தமிழ் மொழியின் ஆதி பெயரை பாரதியும் சொல்லியுள்ளார்,
பாரதி தாசனும் சொல்லியுள்ளார்.
ராமாயணம் தரும் ஆதாரத்தை நோக்கும் போது,
அவர்கள் சொன்னவைதான் நினைவுக்கு வருகின்றன.
அவர்கள் இருவரும் தமிழுக்கு ஒரு பெயரை,
ஒரே மாதிரி சொல்லியிருக்கிறார்கள்.
‘தேமதுரத் தமிழோசை’ உலகெலாம் பரவச் செய்ய வேண்டும்
என்று பாரதியார் சொன்னாரே,
அது ஏன் ‘தேமதுரத் தமிழோசை?’
அவர் வாழ்ந்த காலக்கட்டத்தில் தமிழை,
‘மதுரத் தமிழ்’ என்று அழைத்தார்களா?
செந்தமிழ் நாடு என்றாலே போதும்,
இன்பத் ’தேன்’ வந்து காதில் பாய்கிறது என்றாரே, ஏன்?
தமிழும், மதுரமும் ஒன்று என்பதால்,
அந்தச் சொல்லைக் கேட்டாலே தேன் பாய்ந்ததா?
’மதுரத் தேமொழி’ மாதர்கள் என்றாரே ஏன்?
தமிழ் மொழியைப் பேசியதால் அப்படிச் சொன்னாரா?
அல்லது
தமிழ் மொழிக்கு மதுரம் என்ற பெயர் இருந்தது,
அதனால் மதுரத் தேமொழி என்றாரா?
பாரதியின் கருத்தை ஒட்டியே,
பாரதி தாசனும், தமிழுக்கு மதுவென்றுப் பேர் என்று சொன்னாரே, ஏன்?
ஒரு நூறு வருடங்களுக்கு முன் வரை
நாம் இருக்கும் இந்த மண்ணில்
தமிழை ’மதுரம்’, என்று சொல்லி அழைத்தனரோ
என்று அறிய ஆவலாக இருக்கிறதே!
நூறு வருடங்களுக்கு முன்வரை இருந்த பல வழக்கங்களையும்,
இந்தத் திராவிடப் பதர்கள் அழித்து விட்டார்களே,
மறக்கடிக்கச் செய்து விட்டார்களே!!
பாரதியார் சொன்ன எந்த கருத்தையும் வாழ வைக்கவில்லை,
இந்தத் திராவிடவாதிகள்.
ஆரிய நாட்டில் உள்ள தமிழ் மொழி என்றார் பாரதியார்.
அதைத் திராவிட நாட்டில் உள்ள தமிழ் மொழி என்று ஆக்கினார்கள்.
‘மதுரத் தமிழ்’ என்றார் பாரதியார்,
அதைத் திராவிடத்தமிழ் என்றார்கள் இந்த்த் திராவிடவாதிகள்.
என்னுடைய இந்த ஆற்றாமைக்கு ஒரு காரணம் இருக்கிறது.
நூறு ஆண்டுகளுக்கு முன் தமிழை, மதுரத் தமிழ் என்றாரே பாரதியார், அதில் உள்ள ‘மதுரம்’ என்ற சொல் மட்டும்
8 முறை ராமாயணத்தில் வந்துள்ளது.
அதுவும் எப்படி வந்துள்ளது?
அனுமன், சீதையிடம் சாதாரண மக்கள் பேசும் மானுஷ பாஷையில் பேசலாம் என்று முடிவு செய்து பேசுகிறானே
அந்த மனித பாஷையைப் பற்றிச் சொல்லுமிடத்திலெல்லாம்,
வால்மீகி அவர்கள், மதுரம், மதுரம் என்று
மீண்டும் மீண்டும் சொல்கிறாரே,
அந்த மதுரம், இந்தத் தேமதுரத் தமிழ் என்பதைக் குறிக்கிறதோ
என்ற எண்ணம் எழுகிறதே!
அந்த விவரங்கள் சுந்தர காண்டத்தில்
அசோக வனத்தில் சிறையிருக்கும் சீதையுடன்,
அனுமன் பேசும் இடங்களில் வருகின்றன.
அவற்றை ஆராய்வதற்கு முன்,
அந்த அரிய கண்டுபிடிப்பை முதலில் செய்தவரைப் பற்றியும்
தெரிந்து கொள்வோம்.
ராமாயணத்தில் சொல்லப்பட்ட மனித பாஷை என்பது
தமிழாக இருக்க்கூடும் என்னும் கருத்தை முதலில்
நிலை நாட்டியவர் திரு நாராயண ஐயங்கார் என்பவர்.

மதுரைத் தமிழ்ச் சங்கம் வெளியிட்ட
‘செந்தமிழ்’ என்னும் பத்திரிக்கையின் ஆசிரியராகப் பணி புரிந்த இவர் ‘வான்மீகரும், தமிழும்’ என்னும் தொடரை
1938 ஆம் ஆண்டு எழுதினார்.
அதில் ராமாயணம் எழுதிய வால்மீகியே
தமிழில் புறநானூற்றுச் செய்யுளையும் எழுதினார் என்பதையும்,
அனுமன் பேசிய மனித பாஷை தமிழ் என்பதையும்,
அதற்கு ஆதாரமாக வால்மீகி ராமாயணத்தில் வரும்
ஒரு பழமொழியையும் காட்டுகிறார்.
அவர் தரும் பழமொழி ஆதாரத்தையும் காண்போம்.
முதலில் மதுரம் என்ற சொல் 8 இடங்களில் எப்படி வருகிறது என்பதைப் பார்ப்போம்.
(1) மனித பாஷையில் பேசலாம் என்று அனுமன் நிச்சயித்த போது
உண்மை பொருந்திய,
அதாவது ‘அவிததம்’ பொருந்திய
மனித பாஷையைப் பேசலாம் என்று முடிவு செய்தான்
என்று முந்தின கட்டுரையில் பார்த்தோமல்லவா?
அந்த ‘அவிதத்தைப் பற்றிப் பேசும் போது,
“மதுரம் அவிததம் ஜகாத வாக்யம்” (5-30-44) என்கிறான்.
‘பொய்யில்லாத, உண்மையான மதுரம் வாக்கியத்தை பேசலாம்’ என்று நினைக்கிறான்.
மதுரம் என்றால் இனிமை என்று பொருள்.
பொய்யில்லாத, உண்மையான, இனிமையான வாக்கியம்
என்று எல்லோரும் அர்த்தம் சொல்கிறார்கள்.
ஆனால் இங்கு ’வாக்கியம்’ என்பது ஒருமையில் வந்துள்ளது.
ஒரு வாக்கியம் மட்டுமா பேசப்போகிறான்?
இல்லையே!,
பல வாக்கியங்களில் அல்லவா பேசப்போகிறான்.
அதனால் ’மதுரம் வாக்கியம்’ என்பதில் உள்ள வாக்கியம்
என்பது மொழி என்ற பொருளில் வந்துள்ளது
என்கிறார் நாராயண ஐயங்கார் அவர்கள்.
அதாவது ‘பொய்யில்லாத மதுர மொழியில் பேசலாம்
என்று அனுமன் நினைத்தான்.
நாராயண ஐயங்கார் எடுத்துக் காட்டியுள்ள இந்த இடத்தைத் தவிர
பிற இடங்களிலும், மதுரம் என்ற பிரயோகம் வருகிறது.
வால்மீகி காண்டம் முழுவதிலும் என்று பார்க்கையில்,
பல இடங்களிலும், பேச்சு என்பதற்கு
ஏதேனும் ஒரு அடைமொழி கொடுத்துச் சொல்லப்பட்டுள்ளது.
ஹிதமாகப் பேசினான்,
தர்மயுகத்மாகப் பேசினான்,
சாதுர்யமாகப் பேசினான்,
விளக்கமாகப் பேசினான்
என்று பலவாறு வர்ணனை வந்தாலும்,
‘மதுரமாகப்’ பேசினான்' என்பது சுந்தர காண்டத்தில்
அனுமன் – சீதை சம்பாஷணையில் மட்டும் வருகிறது.
மதுரம் என்பதை ‘இனிமையாகப் பேசினான்’ என்ற
அர்த்த்தில் எடுத்துக் கொண்டால் எல்லா இடங்களிலும்
அது பொருத்தமாக இல்லை.
(2) எப்படியெல்லாம் அவளிடம் பேச வேண்டும் என்று முதலிலேயே அனுமன் நிச்சயித்துக் கொள்கிறான்.
“சுபானி, தர்மயுக்தானி, வசனானி சமர்ப்பயன்
ச்ராவயிஷ்யாமி சர்வாணி மதுரம் ப்ரப்ருவன் கிரம்’ (5-30-42 &43)
என்கிறான்.
’சுபமான, தர்மயுக்தமான வசனங்களைச் சமர்ப்பிப்பேன்.
புரிந்து கொள்ளச் செய்வேன்.
எல்லாவற்றையும் மதுரம் நிறைந்த சொற்களால்
வெளிக்கொணர்ந்து பேசுவேன்’ என்கிறான்.
இங்கு மதுரம் என்பதைப் பொதுவாக
இனிமை என்று பொருள் கொள்ளலாம்.
ஆனால் வசனானி, சர்வாணி என்று பன்மையில் சொல்லி வந்து,
’மதுரம் கிரம்’ என்றும் சொல்லப்படவே,
மதுரம் என்பது ஒரு பெயர்ச் சொல்லாக வருகிறது.
இனிமையைக் குறிப்பதாக வரவில்லை.
மதுரம் கிரம் என்பதை மதுர மொழி என்று பொருள் கொள்ளலாம்.
(3) சீதையிடம் பேச ஆரம்பிக்கும் போது
அவள் காதில் மட்டும் விழும்படி
‘மதுரம் வாக்கியம்’ பேசினான் (5-31-1) என்று வருகிறது.
காதில் விழும்படி மென்மையாகப் பேசினான் என்பது அல்லவா பொருத்தமாக இருக்கும்?
அங்கு மதுரம் எதற்கு?

(4) ராமனது பெருமையைச் சுருக்கமாக
மதுரம் வாக்கியத்தில் சொல்லிவிட்டு,
மரத்திலிருந்து கீழே இறங்குகிறான் அனுமன்.
பிறகு கை கூப்பினபடியே சீதையை நோக்கி வந்து
பேச ஆரம்பிக்கும் போதும்
“மதுரயா கிரா” – மதுரமாகப் பேசலானான் என்று வருகிறது (5-33-2)

(5) அடுத்து நாம் சொல்லப்போவது மிகவும் ஆச்சரியமான ஒரு வரி. அனுமன் ராமனை வர்ணிக்கிறான்.
அப்பொழுது
“ஸத்யவாதி, மதுர வாக்தேவோ வாசஸ்பதி யதா” என்கிறான்.
ராமன் சத்யம் பேசுபவன்.
வாக்கின் தேவனான வாசஸ்பதியைப் போல
மதுரமாகப் பேசுபவன் (அ) மதுர மொழி பேசுபவன் –
என்பது இதன் பொருள்.
ராமன் உண்மையைப் பேசுபவன் என்று சொல்லியாகி விட்டது.
அதுவே ஒரு மாபெரும் சிறப்பு.
அதற்குப் பிறகு இனிமையாகப் பேசுபவன்
என்று ஏன் சொல்ல வேண்டும்?
ஆனால் இங்கு இனிமையைக் குறிக்கவில்லை.
வாக்தேவனான வாசஸ்பதியைப் போல
மதுரம் பேசுபவன் என்று வருகிறது.
யார் இந்த வாசஸ்பதி என்று பார்த்தால்,
வாக்குக்கு அல்லது பேச்சுக்கு அதிபதி வாசஸ்பதியாவான்.
தேவ பாஷையான சமஸ்க்ருத்த்துக்கு ஒரு தேவன் அல்லது அதிபதி தேவையில்லை.
ஆனால் மனிதர்கள் பேசும் பேச்சுக்கு ஒரு அதிபதி தேவை.
அவன் இந்த வாசஸ்பதி.
இந்த வாசஸ்பதியைப் பற்றி ‘வாக்’ என்னும் தலைப்பில்
ரிக் வேதத்தில் ஒரு பாடல் இருக்கிறது (10-125).
வாசஸ்பதியே சொல்வது போல அமைந்துள்ளது அந்தப் பாடல்.
அதில்,
’என் வார்த்தைகளை
தேவர்களும், மனிதர்களும் வரவேற்கிறார்கள்.
நான் மனிதர்களுக்கு வலிமையூட்டுகிறேன்.
நான் விரும்பும் மனிதனை ரிஷியாக ஆக்குகிறேன்,
ப்ரம்மமாக (கடவுள்) ஆக்குகிறேன்”, என்று சொல்லப்பட்டுள்ளது.
இதனால் மனிதர்கள் பேசும் மொழிக்கு
இந்த வாசஸ்பதியே அதிபதி என்று தெரிகிறது.
அந்த வாசஸ்பதியைப் போல ராமனும் பேசுகிறான்
என்று சொல்ல வேண்டுமென்றால்,
சிறந்த வாக்கினைப் பேசுகிறான் என்று சொல்வதுதானே
பொருத்தமாக இருக்கும்?
மதுரமாகப் பேசுகிறான் என்று சொல்ல அவசியமில்லையே?
வாக் தேவன் அருளால் சிறந்த வாக்கு கிடைக்குமா
அல்லது மதுர வாக்கு கிடைக்குமா?
மதுரம் என்று சொல்லியுள்ளதால்,
அது இனிமை என்பதை விட மதுர மொழி என்று
ஒரு மொழியைச் சொல்கிறது என்பதுதான் பொருத்தமாக இருக்கும்.
அதிலும், வாக் தேவன் மனித வாக்குக்கு அதிபதி,
அதாவது மனித பாஷைக்கு அதிபதி என்றாவதால்,
அந்த பாஷை மதுர பாஷை அல்லது
மதுர மொழி என்று அழைக்கப்பட்டது
என்பதே பொருத்தமாக இருக்கும்.
மனித பாஷையை அனுமன் பேசுகிறான்,
சீதை பேசுகிறாள்.
அப்படி இருக்க ராமன் அந்த பாஷையில்
பாண்டித்தியம் பெற்றவனாக இருப்பதுதானே பொருத்தமாக இருக்கும்? அந்த பாஷையில் தான் குகனுடன் பேசியிருக்க முடியும்.
அந்த பாஷையில்தானே தன்நாட்டு மக்களுடன் பேசியிருக்க முடியும்? வாக் தேவனிடமிருந்து அவன் பெற்ற பேச்சுத் திறமை
மதுர மொழியில் இருந்தது
என்பதுதானே இந்த வரிக்குப் பொருத்தமாக இருக்கும்?
(6) அனுமன் சீதையை நெருங்கி பேச ஆரம்பித்தபோது
அவன் ராவணனோ என்று சீதை சந்தேகிக்கிறாள்.
அவனைப் பார்த்து பயந்து விடுகிறாள். அதனால் ஓரமாக உட்கார்ந்து முகத்தைத் திரும்பிக் கொண்டு விடுகிறாள்.
ஆனாலும், அனுமான் வணங்கியபடியே பணிவாக நிற்கிறான்.
அதை கண்டு பெருமூச்சு விட்டுக் கொண்டு சீதை பேச ஆரம்பிக்கிறாள்.
‘நீ வேடதாரியான ராவணனாக இருந்தால்
எனக்கு இன்னும் துன்பத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்.
இது நல்லதல்ல”, என்கிறாள்.
இந்த வரிகளை ஒரு கவிஞன் எழுதும் போது எப்படி வர்ணிப்பான்? வருத்த்துடன் சொன்னாள் என்றோ
அல்லது கோபமாகச் சொன்னாள் என்றோதானே வர்ணிப்பான்?
ஆனால் வால்மீகி எப்படி வர்ணிக்கிறார் தெரியுமா?
“மதுர ஸ்வரா”வில் சொன்னாள் சீதை என்கிறார்.
“அப்ரவீத் தீர்க்கம் உச்ச்வஸ்ய வானரம் மதுர ஸ்வரா” (5-34-13)
ஆழ்ந்த பெருமூச்சு விட்டு,
வானரத்திடம் மதுர மொழியில் சொன்னாள் –
என்பது இதன் பொருள்.
பெருமூச்சு விட்டுக் கொண்டு,
(முந்தின ஸ்லோகத்தில்) துக்கத்துடனும், பயத்துடனும் இருந்த அவள்,
‘நீ செய்வது நல்லதல்ல’ என்பதை
மதுரமான ஸ்வரத்தில் சொன்னாள் என்று யாராவது எழுதுவார்களா? அல்லது எழுத முடியுமா?
அங்கு இனிமையான ஸ்வரத்தில் சொல்ல அவசியமில்லை, பொருத்தமாகவும் இல்லை.
மதுர ஸ்வரம் என்பது,
மதுரம் என்ற பெயர் கொண்ட மொழியாக இருந்தால் மட்டுமே
அப்படிச் சொல்ல முடியும்.
(7) பிறகு அனுமன் மீது நம்பிக்கை வந்தாலும்,
அவன் உண்மையாகவே ராமனைப் பார்த்திருக்கிறானா
என்று தெரிந்து கொள்ள சீதை ஒரு பரிட்சை வைக்கிறாள் சீதை.
ராமன் பார்ப்பதற்கு எப்படி இருப்பான்?
அவன் குணாதிசயங்கள் என்ன என்று கேட்கிறாள்.
இதை சாந்தமான வசனங்களால் கேட்கிறாள்.
ஆனால கூடவே மதுரம் வந்து விடுகிறது.
“உவாச வசனம் சாந்த்வம் இதம் மதுரயா கிரா” (5-35-1)
இதன் மொழிபெயர்ப்பு,
“இந்த வசனத்தை சாந்தமாகக் கூறுகிறாள்,
மதுரமாகக் கூறுகிறாள்.” என்பதாகும்.
சாந்தமாகக் கூறுகிறாள் (உவாச) என்று சொல்லிவிட்டு,
உடன் மதுரமாகக் கூறுகிறாள் (கிரா) என்று எப்படி வரும்?
கிரா என்பதை மொழி என்று எடுத்துக்கொண்டால்
’மதுர மொழியில் சாந்தமாக இதைக் கூறுகிறாள்’
என்பது பொருத்தமாக இருக்கும்.
மதுரம் என்பது மொழியின் பெயர் என்று சொல்லும் வண்ணமே
மீண்டும் மீண்டும் வருகிறது என்பது கவனிக்கத்தக்கது.
(8) ராமனைப் பற்றி அனுமன் வர்ணித்தவுடன்
சீதைக்கு அவன் மீது நம்பிக்கை உண்டாகிறது.
அதனால் அவள் தன்னைப் பற்றிப் பேச ஆரம்பிக்கிறாள்.
முதலில் ராமனைக் குசலம் விசாரிக்கிறாள்.
விசாரித்து விட்டு, அனுமன் சொல்லப் போகும் பதிலுக்காக்க் காத்திருந்தாள் என்று சொல்லுமிடத்திலும்,
மதுரம் வருகிறது.

“இதி இவ தேவி வசனம் மஹார்த்தம்
தம் வானரேந்த்ரம் மதுர அர்த்தம் உக்த்வா”(5-36-31)
இதற்கு ‘இவ்வாறு அனுமனிடம் சீதையானவள்
பெரும் அர்த்தங்கள் பொருந்தின வசனங்களைச் சொல்லிவிட்டு,
மதுரமான அர்த்த்தைச் சொல்லிவிட்டு” என்பது பொருள்.
மஹார்த்தம் என்றும், மதுர அர்த்தம் என்றும் மீண்டும் வருகிறது.
இது குழப்பம் தருவதாக இருப்பதால்,
இந்த வரியை மொழிபெயர்த்த எவருமே,
மதுரமான (இனிமையான)
பெரும் அர்த்தம் பொதிந்த வசனங்கள்
என்றே எழுதியுள்ளனர்.
ஆனால் மதுரம் என்பது ஒரு மொழியின் பெயராக இருந்தால்
மஹார்த்தம் பொருந்திய வசனங்களை
மதுர மொழியில் சொன்னாள்
என்பது பொருத்தமாக இருக்கும்.
தமிழுக்கு மதுரம் என்ற பெயர் இருந்தது என்பதை
நாமே மறந்து விட்டோம்.
அப்படி இருக்க, ராமாயண மொழி பெயர்ப்பு செய்த மற்ற மொழியாளர்களுக்கு,
இங்கு சொல்லப்பட்டுள்ள மதுரம் என்பதற்கு
இனிமை என்பதைத் தவிர
வேறு விதமாக மொழி பெயர்க்க வழியில்லை.
அந்த மதுரம் என்னும் சொல்
சில இடங்களில் பொருந்தி வரவில்லை என்பது புரிந்தாலும்,
அவர்கள் அதைப் பற்றி விளக்க ஆதாரம் இல்லை.
ஆனால் மதுரம் என்பது அனுமன் பேசிய மனித பாஷையின் பெயர்
என்ற கோணத்தில் சிந்தித்தால்,
அதிலிருந்து தமிழுக்குள்ள தொடர்பை நிரூபிக்கலாம்.
இவ்வாறு மனித பாஷையில் பேசினார்கள்
என்று சொல்லப்படும் இடங்களில்
மொத்தம் 8 முறை மதுரம் வாக்கியத்தில் பேசினார்கள்
என்று சொல்லப்பட்டுள்ளது.
இந்த மதுரம் ராமாயணத்தில் மட்டும் சொல்லப்படவில்லை.
எங்கோ தென் மதுரையில் சோம சுந்தரேஸ்வர்ர்
தமிழை வளர்த்தார் என்று சொல்லியுள்ள இடங்களிலும்
வந்து விடுகிறது.
அவற்றை அடுத்த கட்டுரையில் காண்போம்.
இந்தக் கட்டுரையை ஆங்கிலத்தில் பல் வேறு தரவுகளுடன் எழுதியுள்ளேன். இங்கே படிக்கவும். Hanuman and Seetha conversed in Madhura language (Spoken language of ancient India –part 3)
இது குறித்த ஏழு ஆராய்ச்சி கட்டுரைகளை ஆங்கிலத்தில் எழுதியுள்ளேன். படிக்கவும் https://jayasreesaranathan.blogspot.com/2013/03/valmiki-of-ramayana-knew-tamil-spoken.html
Part -1:- Valmiki of Ramayana knew Tamil.
Part -4:- Rama and Seetha spoke Tamil
Part -6:- Southern Madurai (தென் மதுரை) of 1st Tamil Sangam was submerged at the time of Rama’s exile.