திங்கள், 8 ஏப்ரல், 2013

இந்தியாவிலிருந்து ஐரோப்பாவுக்குச் சென்ற தாய் தெய்வ வழிபாடு – 2




ஆங்கிலத்தில் எனது மூலக் கட்டுரை:-

http://jayasreesaranathan.blogspot.in/2013/03/origin-of-easter-from-ishtar-and-ishtar_4874.html

தமிழாக்கம்:- திரு T.G  சாரநாதன்

மீண்டும் ஒரு முறை ஈஸ்டர் உருவத்தைக் காண்போம்.


அவள் சிங்கங்களின் மேல் நிற்கிறாள். இரு பக்கங்களிலும் ஆந்தைகள் இருக்கின்றன. ஹிந்து பெண் தெய்வங்கள் சிங்கம் அல்லது புலி அல்லது முதலையின் மீது நின்றோ அல்லது அமர்ந்தோ இருப்பதை நாம் பார்த்திருக்கிறோம்.அந்த்த் தெய்வம் கொன்ற எருமை அல்லது காளைமாட்டுத் தலையைத் தன் கால் அடியில் வைத்திருப்பதையும் காணலாம். இதனால் நமக்குத் தெரிவிக்கும் செய்தி என்னவென்றால், அவளுடைய பக்தர்கள் மேற்கூறிய ஜீவராசிகளிடமிருந்து ஏதாவது துன்பம் வந்தால், அந்தத் தெய்வம் அவர்களைக் காப்பாற்ற வருவாள் என்பதே! சங்ககாலத்தில் தமிழ்நாட்டுப் பெண், வெறும் முறத்தைக் கொண்டு புலியை விரட்டினாள்  என்று கேள்விப் பட்டிருக்கிறோம்.

இது எப்படி சாத்தியம் என்று தோன்றும். ஆனால் அந்தக்கால வாழ்க்கை முறையில் ஆண்கள் வெளி வேலைகளுக்குச் சென்று விட்டால், பெண்கள் வீட்டு வேலையையும் குழந்தைகளையும் பார்த்துக் கொள்வார்கள். அவர்கள் இருந்த கிராமங்களைச் சுற்றிக்  காடுகள் இருந்தன, ஆகையால் அவர்களுக்குக் காட்டுமிருகங்களான புலி, சிங்கம் முதலியவற்றால் அபாயம் இருந்தது. அந்த வீரத்தாய்மார்கள் எப்பொழுதும் கவனத்துடனே இருந்து, மிருகங்களினால் தங்களுக்கும், தங்கள் குழந்தைகளுக்கும் எந்த்த் தீங்கும் நேராதபடி பார்த்துக் கொண்டனர். பண்டைய மகளிர் மிகத் துணிச்சலுடனும்,  வீரத்துடனும் விளங்கினார்கள். அதனால்தான், சங்க காலப் பெண்ணைப் பற்றிய இந்த மொழியும் நிலைத்து நிற்கிறது. 

அந்தப் பெண்கள் ஒருவேளை சிங்கம், புலி போன்ற மிருகங்களைப் பழக்கிக்கூட வைத்திருக்கலாம். அதனால்தான் இந்தப் பெண் தெய்வங்கள் அந்த மிருகங்களின்மேல் நின்றுகொண்டோ உட்கார்ந்தோ இருப்பது போன்றே வடிவங்கள் ஏற்ப்பட்டிருக்கலாம்.

இதே மாதிரி பெண்ணொருத்தி புலிகளைச் சமாளிப்பதை சிந்து சமவெளி நாகரீக முத்திரையில் காணலாம்.

ஒரு பெண் (ஆண்  அல்ல) ஒரு புலியுடன்  வெறும் கையால் சண்டை போடுவதையும் காணலாம்.

அந்தமாதிரி சக்தியும் போராடும் தன்மையும் கொண்ட "புலிப்பெண்" முத்திரையைச் சிந்து சமவெளியில் காண்கிறோம்.



இந்த முத்திரையின் இடது பக்கத்தில் உள்ள திரிசூலத்தைப் பாருங்கள். இன்றும் கூட அந்தப் பெண் தெய்வங்களின் கைகளில் திரிசூலம் ஏந்தி இருப்பதையும், அவர்களைக் காளி, துர்க்கை போன்ற சக்தியின் ரூபங்களாக வழிபட்டு வருவதையும் நாம் காண்கிறோம்.


தமிழ்நாடுகாளிகோயில்களில்திரிசூலம் 

சக்தி தேவி ,சிவனின் துணைவியாவாள்.
சிவன் பிரபஞ்ச அளவில் அழிக்கும் சக்தி என்றால், சக்திதேவி, உலகளவில் அழிக்கும் சக்தி -  அவள் தன் குழந்தைகளையும், பக்தர்களையும் காப்பாற்றுவதற்காக இந்த அழிக்கும் தொழிலைச் செய்கிறாள்.

 இன்னுமொரு சிந்துசமவெளி முத்திரையில் பெண்சக்தி எவ்வாறு எந்ததிசையிலிருந்து அபாயம் வந்தாலும் (பயங்கரமிருகங்களைக் காணலாம்) அவற்றை அழிக்கிறாள் என்பதைக் காணலாம். இந்தத் தெய்வத்துடன் அஷ்டமங்கலச் சின்னங்களையும் காணலாம். அந்த முத்திரையைக் கீழே பார்க்கலாம்.


ஒரு பெண் கைகளை நீட்டி மிருகங்களைத் தாக்குகிறாள்.யானையும் சக்கரமும் அவளது உச்ச அதிகாரத்திற்கு, மங்கலப் பொருள்களாகக் காட்சி அளிக்கின்றன. இதுதான் மிகத்  தொன்மையான அம்பாள் அல்லது சக்தியின் வழிபாட்டு உருவம் .
விக்கிரக வழிபாட்டில், உருவங்களும், சின்னங்களும் அபூர்வமானதும், உயர்ந்ததுமான அதிகாரத்தை உடையவைகளாக வடிவமைப்பதுண்டு.

புலியுடன் இருக்கும் அம்பாளின் உருவம் கீழே:


யுத்தம், வேட்டையாடுதல், கால்நடைகளைக் கவருதல் போன்ற செயல்களில், சிங்கத்துடன் கூடிய அம்பாளை  வழிபட்டார்கள்.  



வீரர்கள் சண்டைக்குப் போகும்போது சிங்கக்கொடிகளைத் தூக்கிப் பிடித்தார்கள். இரண்டாம் நூற்றாண்டுப் படைப்பான சிலப்பதிகாரத்தில், வேடுவர்கள், சிங்கக் கொடியை ஏந்தி வெற்றி கண்டு, சிங்கத்துடன் கூடிய அம்பாளை வணங்குவதை, ‘வேட்டுவ வரிஎன்னும்  ஒரு அத்தியாயம் முழுவதிலும்  காணலாம். இந்த வெற்றியைக் கொண்டாடும் விதத்தில், அவர்கள் இனத்தைச் சார்ந்த லக்ஷணங்களுடன் கூடிய ஒரு பெண்ணைத்  துர்க்கை மாதிரி அலங்கரித்தார்கள். நேபாளத்தில் நாம் கேள்விப்படும் குமரியைப்போன்று உடைஉடுத்துவார்கள்.நெற்றியில் மூன்றாவது கண் ஒன்றையும் தீட்டுவார்கள்.   



கொல்கத்தாவில் நாம் பார்க்கும் துர்க்கா பூஜையைக் காட்டிலும் முன்னால்  தோன்றியது தமிழ்நாட்டு துர்க்கா பூஜை! இன்னும் சொல்லப் போனால், வடஇந்திய துர்க்கா பூஜை என்பதே, தென்  இந்தியக் கோடியில் (வேட்டுவ வரியில், தமிழ் நிலத்தில்) கொண்டாடிய  துர்கா பூஜையுடன் தொடர்பு கொண்டுள்ளது. காலக் கட்டத்தில், வேட்டுவ வரி எழுதப்பட்ட சிலப்பதிகாரத்துக்குப் பின்புதான் உண்டானது. வேட்டுவ வரி துர்கா வழிபாட்டில் குமரி என்னும் சிறு பெண்ணைப் பெண் தெய்வமாக அலங்கரித்து வழிபட்டிருக்கிறார்கள். 

இந்தப் பெண்ணின் பெயரையும்,  இம்மாதிரி வழிபாட்டுடன், பழங்காலத்தில் இருந்த தொடர்பையும் பற்றி, இக்கட்டுரையின் இறுதியில் நாம் பார்க்கலாம்.

கைகளைத் தூக்கி இருக்கும் மத்திய ஆசிய, ஐரோப்பா பெண் தெய்வம், எதிரிகளை அழித்துக் கொல்லும் ஹிந்து அம்பாளுடைய தொடர்பே. யூதர்களின் ஆஷேரா (ASHERA) ,சிந்து சமவெளி பெண்ணைப் போன்றே உள்ளார்.


அதே போல் மினோவன் (MINOAN) கலாச்சாரத்திலும் காண்கிறோம்.இதில் ஒரு சிங்கத்தையும் ஒரு எருமையையும் பார்க்கிறோம். இந்த மிருகங்கள்எல்லாம், குறிப்பிட்ட ஒரு இடத்தில் உள்ள அபாயத்தையே காட்டுகின்றன. எல்லாவற்றிலும், ஹிந்து வழிபாட்டில் உள்ள வீரமான பெண்ணையே ஒத்திருக்கின்றன.



இன்னொரு மினோவன் கலாசாரப் படம் கீழே:



கீழுள்ள படத்தில், சுமேரியன் இனன்னா (INANNA) , சிங்கத்தை அடக்குவதைக் காணலாம்.



எங்கெல்லாம் குறிப்பிட்ட மிருகங்களினால் பயமோ, அங்கெல்லாம் இந்த மாதிரியான வெளிப்பாடுகளைக் காணலாம். அதிசயமாக, ஐரோப்பாவிலும், மத்தியக் கிழக்கிலும் சிங்கங்களும் புலிகளும் இல்லை; ஆனாலும், அங்கு இம்மாதிரி முத்திரைகள் காணப்படுகின்றன. புலிகள் தென்கிழக்கு ஆசியா, இந்தியாவிலும், சிங்கங்கள் ஆப்பிரிக்கா, இந்தியாவிலும் அதிகமாகத் தென்படுகின்றன. சிங்கம், புலிகளை அடக்கியாளும் இந்தக் கருத்து உற்பத்தியாகும் இடங்களில், அம்மாதிரி மிருகங்களின் தொல்லை அதிகமாகவும், அடிக்கடியும்  இருந்திருக்கும். ஆகையால், தர்க்கரீதியாகப் பார்த்தால், மத்தியகிழக்கு, ஐரோப்பா முதலிய இடங்களில், ஒரு பெண் தெய்வம் சிங்கம், புலி இவற்றுடன் காணப்படுவது, இறக்குமதி செய்யப்பெற்ற ஒருகருத்தே ஒழிய, அங்கேயே உற்பத்தியான கருத்து இல்லை.  ஆனால்அந்தக்கருத்தைமாற்றியும், விரிவாகவும் செய்திருப்பார்கள். இந்த மிருகங்களுடன் பாம்பையும் பார்க்கலாம். இதைப் பற்றிப் பேசுவதற்கு முன்னால், வேறு சில  விஷயங்களைப் பேச வேண்டி இருக்கிறது.

ஈஸ்டர் உருவத்துடன் இரண்டு ஆந்தைகளையும் பார்க்கிறோம் .விக்கிபீடியாவில் ஆந்தைகளைப் பற்றிய  கட்டுரையில், இந்தியாவுடன் உள்ள தொடர்பை வெறும் ஒரு வரியில் தெரிவிக்கப் பட்டிருக்கின்றது. ஆனால், ஆந்தைகளைப் பற்றி வேதங்களிலும், காவியங்களிலும் பலஇடங்களில் கூறப்பட்டிருக்கிறது.  இராமாயணத்தில் (7-72) பூமி உற்பத்தியைப் பற்றிச் சொல்லும் போது, கழுகையும், ஆந்தையையும் வைத்து ஒரு சுவாரசியமான கதை வருகிறதுதிருட்டு வழிகளில் அழிக்கும் முறைகளில் ஆந்தையை பற்றின முக்கியமான தொடர்புகள் தெரிவிக்கப்படுகின்றன.

இது ஹிந்துக்களின் காவியமான மகாபாரதத்தில் காணலாம். யுத்தம் முடிந்த நேரம். பாண்டவர்கள் கௌரவர்களை வென்று விட்டார்கள். போர் முடிந்த கடைசி நாளின் இரவு நேரம் அது. பாண்டவர்கள் களைப்பில் நன்கு தூங்குகிறார்கள்.ஆனால்  எதிரிகள் கூட்டத்தில் இருந்த அச்வத்தாமனுக்குத் தூக்கம் வரவில்லை. தன்னுடைய தந்தையைக் கொன்ற விதத்தையும், தன்னுடைய போஷகர்களான கௌரவர்களை அழித்ததையும் எண்ணி, எண்ணி அவனுக்கு  கோபம் கொந்தளித்தது. பாண்டவர்களை எப்படியாவது  பழிவாங்கத் துடித்தான். அப்பொழுது அந்த இருட்டு வேளையில் ஆந்தை ஒன்று ஓசைப்படாமல் வெளி வந்து,, தூங்கும்  மற்ற பறவைகளைக் கொன்று தின்பதைப் பார்த்தான். இந்த யுக்தியை அவன் பார்த்து, அதே மாதிரி தூங்கும் பாண்டவ புத்திரர்களைக் கொன்றான். இம்மாதிரி இரவு நேரத்தில் உலகமே தூங்கும் போது, தான் விழித்திருந்து, பிறர் எதிர்பாராத தருணத்தில், அவர்கள் அறியா வண்ணம் கொல்வதோ, அழிப்பதோ, காளியின் நாட்டியம் அல்லது காளராத்திரி எனப்படும். ஆந்தையானது காளராத்திரியை உருவகப்படுத்துகிறது.


 எனவே ஈஸ்டர் தெய்வத்துடன் காணப்படும் சிங்கத்தையோ, ஆந்தையையோ ஒருவிதத்திலும் காதல், பாசம், மகப்பேறு மற்றும் புனித விபச்சாரத்துடன் தொடர்புபடுத்த முடியாது .இங்கு மூலக்கருத்துடன் தொடர்பு அறுபட்டிருப்பதைக் காணலாம்.காலங்கள் தோறும் ஒரே உருவத்தைப் பற்றின  இம்மாதிரிக் கருத்து மாறுபடுவது சகஜம்தான்.  இந்தக் கருத்து கடைசியாக  2000 வருடங்களுக்கு முன்பு வசந்தத்தை வரவேற்கும் பெண் தெய்வமாக மாறுபட்டிருக்கிறது.

(தொடரும்)


1 கருத்து:

  1. Also posted in

    http://frontiers-of-anthropology.blogspot.in/2013/04/origin-of-easter-from-ishtar-and-ishtar_3.html

    Part -1 of this is in

    http://thamizhan-thiravidana.blogspot.in/2013/04/1.html

    பதிலளிநீக்கு