திங்கள், 19 நவம்பர், 2012

117. டிடிகாகாவின் தைத்தியத் தொடர்பு.


தானவர்களது ஆதி இருப்பிடமான ஹிரண்யபுரத்தைத் தேடி, இந்தோனேசியப் பகுதிக்குச் சென்று, அங்கிருந்த தைத்தியர்களைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்து,  இப்பொழுது தென் அமெரிக்காவில் இன்கா மக்களில் வந்து நிற்கிறோம். இப்படி நாம் சுற்றிக் கொண்டே இருப்பதற்குக் காரணம், ஒரு தனிப் பட்ட சமுதாயமாக ஆதியில் மக்கள் இல்லை. தானவர்களும், தைத்தியர்களும், மானவர்களும் அருகருகே வாழ்ந்திருக்கின்றனர். அவர்களுள் ஒருவரைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தால், தொடர்ச்சியாக இன்னொருவரைப் பற்றிச் சொல்ல நேரிடுகிறது. இவை அனைத்திலும், பாரதம் மற்றும் தமிழ் மக்களது மூலம் கலந்திருப்பதால், இவற்றைப் பற்றிச் சொல்ல வேண்டியிருப்பதும் அவசியமாகிறது.

இந்தோனேசியப் பகுதிகளில் அடிக்கடி எரிமலைச் சீற்றங்களும், நில நடுக்கங்களும் ஏற்பட்டு, நிலப்பகுதிகளும் முழுகும் நிலை அடிக்கடி ஏற்பட்டிருக்கிறது. அவற்றில் மிகப் பழமையான எரிமலைச் சீற்றம் இன்றைக்கு 70,000 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட தோபா எரிமலை வெடிப்பாகும். அந்த வெடிப்பில் எரிமலையே சிதறி, அது இருந்த இடம் பள்ளமாகி விட்டது.


அதற்குப் பிறகு எப்பொழுது எந்த எரிமலை வெடித்தது என்பதை இன்னும் விஞ்ஞான ஆராய்ச்சிகள் கண்டுபிடிக்கவில்லை. ஆனால் ஒரு சில முக்கிய வெடிப்புகள் கடந்த 10,000 ஆண்டுகளில் ஏற்பட்டிருக்கின்றன. அவற்றில் ஒன்றே வாமன அவதாரத்தில் வரும் மஹாபலியாகும். மஹாபலியின் கதை உண்மையில் வாழ்ந்த ஒரு அரசனது கதை, அதே நேரம் அந்தக் கதையைப் பயன்படுத்தி ஒரு இயற்கை நிகழ்ச்சியை விவரித்திருக்கிறார்கள் ரிஷிகள். அதைப் பற்றி போகப் போகப் பார்ப்போம்.

 

கடல் மட்ட ஆராய்ச்சிகளின் மூலம் சுமார் 21,000 ஆண்டுகளுக்கு முன் வடக்கில் பனியுகம் ஆரம்பித்த போது, தெற்கில் இந்தோனேசியா ஒரு பெரும் நிலப்பகுதியாக இருந்தது என்று தெரிய வருகிறது. இந்த ஆராய்ச்சியை மேற்கொண்ட கிரஹாம் ஹான்காக் காட்டும் இந்தோனேசிய வரை படத்தைக் கீழே காணலாம்.



 

பனியுகம் முடிந்து கடல் மட்டம் உயர ஆரம்பித்து இன்றைக்கு இருக்கும் நிலையை ஏறக்குறைய 7000 ஆண்டுகளுக்கு முன் அடைந்தது. இந்தோனேசியப் பகுதிகளின் இன்றைய அமைப்பு அப்பொழுது உருவாகி விட்டது. அதற்கு முன், எரிமலை, நிலநடுக்கம், அது உண்டாக்கும் ஆழிப் பேரலை ஆகிய இயற்கைச் சீற்றங்களினால் இங்கிருந்த பல பகுதிகள் கடலுக்குள் முழுகி விட்டன. இதனால் ஒவ்வொரு முறை இயற்கைச் சீற்றம் ஏற்பட்ட பொழுதும், மக்கள் கூட்டம் சிதறிப் போகும் நிலை ஏற்பட்டது. அப்படிச் சிதறின திசைகளை இந்தப் படத்தில் காணலாம். இதன்  விளக்கத்தை 115 ஆவது கட்டுரையில் கண்டோம்.



இந்தச் சிதறலில் பிரிந்த மக்களில், இந்தியாவில் மட்டுமே அந்த ஆதி சமுதாயத்தின் சுவடுகள் புராணங்கள், மஹாபாரதம் வாயிலாகப் பதிப்பிக்கப்பட்டும், அந்தக் கலாசாரம் பின்பற்றப்பட்டும் வந்துள்ளது. அந்தக் கலாசாரத்தின் அடையாளங்கள் தென் அமெரிக்காவின் பண்டைய மக்களான இன்கா மக்களிலும் காணப்படுகின்றன. அது எவ்வாறு என்று நாம் அறிந்து கொண்டால்தான், பாரதத்தில் இன்று வரை  பின்பற்றப்பட்டு வரும் வேத கலாசாரமே ஆதி கலாசாரம் என்றும், அதுவே சிதறலுக்குப் பின் ஆங்காங்கே சென்றுள்ளது என்றும் தெரிந்து கொள்ளலாம். இதில் நாம் காணப்போகும், இன்னொரு விவரம், தமிழ்ச் சொற்களும், தென்னன் தேசச் சாயல்களும் தென் அமெரிக்காவில் இருக்கின்றன என்பதும் ஆகும்.

 

இனி விவரங்களுக்கு வருவோம். 115 ஆவது கட்டுரையில் நாஸ்கல் ரிட்ஜ் என்னும் ஆழ்கடல் மலைத் தொடர் இருக்கும் விவரத்தைக் கண்டோம். நாகன் என்பதே நாக்கல் என்றும், நாஸ்கல் என்றும் ஆனதை முந்தின கட்டுரையில் கண்டோம். இந்தப் படத்தில் ஈஸ்டர் தீவுகளில் ஆரம்பித்து, தென் அமெரிக்கா வரை அந்த்த் தொடர் செல்வதைக் காணலாம்.



 

இந்தப் படத்தில் தென் அமெரிக்காவின் மேற்குக் கரையோரம் ஆண்டிஸ் மலைத் தொடர் இருக்கிறது. இந்தப் பகுதியில்தான் பெரு என்னும் நாடு இருக்கிறது. ஆண்டிஸ், பெரு என்னும் இரு பெயர்களுமே தமிழ், சமஸ்க்ருதத் தொடர்பு கொண்டவை. அந்தி என்னும் சொல்லே ஆண்டிஸ் என்றாகி இருக்க வேண்டும். அந்தி என்றால் சமஸ்க்ருத்த்திலும், தமிழிலும் முடிவு என்ற பொருளில் வருகிறது. இந்தோனேசிய சுந்தாலாந்து பகுதியிலிருந்து பசிஃபிக் கடலை நோக்கிச் செல்லும் மக்களுக்கு, தென் அமெரிக்காவின் கரையோரம் ஒரு சுவர் போல நீண்டும் உயர்ந்தும் செல்லும் ஆண்டிஸ் மலைத் தொடர் - அதுவே உலகின் அந்தி அல்லது அந்தம் அல்லது முடிவு என்னும் எண்ணத்தைத்தோற்றுவிக்கும். எனவே அந்தி என்றழைக்கப்பட்டும், காலப்போக்கில் ஆந்தி, ஆண்டிஸ் என்றாகி இருக்க வேண்டும்.

பெரு என்னும் சொல் பெரிய என்னும் தமிழ்ச் சொல்லிலிருந்தோ அல்லது மேரு என்னும் சமஸ்க்ருதச் சொல்லின் திரிபாகவோ இருக்க வேண்டும். பெருவில் விரு (VIRU) என்னுமிடம் இருக்கிறது. அங்கு பல தொல்பொருள்கள் கிடைத்துள்ளன. அதனால் விரு என்பதே பெரு என்றாகி இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்.


அது உண்மையாக இருந்தாலும், அதிலும் தமிழின் தொடர்பு இருக்கிறது. -ப என்னும் எழுத்துக்கள் தங்களுக்குள் மாறுபவை. பலி என்று மஹாபலியைச் சொல்கிறோமே, அவன் பெயர் 'வலி' என்றுதான் சமஸ்க்ருதத்தில் எழுதப்பட்டுள்ளது. அதையொட்டியே அவனை மாவலி என்று தமிழில் சொல்லும் வழக்கமும் இருக்கிறது. வலி, பலி ஆகிய இரு சொற்களுமே வலிமை என்னும் ஒரே பொருளைக் கொண்டவை. வ- ப மாற்றத்தால், விரு அல்லது வெரு என்பது பெருவாகவும் ஆகியிருக்கலாம். விரு என்பது வீரு, வீரன், என்னும் தமிழ்ச் சொற்களது திரிபாகவும் இருக்க முடியும். அதுவே பெரு என்றாகி இருக்கலாம். அல்லது வெரு என்னும் தமிழ்ச் சொல்லின் திரிபாகவும் பெரு ஆக முடியும். வெரு என்பது வீரு என்பதன் நேர் எதிரிடை. வீரு என்பது வீரத்தைக் குறிக்கும். ஆனால் வெரு என்பது அச்சத்தைக் குறிக்கும். அச்சத்தை உண்டாக்க்கூடிய அமைப்பை அந்தப் பெரும் மலைத்தொடர் கொண்டிருந்த்தால், அதை வெரு என்று அழைத்திருக்கலாம். இதன் உண்மைப் பொருளை அறிய வேண்டுமென்றால் பெரு நாட்டில் மேலும் பல தொல்லியல் ஆராய்ச்சிகள் நடைபெற வேண்டும். இப்பொழுதுதான் அந்தப் பகுதியை ஆராய ஆரம்பித்துள்ளார்கள். இனி வரும் காலங்களில் மேலும் பல சான்றுகள் கிடைக்க்கூடும்.


இதுவரை கிடைத்த சான்று மூலம், அங்கு வேத சமுதாயத்தின் சுவடு இருந்திருக்கிறது என்று தெரிகிறது

அந்தச் சான்று பெரு நாட்டில் சவின் அல்லது கவின் (Chavín ) என்னுமிடத்தில் கிடைத்துள்ளது.


பெருவில் கவின் இருப்பிடம்.



அங்கு 3000 ஆண்டுகள் பழமையான ஒரு கோயில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அந்தக் கோயிலைக் கீழுள்ள படத்தில் காணலாம்.



http://www.perutoptours.com/english/index02anchavinhuantar.html

விஸ்தாரமாக்க் கட்டப்பட்டுள்ள இந்தக் கோயிலின் அடித்தளத்தில் ஒரு சங்கு புதைக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

(விவரங்கள்: http://www.pasthorizonspr.com/index.php/archives/02/2011/ancient-shells-meet-high-tech-the-sound-of-pre-incan-conches#comment-3226 )


அடித்தளத்தில் சங்கை ஏன் புதைத்தார்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் தலையைப் பிய்த்துக் கொள்கிறார்கள். சங்கைக் கொண்டு ஒலி எழுப்பலாம். அதனால் ஒலி தொடர்பான காரணத்தினால் அந்தச் சங்கு அங்கு இருக்கிறதா என்றால், அந்த இடம் காற்றுப் புக முயாத அடித்தளமாக இருக்கிறது. சங்கொலிக்கும் அந்த இடத்துக்கும் தொடர்பு இல்லையே என்பது புரிந்தாலும், சங்குக்கும், ஒலிக்கும் உள்ள தொடர்பை ஆராய்வதில்தான் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டுள்ளன்ர். ஆனால் வேத மரபில் வந்த நமக்கு அந்த சங்கு அங்கு எப்படி வந்தது என்று தெரியும்.


எந்தக் கோயில் அல்லது அரண்மனை அல்லது வீடு கட்டினாலும், அஸ்திவாரம் போடுவதற்கு முன் 'சங்கு ஸ்தாபனம்" என்னும் ஒரு பூஜையைச் செய்ய வேண்டும். அதிலும்  குறிப்பாக கோயில் கட்டும் போது மூலக் கடவுள் பிரதிஷ்டை செய்யும் இடத்துக்கு அடியில் பள்ளம் தோண்டி சங்கு ஒன்றை வைத்து பூஜை செய்வார்கள். மூலக் கடவுளின் சக்தியை அங்கு இழுத்து வைப்பதற்காகச் செய்யப்படுகிறது. பூஜை முடிந்தவுடன், அந்தச் சங்கை அப்படியே வைத்து, அந்த இடத்தை மூடி விடுவார்கள். இதற்குப் பிறகுதான், அஸ்திவாரம் தோண்டி, முதல் கல்லை வைப்பார்கள்.


ஆதியில் உண்மையான சங்கைப் பயன்படுத்தினார்கள். அதற்குக் குறிப்பிட்ட வடிவம், உயரம், அகலம் என்று குறிப்பிட்ட லக்ஷணங்கள் இருக்கும். அப்படிப்பட்ட லக்ஷணங்களில் சங்கு கிடைப்பது அரிதாக இருக்கவே, குறிப்பிட்ட மரக் கட்டைகளிலிருந்து அதே லக்ஷணங்களுடன் கூடிய சங்கு உருவத்தைச் செதுக்கி, சங்கு ஸ்தாபனத்தில் பூஜை செய்வது வழக்கத்தில் வந்தது. பாரம்பரிய முறையில் இந்தியாவில் கட்டப்பட்ட எல்லா கோயில்களிலும் சங்கு ஸ்தாபனம் செய்யப்பட்டுள்ளது. இதன் விவரங்களை வாஸ்து சாஸ்திரத்தில் காணலாம்.


பெருவின் கவின் கோயிலில் புதைக்கப்பட்டுள்ள சங்கு இப்படிப்பட்ட சங்கு ஸ்தாபனம் நடந்த வேத வாஸ்து முறையைக் காட்டுகிறது. இது மய வாஸ்துவிலும் இருப்பது. மய தானவர்கள் தோபா எரிமலைப் பகுதியான இந்தோனேசியப் பகுதியில் ஆதியில் இருந்ததால், இந்தோனேசியாவிலிருந்து சிதறுண்ட மக்கள் ஒரே விதமான கட்ட்டக் கலையை எடுத்துச் சென்றிருக்கிறார்கள். இக்கலை வாஸ்து சாஸ்திரம் என்று அதர்வண வேத்த்தின் பகுதியாக இருப்பதால், அந்தக் கலையை நன்கு முறைப்படுத்தி உருவாக்கின அதர்வண வேதம் இந்தோனேசியப் பகுதியில் அல்லது தென்னிந்தியக் கடல் பகுதிகளில் என்றோ தோன்றி விட்டிருக்கிறது.


இந்தப் பெரு பகுதியில் இன்கா என்னும் பழமையான கலாசாரத்தைச் சேர்ந்த மக்கள் இன்றும் வாழ்ந்து வருகிறார்கள். 16 ஆம் நூற்றாண்டில் ஸ்பெயின் நாட்டவர்கள் அவர்கள் பகுதிகளை ஆக்கிரமிக்க ஆரம்பித்தார்கள். கூடவே கிருஸ்துவ மிஷனரிகளும் தங்கள் வேலையைக் காண்பிக்கவே, இந்த இன்கா கலாசாரத்தின்  பல சுவடுகள் மறைந்து விட்டன. ஐரோப்பாவில் கிரேக்கர்கள் எப்படி கெல்டுகள் கலாசாரத்தை அழித்தது மட்டுமல்லாமல், அவர்களது மொழியில் தங்கள் மொழியைப் புகுத்திப் பழமையான சொற்களை மாற்றி எழுதியும், உச்சரித்தும் வந்தார்களோ அப்படியே ஸ்பானியர்களும் இன்கா மொழிச் சொற்களை மாறுபாடுகளுடன் குறிப்பிட்டுள்ளனர். இவற்றையும் மீறி, அந்தச் சொற்களில் ஒரு பழைய பாரம்பரியத்தையும், வேத கலாசாரத்துடன் ஒட்டிய வழக்கங்களையும் காணலாம்.


இனி இன்கா கலாசரத்தைத் தொடர்வோம். அவர்களது பழமையையும், அவர்களுக்கு வேத மதத்துடன் தொடர்பு இருந்தது என்பதையும் தெரிவிக்கும் முக்கியச் சொல் விரகோசன் (Viracocha) என்பதே. புராண, உபநிஷதங்களில் சொல்லப்படும் விரோசனன் என்னும் தைத்தியன் பெயரை ஒட்டி இது அமைந்துள்ளது.

விரோசனன் என்னும் சமஸ்க்ருதச் சொல்லுக்கு ஒளி, நெருப்பு, ஒளி தரும் சூரியன் அல்லது சந்திரன் என்னும் அர்த்தங்கள் உள்ளன. பலியின் தந்தையான அவனை முன்னிட்டும் மக்கள் பெருக்கம் தென் பகுதியில் நடந்திருக்கிறது. அந்த மக்களில் சிலர் இயற்கைச் சீற்றத்தால் தென் அமெரிக்காவை அடைந்தபோது அவர்கள் விரோசனனது நினைவை எடுத்துச் சென்றிருக்கிறார்கள். 16 ஆம் நூற்றாண்டில் அவர்கள் இருந்த இன்கா பகுதிக்கு ஸ்பெயின் நாட்டவர்கள் வந்தபொழுது, அவர்களை விரோசனன் (விரகோசன்) என்றே இன்கா மக்கள் நினைத்தார்கள். ஒளியைக் குறிக்கும் விரோசனன் வெண்மை நிறமாக இருப்பான் என்பது அவர்கள் கருத்து. ஸ்பெயின் மக்கள் வெள்ளை நிறத்தவர்களாக இருக்கவே அவ்வாறு நினைத்திருக்கிறார்கள். விரோசனன் என்ற பெயரும் திரிந்து விரகோசன் என்றாகி இருக்கிறது. அதிலுள்ள விர என்பதும் விரு என்றாகி பெரு என்ற பெயரை அடைந்திருக்கலாம். எது எப்படியாயினும், வேத மரபின் புராணத்தை ஒட்டியும், சமஸ்க்ருதச் சொல்லை ஒட்டியும் பெரு என்ற பெயர் உண்டாகி இருக்கிறது என்பதை நாம் கவனிக்க வேண்டும்.


அந்த விரகோசனைப் பற்றிச் சொல்லும் பழமையான இன்கா கதைகளில், பிரளய வெள்ளம் ஏற்பட்டது என்றும், மக்கள் இருளில் மூழ்கி இருந்த போது, விரகோசன் ஒரு ஏரியின் அருகே மக்களைப் படைத்தார் என்றும் கூறுகிறார்கள். அந்த ஏரியின் பெயர் டிடிகாகா (Titicaca).


விரகோசனனது மகனான மன்கோ காபக் (Manco Cápac) என்பவன் டிடிகாகா ஏரி இருக்கும் இடத்துக்கருகே ஒரு குகை வாயில் வழியே வெளியே வந்திருக்கிறான் என்பதே இன்கா கதையாகும். டிடிகாகா என்பதே திதிகாகா (DITI-KAKA) அல்லது திதிகுகை (DITI- GUKAI ) என்பதாக இருக்க வேண்டும். விரோசனன் திதியின் வழி வந்த தைத்தியன் ஆவான். அவனது மகன் வந்து சேர்ந்த குகை வழியை திதி- குகை என்றும், அதுவே மருவி திதி- காகா என்றும் ஆகியிருக்க வேண்டும். இந்தக் குகை ஆண்டிஸ் மலையின் மறுபுறத்தில் ஆரம்பிக்கிறது. இன்கா கதையில் இரண்டு இடங்களில் விரகோசன் மகன்கள் வெளிப்பட்டார்கள். ஒன்று இந்த டிடிகாகா குகை. மற்றொன்று, நாம் மேலே பார்த்தோமே நாஸ்கல் ரிட்ஜ் - அது தென் அமெரிக்காவை அடையும் இடம்.


இந்தப் படத்தில் நாஸ்கல் ரிட்ஜ் முடியும் இட்த்தில் பச்சகாமக் (Pachacamac)  என்னும் இடம் காட்டப்பட்டுள்ளது. உண்மையில் அந்த ரிட்ஜ், தென் அமெரிக்க நிலப்பரப்புக்குக் கீழே முடிகிறது. அதனுள் ஒரு சுரங்க வழி இருந்திருந்தால், அது தென் அமெரிக்காவின் அந்தப் பகுதியில் முடியும்.



இங்கு ஒரு சுரங்க வழி இருக்கிறது என்பதை மெய்ப்பிக்கும்படி, இன்கா கதையில், இங்குள்ள பச்சகாமக் என்னும் இட்த்தில் விரகோசனனது மகன் வெளியில் வந்தான். அவனது பெயர்தான் பச்சகாமக். அதே பெயரில் அந்த இடமும் அழைக்கப்படுகிறது.


 

பச்சகாமக்கின் சகோதரனான மன்கோ காபக் என்பவன் இன்னும் மலைக்குகை வழியே சென்று டிடிகாகா ஏரி இருக்கும் இடத்துக்கருகே குகை வாயில் வழியே வெளியே வந்திருக்கிறான். நாஸ்கா ரிட்ஜ் முடியும் இடத்தில் இருக்கும் பச்சகாமக் கருப்பு நிறப்புள்ளியாகவும், டிடிகாகா ஏரி சிவப்புப் புள்ளியாகவும் இந்தப் படத்தில் காட்டப்பட்டுள்ளது. சிவப்பு நிற அம்புக் குறி டிடிகாகா ஏரியைக் காட்டுகிறது.



ஆண்டிஸ் மலைக்கருகே நாஸ்கல் ரிட்ஜுடன் தொடர்பு கொண்ட இடத்தில் ஒருவனும், ஆண்டிஸ் மலைத்தொடரின் மறு பக்கம், மலைக் குகை வழியாக மற்றொருவனும் வந்தார்கள் என்று இன்கா கதைகள் கூறுவதால், அப்படி வந்தவர்கள், கடலில் படகோட்டி வரவில்லை, ஒரு சுரங்க வழியாக வந்திருக்கிறார்கள் என்று தெரிகிறது.


ஈஸ்டர் தீவையடுத்து, தென் அமெரிக்காவின் இந்தப் பகுதி வரை நிலபரப்புகள், தீவுகள் எதுவும் இல்லை. ஏறத்தாழ 4,000 கி.மீ தூரம் உள்ள இந்தக் கடல் பகுதியை, படகுகளால் கடப்பது கடினம். ஆனால் நிலத்தடி சுரங்கப் பாதை இருந்தால், பல நாட்கள் அதில் பயணித்து ஒரு சிலரேனும் ஆண்டிஸ் மலைப் பகுதிக்கு உயிருடன் வந்திருக்க முடியும்.


நிலத்தடி சுரங்கப் பாதை இருக்கவேதான் அதை நாகம், நாக்கல், நாஸ்கல் என்றழைத்திருக்கிறார்கள். இந்த நீண்ட தூர இடைவெளியைக் கடந்து மக்கள் மட்டும் வரவில்லை. ஒருவித கோரைப் புல்லும் வந்திருக்கிறது. அதைப் பற்றி அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக