகளுக்கு அதிபதியான குபேரன், இமயமலைப் பகுதியில் வாசம் செய்தவன் என்று மஹாபாரத்தில் அடிக்கடி சொல்லப்பட்டுள்ளது, அங்கு இருந்த நவமணி இயற்கைச் செல்வங்களை ஒட்டியே இப்படி ஒரு வர்ணனை எழுந்திருக்க வேண்டும்.


மேரு மலையைப் பாம்பைக் கொண்டு கடைவது என்பது, வேறு இடங்களிலும் சொல்லப்படுகிறது. உதாரணமாக, ஸ்ரீநிவாசர் எழுந்தருளியிருக்கும் திருப்பதி மலையை மேரு என்றும், அதைச் சுற்றி நாகம் இருக்கிறது என்றும் கூறுவார்கள். இதுவும், மேலே சொன்ன கூர்ம அவதார நிகழ்ச்சியைப் போன்றதே. எங்கெல்லாம், மலையை ஆதாரமாக வைத்து, லாவா என்னும் பூமிக் குழம்புகள் வெளிப்படுகின்றனவோ, அங்கெல்லாம் கூர்ம அவதாரம் நடை பெற்றது எனலாம்.
 


கூர்ம அவதாரத்துக்குப் பின் வந்த வராஹ அவதாரமும் இப்படிப்பட்ட இயற்கை நிகழ்வே. வைவஸ்வத மனு வந்த பிறகே, பாரமூலா என்னும் வராஹ மூலை காஷ்மீரத்தில் உண்டாகி இருக்க வேண்டும். காஷ்மீரின் பல பகுதிகளும், ஏரி நீரிலிருந்து வெளி வந்தவை (பகுதி 51) நீரிலிருந்து நிலமானது வெளியே எழும்பினால் அங்கு வராஹ அவதாரம் நடந்தது என்று பொருள் கொள்ள வேண்டும்.

                     பாரமூலா என்னும் வராஹமூலை (காஷ்மீர்)

 
திருப்பதி க்ஷேத்திரம் வராஹருக்கு முதலில் உரியது என்று சொல்வார்கள். இன்றைக்கும் திருப்பதி மலை மீது உள்ள குளத்தருகே உள்ள வராஹ மூர்த்தியை வணங்கி விட்டுத்தான் திருமலையானை தரிசிக்க வேண்டும் என்ற வழக்கம் இருக்கிறது. இதன் மூலம், அந்தப் பகுதி, ஒரு பரந்த ஏரி அல்லது நீர் நிலையிலிருந்து வெளி வந்திருக்க வேண்டும் என்று புலனாகிறது.

 
இமய மலையின் உள் பகுதிகளில் வராஹ மூர்த்தியே கடவுளாக வணங்கப்படுகிறார் என்று மஹாபாரதத்தில் சஞ்சயன், திருதராஷ்டிரரிடம் சொல்கிறான். இமய மலை உண்டான விதத்தை அறிவியல் மூலம் அறிந்த நமக்கு இதன் காரணம் தெரிகிறது. 8 கோடி வருடங்களுக்கு முன்னால் இமய மலை இல்லை. அப்பொழுது நாம் இருக்கும் இந்தியப் பகுதி (அதனுடன் இணைந்த இன்று இந்தியக் கடலில் மூழ்கியுள்ள மலைகள், தென்னன் தேசப்பகுதிகளுடன் சேர்ந்து) ஆசியாக் கண்டத்தை நோக்கி நகர்ந்து, ஆசியாக் கண்டத்தை முட்டியது.  




அப்பொழுது ஆசியாக் கண்டத்துக்கும், இந்தியாவுக்கும் இடையே ஒரு கடல் இருந்தது. அந்தக் கடலை முட்டித் தள்ளி, ஆசியாக் கண்டத்துடன் இடிக்கவே அந்தக் கடல் பகுதி மேல் எழுந்தது. அதுவே இமய மலை என்னும் மலையாக வளர்ந்து கொண்டிருக்கிறது. இமய மலையின் உச்சியில் புதைந்துள்ள ஆழ் கடல் பிராணிகளது படிமங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். 

            மோதிக் கொண்டு எழவே மடிப்பு மலைகளாக இமயமலை


இன்னும் இந்த மோதல் நீடித்துக்கொண்டிருக்கிறது. இமயமலைப் பகுதியானது, நீரிலிருந்து எழவே, அந்தப் பகுதியில் வாழ்ந்த மக்கள் வராஹ மூர்த்திக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கின்றனர்.


இந்த வராஹ அவதார நிகழ்வும், கூர்ம அவதாரத்தைப் போல தொடர்ந்து காலம் காலமாக நடந்து கொண்டும், அவ்வப்பொழுது நமக்கு வெளிக்காட்டிக் கொண்டும் இருக்கிறது. சரஸ்வதி நதிக் கரையில் மனு முதலானோர் குடியமர்ந்த பின்னும், காஷ்மீரப்பகுதிகளில் வராஹ மூலை போல, நில எழுச்சிகள் நடந்தன. இவ்வாறு விஷ்ணுவின் அவதார தாத்பரியங்களின் தற்போதைய சுற்று, மனு முதலானோர் சரஸ்வதிக் கரையில் குடியேறின பிறகு எழுந்துள்ளன. இவற்றின் தொடர்ச்சியாக பிற அவதாரங்களும், ராமாவதாரமும் வந்ததுள்ளன என்பதால், மனுவுக்குப் பிறகும், கடந்த சில ஆயிரம் வருடங்களுக்கு முன்பாகவும்தான் ராமர் பிறந்திருக்கிறார் என்பது ஊர்ஜிதமாகிறது.  


இனி கூர்மச் சக்கரம் காட்டும் அமைப்பைக் காண்போம். கூர்மச் சக்கரம் என்பது பாரத நாட்டை ஆதாரமாகக் கொண்டு காண்பிக்கப்பட்டுள்ளது. திராவிடவாதிகள் விரும்பும் பிரிவினைகள் கூர்மச் சக்கரத்தில் அடிபட்டுப் போகின்றன.

கூர்மச் சக்கர அமைப்பில் ஆதாரமான ஆமையின் ஓடு சரஸ்வதி நதி தீரத்தில் உள்ளது. பனியுகம் முடிந்த பிறகு உண்டான மனித உற்பத்தியும், மனிதநாகரிகமும், இந்த சரஸ்வதி நதி தீரத்தை ஆதாரமாகக் கொண்டு எழுந்துள்ளது.

இதே கருத்து, 7000 ஆண்டுகளுக்கு முன்னால் 2-ஆம் ஊழி கண்டு மீண்டும் வாழ்க்கையைத் துவக்கிய தென்னன் பாண்டியன், ஆலவாய் என்னும் கபாடபுரத்தில் தலை நகரை நிறுவி, தமிழ்ச் சங்கம் அமைத்தப்போதும் வருகிறது. புது வாழ்க்கை தொடங்கி, 2-ஆம் தமிழ்ச் சங்கத்தை ஆரம்பித்தபோது, சரஸ்வதி தேவியின் 48 (சமஸ்க்ருத) எழுத்துக்கள், 2-ஆம் தமிழ்ச் சங்கத்தின் முதல் 48 புலவர்களாகப் பிறந்து, அவர்களுடன் 49 ஆவது புலவராக, சோம சுந்தரப் பெருமானே சங்கப்பலகையில் அமர்ந்தார் என்று திருவிளையாடல் புராணம், திருஆலவாய்க் காண்டம், சங்கப்பலகை தந்த படலம் கூறுவதும் சரஸ்வதி தேவியை ஆதாரமாகக் கொண்டு புது மனித நாகரிகம் பிறக்கிறது என்று நிலவி வந்த கருத்தை உறுதிப்படுத்துகிறது.  



கூர்மச் சக்கரம்.
 
பூமி செல்லும் பாதையில் அமைந்துள்ள 27 நட்சத்திரங்களை, மூன்று மூன்றாகப் பிரித்து மத்திய ஆமை ஓட்டுப்பகுதி, மற்றும் 8 திசைகள் என 9 பிரிவுகளாகக் குறித்துள்ளனர். கூர்மச் சக்கரத்தின் மையப் பகுதியைச் சுற்றி 8 திசைகள் குறிக்கப்படுகின்றன. 


ஆமையின் ஓடுப் பகுதியில் சரஸ்வதி, மத்ஸ்ய தேசம் உள்ளன என்றும் குறிக்கப்பட்டுள்ளது. கார்த்திகை, ரோஹிணி, மிருகசீரிஷம் ஆகியவை மத்திய பகுதியிலும், அதைத் தொடர்ந்து வரும் நட்சத்திரங்களை மூன்று மூன்றாக கிழக்கு, தென் கிழக்கு, தெற்கு, தென் மேற்கு, மேற்கு, வட மேற்கு, வடக்கு, வட கிழக்கு ஆகிய 8 திசைகளில் குறித்துள்ளனர். அதை கீழ்க்காணும் விதமாகக் காட்டலாம்.




இந்தக் கூர்மச் சக்கரத்தை இன்றைய இந்திய வரை படத்தின் மீது இட்டால் இவ்வாறு இருக்கும்.




இந்தப் படத்தில் அம்புக் குறியுடன் வடக்கு தெற்காகச் செல்லும் கோடு பூமியின் அச்சாகும். தற்போதைய பஞ்சாப் பகுதியில் காட்டப்பட்டுள்ள வட்டம், கூர்மச் சக்கரத்தின் ஆதாரமான மத்தியப் பகுதியும், சரஸ்வதி நதிப் பகுதியும் ஆகும். 8 திசைகளை எட்டு கோடுகளின் மூலம் காட்டப்பட்டுள்ளது. தெற்கில் பச்சை நிறத்தில் உள்ள பகுதியில் நாம் இருக்கிறோம்.

இதில் இன்றைய இந்திய நாட்டில் உள்ள நாடுகள் மட்டுமல்லாமல், நாம் முன்பு பார்த்தோமே, ரஷ்யாவில் உள்ள ஸ்த்ரீ ராஜ்ஜியம் உள்ளிட்ட பகுதிகளும், அராபியம், கிரேக்கம் போன்ற பகுதிகளில் உள்ள பாலிகம், யவனம் போன்றவையும், வட கிழக்கில் சீன தேசம் போன்றவையும் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த தேசங்கள் எல்லாம் மஹாபாரத்திலும் பாரத தேச வர்ணனையில் வந்துள்ளன என்பது நினைவு கூறத்தக்கது (பகுதி 30) இதில் தமிழ் நிலங்களும் அடக்கம். இவை எல்லாம் சேர்ந்தே பாரத வர்ஷம் என்று அந்த நாளில் இருந்திருக்க வேண்டும் என்பதைக் கூர்மச் சக்கரமும் நிரூபணம் செய்கிறது.


கூர்மச் சக்கரத்தில் நமக்குத் தேவையானது தமிழ் நாட்டு நிலப்பகுதிகளும், திராவிடமும்.
திராவிடவாதிகள் கருத்தின்படி  தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரம் இவை எல்லாம் சேர்ந்தது திராவிடம் என்பதாகும். ஆனால் கூர்மச் சக்கரத்தில் இவை எல்லாம் ஒரே பிரிவில் வரவில்லை. ஆந்திரம் என்பது தென் கிழக்கிலும், தமிழ் நாடும், கர்நாடகமும், தெற்கிலும், திராவிடம் என்பது தென் மேற்கிலும் அமைந்துள்ளன. இவற்றை ஆளும் நட்சத்திரங்கள் வேறு, அதனால் ஏற்படும் பலன்களும் வேறு.
முதலில் தமிழ் நாட்டின் அமைப்பு எங்கே குறிக்கப்பட்டுள்ளது என்று பார்ப்போம்.

கூர்மச் சக்கரத்தில் மத்திய தேசத்துக்கு நேர் தெற்கில், அதாவது பூமியின் அச்சின் தெற்குத் திசையில் தமிழ் நிலங்கள் உள்ளன

இந்த அச்சுக்குத்  தென் மேற்குப் பகுதியில் திராவிட நாடு குறிக்கப்பட்டுள்ளது.

உத்திரம், ஹஸ்தம், சித்திரை ஆகிய மூன்று நட்சத்திரங்கள், தென் பகுதி நாடுகளைக் குறிக்கின்றன. வராஹமிஹிர்ர் கொடுத்துள்ள இந்தப் பெயர்கள் 2000 ஆண்டுகளுக்கு முன் புழக்கத்தில் இருந்த பெயர்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இன்றைக்கு இந்தப் பெயர்களில் பல மாறி விட்டன.
 
தென் பகுதியில் கொடுக்கப்பட்டுள்ள நாடுகளது பெயர்கள் வருமாறு:-

சிலோன்
காலாஞ்சனம்
சௌரீகீரணம்
தலிகடம்
கிரி மலைகள்
நகரம்
மலயம்
தர்துரம்
மஹேந்திரம்
மாலிந்தியம்
ப்ரோச் பகுதியைச் சேர்ந்த நாடுகள்.
கண்கடம்
துங்கணம்
வனவாசி
சிபிகம்
பணிகரம்
கொங்கணம்
ஆபீரம்
அகரம்
வேணை நதி
அவந்தி நாடுகள்
தசபுரம்
கோனார்டம்
கேரளம்
கர்னாடம்
மஹாதவிப் பகுதியைச் சேர்ந்த காடுகள்
சித்திர கூட மலை
நாசிக்யா
கொல்லம்
கிரி
சோழம்
க்ரௌஞ்சத் த்வீபம்
ஜடாதரம்
காவேரி நதி
ரிஷ்யமூக மலை
வைடூர்ய த்வீபத் தீவுகள்.
சங்க த்வீபத் தீவுகள்
முக்த த்வீபத் தீவுகள்
த்ரிவரிசர த்வீபத் தீவுகள்
தூர்ம பட்டண த்வீபத் தீவுகள்.
கனராஜ்ஜியம்
க்ருஷ்ணா
வெல்லூரு
பேசிகா
சூர்பா,
குசுமாங்க மலைகள்
தும்பவனக் காடுகள்
கார்மனேயகம்
தென் கடல்
தாபசாஸ்ரமம்
ரிசிகஸ்
காஞ்சி
மாருசீப்பட்டணம்
சேர்யம்
ஆர்யம்
சிங்களம்
ரிஷபம்
பலதேவனின் நாடு
தண்டக வனம்
தமிங்கிலாஸன நாடுகள்
பத்ரம்
கச்சு
குஞ்சரதாரி
தாமிர பரணி
  

இவற்றின் அடிப்படையில் நாம் காணும் விவரங்கள்:-
  • இவற்றுள் சேர்யம் என்பது சேரம் என்ற ஒலியில் உள்ளது. இது சேர நாட்டைக் குறிக்கலாம். சோழம் என்பதும் கொடுக்கப்பட்டுள்ளது.  ஆனால் பாண்டியம் என்பதற்குப் பதிலாக ரிஷபம்என்று கொடுக்கப்பட்டுள்ளது.
பாண்டிய நாட்டில் ரிஷப மலை இருக்கவே, பாண்டியப் பகுதியை ரிஷப நாடு என்று ராமாயணத்தில் அழைத்தனர். பாண்டிய நாட்டில் ரிஷப மலை இருந்தது என்று மஹாபாரதத்திலும் சொல்லப்பட்டுள்ளது (பகுதி 41). எனவே கூர்மச் சக்கரத்தில் பாண்டிய நாடு என்ற பெயர் இல்லை என்றாலும், ரிஷபம் என்று குறிப்பிட்டுள்ளது பாண்டிய நாட்டையே என்று எடுத்துக் கொள்ளலாம்.
 
சிங்களத்துக்கு அடுத்து ரிஷபம் வரவே, நாம் முன்பு ஆராய்ந்தவாறு, இன்றைய இலங்கைக்குத் தெற்கில் செல்லும், 90 டிகிரி மலையிலும், அதனைச் சார்ந்த பகுதிகளிலும், முந்தைய பாண்டிய நாடு இருந்திருக்கிறது. ஆதியில் ரிஷிகள் சொன்ன அமைப்பை வராஹ மிஹிரர் அப்படியே கடைப்பிடிக்கவே இந்தப் பெயரை அவர் இவ்வாறு கொடுத்திருக்க வேண்டும்.

  •   முக்கியமாக நாம் கவனிக்க வேண்டியது காஞ்சியாகும். திராவிட தேசம் என்று தலகுண்டா கல்வெட்டில் சொல்லப்பட்ட காஞ்சி (பகுதி 49), ப்ருஹத் சம்ஹிதையின்படி, 2000 ஆண்டுகளுக்கு முன் காஞ்சி என்றே அழைக்கப்பட்டிருக்கிறது. திராவிடம் என்றல்ல.
  • திராவிடம் என்ற பெயரில் எந்தப் பகுதியும் தெற்குத் திசையில் குறிக்கப்படவில்லை. அந்தப் பெயர் தமிழ் நிலங்களின் பெயருடனும் சம்பந்தப்படவில்லை என்பது முக்கியமான விவரம்.
(ஆனால் திராவிடம் என்ற ஒரு நாட்டைத் தென் மேற்கில் கூர்மச் சக்கரம் காட்டுகிறது என்பதை இந்தக் கட்டுரையில் அடுத்ததாகக் காண்போம்.

  • கவனிக்கப்பட வேண்டிய மற்றொரு இடம் வெல்லூரு என்னும் வேலூர் ஆகும். முழுக்க முழுக்க ஆங்கிலேயர்களைக் கொண்ட ஏஷியாடிக் சொசைட்டியால் வெளியிடப்பட்ட மெட்ராஸ் ஜர்னல் ஆஃப் லிட்டரேச்சர் அண்ட் சயின்ஸ்என்னும் வெளியீட்டில், கி.பி. 11 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவன் என்று ஆதொண்டையைக் குறிப்பிட்டது மட்டுமல்லாமல், (பகுதி 54), அவன் காலத்துக்குப் பிறகே வெல்லூரு என்னும் நகரம் உண்டானது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் ப்ருஹத் சம்ஹிதையின் கூர்மச் சக்கரத்தின் படி 2000 ஆண்டுகளுக்கு முன்பே வெல்லூரு இருந்திருக்கிறது. 18 ஆம் நூற்றாண்டில் புழங்கி வந்த கருத்துக்கள் அல்லது நில ஆவணங்கள் அடிப்படையில் பல ஊர்களைப் பற்றி ஆங்கிலேயர்கள் எழுதி இருக்க வேண்டும். அவற்றின் பூர்வீகத்தை ஆராய்ந்து அவர்கள் எழுதவில்லை.
உதாரணத்துக்கு மஹாபலிபுரம் பற்றி அவர்கள் எழுதிய குறிப்புகளைச் சொல்லலாம். ட்ரான்ஸாக்‌ஷன்ஸ் ஆஃப் ஏஷியாடிக் சொசைடியின் 2 ஆவது வால்யூமில்மஹாபலிபுரக் கல்வெட்டுகளை ஆங்கிலேயர்கள் ஆராய்ந்த விவரங்கள் வருகின்றன.  பாபிங்டன் என்பவர் 3 கல்வெட்டுகளை ஆராய்ந்து அந்த ஊரின் பெயர் மஹாமலைபுரம்என்றார். அந்தப் பகுதியில் பெரிய மலை எதுவும் இல்லாமல் எப்படி மஹா மலைபுரம் என்ற பெயர் வந்தது என்று அவர்களுக்குக் கேள்விக் குறியாக இருந்தது. ஆனால் அங்கு வாழ்ந்த  மக்களோ தங்கள் ஊரை மாவலவரம்என்றார்கள். அது மாவலி புரம் என்பதன் திரிபு என்பதே தமிழும், பாரத சரித்திரமும் காட்டும் செய்தி. மஹாபலியை மாவலி என்று தமிழ்ப் பாடல்களில் சொல்லப்பட்டுள்ளது. மஹாபலி ஆண்ட ஊராக இருக்கவே அது மஹாபலிபுரம் அல்லது மாவலிபுரம் என்று இருந்திருக்கிறது. அதுவே மாவலவரம் என்று காலப்போக்கில் ஆனது.
பெயர் மாற்றும் வைபவத்தை பல்லவர்கள் செய்யவே மாமல்லபுரம் என்றாகி அதுவே அவர்களது கல்வெட்டில் செதுக்கப்பட்டாலும், மக்கள் மத்தியில் மாவலிவரம் என்ற பெயரே இருந்திருக்கிறது என்பது கவனிக்கத்தக்கது.

 
பாபிங்டனுக்குப் பிறகு டைலர் என்பவர், அது மஹாமலை அல்ல, அது மாமல்லை  என்றும், மாமல்லபுரம் என்றும் திருத்தினார். இது தவிர திருத்தப்படாத கருத்துக்கள் எத்தனை இருக்கின்றனவோ, எனவே ஆங்கிலேயர்களது புரிமானத்தில் எழுதப்பட்ட கருத்துக்களை அப்படியே ஏற்றுக் கொள்ளாமல், அவற்றை ஆராய வேண்டும் என்பதற்கு மாமல்லபுரமும், வெல்லூரும், திராவிடமும் சாட்சிகள் ஆகும்.

  •   சிங்களம், சிலோன் என்று இரண்டு இடங்கள் கொடுத்திருப்பது ஆராய்ச்சிக்குரியது. ஆச்சரியகரமாக, லங்கை என்ற பெயர் கொடுக்கப்படவில்லை. ஆனால் வராஹ மிஹிரருக்குப் பிறகு வந்த பாஸ்கரர் லங்கா என்று கூறியுள்ளார். ராமாயண காலத்தில் ராவணன் இருந்த இடத்தை லங்கா பட்டினம் என்றனர். அது மலையுச்சியில் மூன்று சிகரங்களால் சூழப்பட்டிருந்தது. வராஹமிஹிரர் காலத்தில், சிங்களம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. சிலோன் என்றும் தனிப்பட கொடுக்கப்பட்டுள்ளது, எனவே இவை மூன்றுமே இன்றைய ஸ்ரீலங்காவின் உட்கூறுகளாக இருக்க வேண்டும். சிலோன் என்னும் பெயர், 16 ஆம் நூற்றாண்டில் போர்சுகீசியர்களால் கொடுக்கப்பட்டது என்ற ஒரு எண்ணம் இருக்கிறது. ஆனால் 2000 ஆண்டுகளுக்கு முன்பே ப்ருஹத் சம்ஹிதையில் சிலோன் என்று கொடுக்கப்பட்டுள்ளது.

  • மலயம், மஹேந்திரம், கொல்லம் ஆகியவை தென்னிந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலையின் பகுதிகள். இவற்றைப் பல இடங்களில் முன்பே பார்த்தோம்.
  •  கொங்கணம் கூர்மச் சக்கரத்தின் தென் பகுதியில் சொல்லப்படவே, தற்போதைய தென்னிந்தியத் தென் முனை முதல், கொங்கணம் வரை திராவிடம் என்று ஒரு இடமும் இல்லை.

  • வைடூர்ய த்வீபத் தீவுகள். சங்க த்வீபத் தீவுகள், முக்த த்வீபத் தீவுகள், த்ரிவரிசர த்வீபத் தீவுகள், தூர்ம பட்டண த்வீபத் தீவுகள் என்று 5 தீவுக் கூட்டங்கள் சொல்லப்பட்டுள்ளன. இதுவரை கிடைத்துள்ள கல்வெட்டுகள் அல்லது இலக்கியம் ஆகியவற்றில் இந்தப் பெயர்களில் தீவுக் கூட்டங்கள் தெரியப்படவில்லை. ஆனால் ராமாயணத்தில் விவரிக்கப்பட்டுள்ள குமரிக் கண்ட வர்ணனையில் வைடூரிய மலை என்ற ஒரு மலையை, 90 டிகிரி மலைத் தொடரில் அடையாளம் கண்டோம்.  (பகுதி 41)


இந்தப் படத்தில் சிவப்பு நிறக் கோடு பூமத்திய ரேகை. 
கடலுக்குள் செல்லும் 90 டிகிரி மலையில் வைடூர்ய மலை (வைடூர்யத் தீவு) சிவப்புப் புள்ளியாகக் காட்டப்பட்டுள்ளது. 
அதற்குத் தெற்கில் அகத்தியர் வாசம் செய்த மலையும், அதற்கும் தெற்கே தென்னன் தலைநகரமான தென் மதுரையும் இருந்தது என்று ஏற்கெனவே இந்தத் தொடரில் பார்த்தோம். 


வைடூர்ய மலை என்பது பூமத்திய ரேகைக்குத் தெற்கே, 90 டிகிரி மலையில் ஒரு சிகரமாகும், இது அந்தமான் தீவுகளைப் போல, கடல் சூழந்த தீவாகத் தென் பட்டிருக்க வேண்டும். ராமாயண காலத்தில் கடலுக்கு மேலே தெரிந்த இந்த இடம், 2000 ஆண்டுகளுக்கு முன் வரை இருந்திருக்கிறது. இப்பொழுது இந்தப் பகுதி கடலுக்குள் முழுகி இருக்கிறது.


  • சங்கத் தீவுகளும், முக்தத்தீவுகளும் தூத்துக் குடிக்கு அப்பால் இந்தியக் கடலில் இருதிருக்கக்கூடும். தூத்துக்குடி முத்துக் குளிப்பதற்குப் பெயர் போனது. அந்தப் பகுதிகளில் முத்துத் தீவு என்னும் பொருளுடைய முக்தத்தீவுகள் இருந்திருக்கலாம்.

  •      சங்கு கிடைக்கும் இடமாக சங்கத்தீவுகள் இருந்திருக்க வேண்டும். தூத்துக்குடி சங்கு இன்றைய பங்களாதேஷ் நாட்டின் தலைநகரமான டாக்காவில், பல நூறு ஆண்டுகளாகவே புகழ்வாய்ந்தது என்று குறிப்புகள் உள்ளன. அந்த நாட்டுச் சங்கு வியாபாரிகள், ஒரு சங்கைப் பார்த்தவுடனேயே அது தூத்துக்குடி சங்கா அல்லது எந்தப் பகுதி சங்கு என்று சொல்வதில் வல்லவர்கள். எனவே தூத்துக்குடி, முத்துக்கு மட்டுமல்ல, சங்குக்கும் பெயர் போனதாக இருந்திருக்க வேண்டும். தூத்துக்குடியை ஒட்டி சங்கத் தீவு இருந்திருக்க வேண்டும்.

  •   சங்கு என்று சொல்லும் போதே, தமிழ்ச்சங்கம் வளர்ந்த விதம் நினைவுக்கு வருகிறது. இறையனார் எனப்படும் சிவ பெருமான், புலவர்கள் பாடும் பாடலுக்குத் தன் சங்கத் தோட்டையே பரிசாக்க் கொடுத்தார் என்று பார்த்தோம். (பகுதி 43). சங்கினால் ஆன தோடு அணிந்த செவியால் பாடலைக் கேட்டார் என்பதே அதற்குப் பொருள். சங்கு, பாண்டிய நாட்டுச் சொத்து. சங்கத் தீவுப்பகுதிகள் பாண்டியர் வசம் இருந்திருக்க வேண்டும்.

  •      சிபிகம் என்னும் நாடு தென் பகுதியில் இருந்திருக்கிறது. சிபியின் பெயரை நினைவுறுத்தும் இந்த இடத்தின் தற்போதைய பெயர் தெரியவில்லை. ஆனால் சிபியின் பெயர்த் தொடர்பால், சங்க நூல்கள் சிபியை முன்னிட்டு சோழ வம்சத்தைச் சொல்வதற்கு ஆதாரம் இல்லாமல் இல்லை என்று சொல்வது போல இப்படி ஒரு இடம் தென் பகுதியில் இருந்திருக்கிறது.

  • ஆபீரம்இந்தப் பெயர் வட இந்தியாவில் நாம் பார்த்தோம். திராவிட ராஜன் என்று சொல்லப்பட்ட சூத்திரகர் ஒரு ஆபீரர் என்று பார்த்தோம். (பகுதி 53) ஆபீரர்களும், திராவிடர்களும் க்ஷத்திரியம் விட்டவர்கள் என்று மஹாபாரதம் கூறுகிறது என்று பார்த்தோம். அந்த ஆபீரர்கள் வாழ்ந்த பகுதி ஆபீரம் என்று அழைக்கப்பட்டிருக்கலாம். சரஸ்வதி நதி பூமிக்குள் மறைந்த இடமான விநாஸனம் அந்தப் பெயரில் அழைக்கப்பட்டது (பகுதி 53). கூர்மச் சக்கரத்தில் அதே பெயரில் தென் திசையிலும், தென் மேற்குத் திசையிலும் நாடுகள் குறிக்கப்பட்டுள்ளன. இதனால் ஆபீரர்கள், வட இந்தியப் பகுதியை விட்டு வெளியேறி, தென்னிந்தியாவின் தெற்கிலும், தென் மேற்கிலும் குடியேறி இருக்கின்றனர் என்றும், அதனால் அவர்கள் பெயரால் அவர்கள் இருந்த இடமும் அழைக்கப்பட்டிருக்கிறது என்றும் தெரிகிறது
  •   இதே வகையில், ஆரியமும், திராவிடமும் நாடுகளாக உருவாகி இருக்கக்கூடும். மேலே கொடுக்கப்பட்டுள்ள நாடுகளில் ஆரியம்என்று ஒரு நாடு இருப்பதைப் பாருங்கள். இதன் இன்றைய பெயர் என்ன என்று தெரியவில்லை. இது ஆரியவர்த்தம் எனப்படும் வட இந்தியாவிலும் இல்லை. இது குறிக்கப்பட்டிருப்பது தென் இந்தியாவில். ஆரியர்கள் என்று தங்களைக் கூறிக் கொண்டவர்கள், தென்னிந்தியாவில் வாழ்ந்திருக்கின்றனர் என்று இதன் மூலம் தெரிகிறது.

  •     இதன் தொடர்பாக கி.பி 5-6 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இந்தியாவின் கணித மேதை ஆர்யபட்டரின் வரலாறு உள்ளது. இவருக்கு ஏன் ஆரிய பட்டர் என்ற பெயர் இருந்தது என்பதற்கு இன்று வரை ஒரு விளக்கமும் இல்லை. இவர் எழுதின நூலின் பெயரும் ஆரிய பட்டீயம் ஆகும். அதை ஆரிய சிந்தாந்தம் என்றும் அழைக்கிறார்கள். இந்தப் பெயரைக் கேட்டவுடனே மாக்ஸ் முல்லர்-பாணி ஆரிய ஆராய்ச்சியில் இறங்க வேண்டாம். ஆரிய சித்தாந்தம் என்னும் இந்த நூலில் விண்வெளிக் கருத்துக்களும், கணிதக் கருத்துக்களும், ஜோதிட சிந்தாந்தக் கருத்துகளுமே உள்ளன. ஆனால் நமக்கு இயல்பாகத்  தோன்றும் கேள்வி, ஆரிய என்னும் பெயர்த் தொடர்பு ஏன்?

ஆரியபட்டர் பீஹாரில் உள்ள குசுமபுரம் என்னும் ஊரில் வாழ்ந்தார் என்று சில ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். ஆனால் ஆரியபட்டீயத்துக்கு உரை எழுதின 15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நீலகண்ட சோமசத்வர் என்பவர் தனது உரையில் ஆரிய பட்டர் அஸ்மாக நாட்டில் பிறந்தவர் என்கிறார். அஸ்மாகம் என்பது கேரளாவில் உள்ள திருவாங்கூரின் அந்நாளைய பெயர். மேலும் ஆரிய பட்டீயத்துக்கு உரை எழுதின அனைவருமே தென்னிந்தியப் பகுதிகளிலிருந்தும், கேரளாவிலிருந்தும் தான் வந்துள்ளனர். அவரது ஆரியபட்டீயத்துக்கு பீஹாரிலோ, வட இந்தியாவிலோ சீடர்கள் இல்லை. அதைப் பின்பற்றியவர்களும் வட இந்தியாவில் இல்லை. எனவே அஸ்மாகம் என்பது ஆரியம் என்ற பெயரில் 2000 ஆண்டுகளுக்கு முன் இருந்திருக்கக்கூடும். அது திருவாங்கூராக இருக்கலாம். அங்கு ஆரியபட்டர் பிறந்திருக்கிறார்.

ஆரியர்கள் விரட்டவே, தென் பகுதிக்குத் திராவிடர்கள் வந்தனர் என்று திராவிடவாதிகள் கூறுகிறார்கள். ஆரியம் என்னும் பெயருடன் தென் பகுதியில் ஓரிடம் இருந்திருப்பதற்கு என்ன சொல்லப்போகிறார்கள்?
இது காட்டும் விவரம் என்னவென்றால், ஆரியம் என்பது அலர்ஜியான சொல் அல்ல. அது வட இந்தியாவிலும் இருக்கலாம், தென் இந்தியாவிலும், ஏன் தமிழ் அரசர்கள் ஆண்ட சேர நாட்டிலும் இருக்கலாம் இருந்திருக்கிறது என்பதை ஒத்துக் கோள்வோம். இந்த விவரத்தின் மூலம் பாரத நாட்டின் மக்கள், பாரத தேசத்துக்குள்ளேயே ஆங்காங்கே இடம் பெயந்திருக்கின்றனர் என்றும் தெரிகிறது.

  •    பலதேவனின் நாடு என்று ஓரிடம் குறிக்கப்பட்டுள்ளது. பலதேவன்என்பவன், கிருஷ்ணனின் சகோதரன். பலதேவனுக்கு வட நாட்டில் முக்கியத்துவம் இருக்கிறதோ இல்லயோ, தமிழ் நாட்டில் இருந்திருக்கிறது. பரிபாடல் உள்ளிட்ட தமிழ்ச் சங்க நூல்களில் பலதேவன் பெயர் வருகிறது.
கிருஷ்ணனைப் போல, பலதேவனது தாக்கம் தமிழ் நாட்டில் இருந்திருக்கிறது. பலதேவனின் நாடு என்பதன் இன்றைய பெயர் தெரியவில்லை. ஆனால் அது தமிழ் பேசும் பகுதியிலோ, தொல்காப்பியர் கூறும் தமிழ் நாட்டை ஒட்டியிருந்த 12 நாடுகளிலோ இருந்திருக்க வேண்டும். அந்த விவரங்களைப் பிறகு காண்போம்.

  •    கேரளம் என்று தனிப்பட கொடுத்திருப்பது கவனிக்கத்தக்கது. மஹாபாரதப் போர் முடிந்தவுடன் ராஜ சூய யாகம் செய்யும் போது, சஹாதேவன் தென் பகுதிக்கு வந்து திராவிடம், உத்ர கேரளம் என்னும் நாடுகளை வென்றான் என்று முன்பே கண்டோம். (பகுதி 39). சேரமும், கேரளமும் ஒன்றையே குறிப்பது போல மஹாபாரதத்தில் பல இடங்களில் வந்துள்ளது. எனினும், உத்ர கேரளம் என்ற ஒரு இடத்தைக் குறிப்பாகக் கூறியுள்ளதாலும், கூர்மச் சக்கரத்தில் கேரளம், சேரம் என்று இரு இடங்கள் சொல்லப்பட்டிருப்பதாலும், மேலும் சில விவரங்களை நாம் கருத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.
கேரளர் என்ற சொல் 5 இடங்களில் மஹாபாரதத்தில் வருகிறது.  அவற்றுள் ஓரிடத்தில் (ம-பா- 1-176) காமதேனு பசுவை முன்னிட்டு வசிஷ்டருக்கும், விஸ்வாமித்திரருக்கும் இடையே நடந்த போரில், காமதேனு பசுவின் மூலம் வசிஷ்டர் உண்டாக்கும் போர் வீரர்களில் கேரளர்களும் ஒருவர் என்று சொல்லப்படுகிறது. அது மட்டுமல்ல, பாரத தேசத்திலிருந்து ஒதுக்கப்பட்டவர்களும், ஆரியம் விட்ட மிலேச்சர்கள் என்று கருதப்பட்டவர்களுமான யவனர்கள், சாகர்கள், திராவிடர்கள், கேரளர்கள் என்று இந்தப் பெயர்கள் வருகின்றன. வால்மீகி ராமாயணத்திலும், இந்தப் போரும், அதை வெல்ல வசிஷ்டருக்குத் துணை புரிந்த மிலேச்சர்கள் பெயர்களும் சொல்லப்பட்டுள்ளன. ராமாயண விவரத்தில்  திராவிடர்கள் இருக்கிறார்கள். கேரளர்கள் இல்லை. ஆனால் மஹாபாரதத்தில் கேரளர் பெயர் காணப்படுவதால், அவர்கள் வசிஷட்ருக்கு உறுதுணையாகப் போர் புரிந்தனர் என்று கொள்ளலாம். 


வசிஷ்டருக்குத் துணை புரிந்த அந்த மக்கள் அனைவரும் அங்கீகரிக்கப்பட்ட போர் முறைகளைக் கையாண்டவர்கள் இல்லை. அவர்கள் மூர்க்கத்தனத்துடனும், கொடூரமாகவும் போர் புரிந்தார்கள் என்ற வர்ணனை வருகிறது. மேலும் அவர்கள் மிலேச்சர்கள் என்று ஒதுக்கப்பட்டவர்கள். மஹாபாரதம், கர்ண பர்வம் - 44 இல், கர்ணன் கேரளர்களைப் பற்றிக் கூறுகிறான். அவர்களை இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் வாழ்ந்த பாலிகர்கள், மிலேச்சர்களுடன் சேர்த்துச் சொல்கிறான்.

வசிஷ்டர் செய்த போரைப் போல நடந்த மற்றொரு போர் பரசுராமர் செய்தது. அவரது விஷயத்திலும் காமதேனுப் பசுவின் கன்றை கார்த்த வீர்யார்ஜுனன் கவர்ந்து சென்று விடுகிறான். அப்பொழுது பரசுராமர் ஆஸ்ரமத்தில் இல்லை. அவரது தந்தை மட்டுமே இருந்தார். அவரை வீழ்த்தி விட்டு, ஆஸ்ரமத்தை நாசப்படுத்தி விட்டு பசுவைக் கவர்ந்து சென்று விடுகிறான். விவரம் தெரிந்தவுடன் பரசுராமர் அவனைத் தேடிச்சென்று அவனைக் கொன்று பசுவை மீட்கிறார். கார்த்தவீர்யார்ஜுனது மகன்கள் தங்கள் தந்தையின் சாவுக்குப் பழி வாங்க, பரசுராமரது தந்தையைக் கொன்று விடுகிறார்கள். இதனால் கோபமடைந்த பரசுராமர் க்ஷத்திரியர்களை அழிப்பதாக சபதம் பூண்டு 21 முறை க்ஷத்திரியர்களை அழிக்கிறார். (-பா- 3-116)


தவசியாக வாழ்ந்த பரசுராமர் தனி மனிதனாக அத்தனை க்ஷத்திரியர்களை எப்படி அழித்திருப்பார்? வசிஷ்டர் விஸ்வாமித்திர்ர் போரில் நடந்ததைப் போல, பரசுராமரும் மிலேச்சர்களை துணைக்கு அழைத்திருப்பாரா? இந்தக் கேள்விக்குக் காரணம், இமயமலைப் பகுதியில் வசிஷ்டரால் செய்யப்பட்ட போரில் சண்டையிட்ட கேரளர், திராவிடர், யவனர் போன்ற பெயர்கள் தென்னிந்தியாவில் இருக்கிறதே, அது எப்படி?
இவர்கள் அனைவருமே வழக்கமான போர் முறைகளில் ஈடுபடாதவர்கள் என்று வசிஷ்டர் செய்த போர்க் குறிப்புகளில் வருகிறது


யவனர்களை எடுத்துக் கொள்வோம். சிலப்பதிகாரத்தில், சேர, சோழ பாண்டிய நாடுகளில் யவனர்கள் இருந்திருக்கிறார்கள். இந்திர விழாவூரெடுத்த காதையில், புகார் நகரில் யவனர்கள் இருப்பிடம் என்று ஓர் இருக்கை சொல்லப்படுகிறது. ஊர்க்காண் காதையில், மதுரையில் கடி மதில் வாயில் காவலில் சிறந்த அடல் வாள் யவனர்என்று கொடு வாள் கொண்டு வாயிலைக் காக்கும் யவன வீர்ர்கள் இருந்தனர். சேர மன்ன்னைப் பற்றிச் சொல்கையில் வன் சொல் யவனர் வளநாடு, வன் பெருங்கல், தென் குமரிஆண்டவன் சேரன் செங்குட்டுவன் என்று வாழ்த்துக் காதையில் சொல்லப்படுகிறது.
வன் சொல்லும், வலிமையும், கொடிய பார்வையும், கொடு வாளும், காவல் செய்வதில் வல்லவர்களுமான யவனர்கள் அவர்களது வளநாடான இமயமலைக்கப்பால் இருந்த தேசங்களை விடுத்து எப்பொழுது எவ்வாறு தமிழ்ப் பகுதிகளுக்கு வந்திருப்பார்கள்?


பரசுராமர் அவர்களைத் தான் செய்த போர்களில் ஈடுபடுத்தி, அதற்குப் பிரதி உபகாரமாக, அவர்களைத் தென்னிந்தியப்பகுதிக்கு அழைத்து வந்து, அரபிக் கடலிலிருந்து தாம் மீட்ட இடங்களில் குடி அமர்த்தினாரா?

வசிஷ்டர் தனக்கு உதவின மிலேச்சர்களுக்கு பிரதி உபகாரம் செய்திருக்கிறார். யவனர்கள் பயன்படுத்தும் யவன ஜோதிடம் என்பது வசிஷ்டரால் கற்றுத்தரப்பட்டது என்று ’யவன் ஜாதகம்’ என்னும் நூல் சொல்கிறது. இதில் இருப்பது எல்லாம், வேத மதக் கொள்கைக்கு எதிர்மாறாக இருக்கும். உதாரணமாக, வேத மதத்தில் சூரியனுக்கும், சூரிய உதயத்துக்கும் முக்கியத்துவம் என்றால், யவன ஜோதிடத்தில் சந்திரனுக்கும், சந்திர உதயத்துக்கும் முக்கியத்துவம். இங்கே வெண்மை என்றால், அங்கே கருமை. இங்கே செய்யும் செயல்களின், எதிர் மாறாக எல்லாமே யவன ஜாதகத்தில் காணப்படுகின்றன. நாம் ஜாதகம் என்பதை, யவன ஜோதிடத்தில் தாஜகம் என்கின்றனர். இப்படி ஒரு எதிர மறையான விவரங்கள், வேத மதத்தை நன்கு அறிந்த ஒருவரால் தான் உண்டாக்கி இருக்க முடியும். அதை மெய்ப்பிப்பது போல வசிஷ்டரது பெயர் யவன் ஜாதக நூலில் காணப்படுகிறது.  
அது மட்டுமல்ல, ஆரிய- தஸ்யு போருக்குப் பிறகு, வசிப்பதற்கு ஏற்புடையதாக இல்லாத இடங்களுக்கு யவனர்கள்  அனுப்பப்பட்டனர். அங்கு அவர்கள் சந்திக்கக்கூடிய ஆபத்துகளிலிருந்து தப்பிக்க மாந்திரிகமும் அவர்களது ஜோதிடத்தில் உள்ளது. ஆவி, பேய் பிடித்தல், அதிலிருந்து விடுதலை, வழிப்பறி, கொள்ளை போன்றவற்றை ஜோதிட ரீதியாகத் தெரிந்து கொள்ளுதல் என்றெல்லாம் இதில் உள்ளன. போரில் தனக்கு உதவின மக்களுக்கு வசிஷ்டர் இந்த ஜோதிடத்தை உபதேசித்து இருக்க வேண்டும். அதுவே பின்னாளில், மிலேச்ச நாடுகளில் நன்கு ஊன்றி, நாளடைவில் யவனர்களிடமிருந்து யூதர்கள், பிறகு கிருஸ்துவர்கள், முஸ்லீம்கள் என்று அந்தப் பகுதி முழுவதுமே பரவியிருக்கிறது. தற்சமயம் வெஸ்டர்ன் அஸ்ட்ராலாஜி என்ப்படும் மேல் நாட்டு ஜோதிடம், யவன ஜாதகத்தின் சாயலில் உள்ளது. 


வசிஷ்டரைப்போல பரசுராமரும் தனக்கு உதவின மிலேச்சர்களுக்குப் பிரதி உபகாரம் செய்து அவர்களுக்கு ஆதரவு தந்தாரா என்ற கேள்வி எழுகிறது. இதை வலியுறுத்தும் வண்ணம், மஹாபாரத்த்தில் ராஜ சூய யாகத்தின் போது, சஹாதேவன் தென் பகுதிக்கு வந்து போர் புரிந்தான் என்று சொல்வதில் திராவிடர்கள், உத்ர கேரளார்கள் போன்றவர்களை வென்றான் என்னும் பொழுது, அந்த வரிசையில் யவனர்களும் சொல்லப்பட்டுள்ளார்களே, அது எப்படி? (-பா- 2-30)

இந்த ஒரு இடத்தைத் தவிர யவனர்கள் பற்றிச் சொல்லும் பிற இடங்களில் எல்லாம் அவர்கள் வட இந்தியாவிலோ, அல்லது வட மேற்கு இந்தியாவிலோ அல்லது அராபியப் பகுதிகளிலோதான் சொல்லப்பட்டுள்ளார்கள். சஹாதேவனின் தென் திசைப் பயணத்தின் போதும் யவனர்களை வென்றது வரவே, சில யவனர்கள் தென்னிந்தியாவில் 5000 ஆண்டுகளுக்கு முன்பே வசித்திருக்க வேண்டும் என்றாகிறது. அவர்களைப் பரசுராமர் தென்னிந்தியப் பகுதிகளில் குடி அமர்த்தினாரா?

யவனர்களைப் போலவே கேரளர்களும்


வசிஷ்டருக்கு உதவின கேரளர்களது ம்சாவளியினர், பரசுராமருக்கும் உதவினார்களா? அவர்களது வினோதப் போர் முறைதான் இன்றைக்கும் இருக்கும் களரிப்பயட்டு என்னும் போர்க்க் கலையோ?  




களரிப்பயட்டு கலையைப் பரசுராமர் அளித்தார் என்றே அவர்கள் சொல்கிறார்களே, அது மிலேச்சர்களது வித்தியாசமான போர்க்கலையா அல்லது, அதை ஒழுங்குபடுத்தி பரசுராமர் அவர்களுக்குச் சொல்லிக் கொடுத்ததா? அப்படி சொல்லிக் கொடுத்தது மட்டுமல்லாமல், மிலேச்சம் என்பதிலிருந்து மறு வாழ்வு தரும் வண்ணம், அரபிக் கடலோரம் தான் கடலிலிருந்து மீட்ட இடங்களில் அவர்களைக் குடியமர்த்தினாரா?
அவ்வாறு குடியமர்த்தின பகுதி, உத்ர கேரளம் என்பதா? 


சஹாதேவன் வென்ற உத்ர கேரளம் என்பது இந்தக் கேரளர்கள் வாழ்ந்த இடமா? மஹாபாரதத்தில் சமஸ்க்ருதத்தில் சொல்லப்பட்டுள்ள உத்ர என்னும் இந்தச் சொல்லில்த்என்பது அழுத்தி உச்சரிக்கப்படுகிறது. த்ர என்பதற்கு நீர் என்பது பொருள். நீரிலிருந்து மீட்கப்பட்ட இடத்தில் அவர்கள் குடியமர்த்தப்படவே அவர்கள் உத்ர கேரளர்கள் எனப்பட்டார்களா


அது மட்டுமல்ல சேர அரசின் பழமையான மன்னன் உதியன் சேரலாதன். அவன் 5000 ஆண்டுகளுக்கு முன் மஹாபாரதப்போர் காலத்தில் சேர நாட்டை ஆண்டவன். அவனது குலப் பெயரான உதியன் என்பது உத்ர என்பதிலிருந்து வந்ததா? அல்லது உதீசி என்னும் வடக்கு திசை என்னும் பொருளிலிருந்து வந்ததா? (உதீசி என்னும் சொல்லின் தமிழாக்கமாக ’ஊசி’ என்னும் சொல் புறநானூற்றில் வருகிறது.)

அவன் வாழ்ந்த காலத்திலேயே உத்ர கேரளமும் இருந்திருக்கிறது என்று மஹாபாரதத்தின் மூலம் அறிகிறோம். உத்ர கேரளத்தில் கேரளர்களைக் குடியமர்த்தி, உதியன் பரம்பரையினரை நாடாள வைத்தாரோ பரசுராமர்


திராவிடர்கள் எனப்பட்ட மிலேச்சர்கள் வசிஷ்டருக்கு உதவியதைப் போல பரசுராமருக்கும் உதவிக்கு வந்தார்களோ? அதற்குப் பிரதிபலனாக, அவர்களைத் தென்னிந்தியாவில் பரசுராமர் குடி அமர்த்தினாரா?

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடை எதுவாக இருந்தாலும், ஒன்று மட்டும் நிச்சயம் – சிந்து நதிப் பகுதியிலிருந்து ஆரியர்கள் விரட்டவே, திராவிடர்கள் தென்னிந்தியாவுக்கு வந்தவர்கள் என்ற கதைக்கு ஆதாரம் இல்லை

மாறாக, அந்தப் பகுதியைச் சேர்ந்த மிலேச்சர்கள் அரபிக் கடலோரம் வந்து குடியேறி இருக்கிறார்கள் என்று சொல்ல இந்த விவரங்கள் துணை போகின்றன.
ராமன் காலத்துக்கு முன்பே சிபியின் வம்சாவளியில் வந்த சோழ வர்மன் சோழ நாட்டை ஸ்தாபித்தான். 

பரசுராமர் காலத்தில், அவரால் அமர்த்தப்பட்ட பிராம்மண அரசனாக உதியன் பரம்பரை இருந்திருக்கக்கூடும். 

ஆகவே, மூவேந்தர்களில் இரண்டு வேந்தர் பரம்பரை, ஆரியம் ஆரியம் என்று வெறுக்கிறார்களே அந்த ஆரியப் பகுதி மக்கள் வழியில் வந்தவர்கள் என்பது தெளிவாகிறது. 

கூர்மச் சக்கரம் காட்டும் இந்த உள் விவரங்களை அடுத்து, தென் மேற்குத் தென்னிந்தியாவில் இருந்த திராவிடத்தைப் பற்றி அடுத்த கட்டுரையில் காண்போம்







11 கருத்துகள்:

  1. அக்கா. இவ்ளோ பெரிய பதிவிலிருந்து எப்போ பதிவுலகத்துக்கு விடுதலை

    பதிலளிநீக்கு
  2. Dear Jayasree Madam,
    Many thanks for your excellent work in this subject. I found here the knowledge which I have been searching for a long time in wrong places.
    I have yet to read all the articles in this blog but I cannot resist the temptation to write here.

    Its been a wonderful journey with surprising and illuminating information.

    The more I reflect on the articles, more questions arise like a student trying to grasp new concepts. I saw the way you answered the queries and cleared the doubts of the readers, it was like a teacher educating the students.

    I realize that, what was thought in the school as history was the one fabricated and what was commented as a work of fantasy has the real history.I understand that we possess not only our history or the rest of the world but the whole universe and beyond.

    Iam eagerly waiting for your next article feel that the big picture will be evolved in the end of this series.

    Thanks a lot.

    Regards
    Chalam

    பதிலளிநீக்கு
  3. Dear Mr Chalam,

    Thanks for the encouraging words and for having grasped the idea I wanted to convey through these articles that Puranas, Ithihasas and Sangam texts indeed contain the seeds of world history.

    Please stay connected with the blog. The next article will be posted in a couple of days.

    பதிலளிநீக்கு
  4. அருமையான ஆய்வுக் கட்டுரை. முற்றிலும் அரிய புதிய செய்திகள். ஆழ்ந்த கவனத்துடன் கூடிய படிப்பு ஞானம், நம்மையும் இவ்வாறே படிக்கத் தூண்டுகிறது. நன்றி.

    பதிலளிநீக்கு
  5. ஊக்கமளிக்கும் தங்கள் கருத்துரைக்கு நன்றி கீதா அவர்களே.

    பதிலளிநீக்கு
  6. ஆதாரங்களுடன் நிகழ்ச்சிகளைத் தொகுத்து இத்தனை அருமையான கட்டுரையை ,உண்மைகளைக் கொடுத்திருக்கிறீர்கள்.

    மிகுந்த நன்றி. மற்ற பகுதிகளையும் படிக்க வேண்டிய அவசியம் இப்பொது வந்திருக்கிறது.
    உங்களை அறிமுகம் செய்த திருமதி கீதா சாம்பசிவத்துக்கு மிகவும் நன்றி.

    பதிலளிநீக்கு
  7. நன்றி வல்லிசிம்ஹன் அவர்களே. திருமதி கீதா சாம்பசிவம் அவர்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  8. You may consider this as a question from a novice to reading old texts and scripts.While you read certain places in a sequence you have chosen to exempt mthis rule in some places. for example, why do you think ceylon was mentioned separately and not in sequence with singalam and rishaba nadu?

    பதிலளிநீக்கு
  9. Dear Mr Venky,
    In this list given by Varahamihira, there is no definite consistency with other places too. After Nasikya, Kollam comes. After river Kaveri, Rishyamuka mountain comes. So I would rather not look for some reason for the listing but instead concentrate on the places, their location and importance.

    பதிலளிநீக்கு
  10. //தமிங்கிலாஸன நாடுகள்// evai

    பதிலளிநீக்கு
  11. There is no other information on தமிங்கிலாஸன நாடுகள்.

    பதிலளிநீக்கு