திங்கள், 8 ஏப்ரல், 2013

இந்தியாவிலிருந்து ஐரோப்பாவுக்குச் சென்ற தாய் தெய்வ வழிபாடு – 1



தாய் தெய்வ வழிபாடு என்பது மிகவும் தொன்மையானது. உலகின் பல பகுதிகளிலும் அது இருந்தது என்று சொல்லும் தொன்மையான அடையாளங்கள் பல இருக்கின்றன. ஆனால் அவற்றின் ஆரம்பம் இந்தியாவிலும், அதிலும் குறிப்பாக தமிழ் மரபிலும் இருந்தன என்பதைப் பற்றி   நான் கவனித்ததை 4 பகுதிகளாக உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

"தமிழன் திராவிடனா" தொடரில் இது ஒரு இடைச் செருகல் அல்ல. இந்தத் தொடரில் வரப்போகும் பல கருத்துக்கள் இவற்றில் இடம் பெற்றுள்ளன. இவற்றை முதலில் ஆங்கிலத்தில் எழுதினேன். இவற்றைத் தமிழாக்கம் செய்தவர், 'கோதையின் பாதை' என்னும் கூகிள் பெயரில் கருத்துரைகள் இட்டு வரும், தமிழ் ஆர்வம் மிக்க திரு T.G  சாரநாதன் அவர்கள். தமிழ் நாடு தொலை தொடர்பு வட்டத்தின் மேலாளராக ஓய்வு பெற்ற அவருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி.

மூலக் கட்டுரை:-

http://jayasreesaranathan.blogspot.in/2013/03/origin-of-easter-from-ishtar-and-ishtar_31.html 

Origin of Easter from Ishtar and Ishtar from Hindu Goddess.(part -1)


***********
வருடம்தோறும் பிறக்கும் வசந்த காலம், ஈஸ்டர் என்றான கதை.

 ஈஸ்டரைப்பற்றின பின்வரும் தகவல் சுவாரசியமானது. இது அசிரியன் மற்றும் பாபிலோனியன் பெண்தெய்வமான ஈஸ்டரைப் (ISHTAR) பற்றின கருத்து.    
வருடாந்தோறும் வரும் வசந்தகால மறுமலர்ச்சியை ஈஸ்டர் தெய்வத்துடன் இணைத்துக் கொண்டாடியதை, கிறிஸ்துவர்கள் இயேசுநாதர் மீண்டும்  உயிர்ப்பித்து எழுந்துவந்ததாகப் பின்பற்றினார்கள்.


இந்தப் படத்தில் இருப்பவள் ஈஸ்டர் என்னும் பெண் தெய்வமாவாள். ISHTAR என்று எழுதினாலும், இந்தச் சொல்லை ஈஸ்டர் உச்சரித்தார்கள். கிருஸ்துவம் பிறப்பதற்கு முன்பே இந்தத் தெய்வத்தை ஐரோப்பாவில் வழிபட்டு வந்தார்கள். விரும்பினதைத் தருபவள் என்றும், வசந்த காலத்தில் வருபவள் என்றும் அழைத்தார்கள். ISHTAR என்னும் பெயர் இஷ்டம் என்ற உச்சரிப்பில் வருவதால் இஷ்டப்பட்டதைக் கொடுப்பவள், ஆதலால் இஷ்டர் என்றழைக்கப்பட்டிருக்க வேண்டும் என்று நமக்குத் தெரிகிறது. ஆனால் நாளடைவில் இது ஈஸ்டர் என்றாகி விட்ட்து.

பிறகு பொ.பி. 3 ஆம் நூற்றாண்டில் ஜேம்ஸ் மன்னன் கிருஸ்துவத்தைப் பரப்ப ஆரம்பித்த போது, ஏசுபிரானுக்கு தெய்வ அந்தஸ்து கொடுப்பதற்காக பல முயற்சிகளைச் செய்தான். அவற்றுள் ஒன்று அவர் உயிர்த்தெழுந்த்தாகச் சொல்லப்படும் நாள். அவர் உயிர்த்தெழுந்தாரா என்பதைப் பற்றியும், அவ்வாறு உயிர்த்தெழுந்திருந்தால் அது என்ன தினம் என்பதைப் பற்றியும் ஒரு விவரமும் அப்பொழுது இல்லை. அவற்றை ஜேம்ஸ் மன்னனும், பிறரும் ஏற்படுத்திக் கொண்டனர். அவற்றில் ஒன்றுதான், ISHTAR என்னும் பெண் தெய்வத்தைக் குறிக்கும் வசந்த கால ஆரம்ப நாளை, ஏசு  உயிர்த்தெழுந்த தினமாக மாற்றியது. இதன் மூலம், அன்று வரை இருந்து வந்த பழமையான மத வழக்கத்தை ஒழித்தார்கள், அதற்கு எதிர்பு தெரிவித்தவர்களை சமாதானப்படுத்தும் வழியாக பழைய பெயரான ஈஸ்டர் என்பதையே ஏற்றுக் கொண்டார்கள். இந்த விவரத்தை மேற்கத்திய ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துச் சொன்னதைத்தான் மேலே உள்ள படத்தில் காண்கிறீர்கள்.

இந்து விக்கிரக வழிபாட்டைஅறிந்தவர்களுக்கு, ஈஸ்டர்  வழிபாடு, ஹிந்து தெய்வங்களில் அம்பாள்/ தாயார்/ தேவி வழிபாட்டை ஒட்டியதே என்பது புலப்படும்.


ஈஸ்டர் பண்டிகை நமது நாட்காட்டியில் (காலண்டரில்) ஒரு நிலையான நாள் இல்லை. இது மார்ச்சு மாதம் இரவு-பகல் சமநாளை ஒட்டிவரும் பௌர்ணமியின் அடிப்படையில் வரும். இது ஒருவகையில்,  மரணத்தை ஒத்த குளிர்காலத்தைவிட்டு வசந்தகாலம் புத்துயிர் பெரும் நிகழ்ச்சியின் உருவகமேயாகும்.

கிறிஸ்துவத்திற்கு முன்னால் ஐரோப்பாவில் எல்லா நிகழ்ச்சிகளுமே சந்திரனை ஒட்டியே நிர்ணயிக்கப்பட்டன என்பது ஒரு ஆச்சரியமான  விஷயமாகும். அதிலும் இப்பொழுது ஜனவரி ஒன்றாம் தேதியன்று கொண்டாடும் புத்தாண்டுப் பிறப்பு  வழக்கமும் அந்தப் பழக்கங்களிளிருந்துதான் உதயமானது!  சீசர் மன்னன் புது வருடப் பிறப்பை (அந்தக்காலத்தில் "மித்ரா"வின் பிறந்த நாளானடிசம்பர் 25 ஆம் தேதி கொண்டாட நிச்சயித்த போது, மக்கள் அதனை எதிர்த்தனர்; ஏனெனில் அந்தநாள் ஒரு அமாவாசையோ அல்லது பவுர்ணமி தினமோ அல்ல என்பதால்அதற்குச் சில தினங்களுக்குப் பிறகு, அதாவது கி.மு.45 வருடம், ஜனவரி ஒன்றாம்தேதி அமாவாசை நிகழ்ந்தது. உடனே அந்த நாளைப் புத்தாண்டு தினமாகக் கொண்டாடினார்கள்! அதற்குப் பிறகு அமாவாசையை மறந்து விட்டார்கள் ஜனவரி 1 ஆம் தேதி மட்டும் நிலைத்து விட்டது. இப்படித்தான் ஆங்கிலப் புத்தாண்டு பிறந்தது.

இம்மாதிரி, பவுர்ணமிக்கும், அமாவாசைக்கும் முக்கியத்துவம் கொடுத்தது, அதற்கும் முன்பிருந்த வேத வாழ்க்கையை ஒட்டியதே என்று எண்ண இடமிருக்கிறது.
இம்மாதிரி பழைய காலங்களிலிருந்த பழக்கவழக்கங்களும், எண்ணங்களும் பரவியதையும், பின்பு மூலத்துடன் தொடர்பற்று அல்லது மூலத்தைச் சரியாகப் புரிந்து கொள்ளாமையால் , சீரழிந்ததையும் காட்ட , பழைய மித்திரா-மதத்தை உதாரணமாகச் சொல்லலாம்.

மேற்கத்தியர்கள் பெர்சிய நாட்டுக் கடவுளாகக் கருதும் மித்ரா,  உண்மையில் ஹிந்து வேத வழிபாட்டில் இருந்த மித்ரா (மித்ரன்) என்னும் கடவுளே! ஹிந்து நூல்களின்படி மித்ரா (மித்திரன்கால்நடைகளின் நண்பன் மற்றும் மழைக் கடவுள். அவன் சூரியனைப் பின்தொடர்ந்தே செல்பவன்சூரியனின் ஒவ்வொரு கிரணங்களிலும், மித்திரனும் மற்றும் பலதேவர்களும் பரவி இருப்பதால், அவை சக்தித் தொகுப்புக்களே ஆகும். அவை கீழ்க்கண்டவாறு வாஸ்து முறையில் காண்பிக்கப்படுகிறது.


பழங்காலத்தில், அடிப்படைப் படிப்பான தைத்திரீயஉபநிஷத்தின் முதல் வரி  மித்திரன்,வருணன், அர்யமான் என்ற மூன்று தேவர்களைப் புகழ்ந்து சொல்கிறது.

அந்த மூவரும் தினந்தோறும் சூரியனோடு தொடர்ந்து செல்வார்கள் .மேலே உள்ள படத்தில் கிழக்கிலிருந்து மேற்காக சூரியன், அர்யமான் (பித்ருக்கள்), பிரம்மா, மித்திரன் (நண்பன்) மற்றும் வருணன் (கடல்) வரிசையாக இருப்பதைக் காணலாம். மத்தியில் இருக்கும் பிரம்மா நண்பகலில் உச்சியில் இருக்கும் போது எந்த இடத்திலும் (இது வெப்பமண்டலப் பிரதேசங்களுக்கே பொருந்தும்), சூரியன் கிழக்காக நகர்வதும் ,சற்றே பின்னால் அர்யமான் தொடர்வதும் காணலாம். அப்போது, பித்ருக்களுக்காக நீர்த்தர்ப்பணம் செய்தால், மித்திரன் உச்சிக்கு வரும்போது அவற்றை ஏற்றுக் கொள்கிறான். மித்திரனுக்குப் பின்னால் வரும் வருணன் அதற்குத் துணை புரிகிறான் (நீராவியாக்குதல்) .இது சூரியன், மித்திரன், வருணனுக்குள்ள தனிப்பட்ட உறவு முறையாகும்மித்திரன் மழையையும் வருணன் கடலையும் குறிக்கும்.

ஹிந்து வானசாஸ்திரப்படி, மழை வருவதற்கான அறிகுறிகள் மிகவும் முன்னாலேயே ஏற்படுகிறது. இதை வேறு விதமாகச் சொன்னால், ஒருஇடத்தில் மழைபொழிய, சரியாக 195 தினங்கள் முன்பே சூரியன், மித்திரன், வருணன் கூட்டமைப்பு நீரை முகர்ந்து விடுகிறது.


ஒரு இடத்தில் ஏற்படும் நீராவித்தன்மை, மற்ற சீதோஷ்ண நிலவரங்கள், 195 நாட்களுக்குப் பிறகு எவ்வளவு மழைபொழியும் என்பதை நிணயிக்கின்றனஇது  வராஹமிஹிரரின் பிருஹத்சம்ஹிதையில் மிக விளக்கமாகக் கூறப்பட்டுள்ளது. இந்த விவரங்கள் சங்கநூல்களிலும் காணக் கிடைக்கிறது.அதாவது, கால்நடைகளின் நண்பன் மித்திரனை, 195 நாட்களுக்கு முன்னதாகக் கணித்து, மழையுடன் தொடர்பு படுத்தினார்கள். முதல்நாள் ஏற்படும் காலநிலையைப் பார்த்து 195 நாட்கள் கழித்து அந்த இடத்தில் எவ்வாறு மழைபொழியும் என்பதைக் கணிக்கலாம் .(பார்க்க   http://jayasreesaranathan.blogspot.in/2012/12/rainfall-prediction-part-1.html )

விசித்திரமாக, ஜோராஸ்ட்ரியர்களின்  (பார்சிமக்களின்) மதப்படி, அவர்களின் நாட்காட்டியில் 196 வதுநாள் மித்ரா மாதமாகும். இது அவர்கள் நாட்காட்டியில் 7 வது மாதத்தில்  16 வது நாள். இதனால் அவர்கள் நாட்காட்டி டிசம்பர்மாதத்தில்  25 ம்நாள்  ஆரம்பிக்கிறது. இதுவும் ஒரு வேதக் கோட்பாடே .என்னுடைய கணிப்பில், வேதகால மக்கள், தென்கிழக்கு ஆசியத் தீவுகளில் ஏற்ப்பட்ட நில  நீர்க் கொந்தளிப்பினால், உலகின் தெற்கு அரைக் கோளத்திலிருந்து இடம் பெயர்ந்தார்கள்தெற்குக் கோளத்தில் உள்ள மக்களுக்கு டிசம்பர் மாதமே வேனிற்காலச் சங்கராந்தியாகும். அதாவது சூரியனின் வடக்கு நோக்கிப் பயணிக்கும்நாள். அதேநாள் வடகோளத்தில் உள்ளவர்களுக்குக் குளிர்காலச் சங்கராந்தியாகும். வேத வானிலை சாஸ்திரப்படி, வானிலை நிகழ்வுகளைக் கண்காணிக்க டிசம்பர் பவுர்ணமியன்று  ஆரம்பிப்பார்கள் (மார்கழிமாதம்). அன்று காணும் வானிலைத் தோற்றங்கள் 195 நாள் கழித்து வரும் மழை அளவைக் குறிக்கும்.

இவை இந்தியாவுக்கு மட்டுமே பொருந்தும், முக்கியமாகத் தென்இந்தியாவுக்கு.  ஏனெனில் அங்குதான் மார்கழிப் பவுர்ணமியிலிருந்து ஆறரை மாதங்களுக்குப் பிறகு தென்மேற்குப் பருவமழை உண்டாகிறதுஆனால், இந்த எண்ணம் இரான்/ பெர்சியாவிலும், அங்கிருந்து கிரேக்கத்திலும் காணப்படுகின்றது . பூகோளரீதியாக இந்தப்பிரதேசங்களில் மித்திரன் மழை பொழியாது. ஆனாலும் இந்த எண்ணமும், நாட்களும் அவர்களிடம் காணப்படுகின்றது .இது எப்படி சாத்தியமாகும்?   

சாத்தியமாகும் போல் தோன்றும் ஒரு காரணம்: இந்த மக்களின் மூதாதையர், பூமத்தியரேகை அருகில் கடல் பகுதியில் வசித்து அங்கு இந்த 196 நாள் மழைக்  கணிப்பு அவர்களுக்குப் பழக்கமாகி இருந்திருக்க வேண்டும். இந்தக் கருத்து, மக்கள் இடம் பெயர்ந்த போது  மக்களுடனேயே சென்றிருக்க வேண்டும். அதனாலேயே இரானிய மக்களுக்கும் இதே கருத்து ஏற்ப்பட்டிருக்க வேண்டும். பின்வந்த காலங்களில், நாளும், மாதமும் மாத்திரம் அப்படியே இருக்க மித்திரனைப்   பற்றின எண்ணம் மாற்றம் அடைந்துள்ளது. யார் மழையை அருளி, கால்நடைகளுக்கு உணவு படைத்தாரோ, அவரே கால்நடைகளை மக்களுக்கு உணவாக்கும் மித்ரா என்னும் தெய்வமாகிவிட்டார்! அதற்காக  மித்ராவைச் சுற்றி ஒருகதை புனைந்தார்கள் அவரே கால்நடைகளை வேட்டையாடி உணவாக உண்பார். அதையே மக்களுக்கு விருந்தாக்கினார். இதை மக்களும் காப்பி அடித்து, மாட்டைக் கொன்று  விருந்துண்டு, மித்ராவுக்கு நன்றி சொல்ல வாய்ப்பாக்கினார்கள்.   



இரண்டாயிரம் வருடங்கள் முன்பு வரைக்கும் மித்ரா நாள் ஞாபகத்தில் இருந்தது.


இதே போல்தான் வேதத்தில்  காணப்பட்ட தேவி வழிபாடும், சிலமாற்றங்களுடன், பழைய ஐரோப்பியர்களிடம் காணப்பட்டது. முன்பு கூறியது போல், மூலத்தில் மக்களிடம் காணப்பட்ட  பழக்கங்களும் எண்ணங்களும் பல இடங்களுக்குப் பரவின. நாளடைவில் அவை  சீரழிந்தும் போய்விட்டன.


ஈஸ்டர் உருவத்தைகாணலாம்.


இந்த உருவத்தில் உள்ள ஒவ்வொரு பாகமும் மிகுந்த சிந்தனையுடனும், பல கருத்துக்களுடனும் உருவாக்கப்பட்டிருக்கிறது. முக்கியக் கருத்தை மறந்து விட்டால், புது அர்த்தங்கள் நிரம்பி வழிய ஆரம்பிக்கும். இதிலும் கருத்துச் சிதைவு ஏற்ப்பட்டு, இந்த உருவம் 'புனிதவிபச்சாரம்" (Sacred prostitution)  என்பதுடன் தொடர்பு படுத்தப்பட்டுள்ளது.

ஆனால் இது தவறான எண்ணமாகும். .இதை நான் வெகு உறுதியாகச் சொல்வேன்.

ஈஸ்டர் உருவத்தின் இடதுகையில் உள்ளது சக்தியையும், அதிகாரத்தையும் காட்டுகிற பொருளாகும். அது வெறுக்கத்தக்கதோ அல்லது ஒழுக்கம் சாராத பொருளோ அல்ல.
கீழ்க்காணும் சுமேரியன் படத்தையும் பாருங்கள்.


ஒரு பக்கம் தர்மச் சக்கரம் உள்ளது. ஆட்சியாளரின் கையில் அதேமாதிரி ஒருபொருள் உள்ளது (செங்கோலா? அல்லது, விசிறியா?). அதை வைத்துத்தான், அவர் மக்களைக் காப்பாற்றுகிறார் என்று தெரிகிறது. ஈஸ்டர் பெண்ணிஒன் கையிலும் இதே பொருள் இருக்கிறது.

இதேமாதிரி சிந்து சமவெளி முத்திரைகளிலும் பார்க்கலாம்.



முதல் பொருள் (நமக்கு இடது பக்கம்) தர்மச் சக்கரம் உள்ளது. சிந்து சமவெளியில் இம்மாதிரி பல முத்திரைகளைக் காணலாம். இதேமாதிரி முத்திரைகள் பல அரசர்களும் வழங்கி வந்தனர் .(சோழர்கள்  முத்திரைகள், கரவேலன் கல்வெட்டுக்கள்) இவற்றை எல்லாம் நான் பார்க்கும்போது, இவை அரசர்கள் பயன்படுத்திய அஷ்டமங்கலப் பொருட்களே  என்று எண்ணத் தோன்றுகிறது.   

மீன் உருவம், எட்டு விதமான மங்கலப்பொருட்களில் ஒன்று. அரசாங்க மங்கலப்பொருட்கள் 8-ம் உண்டு, 21-ம் உண்டு. அவைகளில் சில அரசு முத்திரைகளில் காணப்படும்.

எட்டு மங்கலப் பொருட்களாவன: விளக்கு,சாமரம், கண்ணாடி,அங்குசம், இரட்டைமீன், உடுக்கை, கொடி .
இருபத்தியொருமங்கலப்பொருட்களாவன: கிரீடம், அரசுக்குடை, சாமரம், அங்குசம்,உடுக்கை, சக்கரம், யானை, கொடி, மதிள், தோரணம், பூர்ணகும்பம், மாலை, சங்கு, கடல், மகரம், ஆமை, இரட்டைமீன், சிங்கம், விளக்கு, எருது, சிம்மாசனம்.

உதாரணத்திற்காக, தமிழகத்தில் ஆண்ட  உத்தம சோழன் காசு , கீழே:



இங்கு இரட்டை மீனைக் காணலாம்.இதைப் பாண்டியநாட்டு முத்திரையாகத் தப்பாக நினைக்க இடம் உண்டு.ஏனெனில், பாண்டியர்களுடைய சின்னம் மீன். சோழர்களின் சின்னம் புலி.ஆனால், இரட்டைமீன் ஒரு மங்கலச் சின்னம் ஆதலால், சோழர்கள் அதைத் தங்களது காசுகளில், முத்திரைகளில் பொறித்துள்ளனர்.

இன்னுமொரு உதாரணம், கலிங்க (இன்றைய ஒரிசா) அரசர் கரவேலரின் கல்வெட்டுக்கள். இதில் 2  சின்னங்களைக் காணலாம். இதன் காலம் கி.மு.1ம் நூற்றாண்டு. இந்தக் கல்வெட்டில், ஆரம்பத்தில் ஒரு ஸ்வஸ்திகாவும், ஸ்ரீவத்சமும் பொறிக்கப்பட்டுள்ளன



இதே அமைப்பைச் சிந்துசமவெளி முத்திரைகளிலும் காணலாம்:



இவை  இரண்டும் மேல்கூறிய  8/21 மங்கலப் பொருட்களில் காணப்படவில்லை. ஆனாலும் இவை இரண்டும் பவித்திரமான பொருட்களாக, 2000 லிருந்து 5000 ஆண்டுகள் முன்பு வரை கருதப்பட்டு வந்துள்ளது.

மறுபடியும், ஈஸ்டர் உருவத்தைக் காண்போம். அந்தப் பெண்ணின் இரு கைகளிலும் செங்கோல் போன்றவற்றை ஏந்தி இருக்கிறாள்.




ஹிந்து கடவுள் சிலைகளில், முக்கியமாகப் பெண் தெய்வங்களின் கைகள் உயரத் தூக்கி வைத்திருப்பதை  காணலாம். கீழ் உள்ள காளியின் சிலையைக் காணவும்:





இந்தப் பிரபலமான காளியின் உருவத்தில் ஒரு கையில் பாசக்கயிறைக் காணலாம்.அது ஈஸ்டர் கையில் உள்ளது போல் இருக்கிறது.
ஹிந்துக் கடவுள் சிலைகளில் எத்தனை ஜோடிக் கைகள் வேண்டுமானாலும் இருக்கலாம் .கைகளில் உள்ளபொருட்கள் ஒவ்வொரு அடையாளத்தைக் குறிக்கும். ஆனால் எல்லாவற்றிலும் மேலான கைகள் ஏந்தியுள்ளவையே அந்த்த் தெய்வத்தைப் பற்றின இயற்கையான அமைப்பாகும் .உதாரணத்திற்கு,  விஷ்ணுவின் நான்கு கைகளில், மேல் இரண்டு கைகளில் ஏந்தியுள்ள சங்கும், சக்கரமுமே  அவரது முக்கியத்துவக் கருத்தைக் காட்டிக் கொடுக்கும்.



அதே மாதிரி நடராஜரின் தூக்கிய கைகளில் உள்ள அக்கினியும், உடுக்கையுமே அவருக்கு முக்கியமானது எது காட்டிக் கொடுக்கின்றன




இங்கு நடராஜர் சிருஷ்டியையும், அழித்தலையும் ஒருங்கே காண முடிகிறது. பிரபஞ அளவில் அல்லது உலகளவில் பார்க்கும் போது எங்கெல்லாம் இயற்கையில் அழிவோ அல்லது அழிவிலிருந்து உற்பத்தியோ ஏற்பட்டால், அங்கெல்லாம் சிவபெருமான் கூத்தாடுகிறார் என்றே கருதுகின்றனர். இங்கு, தான் படைத்ததையே அழிக்கிறார் என்று எண்ணக்கூடாது. காலமும், இடங்களும் மாறினாலும், இந்த எண்ணம்  இயற்கையின் உற்பத்தியிலும், அழிவிலும் நன்றாகத் தெரியும்.

பிரபலமான ஒரு கருத்து, சிவபெருமானின் உடுக்கை ஓசையில் இமயமலை ஓங்கி வளர்கிறது, என்பது உண்மையில் பூமித்தட்டுகள் ஒன்றை ஒன்று இடித்து, சிதைந்து  இமயம் உண்டானது. இடிக்கும் போது எழும் அதிர்வுகள் உடுக்கை ஓசை போன்றது என்கிறோம். சிதைவிலிருந்து ஆக்கம் என்று சொல்லும் வண்ணம் இமய மலை எழுந்தது. அந்த இடத்திலேயே சிவன் குடி கொண்டு விட்டான் என்கிறோம்.


ஆனால் இந்த பிறப்பு அழிவு எண்ணங்கள் ஹிந்து மதக் கோட்பாடுகளில் பெண் தெய்வங்களில் மாறுபடுகின்றது. நம்முடைய சூழ்நிலையில், ஏதாவது உயிரினமோ அல்லது வஸ்துவோ அழிந்தோ அல்லது கொல்லப்பட்டாலோ, அங்கு தாயார்/ அம்பாள்/ தேவி தத்துவம் புலப்படும்.

இதன் விளக்கத்தை அறிய மீண்டும் ஈஸ்டர் உருவத்தைப் பார்ப்போம்.

(தொடரும்)

1 கருத்து: