ராமர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ராமர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 26 ஜனவரி, 2024

இராமாயண காலத்தை அறுதியிடும் தொல்லியல் சான்று

Published in Geethacharyan Monthly Magazine


பக்தர்கள் அனைவரும் வணங்குவதற்கு வழி செய்யும் விதமாக, ஸாகேதபுரி எனப்படும் அயோத்தி மாநகரில் ஸ்ரீராமசந்த்ர பிரபுவின் ஜன்மஸ்தானத்தில் கோயில் அமைக்கப்படும் இந்தத் தருணத்தில், அங்குதான் இராமர் பிறந்தார் என்று உறுதியாகச் சொல்வதற்கு ஏதுவாகத் தொல்லியல் சான்றுகள் இல்லை என்பதுதான் உண்மை என்பது சற்று உறுத்தலாக இருக்கிறது. ஆழ்வார்கள் மங்களாசஸனம் செய்வித்த இராமர் இருந்த இடமா அது என்பதற்கும் எந்த ஆதாரமும் இல்லை; ஏனெனில் அயோத்தி முழுவதுமே நூற்றுக் கணக்கில் இராமர் கோயில்கள் உள்ளன. இவற்றுள் எது அவர் ஜனனம் எடுத்த இடம் என்பதில் அபிப்பிராய பேதங்கள் உள்ளன.

ஜன்மஸ்தானம் என்று இப்போழுது கட்டப்பட்டுள்ள கோயில் இருந்த இடத்தில் ஏற்கெனெவே கோயில் இருந்து இருமுறை அழிக்கப்பட்ட அடையாளத்தைத்தான் தொல்லியல் காட்டுகிறது. 1976-77-இல் முதன் முதலில் அங்கு தொல்லியல் துறை ஆராய்ந்தபோது, அது மசூதியாக இருந்தது. அதில் 12 தூண்கள் ஹிந்துக் கோயில் தூண்களாக இருந்தன. பூர்ணகலசம், மகர நீர் வாய் போன்ற அமைப்புகளும் இருந்தன. பிறகு, மசூதி இடிக்கப்பட்ட பிறகு பூமிக்கு அடியில் இருக்கும் அமைப்புகளைப் பார்க்கும் வண்ணம் ஆய்வுகள் நடந்தன. அவற்றின் மூலம், ஐம்பதுக்கும் மேற்பட்ட தூண்களது அடிப்பகுதிகள் பதினேழு வரிசைகளில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டன. கோயில் சிற்பங்கள் பலவும் உடைந்து புதைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இவற்றின் தொன்மை இரண்டாயிரம் வருடங்கள் வரையில், அதாவது, குஷானர்கள், பிறகு, குப்தர்கள் காலம் வரையில் மட்டுமே சொல்லும் வண்ணம் இருக்கின்றன. அதாவது கோயில் இருந்தது. அதைக் கொண்டு இராமன் காலத்தைச் சொல்லும் வண்ணம் ஆதாரம் கிடைக்கவில்லை. ஆனால் இந்தக் கோயில் இருந்த இடம் தான் மீண்டும், மீண்டும் அழிக்கப்பட்டு, கட்டப்பட்டிருக்கிறது.

இராமாயண காலத்திலிருந்து தேடினால், அண்ட சராசரங்களையும் இராமன் வைகுந்தத்துக்கு ஏற்றிக் கொண்டு போனபின் அயோத்தியில் யாருமே இல்லை. இராமனது மகன் லவன், ஸ்ரவஷ்டியைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி புரியலானான். குஸன், விந்தியமலைப் பகுதியிலுள்ள குஷாவதியிலிருந்து ஆள ஆரம்பித்தான். ஜைனர்களது முதல் தீர்த்தங்காரரான ரிஷப தேவரது காலம் வரை அயோத்தியாவில் மக்கள் நடமாட்டம் இல்லை என்று சொல்லப்படுகிறது. அதற்குப் பிறகு, அங்கு இராமன் பிறந்த மற்றும் வாழ்ந்த இடங்களைக் கோயிலாக்கி வணங்கி இருக்கிறார்கள். குறிப்பாக விக்ரம சஹாப்தத்தைத் துவங்கின விக்கிரமாதித்த அரசன் காலம் முதல், அயோத்யா பழம் பெருமையையும், புகழையும் அடைந்ததது என்கிறார்கள். ஜன்மஸ்தானத்தில், விக்கிரமாதித்தன் அதி அற்புதமான கோயிலைக் கட்டியிருக்க வேண்டும். ஆழ்வார்கள் கண்ட இராமர் கோயில் இந்தக் காலக்கட்டம், மற்றும் இதற்கு  முந்தினதாகத்தான் இருந்திருக்க வேண்டும்.

அந்தக் கோயில் 11-ஆம் நூற்றாண்டில் ஸாலர் மசூத் என்பவனால் அழிக்கப்பட்டது. இந்த ஸாலர் மசூத், சோமநாதபுரத்தை அழித்த கஜினி முஹம்மதுவின் தங்கை மகன். இவனது கூட்டாளிகள்தாம், மேல்கோட்டையை அழித்து, இராமப்பிரியனைக் கவர்ந்து சென்றவர்கள். அவர்களே தொண்டனூர் கோயில்களையும் சூறையாடியவர்கள். அந்த ஸாலர் மசூத்தை, ஸ்ரவஷ்டியைச் சேர்ந்த சுஹேல் தேவ் கொன்றான். அதன் பிறகு, ஜன்மஸ்தானக் கோயில் மீண்டும் கட்டப்பட்டது. கோயில் அழிவுற்று இருந்த போதும், மக்கள் அந்த இடத்தில் இராமனை வழிபட்டிருக்கிறார்கள். இதுவே, இந்தக் கோயில் ஜன்மஸ்தானமாக இருந்திருக்க வேண்டும் என்பதற்குச் சான்று என்கிறார்கள்.

11-12 நூற்றாண்டுகளில் அயனசந்திரன் என்னும் கஹர்வால் அரசன் அதே இடத்தில் இராமர் கோயிலை உன்னதமான முறையில் கட்டினான். அதற்கான கல்வெட்டு ஆதாரம் பாபர் மசூதியை இடித்த போது கிடைத்தது. அதில் பெருமாள் பெயர் ‘ஹரி விஷ்ணு’ என்று குறிக்கப்பட்டுள்ளது. வாலியையும், தசானனனையும் கொன்ற ஹரி விஷ்ணுவின் கோயில் என்று எழுதப்பட்டுள்ளது. இந்தக் கோயிலின் இருப்பிடமே இராமர் பிறந்த இடம் என்று மக்கள் கொண்டாடுவதாகவும், வழிபடுவதாகவும், அன்றைய முகலாய சரித்திர ஆய்வாளர்களும், வழிபோக்கர்களும் எழுதியுள்ளனர். சீதையின் சமையலறையின் மீதுதான் பாபர் மசூதி கட்டப்பட்டதாக, மிர்ஜா ஜன் என்பவர் எழுதியுள்ளார். இராமன் பிறந்த அரண்மனையை அழித்து மசூதி கட்டப்பட்டதாக இன்னொரு முகலாய எழுத்தாளர் எழுதியுள்ளார்.

பாபர் மசூதியில் கண்டுபிடிக்கப்பட்ட விஷ்ணு-ஹரி கல்வெட்டு

பெர்ஷிய மொழியில் எழுதப்பட்டுள்ள ஒரு நூலில், இராமனது அரண்மனைப் பகுதிகள் விரிவாக எழுதப்பட்டுள்ளன. அதன் மூலம், ஆதியில் எழுப்பட்ட கோயில், இராமனுடைய அரண்மனையின் பகுதிகளை அப்படியே தக்க வைத்துக் கொண்டு எழுப்பப்பட்டிருக்கிறது என்று தெரிகிறது. முகலாயர்கள் அதை ஆக்கிரமித்தபோது, அங்கு மூன்று கோயில்கள் இருந்தனவாம்: அவை ஜன்மஸ்தானம், ஸ்வர்கத்வாரம் எனப்பட்ட ராமரது தர்பார் மண்டபம், த்ரேதா கா தாகூர் என்னும் ராமர் கோயில். இவை அனைத்தையும் அழித்து, ஜன்மஸ்தானத்தில் பாபர் மசூதி எழுப்பப்பட்டது.

அவை அனைத்தையும் இழந்த நாம் மீண்டும் அதே இடத்தில் இராம ஜன்மஸ்தானக் கோயிலைக் கட்டுகிறோம். இராமன் வாழ்ந்த காலத்தைக் காட்டும் தொல்லியல் சான்று இன்றுவரை அயோத்தியில் கிடைக்கவில்லை. ஆனால் அப்படிப்பட்ட சான்று ஒன்று தமிழ்நாட்டில்தான் இருக்கிறது. அது இராமர் கட்டிய சேதுவில் கிடைக்கிறது.

இராமர் சேது: செப்பேட்டு ஆதாரம்

தனுஷ்கோடியையும், மன்னார் பகுதியையும் இணைக்கும் இராமர் சேது, இராமரால் கட்டப்பட்டது என்ற செய்தியை, இராஜேந்திர சோழனது திருவாலங்காடு செப்பேடுகள் தெரிவிக்கின்றன. தன்னுடைய தகப்பனான இராஜராஜ சோழனைப் பற்றிச் சொல்லும் போது, இவ்வாறு எழுதியுள்ளான்.

“"இராகவர்களின் தலைவன் (அதாவது, இராமன்) சமுத்திரத்தின் குறுக்கே  திறமையான வானரர்களைக் கொண்டு பாலம் கட்டி, கடலைத் தாண்டி, இலங்கை மன்னனைக் (இராவணனைக்) கொன்றான்.” (80-ஆவது வரி)

அதே பகுதியை, அருள்மொழிவர்மன் (இராஜராஜ சோழன்) கப்பற் படையைக் கொண்டு கடந்து சென்று இலங்கை மன்னனை அழித்தான் என்று எழுதியுள்ளான். எனவே இராமர் சேதுப் பகுதி, இராமர் கட்டிய அணைப் பகுதியே என்பதே வழிவழியாக சொல்லப்பட்டு வந்து, செப்பேட்டிலும் இடம் பெற்றிருக்கிறது.

இராமர் சேதுவில் புவியியல் ஆய்வுகள்

வானர சேனைகள் பல கற்களையும், மரங்ககளையும் அடுக்கி, அணையை உருவாக்கினார்கள் என்று வால்மீகி இராமாயணம் கூறுவதால், அங்குள்ள கற்களையும், நில அமைப்புகளையும் புவியியல் சோதனை செய்தால் அதன் காலத்தைக் கண்டுபிடிக்க முடியும். அதன் மூலம், இராமாயண காலத்தையும் கண்டு பிடிக்கலாம் என்று 2007 ஆம் ஆண்டிலேயே ஆய்வுகள் நடந்தன.

அவை காட்டிய முக்கிய விவரம், பாரதமும், ஸ்ரீலங்கையும், நிலத்தால் இணைக்கப்பட்டுள்ளன என்பதே. அதாவது, ஸ்ரீலங்கை, பாரதத்தின் நிலநீட்சியே. ஆனால் இந்த நில இணைப்பு தற்சமயம் நீருக்குள் முழுகி இருக்கிறது. ஒரு காலக்கட்டத்தில் அது கடல் நீருக்கு மேலே இருந்திருக்கிறது. அப்பொழுது, மக்கள் அதன் மீது நடந்து சென்று கடந்திருப்பார்கள். பாலம் கட்ட வேண்டிய அவசியம் அப்பொழுது இல்லை. அப்படிப்பட்ட காலம் இராமாயண காலத்துக்கு முன் இருந்திருக்க வேண்டும். கடல் மட்டம் உயர்ந்து, அது நீரில் முழுகின பிறகுதான் இராமாயணம் நடந்திருக்க வேண்டும். பாலம் அமைத்து அதைக் கடக்க வேண்டிய அவசியம் இராமாயண காலத்தில்தான் ஏற்பட்டிருக்க வேண்டும். எனவே கடல் மட்டம் உயர்ந்த கால விவரத்தைக் கண்டுபிடித்தால் நம்மால் இராமாயண காலத்தைச் சொல்லிவிட முடியும்.

கடல் மட்ட ஆய்வுகள், இன்றைக்கு 18,000 ஆண்டுகள் வரை அளவீடுகளைத் தருகின்றன. கடுமையான பனி யுகம் இருந்த நேரம் அது. அப்பொழுது கடல் மட்டம் இன்றைய அளவைவிட 130 மீட்டர் குறைவாக இருந்தது. அப்பொழுது, நில இணைப்பு இயற்கையாகவே ஒரு பாலம் போலப் பயன்பட்டது. இன்றைக்கு 18,000 ஆண்டுகள் முன்பிலிருந்து, பனியுகம் மறைய ஆரம்பித்து, வெப்பம் பரவ ஆரம்பித்தது. இதனால், பனி உருகி, கடல் மட்டம் கொஞ்சம் கொஞ்சமாக உயரத் தொடங்கியது. இதன் காரணமாக, இன்றைக்கு 7200 ஆண்டுகளுக்கு முன் ஆரம்பித்து, 6800 ஆண்டுகள் வரை, இந்த நில நீட்சி கொஞ்சம் கொஞ்சமாக நீருக்குள் மறைய ஆரம்பித்தது. அந்த சமயத்தில்தான், நீருக்கு அடியில் மறைந்த நிலநீட்சியின் மீது, பாறாங்கற்களைப் போட்டு அதன் உயரத்தை அதிகப்படுத்த வேண்டியிருந்தது.

இந்தக் கணக்கின்படி, இராமாயணம் 7000 வருடங்களுக்கு முன்னரே நடந்திருக்க வேண்டும். இரண்டாம் தமிழ்ச் சங்கத்தின் தலைநகரமான கவாடத்தின் உச்சபட்ச காலமும் அதுவே என்று முந்தின கட்டுரையில் காட்டியிருந்தோம்.

இனி இந்தப் பாறாங்கற்களைக் கொண்டு செய்த ஆய்வுகளைக் காண்போம். National Institute of Ocean Technology என்னும் ஆய்வுக் கழகம், மத்திய அமைச்சரவையின் கீழ் இயங்குகிறது. இந்தக் கழகம் மேற்கொண்ட ஆய்வில், இராமர் சேதுவின் மீது பத்து இடங்களில் துளைகள் போடப்பட்டன. ஆறு மீட்டர் ஆழம் சென்றவுடன்,  கடல் மண் தென்பட்டது. மேலும் துளைத்தபோது, நான்கு முதல் ஐந்து மீட்டர் ஆழம் வரை, கடினமான படுக்கையாக கற்களும், பவழப்பாறைகளும் தென்பட்டன. மேலும் துளையிட்ட போது, அந்தப் பவழப்பாறைப் படுக்கைகள் கடல் மணல் மீது இருப்பது தெரியவந்தது. கடல் மணலை மேலும் துளைத்தால், கடினமான நிலமே தென்பட்டது.

இதில் தெரியவந்தது என்னவென்றால், அடித்தளமான நிலநீட்சியின் மீது, கடல் மணல் பரப்பப்பட்டு, அதன் மீது, 4 -5 மீட்டர் உயரத்துக்கு பவழப்பாறைகள், பலவிதமான கற்கள், மரத்துண்டுகள் ஆகியவை அடுக்கப்பட்டிருக்கின்றன. அவற்றின் மீது கடல் மணல் பரப்பப்பட்டிருக்கிறது. அதற்கு மேலே கற்கள், மண் என இவை அழுத்தமாகப் படிந்திருக்கின்றன.

இதில் ஆச்சரியம் என்னவென்றால், பவழப்பாறைகள் கடல் மணலில் உருவாகாது. பவழப்பாறைகள் இராமேஸ்வரம், தனுஷ்கோடி போன்ற இடங்களில் இயற்கையாகக் கடலோரத்தில் காணப்படுகின்றன. அவை உடைக்கப்பட்ட அமைப்பிலும் இருக்கின்றன. அவற்றை உடைத்து, நில நீட்சியின் மீது கடல் மணலைப் பரப்பி, அதன் மீது யாரேனும் போட்டிருந்தால்தான் பவழப்பாறைகள் அங்கு வரமுடியும். இன்று சேதுவுக்குச் செல்பவர்கள் ‘மிதக்கும் கல்’ என்று கொண்டு வருகிறார்களே அவை இந்த பவழப் பாறைக் கற்களே.

மேலும், இந்த அமைப்புகளை ஆராய்ந்த விஞ்ஞானிகள் மேலேயுள்ள கற்களும், பவழப்பாறைகளும் 7000 ஆண்டுகளுக்கு முந்தையவை என்று கண்டுபிடித்தார்கள். ஆனால் அவற்றுக்குக் கீழே உள்ள கடல் மண் படுக்கை, 4000 வருடங்களுக்கு முந்தையது என்கிறார்கள். இரண்டு முறை கடல் வெள்ளம் ஏற்பட்டிருக்கிறது என்றும் கண்டு பிடித்திருக்கிறார்கள் – 7000 வருடங்களுக்கு முன்பும், 4000 வருடங்களுக்கு முன்பும்.

வெள்ளத்திலிருந்து பாலத்தை உயர்த்த பழைய கற்கள் அடியிலும், புதிய கற்களும், மணலும் மேலாகவும் இருக்க வேண்டும். ஆனால் இங்கு மாறி இருக்கிறது. இதைச் சொல்லும் வெளி நாட்டு விஞ்ஞானிகளுக்கு இது வியப்பாக இருக்கிறது. ஆனால் நமக்கு வியப்பே இல்லை. 7000 ஆண்டுகளுக்கு முன், முதல் முறையாகப் பாலம் போடப்பட்டிருக்கிறது. இராமன் கடற்கரைக்கு வந்த போது ஓரிரு அடி ஆழத்தில் நில நீட்சி இருந்திருக்கிறது. அதற்கு முன் வரை ஆங்காங்கே நில நீட்சி வெளியே தெரிந்திருக்கும். சூர்ப்பனகை, மாரீசன் போன்றவர்கள் நடந்தே வந்திருப்பார்கள்.

ஆனால், இராமனது வன வாசம் முடிக்கும் போது, கடல் பொங்கியிருக்கிறது. நில நீட்சி நீரில் அமிழ்ந்து இருக்கிறது. அதை உயர்த்த கடல் மணலைப் போட்டு ஒரு தளம் அமைத்து அதன் மேல் பவழப்பாறைகளையும், மரம், கல் போன்றவற்றையும் நான்கிலிருந்து ஐந்து மீட்டர் உயரத்துக்கு அடுக்கி இருக்கிறார்கள். இந்தப் பாலம் இன்றைக்கு 4000 ஆண்டுகளுக்கு முன் வரை நீருக்கு மேலேயே இருந்திருக்கிறது. ஆய்வின்படி, 4000 ஆண்டுகளுக்கு முன் கடல் மட்டம் மீண்டும் உயர்ந்திருக்கிறது தெரிய வருகிறது. அப்பொழுது இராமர் கட்டின சேது முழுகி விட்டது. அந்த சமயத்தில் வாழ்ந்த மக்கள், அதன் புனிதத்துவத்தைக் கருதி, அப்படியே அந்தக் கற்களை எடுத்து, புதிதாக மணல் பரப்பி, அதன் மீது பழைய கற்களை அடுக்கி, பாலத்தைக் கட்டியிருக்கின்றனர். இதனால், 4000 ஆண்டுகளுக்கு முந்தைய மணல் அடியிலும், அதன் மீது, 7000 ஆண்டுகளுக்கு முந்தைய கற்களும்  அமர்ந்திருக்கின்றன.

கடல் நீருக்கு அடியில் அடுக்கப்பட்டுள்ள ராமர் சேது பாறைகள்

இந்த மாறுபட்ட கால அமைப்பைக் கொண்ட மணல் மற்றும் கற்கள் இராமர் சேதுவின் காலத்தை நிரூபிக்கும் காரணிகளாக இருக்கின்றன. 7000 ஆண்டுகளுக்கு முன் இராமர் சேது கட்டப்பட்டிருக்கிறது என்பதற்கு இராமர் சேதுவே தொல்லியல் ஆதாரமாக இருக்கிறது. நான்கு மைல் அகலத்துக்குக் காணப்படும் சேதுப் பாலம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வரை சோலைகளும், மரங்ககளும் கொண்டதாக இருந்திருக்கிறது. 10- ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அல்பெரூனி என்னும் முகலாய சரித்திர ஆய்வாளர் சேதுப் பாலம் ஆங்காங்கே கடலால் அரிக்கப்பட்டிருந்தது என்றும், அங்கு வானரங்கள் பல இருந்தன என்றும் எழுதியுள்ளார். அந்த வானரங்களுக்கு மக்கள் உணவு படைப்பார்கள் என்றும், ராம ஜபம் செய்தால் அவை அமைதியாகக் கேட்டுக் கொண்டிருக்கும் என்றும் கூறியுள்ளார். வழி தெரியாமல் தடுமாறுபவர்களை அவை வழி காட்டிச் செல்லுமாம்.

கடல் அரிப்புகள் ஏற்பட்டாலும், அவ்வப்பொழுது அவற்றைப் பழுது பார்த்திருக்கிறார்கள். 1480 வரை மக்கள் இராமர் சேதுவை, ஒரு தரை வழிப் பாலமாகப் பயன்படுத்தி இருக்கின்றனர். அதற்குப் பிறகு புயல்களால் சேதம் ஏற்பட்டு, அன்னியர் ஆட்சியும் வந்த பிறகு, அதன் முக்கியத்துவமும், பயன்பாடும் மறக்கப்பட்டு விட்டது. இராமாயண காலத்துக்கு முக்கியத் தொல்லியல் சான்றாக இருக்கும் அதனைக் காத்து, பழையபடி இராமர் அமைத்த கற்களால் அமைக்க வேண்டியது நமது கடமை.

இந்தப் பாலம் காட்டும் 7000 வருடத் தொன்மை, இராமர் பிறந்த த்ரேதா வருடத்துக்கு எவ்வாறு பொருந்தும் என்பதை இனி காண்போம்.

 

 

வெள்ளி, 12 ஜனவரி, 2024

பாண்டியர்களைக் கண்டு பயந்த இராவணன்.

 Published in Geethacharyan monthly Magazine.

 

இராவணன் ஆண்ட இலங்காபுரியை, தென்னிலங்கையின் மலைப் பகுதியில் அடையாளம் கண்டோம். இராவணனுக்குப் பக்க பலமாக இருந்தவர்கள் இலங்கையின் பூர்வ குடிகளான யக்ஷர்கள் (பலாங்கொடை மனிதன்) என்றும் காட்டினோம். இராமாயணம் என்னும் சரித்திரம் சில ஆயிரம் வருடங்களுக்கு முன் நிகழ்ந்ததாக இருந்தால்தான் இப்படிப்பட்ட அடையாளங்கள் ஏற்கக் கூடியதாக இருக்கும். ஆனால் இராமாயணம் பல லக்ஷம் வருடங்களுக்கு முன்னால், த்ரேதா யுகத்தில் நிகழ்ந்தது என்று சொல்லப்படுகிறதே, அப்படிப்பட்ட தொன்மையான காலத்தில் நிகழ்ந்த விவரங்களை உண்மை என்று எப்படிச் சொல்ல முடியும்? இந்தக் கேள்வியை வெளிநாட்டவர்கள் மட்டுமல்ல, நம் நாட்டவர்களும் அடிக்கடி கேட்கிறார்கள்.

கேட்பவர்கள் கேட்கட்டும் என்று நாம் அலட்சியப்படுத்திவிடக் கூடாது. நம் தெய்வங்களும், தெய்வ சரிதைகளும் ஆய்வுக்கு உட்படுத்தப்படும் இந்தக் காலக் கட்டத்தில், நாம் அத்தகைய கேள்விகளையும் எதிர் கொண்டு இதிஹாசத்தின் உண்மைத்தன்மையை நிலைநாட்ட வேண்டும். எந்த ஆய்விலும், கல்வெட்டுகளும், தொல்லியல் ஆய்வுகளும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. அதனால், முதலில் இந்த வழிகளில், இராமன் அல்லது இராவணனைப் பற்றி  ஏதேனும் விவரங்கள் இருக்கின்றனவா என்று பார்த்து விட்டு த்ரேதா யுகக் கணக்கை ஆராய்வோம்.

பாண்டியர்களுடன் சமரசம் செய்துகொண்ட இராவணன்.

இலங்காபுரி அமைந்துள்ள ஸ்ரீலங்கை, தென்னிந்தியாவை ஒட்டியுள்ள பகுதியாக இருக்கவே, முற்கால சேர, சோழ, பாண்டியர்களில் எவரேனும் இராவணன் காலத்தில் இருந்திருக்கலாம் என்ற சாத்தியக் கூறு இருக்கிறது. அதை மெய்ப்பிக்கும் வகையில், பாண்டியர்களது செப்பேட்டில் இராவணனைப் பற்றிய குறிப்பு ஒன்று வருகிறது. மதுரையில் உள்ள பெரியகுளம் பகுதியில் சின்னமனூர் என்னும் இடத்தில் உள்ள விஷ்ணு கோயில் திருப்பணியின்  போது பாண்டியர்களது செப்பேடுகள் கிடைத்தன. அவற்றில் பாண்டிய வம்சத்தின் பெருமை எழுதப்பட்டுள்ளது.

செப்பேட்டின் சம்ஸ்க்ருதப் பகுதியில் முற்காலப் பாண்டிய மன்னர்கள் செய்த செயல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆனால் அவர்கள் ஒவ்வொருவரது பெயரும் இடம் பெறவில்லை. முற்காலப் பாண்டியர்கள் செய்த சாஹசங்களைப் பற்றிச் சொல்லிக் கொண்டு வரும் போது, ஒரு பாண்டிய அரசன் இருந்தான், அவன் பத்துத் தலை கொண்டவனை அடக்கி, அவனுடன் சமரம் செய்து, அமைதியை நிலை நாட்டினான் என்று எழுதப்பட்டுள்ளது. செப்பேட்டின் ஐந்தாவது வரியில் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது.

“தசானனன் சந்திப ரக்ஷகார நரேஷ்ஸ்வர: கக்ஷிதர கண்டிதாக்ஞா: “

(பக்: 451, South Indian Inscriptions, Vol IV, copper plates from Sinnamanur, Tirukkalur and Thiruchengodu, 1929)

பத்து முகங்களைக் கொண்ட தசானனன் என்று சொல்லப்படுபவன் இலங்கையை ஆண்ட இராவணன் ஒருவனே.. உண்மையில் அவனுக்குப் பத்து முகங்கள் அல்லது தலைகள் இருந்திருக்காது. அது ஒரு சிறப்பு அடையாளமாக இருந்திருக்கக் கூடும். பத்துத் தலைகள் கொடுக்கக்கூடிய அறிவினை ஒருங்கே உடையவனாக இருந்திருக்கலாம். அல்லது தர்மம் தலை காக்கும் என்பார்களே, அவன் செய்த புண்ணிய காரியங்களும், தருமமும், பத்து மடங்கு அதிகமாக இருந்திருக்கும். பத்து முறை அவன் தலையைக் காக்கும் வண்ணம், அதாவது மரணத்திலிருந்து பத்து முறை அவனைக் காப்பாற்றக்கூடிய அளவுக்கு அவன் புண்ணியம் செய்திருப்பான். அப்படிப்பட்ட ராவணனை ஒரு பாண்டிய மன்னன் அடக்கி, நாட்டில் அமைதியை நிலை நாட்டினான் என்று சின்னமனூர் செப்பேடுகள் தெரிவிக்கின்றன.

அந்தப் பாண்டிய மன்னனது பெயர் குறிப்பிடப்படவில்லை. சங்கப் பாடல்களிலோ அல்லது பிற்காலப் பாடல்களிலோ, அப்படி ஒரு பாண்டியன் ராவணை வெற்றி கொண்டான் என்றும் சொல்லப்படவில்லை. ஆனால் அந்தச் செய்தி வட மொழி இலக்கியத்தில் காணப்படுகிறது!

ரகுவம்சத்தில் பாண்டியனும், இராவணனும்.

விக்ரமாதித்தன் என்னும்  மன்னனது  சபையில் இருந்த காளிதாசர் என்பவர் இரகு வம்சம் என்னும் பாடல் தொகுப்பை எழுதி உள்ளார். அதில் இராமனது  மூதாதையரான இரகு என்னும் மன்னனின் வரலாற்றைப் பற்றியும், அந்த மன்னனுக்குப் பிறகு வந்த அரசர்களைப் பற்றியும், இராமன் மற்றும் அவனுக்குப் பின் வந்த சந்ததியரைப் பற்றியும் எழுதியுள்ளார். இரகுவின் வம்சத்தில் வந்ததால் இராமனுக்கு இராகவன் என்று ஒரு பெயரும் உண்டு. அந்த இராமனின் தாத்தா பெயர் அஜன். பாட்டியின் பெயர் இந்துமதி. அவர்கள் திருமணம் பற்றிச் சொல்லுமிடத்தில் ஒரு பாண்டிய மன்னனைப் பற்றிய விவரம் வருகிறது. (ரகு வம்சம், 6 -ஆவது அத்தியாயம்)

இளவரசி இந்துமதியை, சுயம்வரத்தின் மூலம் அஜன் மணம் புரிகிறான். அந்த சுயம்வரத்தில் போட்டியிட வந்த பல மன்னர்களுள்   பாண்டிய மன்னனும்  ஒருவன். அவன் எப்படிபட்டவன் என்று இந்துமதியின் தோழி சுநந்தா விவரிக்கிறாள்.

"மலையிலிருந்து கொட்டும் அருவிகளைப் போல, சிவந்த சந்தனம் பூசப்பட்ட மலை போன்ற மார்பில் தொங்கும் முத்துச் சரங்கள் பல உடையவன் இந்தப் பாண்டிய மன்னன். அகத்திய முனிவர் வழி நடத்த, அஸ்வமேத யாகங்கள் பல செய்ததால் அபிஷேக நீர் அவன் உடலில் இன்னும் ஒட்டிக் கொண்டிருக்கிறது.

இந்தப் பாண்டிய அரசனது வலிமை எப்படிப்பட்டதென்றால், இலங்கையை ஆண்ட இராவணன் பாண்டியர்களிடம் சமரசம் செய்து கொண்டவன். அப்படி அவன் சமரசம் கொள்ளவில்லை என்றால் பாண்டியர்கள் சிவ பெருமானிடமிருந்து பெற்ற 'பிரம்ம சிரோ அஸ்திரத்தினால்' இராவணனுக்கு என்றோ அழிவு நேர்ந்திருக்கும்.

தக்ஷிண திசை என்று சொல்லப்படும் தென் திசையிலிருந்து வரும் இந்தப் பாண்டிய மன்னனை  மணந்து  கொண்டால் உனக்கு ஒரே ஒரு சக்களத்திதான் இருப்பாள்.  அவள் தென் திசையில் உள்ள பாண்டிய நாடு என்னும் நாடுதான்." என்று சுநந்தா விவரிக்கிறாள்.

இதில் சில விஷயங்கள் தெரிய வருகின்றன.

இராமனது தாத்தா காலத்துக்கு முன்பே, தென் தமிழ் நாட்டில் பாண்டிய வம்சம் சிறப்பாக இருந்து வந்திருக்கிறது. இராமனை ஏக பத்தினி விரதன் என்பார்கள். ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழ்ந்தவன் இராமன். அவனைப் போலவே பாண்டிய மன்னும் ஏக பத்தினி விரதம் கொண்டவனாக வாழக் கூடியவன். அவனுக்கு ஒரு காதலி இருக்கக்கூடும் என்றால் அது அவன் ஆளும் நாடே ஆகும்.

பூகோள ரீதியாக பாண்டிய நாடும், இலங்கையும் அருகருகே உள்ளன. அதனால் அவர்களுக்குள் சண்டை வந்திருக்க வாய்ப்பு இருந்திருக்கின்றது. செப்பேடுகளிலும், இராவணன் தொந்திரவு கொடுத்தான் என்று சொல்லும் வண்ணம் எழுதப்பட்டிருக்கிறது. பிரம்ம சிரோ அஸ்திரம் என்னும், தலை கொய்யும் அஸ்திரம் பாண்டியர்களிடம் இருக்கவே, இராவணனால் அவர்களிடம் வாலாட்ட முடியவில்லை. எனவே சமரசம் செய்து கொண்டிருக்கிறான். இதையே செப்பேடுகளில், அமைதியை நிலை நாட்ட பத்துத் தலைக் கொண்டவனை அடக்கினான் ஒரு பாண்டியன் என்று சொல்லப்பட்டுள்ளது.

இங்கே ஒரு கேள்வி எழுகிறது. இராவணன் வாழ்ந்தது இராமனது காலக்கட்டத்தில். இந்த சுயம்வரம் நடந்ததோ இராமனது தாத்தா காலத்தில். அப்பொழுதே இராவணன் எப்படி இருந்திருக்க முடியும்?

இராமனது தாத்தா மணம் முடிந்து, அவனுக்கு தசரதன் பிறந்து, அவனுக்கும் வயதான பிறகுதான் இராமன் பிறந்ததாக இராமாயணம் கூறுகிறது. எனவே, அஜன் காலத்திலோ அல்லது அதற்கு முற்பட்டோ இராவணன் இருந்திருக்க முடியாது. அதனால் இராவணனைப் பற்றிய விவரம் பொய் என்று சொல்ல முடியாது. இராவணன் பற்றிய  விவரம், சின்னமனூர் செப்ப்டுகளிலும் எழுதப் பட்டுள்ளது. அதனால் இந்த விவரம் உண்மையாகத்தான் இருந்திருக்க வேண்டும். மக்கள் மத்தியில் பரவலாகப் பேசப்பட்டு இருந்திருக்க வேண்டும். அதன் அடிப்படையில், காளிதாசர் அவர்கள் இரகு வம்சம் எழுதிய போது, பாண்டியர்கள் குலப் பெருமையை எழுதும் போது, கால வித்தியாசம் பாராமல், இராவணனை அடக்கிய கதையைக் குறிப்பிட்டுள்ளார் என்று தெரிகிறது. காளிதாசர் காலம் வரையிலும், அதாவது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்வரை, இந்த விவரம் மக்களுக்கிடையே பேசப்பட்டிருக்க வேண்டும்.

இங்கும் ஒரு கேள்வி எழலாம். கடவுளே அவதாரம் எடுத்து இராவணனை வெல்ல வேண்டியதாயிற்று. அப்படி இருக்க பாண்டியர்களிடம் அந்த இராவணன் அடங்கி இருந்த செய்தியை ஏன் எந்தப் புலவரும் பாடவில்லை. சிபியைப் பற்றியும், தூங்கெயில் எறிந்தவனைப் பற்றியும் பாடிய புலவர்கள், இராவணனை ஒரு பாண்டியன் அடக்கிய தீரச் செயலை ஏன் பாடாமல் விட்டார்கள்?

இதற்கு ஒரு காரணம் சொல்லலாம். பாண்டிய மன்னர்களும் சிவ பக்தர்கள். இராவணனும் சிவ பக்தன். ஆனால் அவன் அசுரப் பண்புகளைப் பெற்றிருந்ததால், அருகில் உள்ள மன்னர்களைச் சீண்டியிருப்பான். பாண்டியர்களையும் சீண்டியிருப்பான். சிவ பக்தியால் பாண்டியர்கள் பெற்ற அஸ்திரத்தைப் ஒரு சக- சிவ பக்தன் மீது பிரயோகிக்க பாண்டியர்கள் யோசித்திருக்கலாம். ஆனாலும், நாட்டு நன்மைக்காக அவனை ஒரு தட்டு தட்டி அடக்கி இருக்கலாம். இராவணன் ஒரு சிவ பக்தனாக இருக்கவே, அவனை வென்றதை அவர்கள் பெருமையாகப் பேசிக் கொள்ள விரும்பியிருக்க மாட்டார்கள்.

இதற்கு ஆதாரமாக, பெரிய புராணம் கூறும் மெய்ப் பொருள்நாயனார் சரித்திரத்தில் சிவ வேடம் தாங்கிய போலி சிவனடியார் ஒருவர் நாயனாரைக் கொன்ற போதிலும், அவர் உடுத்திய சிவ வேடத்துக்கு மதிப்பு கொடுத்து, அவருக்கு எந்தத் தீங்கும் ஏற்படாமல் காப்பாற்றிய உண்மைக் கதை இருக்கிறது. இது பாண்டியர்களுக்கும் பொருந்தும். இராவணன் சிவ பக்தனாக இருக்கவே, அவனை வென்றதை அவர்கள் பெருமையாகக் கூறிக்கொள்ளவில்லை எனலாம். அதனாலேயே, இராவணனை எதிர்க்க இராமனுக்கு உதவவும் பாண்டியர்கள் முன் வரவில்லை போலிருக்கிறது.

ஆனால், இராவணனை பாண்டியர்கள் அடக்கிய செய்தி செப்பேடுகளிலும், இரகுவம்சத்திலும் காணப்படவே, இராவணன் என்ற ஒருவன் வாழ்ந்தது உண்மை என்று தெரிகிறது. அவன் வாழ்ந்தபோது, பாண்டியர்களும் தமிழ் மண்ணை ஆண்டிருக்கின்றனர் என்று தெரிகிறது. அவர்கள் இருப்பிடம் தக்ஷிண பகுதியில் என்று அழுத்தம் திருத்தமாகக் காளிதாசர் கூறி இருக்கிறார்.

இராமாயணத்தில் பாண்டியர் தலைநகரம்

அடுத்த முக்கியச் சான்றாக, பாண்டியர்கள் தலைநகரம், இராமாயணத்திலேயே உள்ளுறைச் சான்றாகக் காணப்படுகிறது. சீதையைத் தேடி வானரர்கள் நான்கு திசைகளுக்கும் சென்ற போது, சுக்ரீவன், நான்கு திசைகளிலும் தென்படக்கூடிய நாடுகளையும், பூகோள அமைப்பையும் விவரிக்கிறான். தென் திசையை விவரிக்கும் போது, அகஸ்தியர் அப்பொழுது தங்கியிருந்த, காவிரி உற்பத்தி ஸ்தானத்தைச் சொல்லி, அதைக் கடந்து சென்றால், தாமிரபரணி ஆறு வரும் என்று சொல்லி, அதன் பின், பாண்டியர்கள் நாடான ‘கவாடம்’ வரும் என்கிறான்.

“பாண்டியானாம் கவாடம் ததா த்ரக்ஷயதா வானரா:” (வா.இரா: 4 -41- 19)

வானரர்களே, அங்கு பாண்டியர்களது கவாடத்தைக் காண்பீர்கள், என்றான் சுக்கீவன்.

 அதி முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஸ்லோகத்தை, இதுவரை சம்ஸ்க்ருத பண்டிதர்கள் பாண்டியர்களது வாயில் என்றே பொருள் கொண்டனர். ஏனென்றால், கவாடம் என்றால் நுழை வாயில் என்று சம்ஸ்க்ருதத்தில் அர்த்தம். ஆனால், கவாடம் என்பது, பாண்டியர்களது, இரண்டாம் சங்க காலத்தின் தலைநகரின் பெயரும் ஆகும் என்பதை, இறையனார் களவியல் உரை மூலம் அறிகிறோம்.

இதன் மூலம். இராமாயணம் நடந்த காலத்தின் உச்ச வரம்பு,  இரண்டாம் சங்க காலம் ஆரம்பித்த நேரம் எனலாம். இராமாயண காலத்தில் பாண்டியர்களே சக்தி வாய்ந்த அரசர்களாக இருந்து வந்தார்கள் என்பதற்கு, இரகு வம்சம் மட்டுமல்லாமல், இராமாயணமும் ஒரு சான்றாக இருக்கிறது என்பதை மறுக்க முடியாது. இறையனார் களவியல் உரையில் புலவர் நக்கீரர், சங்க காலங்களுக்குக் கால வரம்புகளைத் தருகிறார். அதன் படி, கவாடத்தைத் தலை நகரமாகக் கொண்ட இரண்டாம் சங்க காலம், பொ.முன். 5550 (BCE) இல் ஆரம்பிக்கிறது. இது இன்றைக்கு 7000 வருடங்களுக்கு முன் என்று சொல்லலாம். இந்த இராமாயணச் சான்றால். இராமாயணம் நடந்த காலம் 7000 ஆண்டுகளுக்குள்தான் இருந்திருக்க வேண்டும். அதற்கு அப்பால் இருக்க சாத்தியமில்லை என்று புலனாகிறது.

இதில் ஆச்சரியப்படத்தக்க தகவல் என்னவென்றால், பகவானின் இரு கண்களில் ஒன்றான தமிழ் இல்லாமல், சம்ஸ்க்ருத மொழியில் இருக்கும் இராம சரிதத்தின் காலத்தைக் கணக்கிட இயலாது என்னும் அற்புத விவரம்தான். அதுமட்டுமல்ல, பாரதத்தாயின் திருவடி போல விளங்கும் தமிழ் மண்ணிலிருந்துதான் இராமாயணத்துக்கான தொல்லியல் சான்றும் நமக்குக் கிடைக்கிறது. அதைப் பற்றி அடுத்த கட்டுரையில் காண்போம்.

 

திங்கள், 25 டிசம்பர், 2023

தொங்கும் மதிள்களை அழித்த இராமன்

கீதாசரியன் மாதாந்திர புத்தகத்தில் வெளியான எனது கட்டுரை 

இராமன் பரம்பரையில் வந்தவர்கள் சோழர்கள் என்பதற்கு இலக்கியச் சான்றுகளும் உள்ளன. தமிழ்ச் சங்க நூல்களிலேயே இராமனைச் சோழர் குல முன்னோனாகச் சொல்லும் பாடல்கள் உள்ளன. ஆனால் அவை வெளிப்படையாக இராமன் என்ற பெயரைச் சொல்லாமல், இராமன் செய்த ஒரு செயலைச் சொல்லியே அடையாளப்படுத்துகின்றன. அந்தச் செயல், “தூங்கெயில் எறிதல்”! எயில் என்றால் மதிள் சுவர். தூங்கெயில் என்றால் தொங்கிக் கொண்டிருக்கும் மதிள் என்று பொருள். தொங்கிக் கொண்டிருக்கும் மதிள்களை உடைய இலங்கையை அழித்தான் என்பது பொருள். இலங்கையை அழித்தவன் ஒருவன் தான். அவன் இராமன்!

அது என்ன தொங்கும் மதிள்? மதிள் சுவர்கள் தொங்கிக் கொண்டிருப்பது எவ்வாறு என்ற கேள்வி எழுகிறது. வானிலிருந்து தொங்கிக் கொண்டிருப்பது போன்ற உருவில் நகரங்கள் சொல்லப்பட்டுள்ளன. இதுவரை பாரத நாட்டில் வழங்கி வந்துள்ள கதைகளில், வானின் கண் இருந்ததாகச் சொல்லப்படும் நகரங்கள்  இரண்டு.

ஒன்று, தேவர்களது தலைநகரான அமராவதி என்னும் நகரம். இது வானில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்த நகரத்தைக் காத்தவன் முசுகுந்தன் என்பவன், அவன் சோழர்களது பரம்பரையில் வந்தவன் என்று சோழர் வம்சாவளி காட்டுகிறது. மாந்தாதா வரையிலும், இராமனது இக்ஷ்வாகு பரம்பரையும், சோழர் பரம்பரையும் ஒரேவிதமான பெயர்களைத்தான் கொண்டிருக்கின்றன. மாந்தாதாவுக்குப் பிறகு முசுகுந்தன் பெயர் சோழர் பரம்பரையில் வருகிறது.

ஒருமுறை இந்திரனுக்கு உதவ அவன் நகரமான அமராவதியைப் பாதுகாத்ததாகவும், அதற்குப் பிரதிபலனாக நாளங்காடி பூதத்தை இந்திரன் கொடுத்ததாகவும், அதை அவன் பூம்புகார் நகரில் நிர்மாணித்ததாகவும் சிலப்பதிகாரம் கூறுகிறது. தஞ்சாவூர் பகுதியிலுள்ள சப்த விடங்க ஸ்தலங்களும் முசுகுந்தனால் நிர்மாணிக்கப்பட்டவையே என்று ஸ்தல புராணங்கள் கூறுகின்றன. இங்கு நமக்குத் தேவையான விவரம், அமராவதி வானில் இருந்தது என்று சொல்லப்பட்டதே.

அதைப் போலவே வானில் இருந்ததாகச் சொல்லப்பட்ட மற்றொரு நகரம், ராவணன் ஆண்ட இலங்கை நகரம். அது மலை மீது அமைந்திருந்தது என்று இராவணன் சீதையிடம் கூறுவான் (வா- இராமா: 3-47-29). மலை முகட்டில், மேகங்களினூடே அந்த நகரம் ஒரு ‘தொங்கும் நகரம்’ போல அமைந்திருந்தது. இலங்கை மதிள்களால் சூழப்பட்ட நகரம். மேகங்கள் மலையைச் சூழ்ந்து கொள்ள, கீழேயிருந்து பார்ப்பவர்களுக்கு, மலை உச்சியில் அந்த மதிள்கள் மட்டுமே தென்படும். அவை வானத்தில் தொங்கிக் கொண்டிருப்பது போல இருந்தன என்பதால், தொங்கும் மதிள் எனப் பொருள்படும் ‘தூங்கெயில்’ என்று அழைக்கப்பட்டிருக்கிறது. இதனால் இலங்கை நகரமே வானில் இருக்கும் நகரம் போல கருதப்பட்டிருக்கிறது.

இராவணன் தன் நகரத்தை இந்திரனது அமராவதி நகரம் போல இருக்கிறது என்றும் சொல்கிறான் (வா- இராமா: 3-48-10) இதன் மூலம், அமராவதியும், மலை மேல் அமைந்த ஒரு நகரமாக இருந்திருக்க வேண்டும் என்று தெரிகிறது. தேவர்கள் என்று அழைக்கப்பட்டவர்கள் அங்கு வசித்திருக்கலாம். இந்திர த்வீபம் என்று தாய்லாந்து, பர்மா, வியட்நாம் பகுதிகளுக்குப் பெயரிடப்பட்டிருந்தது என்பதை நாம் இங்கு பொருத்திப் பார்க்க வேண்டும். இந்திரனைச் சேர்ந்தவர்களும் மனிதர்கள் தான் என்று சொல்லும் வண்ணம், இந்திரனது தேரோட்டியான மாதலி இராமனுக்கும் தேரோட்டினான். இந்திரனையே வென்றதால், இராவணனது மகன் இந்திரஜித் என்ற பட்டம் பெற்றான். இங்கு சொல்லப்படும் இந்திரன் நகமும், சதையுமாக மனித உருவில் வாழ்ந்தவனாகத்தான் இருக்க வேண்டும். இராமனது காலக்கட்டத்தில் அமராவதியும், இலங்கையும் மலை மேல் அமைக்கப்பட்ட நகரங்களாகவும், அழகிலும் அமைப்பிலும் ஒன்றை ஒன்று விஞ்சுவதாகவும் இருந்திருக்கின்றன.

இலக்கியத்தில் ‘தூங்கெயில் எறிந்த’ குறிப்புகள்

பொதுவாகவே சங்ககால இலக்கியங்களில், மன்னர் பெயரைக் குறிப்பிடாமல் அவர் செய்த செயலை மட்டுமே குறிப்பிடுவது வழக்கம். சோழர்களைப் பொறுத்தமட்டில் இரண்டு மன்னர்களது செயலைப் பெருமையாகக் குறிப்பிடுவது வழக்கமாக இருந்திருக்கிறது. புறாவுக்காகத் தன் தசையைக் கொடுத்த செயலையும், தூங்கெயில் எறிந்ததையும் சொல்லிப் புகழ்வார்கள். இதில் முதலாமவர் சிபி என்பது எளிதாகப் புரிந்து கொள்ளக் கூடியது. ஆனால் தூங்கெயில் எறிந்தவன் யார் என்பதை எந்தத் தமிழார்வலரும், ஆய்வாளரும் கண்டு கொள்ளவில்லை. எனவே தூங்கெயில் குறிப்புகளையும் கொடுத்து, தூங்கெயில் அழித்தவன் இராமன் தான் என்பதையும் நாம் இப்பொழுது நிரூபணம் செய்வோம்.

தூங்கெயில் ஏறிந்த விவரம் புறநானூறு 39 ஆம் பாடலில் காணப்படுகிறது. சோழ மன்னன் குளமுற்றத்துச் துஞ்சிய கிள்ளி வளவனை, மாறோக்கத்து நப்பசலையார் வாழ்த்துகிறார். அந்த மன்னன் உயிர்களிடத்தில் இரக்கம் கொண்டவன். தன்னை மற்றவர்கள் புகழ வேண்டுமென்று அவன் இரக்கத்தைக் காட்டுபவனில்லை. அவன் முன்னோனான புறாவுக்காத்  தன் உடம்பை அரிந்து கொடுத்தவன் மரபில் வந்துள்ளவன் ஆதலால், அவனுக்கு இரக்கம் காட்டுதல் என்பது இயல்பாக உள்ளது.

இந்த மன்னன் பகைவரை வெல்பவன். அது புகழுக்காகச் செய்வது அல்ல. இவனது முன்னோன் ஒருவன், தேவர்கள் நெருங்குவதற்குப் பயப்படும் ஆகாயத்திலிருந்து  தொங்கும் தூங்கெயிலை வென்றவன். அதனால் அப்படிப் பகைவரை வெல்லுதல் என்பது இவனுக்கு இயல்பாக உள்ளது என்கிறார் புலவர்.

“தூங்கெயில் எறிந்த நின் ஊங்கணோர்நினைப்பின்

அடுதல் நின்புகழும் அன்றே”

 

நல்லூர் நத்தத்தனார் என்னும் புலவர், சிறுபாணாற்றுப்படை) என்னும் சங்க நூலில்,

தூங்கு எயில் எறிந்த தொடி விளங்கு தடக்கை,

நாடா நல் இசை, நல் தேர்ச் செம்பியன்”  (வரிகள் 81-82)

என்று தூங்கெயில் எறிந்தவனையும், செம்பியன் என்னும் பெயரளித்த சிபியையும் பற்றிச் சொல்கிறார்.

 

தூங்கெயில் அழித்த பாங்கினை முன்றுறை அரையனார் தான் இயற்றிய  பழமொழி நானூறிலும் வைத்துள்ளார்.

வீங்குதோட் செம்பியன் சீற்றம் விறல்விசும்பில்

தூங்கும் எயிலும் தொலைத்தலால் - ஆங்கு

முடியும் திறத்தால் முயல்கதாம் கூரம்

படியிழுப்பின் இல்லை யரண். (49)

நன்கு புடைத்த தோள்களை உடைய செம்பியன் ஆகாயத்திலிருந்து தொங்கிக் கொண்டிருந்த மதிள்களை அழித்ததால், அம்பினை வலிவாகத் தொடுப்பின் கவசமும் பிளந்துபோதல் போல, முடிந்த அளவு முயற்சிசெய்தால் பயன் அடையலாம் என்பதே இந்தச் செய்யுளின் பொருள்.

செயற்கரிய செயலாகத் தூங்கெயில் எறிந்தவிதம் இருக்கவேதான் கடின முயற்சிக்கு எடுத்துக்காட்டாக அதைச் சொல்லியுள்ளார்.

 

மணிமேகலையிலும், இந்திரவிழாவெடுத்த சோழ அரசனைப் பற்றிச் சொல்கையில் “தூங்கெயில் எறிந்த தொடித் தோள் செம்பியன்” என்று சீத்தலைச் சாத்தனார் எழுதியுள்ளார்.

பதினோராம் நூற்றாண்டில் எழுதப்பட்ட கலிங்கத்துப் பரணியில், ஆசிரியர் ஜெயங்கொண்டார், சோழ பரம்பரையைச் சொல்லுமிடத்தே, “தூங்கெயில் எறிந்தவனைப்” பற்றியும் குறிப்பிடுகிறார்.

 

தூங்கெயில் புதிர் நீக்கும் சிலப்பதிகாரமும், ஆழ்வாரும்

தூங்கெயில் புதிரை அவிழ்க்க சிலப்பதிகாரத்தில் இரண்டு குறிப்புகளைக் காண்கிறோம். முதலாவது, கங்கைக் கரையினில் சேர அரசன் செங்குட்டுவன் இருந்த பொழுது சொல்லப்படுகிறது. கண்ணகிக்குச் சிலை எழுப்ப, இமயத்திலிருந்து கல்லைக் கொண்டுவர சேர அரசன் செங்குட்டுவன் நாட்டை விட்டுக் கிளம்பி முப்பது இரண்டு மாதங்கள் ஆகிவிட்டன. திரும்பும் வழியில் அவன் கங்கை ஆற்றங்கரையில் தங்கியிருந்தான். அப்பொழுது சேர நாட்டைச் சேர்ந்த மாடலன் என்னும் பார்ப்பனன் கங்கைக்கு தீர்த்த யாத்திரையாக வந்தான். அவனிடம் தமிழ் நாட்டு நிலவரங்களை விசாரித்தான் மன்னன். மன்னனின் மைத்துனன்தான் சோழ நாட்டை ஆண்டு கொண்டிருந்த வளவன் கிள்ளி. அந்த மன்னனைப் பற்றிக் கூறுகையில், தூங்கெயில் மூன்றினை எறிந்தவனும், புறாவுக்காகத் தன் உடம்பைத் தராசுக் கோலில் இட்டவனும் வளர்த்த அறம் கொண்ட செங்கோல் திரிந்து  போகுமா? போகாது. சோழன் செங்கோல் எந்தக் குறைவும் இல்லாமல் இருக்கிறது என்று தூங்கெயில் கதையையும் நினைவு கூர்கிறான் மாடலன்

வெயில் விளங்கு மணிப்பூண் விண்ணவர் வியப்ப

எயில் மூன்றெறிந்த இகல் வேல் கொற்றமும்

குறுநடைப் புறவின் நெடுந்துயர் தீர

எறிதரு பருந்தின் இடும்பை நீங்க

அரிந்து உடம்பிட்டோன் அறந்தரு கோலும்

(சில 27- 164 -168)

தூங்கெயில் மூன்றினை எறிந்தவன் என்று மூன்று மதிள்களைக் குறிப்பிட்டுச் சொல்கிறான் மாடலன்.  தொங்கும் மூன்று மதிள்கள் மீண்டும் சிலப்பதிகாரத்தில் சொல்லப்படுகின்றன. அதைச் சொல்வது அம்மானை என்னும் விளையாட்டை ஆடிப் பாடும் சிறுமியர்.

 ‘அம்மனை’ என்பது விளையாடப்படும் காய். அதை ‘அம்மானை’ என்று சொல்லி தூக்கிப் போட்டு விளையாடுவார்கள். அப்படிப் போடும் போது, விடுகதை போல ஒரு கேள்வி கேட்க வேண்டும். அம்மனைக் காயைப் பிடிப்பவர் அதற்குப் பதிலாக ஒரு கேள்வியைக் கேட்டு, காயைத் தூக்கிப் போடுவார். அந்தப் புதிர்கள் சுவாரஸ்யமாகவும், சிறுமியருக்கு இருக்கின்ற அறிவு விலாசத்தைக் காட்டுபவதாவும் இருக்கும். உதாரணமாக இங்கு ஒரு அம்மானைப் பாடல்:

பொன்னேறு மார்பர் புகழ்சேர் திருவரங்கர்

எந்நேரமும் பாம்பிலே கிடப்பார் அம்மானை

எந்நேரமும் பாம்பிலே கிடப்பார் ஆமாயின்

என்னே தலைக்கு விடம் ஏறாதோஅம்மானை

ஏறுமோ செங்கருடன் ஏறினால் அம்மானை

எந்நேரமும் பாம்பில் கிடப்பார் திருவரங்கர் என்று ஒரு பெண் அம்மனைக் காயைத் தூக்கிப் போடுகிறாள்.

பாம்பில் கிடந்தால் விஷம் தலைக்கேறாதோ என்று இரண்டாமவள் கூறுகிறாள். கருடன் இருக்க எப்படி விஷம் ஏறும் என்று மூன்றாமவள் கேட்கிறாள்.

சுவையாகச் செல்லும் இந்தப் புதிர் கேள்விகளைப் போல சிலப்பதிகாரத்தில் சோழ மன்னர்களை வைத்து அம்மானைக் கேள்வி கேட்பதாக வருகிறது. அதில் முதல்  கேள்வி, இந்திரனுடைய உயர்ந்த அரண்களைக் காத்த சோழன் யார் அம்மானை?

அதற்குப் பதில் நமக்கும் இப்பொழுது தெரியும். அது முசுகுந்தன் என்னும் முன்னாள் அரசன். ஆனால் அந்த அம்மானைப் பாடலில் வரும் பதில் இப்படி இருக்கிறது: வானின் கண் அசைகின்ற மூன்று மதிள்களை அழித்தவனே அவன்.

“உயர் விசும்பில் தூங்கெயில் மூன்றெறிந்தவன் காண் அம்மானை” (சில: 29-16-4)

இந்திரன் மதிளைக் காத்தவன் முசுகுந்தன். அவன் அழிக்கவில்லை. ஆகவே இந்தப் பதில் அவனைப் பற்றியது அல்ல. இது வேறொரு அரசன் மதிள்களை அழித்த கதையைச் சொல்கிறது. அதிலும் அவை மூன்று மதிள்கள்.

மூன்று மதிள்கள் கொண்ட நகரமா?

அப்படி ஒரு நகரம் இருந்ததா என்றால், அங்குதான் வலிய செயல்களைச் செய்த கலியன் என்னும் திருமங்கை மன்னன் அற்புதமான குறிப்பு கொடுத்திருக்கிறார்.

மும்மதிள் இலங்கை இருகால் வளைய” என்று திருவெழுகூற்றிருக்கையில் ஆணியடித்தாற் போல் சொல்லிவிட்டார்.

மும்மதிளை உடையது இலங்கை. ஆழ்வார்கள் அருளிச் செய்த பல பாடல்களிலும் மதிள் இலங்கை என்ற குறிப்பு வந்தாலும், இந்த ஒரு பாடலில் “மும்மதிள் இலங்கை” என்று குறிப்பிட்டுச் சொல்லி இராமனால் அழிக்கப்பட்ட  இலங்கைக்கு மூன்று மதிள்கள் உண்டு  என்று காட்டிவிட்டார்.

எனவே மும்மதிள் கொண்ட தூங்கெயில் எறிந்தவன் இராமன்தான்.

அவனைத்தான் சோழர்குல முன்னோனாகத் தமிழ்ச் சங்கப் பாடல்கள் சொல்லியுள்ளன. சிலப்பதிகாரம், மணிமேகலை என்னும் இரு பெருங்காப்பியங்கள் இயற்றப்பட்ட 2000 ஆண்டுகளுக்கும் முன் வரையிலும், மக்கள் இராமனது இந்த செயலை நினைவு கூர்ந்து, அம்மானைப் பாடலில் சிறுமியரும் சொல்லும் வண்ணம் சிறு வயதிலேயே சொல்லிக் கொடுத்திருக்கின்றனர்.

அதற்குப் பிறகு, சங்க காலம் மறைந்து விடவே, கொஞ்சம் கொஞ்சமாக இந்த விவரங்கள் மக்கள் மத்தியில் மறக்கப்பட்டுவிட்டன போலும். ஆயினும், இந்த விவரங்களை, செப்பேடுகளிலும், கல்வெட்டிலும், சோழ மன்னர்கள் வடிக்கலாயினர். பதினோராம் நூற்றாண்டு முதல், இலக்கியங்களிலும் எழுத ஆரம்பித்தனர்.

கலிங்கத்துப் பரணியில் தூங்கெயில் எறிந்தவனைப் பற்றிச் சொன்னதையடுத்து, முதலாம் குலோத்துங்கனது மகனான விக்ரம சோழன் காலத்தில் அவன் மீது ஒட்டக் கூத்தரால் பாடப்பட்ட “விக்ரமசோழன் உலா  என்ற நூலில்

“கூடார்தம் தூங்கும் எயில் எறிந்த சோழனும்” (வரி 17)

என்று சோழர் குல முன்னோனைச் சொல்லுகிறார்.

அவன் பேரனான இரண்டாம் இராஜராஜசோழனைப் புகழும் “இராஜராஜசோழன் உலா” என்னும் இலக்கியத்தில், தசரதனையும் சேர்த்து வம்சாவளி கொடுக்கப்பட்டிருக்கிறது. எழுதியவர் விக்ரமசோழன் உலா எழுதின  ஒட்டக்கூத்தரே.

“இந்திரனை யேறாக்கி யேறினோன் -முந்தும்

ஒரு தேரால் ஐ இரண்டு தேர் ஓட்டி உம்பர்

வரு தேரால் வான் பகையை மாய்த்தோன் - பொருது

சிலையால் வழிபடு தெண் திரையைப் பண்டு

மலையால் வழிபட வைத்தோன் - நிலையாமே

வாங்கும் திருக்கொற்ற வாள் ஒன்றின் வாய்வாய்ப்பத்

தூங்கு புரிசை துணித்தகோன்” (வரிகள் 19-25)

இதன் பொருள்: “வானுலகிலிருந்து வந்த ஒரு தேரால் பத்துத் தேரினையும் துரத்தி பகைவனைத் தொலைத்தவனும், வில்லால் வழிபட்டு வணங்கிய கடலினை முற்காலத்தில் மலைகளால் வழியுண்டாகும்படி செய்தவனும், நிலை நில்லாமல் அழியும்படி செய்யும், ஒரு சிறந்த வாளாயுதத்தால் தொங்கும் கோட்டையைத் துண்டாக்கியழித்த மன்னன்.”

ஐயிரண்டு தேர் என்பது பத்துத்தேர். சம்பரன் என்ற அசுரன் பத்துத் தேருடையவன். ஒரு தேராற் பத்துத் தேரினையும் ஓட்டிப் பகையை மாய்த்தோன் என்கிறது இப்பாடல். அவ்வாறு செய்தவன் தசரதன், பத்துத்தேர்களையும் வென்றதனால் வந்த பெயர் இது. தசம் - பத்து. ரதன் - தேரினை வென்றவன். அடுத்த வரியில், சிலையால் வழிபடு தெண்டிரை என்றது இராமன் சிலை (வில்) வளைத்து அம்பு தொடுத்துக் கடல்நீரை வற்றச் செய்தது கண்டு அஞ்சி வந்து வருணன் வணங்கியதைக் குறிப்பாலுணர்த்தியது. தெண்டிரை என்றால் கடல். இது அதற்குரிய தெய்வமாகிய வருணனைக் குறித்தது. சிலை என்றால் வில். அதன் வலிமையையுணர்த்தியது. இராமன் வில் வலிமையாற் கடல் வற்றியதுகண்டு வருணன் வழிபட்டான் என்பது குறிப்பு.

அடுத்து மலையால் வழிபட என்று சொன்னது மலைகளைக் கொண்டு போட்டதனால் வழியுண்டாக என்று அர்த்தம். இது கடலிற் கரைகட்டி இலங்கைக்கு வழியுண்டாக்கியதைச் சொல்வது. இதைச் செய்தவன்  இராமன்.

இதற்கடுத்துச் சொல்வது “தூங்கு புரிசை துணித்தகோன்” புரிசை என்றால் கோட்டை. தொங்கும் கோட்டையை உடைத்தவன். மலையதனால் அணை கட்டி மதிளிலங்கை அழித்தவனைப் பற்றியே இங்கு சொல்லியிருப்பதால், தூங்கெயில் எறிந்தவன் யார் என்ற புதிர் சந்தேகத்துக்கு இடமில்லாமல் நிரூபிக்கப்பட்டு விட்டது.

அவன் வழி வந்தவர்களே சோழர்கள் என்கையில், இராமன் யார் என்ற கேள்விக்குத் தமிழ்நாட்டில் இடமே இல்லை. நப்பின்னையை மணந்ததன் மூலம் கிருஷ்ணன் தமிழ் மக்களது மருமகன் ஆனான் என்றால், சோழர் மரபையே கொடுத்த இராமன் தமிழ் மண்ணின் மகன் என்று சொல்வதுதானே பொருத்தமாக இருக்கும்?

 

சனி, 9 டிசம்பர், 2023

இராமன் பரம்பரையில் வந்தவர்கள் சோழர்கள்

 இராம ஜன்ம பூமியில் இராமர் கோயில் வரப்போகும் இந்த வேளையில், இராமரைக் குறித்தும், தமிழர்களுக்கும், இராமருக்கும் உள்ள தொடர்பு குறித்தும் கட்டுரைகள் இட இருக்கிறேன். அனைவருடனும் பகிர்ந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். 

****

இராமன் பரம்பரையில் வந்தவர்கள் சோழர்கள்

தமிழ் நாட்டுக்கும், இராமனுக்கும் உள்ள தொடர்பு சோழர்கள் காலம் முதலே தொடங்குகிறது. சோழ மன்னர்கள் தாங்கள் மனு, அவன் மகன் இக்ஷ்வாகு முதலானோரது பரம்பரையில் வந்தவர்கள் என்று செப்பேடுகளிலும், கல்வெட்டுகளிலும் எழுதி வைத்துள்ளார்கள். சுந்தர சோழச் சக்கரவர்த்தி, தனது மந்திரியான அநிருத்த பிரம்மராயருக்கு அளித்த அன்பில் தான பத்திரத்தில், திருமாலின் கண்ணொளியிலிருந்து தோன்றியவர்கள் சோழ குடும்பத்தினர் என்று எழுதியுள்ளார்.

மன்னர்கள், தங்களை தெய்வத்துக்குச் சமமாக உயர்த்திக் காட்டுவதற்கு அவ்வாறு எழுதியிருக்கலாம் என்று இதனை எளிதாகக் கடந்து போய்விட முடியாது. சோழர்கள், தாங்கள் விஷ்ணுவைப் போன்றவர்கள் என்று சொல்லிக் கொள்ளவில்லை. தாங்கள் விஷ்ணுவின் அவதாரமான இராமனின் பரம்பரையில் வந்தவர்கள் என்றே சொல்லிக் கொண்டார்கள். விஷ்ணு பரம்பரைத் தொடர்பை, மற்ற இரு தமிழ் அரசர்களான சேரரும், பாண்டியர்களும் சொல்லிக் கொள்ளவில்லை. ஆனால் அவர்களும், தங்களுக்கென சில தெய்வத் தொடர்புகளைச் சொல்லிக் கொண்டார்கள்.

சேரர்கள், இந்திரனிலிருந்து வந்தவர்கள் என்பதைத் தெரிவிக்கும் வண்ணம் ‘வானவர்’ என்னும் பட்டப் பெயரால் அழைக்கப்பட்டனர் என்று மு. இராகவையங்கார் அவர்கள் பண்டைய நூல்களும், நிகண்டுகளும் குறிக்கின்றன என்கிறார். சோழ, பாண்டியர்களைப் போலல்லாமல், ஆரம்பம் எங்கே, எப்பொழுது என்று தெரியாத புராதானத்தைக் கொண்டுள்ளதால், சேரர்களை முன் வைத்து, சேர, சோழ, பாண்டியர் என்று சொல்லும் வழக்கமும் வந்துள்ளது என்கிறார் அவர்.

பாண்டியர்கள், தாங்கள் தடாதகைப் பிராட்டி எனப்படும் மீனாக்ஷி அம்மையின் வழி வந்தவர்கள் என்றும், அதனால், தங்களைக் ‘கௌரியர்’ என்று அழைத்துக் கொண்டும், சிவ பெருமானின் அருளைப் பெற்றவர்கள் என்றும் சொல்லிக் கொண்டனர். எனினும், நாட்டைக் காக்கும் மன்னர் என்னும் போது, காக்கும் கடவுளான திருமால் அம்சமாகத் தங்களைச் சொல்லிக் கொண்ட பாண்டிய மன்னர் ஒருவருண்டு. அவரே, பெரியாழ்வார் பாடல்களில் காணப்படும் கோன் நெடுமாறன். இமய மலையின் பருப்பத சிகரத்தில் (அமர்நாத் சிகரம்) கயல் பொறித்ததும் அந்த மன்னன்தான். அந்த மன்னனது விஷ்ணு பக்தியைப் பற்றி வேறொரு கட்டுரையில் பார்ப்போம். இங்கு சொல்ல வருவது, பாண்டியர்களது வம்சாவளி, மீனாக்ஷி தேவியிடமிருந்துதான் ஆரம்பிக்கிறது என்பதே.

சேர, சோழ, பாண்டியர்களில் சோழர்கள் மட்டுமே தங்களை இக்ஷ்வாகு பரம்பரையில் வந்தவர்கள் என்று சொல்லிக் கொண்டனர். இதுவரை நமக்குக் கிடைத்துள்ள செப்பேடு, கல்வெட்டு போன்றவற்றுள் நான்கு சாசனங்கள் சோழ வம்ச பரம்பரையைப் பட்டியலிடுகின்றன. அவை, சுந்தரசோழன் அளித்த அன்பில் செப்பேடுகள், முதலாம் இராஜேந்திர சோழன் பெயரில் உள்ள லேடன் செப்பேடுகள், முதலாம் இராஜேந்திரன் அளித்த திருவாலங்காடு செப்பேடுகள் மற்றும் வீரராஜேந்திர சோழனது கன்யாகுமரி கல்வெட்டு.

சோழ பரம்பரையில் பரதனும், சிபியும், இராமனும்

இவை கொடுக்கும் வம்சாவளியின் ஆரம்ப கால அரசர்கள், வால்மீகி இராமாயணத்தில், இராமரது திருமணத்தின் போது வசிஷ்டரால் சொல்லப்படும் இராம வம்சாவளியை ஒத்திருக்கிறது. மாந்தாதா வரை ஒரே வம்சாவளிதான். மாந்தாதாவுக்குப் பிறகு, இராஜேந்திரன் செப்பேடுகளில் முசுகுந்தன் வருகிறான். அங்கிருந்து தொடரும் பெயர்கள் சிபிச் கக்கரவர்த்தியில் முடிகிறது. சிபிக்குப் பிறகு சோழ வர்மன் வருகிறான். இராஜேந்திரன் செப்பேட்டில், சிபிக்குப் பிறகு, மருத்தன், துஷ்யந்தன், அவனுக்கும், சகுந்தலைக்கும் பிறந்த பரதன், அவனது மகனாக சோழ வர்மன் குறிக்கப்பட்டுள்ளான்.

திருவாலங்காடு செப்பேடுகள்

இராஜேந்திரனது மகனான வீரராஜேந்திரன் கன்யாகுமரி அம்மனது கோயில் தூண்களில் செதுக்கியுள்ள சாசனத்தில்,  பிரம்மா, மரீசி, கஸ்யபர், வைவஸ்வதர், மனு, இக்ஷ்வாகு என்று ஆரம்பித்து, ஹரிசந்திரன், சகரன், பாகீரதன் என்று தொடர்ந்து, இராமன் வரை பட்டியல் நீள்கிறது. ராமனை நான்கு பாடல்களில் புகழ்ந்து, அதன்பின், அப்படிப்பட்ட ராமனது குடும்பத்தில் சோழன் என்னும் பெயர் கொண்டவன் பிறந்தான். அவனே சோழ ராஜ்ஜியத்தை நிறுவினான் என்றும் எழுதப்பட்டுள்ளது. இந்தக் கல்வெட்டில் சிபியின் பெயர் சொல்லப்படவில்லை. இந்த ஒரு கல்வெட்டில்தான் நேரிடையாக இராமனது சம்பந்தமும் சொல்லப்பட்டுள்ளது.

சம்ஸ்க்ருதத்தில் வம்சாவளிப் பெயர்கள்

இந்த நான்கு சாசனக்களில் காணப்படும் வம்சாவளி சம்ஸ்க்ருதத்தில் எழுதப்பட்டுள்ளன. நான்குமே, அடுத்தடுத்த நான்கு தலைமுறைகளைச் சேர்ந்த மன்னர்களது ஆணையால் 10 மற்றும் 11-ஆம் நூற்றாண்டுகளில் எழுதப்பட்டவை. இந்த காரணங்களால் இவை உண்மையாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை என்ற மறுப்பும் எழ வாய்ப்பிருக்கிறது. அத்துடன், சிபிக்கும், இராமனுக்கும் என்ன சம்பந்தம்; இந்த இருவரிடமிருந்தும் சோழ பரம்பரை வந்துள்ளது என்று எதைக் கொண்டு சொன்னார்கள் என்ற கேள்வியும் எழுகிறது.

இவற்றுக்கு பதில் தேடுகையில், அரசர்களது ஒப்புதல் இல்லாமல் இந்த வம்சாவளிகளை யாரும் எழுதியிருக்க முடியாது என்பதை நாம் ஏற்றுக் கொள்ளவேண்டும். அதே நேரம், அரசர்களும், பொய்யான பரம்பரையை எழுதிக் கொண்டிருக்க முடியாது. அதிலும், உலகம் புகழும் சிவாலயத்தைத் தஞ்சையில் எழுப்பிய முதலாம் இராஜராஜன் போன்ற அரசர்கள் இக்ஷ்வாகு வம்சத் தொடர்பு இல்லாமல், அந்த வம்சத்திலிருந்துதான் தான்  தோன்றியதாக ஒரு பொய்யுரையைப் பரப்பியிருக்க முடியாது.

சம்ஸ்க்ருதத்தில் எழுதப்பட்டிருப்பதாலேயே இந்த வம்சாவளியை யாரோ புகுத்தியிருக்கிறார்கள் என்று சொல்வதும் ஏற்புடையது அல்ல. சோழர்கள் மட்டுமல்ல, பாண்டியர்களும், சம்ஸ்க்ருதம் மற்றும் தமிழ் என்று இரு மொழிகளிலுமே சாசனங்களை அளித்துள்ளனர். குறிப்பாக வம்சாவளியைச் சொல்லுமிடத்தில் சம்ஸ்க்ருத மொழியைப் பயன்படுத்தி இருப்பதை பாண்டியர்களது சின்னமனூர், வேள்விக்குடி செப்பேடுகள் போன்ற பல சாசனங்களில் பார்க்கிறோம். (தானப் பகுதி மட்டுமே தமிழில் இருக்கும்)  சம்ஸ்க்ருதம் பாரத தேசம் முழுவதும் பரவலாக அறியப்பட்டிருந்ததால், அந்த மொழியில் எழுதப்படும் வம்சாவளியை நாடு முழுவதுமுள்ள மக்கள் அறிந்து கொள்ள உதவும் என்பதே இதற்குக் காரணமாக இருக்க முடியும்.

மேலும், சம்ஸ்க்ருதம் என்பது, வடசொல் என்னும் பெயரில் தமிழின் ஒரு அங்கமாக உள்ளது என்று தொல்காப்பியம் கூறுவதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும் (சொல்லதிகாரம், சூத்ரம்: 401, 402). சம்ஸ்க்ருதமும், தமிழும் ஒன்றாக உருவாக்கப்பட்டவை என்பதே தமிழ்ச் சங்கம் மூலம் பாண்டியர்கள் தமிழ் வளர்த்த பாங்கினைக் கூறும் திருவிளயாடல் புராணம் தரும் செய்தி. அதுவே வைணவம் வலியுறுத்தும் கருத்தும் ஆகும். வடவேங்கடம் முதல் தென் குமரி வரை என்று மங்கல திசையான வடக்கில் ஆரம்பித்து, பிறகு தெற்குத் திசையைத் தொல்காப்பியம் சொன்னதற்கு ஒப்ப, தமிழ் அரசர்களும், வடசொல்லில் தங்கள் குலப் பெருமையைப் பகர்ந்துவிட்டு, பிறகு தென் சொல்லாம் தமிழ்ச் சொல்லில் உலகியல் விவகாரங்களை எழுதியுள்ளார்கள். 

சம்ஸ்க்ருதப் புலமை உள்ளவர்கள்தான் அந்தப் பகுதியை எழுதியுள்ளார்கள் என்பதை, எழுதியவர் தன்னைப் பற்றி அந்தந்த சாசனங்களிலேயே குறிப்பிட்டு இருப்பதிலிருந்து தெரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் அவர்கள் அதைத் தான்தோன்றித்தனமாக எழுதியிருக்க முடியாது. அரசனது ஒப்புதலோடும், அரசனது வழிகாட்டுதலோடும்தான் எழுதியிருக்க முடியும். அந்த அரசர்களும் வழிவழியாகச் சொல்லப்பட்ட வம்ச பரம்பரைக் கருத்துக்களது அடிப்படையில்தான் அவற்றை ஏற்றுக் கொண்டிருக்க முடியும். இல்லையென்றால், தந்தையான முதலாம் இராஜராஜன், சிபிச் சக்கரவர்த்தியிலிருந்து வந்தவன் முதல் சோழன் என்று சொல்ல, தனயனான முதலாம் இராஜேந்திரன், துஷ்யந்தனது மகனான பரதனுக்குப் பிறந்தவன் தான் முதல் சோழன் என்று எப்படிச் சொல்ல முடியும்? அவனது மகனான வீரராஜேந்திரன், அந்த முதல் சோழன் இராமனது குடும்பத்தில் வந்தவன் என்று எவ்வாறு சொல்லியிருக்க முடியும்.

முதலாம் இராஜேந்திர சோழன்.

இதன் மூலம் தெரிவது என்னவென்றால், துஷ்யந்தன் மகனான பரதனுக்கும், சிபிக்கும், இராமனுக்கும் ஏதோ தொடர்பு இருக்கிறது. தற்காலச் சிந்தனையில் சொல்வதென்றால், இவர்கள் மூவருமே ஒரே மரபணுவைக் கொண்டவர்கள், அதாவது தந்தை வழியில் ஒரே வம்சத்தில் தோன்றியவர்கள் என்று 11 ஆம் நூற்றாண்டு வரை தெரிந்து வைத்திருக்கின்றார்கள் என்பதே. அந்தத் தொடர்பு என்ன?

முதல் சோழனின் தந்தையான பரதன்

முதலில் பரதனது மகன், சோழ வர்மன் என்னும் திருவாலங்காடு செப்பேட்டு விவரத்தை ஆய்வோம். துஷ்யந்தனது மகனான பரதனுக்கு மூன்று மனைவியர் என்றும், அவர்கள் மூலம் மொத்தம் ஒன்பது மகன்கள் பிறந்தனர் என்பதும் விஷ்ணு புராணம் சொல்லும் செய்தி. அந்த ஒன்பது மகன்களும் தன்னைப் போல இல்லை என்று பரதன் சொன்னதாகவும், அதன் காரணமாக அந்த மனைவியர், அந்த ஒன்பது மகன்களையும் கொன்றுவிட்டதாகவும் விஷ்ணு புராணம் கூறுகிறது (வி.புரா: 4-19). பரதனுக்குப் பிறந்தவன்தான் சோழவர்மன் என்று திருவாலங்காடு செப்பேடு சொல்வதன் மூலம், அவன் அந்த மகன்களுள் ஒருவன் என்று தெரிகிறது.

அவன் தன் பெற்றோரைவிட்டு நீங்கி, தென் திசை நோக்கிப் பயணம் செய்து பூம்புகாரை வந்தடைந்திருக்கிறான். இந்தப் பயணத்தை, கன்யாகுமரி கல்வெட்டு விவரிக்கிறது. அவனைப் போலவே பரதனது மற்ற மகன்களும் எங்கெங்கோ சென்று தங்கள் பரம்பரையை வளர்த்திருக்கக் கூடும். பரதனது மகன்கள், தங்கள் தாய்மார்களால் கொல்லப்பட்டார்கள் என்பது ஒரு பேச்சுக்காகத்தான் என்று தெரிகிறது. அவர்கள் அனைவருமே பரதனைவிட்டு நீங்கினார்கள் என்பதை அவ்வாறு சொல்லியிருக்கிறார்கள்.

சோழன், சிபிச் சக்கரவர்த்தியின் மகனானது எப்படி?

சோழவர்மன் பரதனது மகன் என்பது உண்மையென்றால், அவனே எப்படி சிபிச் சக்கரவர்த்திக்கும் மகனாக இருந்திருக்க முடியும் என்ற கேள்வி எழுகிறது. சிபியை முன்னிட்டே, சோழர்களுக்கு, செம்பியன் என்ற பெயர் ஏற்பட்டது. இதை, சங்க நூல்களும் தெரிவிக்கின்றன.

சிபி யாரென்று பார்த்தால், அவன், பரதனது தந்தை வழிப் பாட்டனாருடைய சகோதரன் வழித் தோன்றலாகிறான். இதன் ஆரம்பம் ஐந்து சகோதரர்களில் இருக்கிறது. யது, துர்வஸு, த்ருஹ்யு, அநு, புரு என்னும் ஐந்து சகோதரர்களில், புருவில் வம்சத்தில் வந்தவன் துஷ்யந்தன். அவனை, புருவின் சகோதரனான துர்வஸுவின் வம்சத்தில் வந்த மருத்தன் தத்து எடுத்துக் கொள்கிறான் (வி.புரா. 4-16). மற்றொரு சகோதரனான அநுவின் வம்சத்தில் வந்த உசீனரனது மகன் சிபி ஆவான். ஆக, இவர்கள் எல்லோருமே, ஒரே தகப்பனுக்குப் பிறந்த மகன்கள் வழியில் வந்த பங்காளிகள்.

இவர்களுள், துஷ்யந்தனது மகனான பரதனுக்குப் பிறந்த சோழவர்மன், சிபிக்கு மகனாவான் என்று சொல்லப்பட்டுள்ளதால், சிற்றப்பன் வழி வந்த சிபி அல்லது அவன் குடும்பத்தினர் அவனை ஸ்வீகாரம் செய்திருக்க வேண்டும் என்று தெரிகிறது. பரதன் அவனைக் கைவிட்டுவிடவே, பரதனைப் பற்றி சோழ வம்சத்தினர் பெருமைப்பட்டுக் கொண்டதில்லை. சிபியைப் பற்றி மட்டுமே, அதிலும் அவன் புறாவுக்காக தன் தசையையே அரிந்து கொடுத்த செயலைப்பற்றிதான் சொல்லிக் கொண்டார்கள். அவ்வாறுதான் சங்கப் புலவர்கள் பாடியுள்ளார்கள். ஆனால், பரதனது தொடர்பை, திருவாலங்காடு செப்பேடு மட்டுமே தெரிவிக்கிறது. அதன் மூலம், வரலாற்றில் வேறு எங்கும் பதிவு செய்யப்படாத, மேற்சொன்ன விவரங்களும் தெரியவருகின்றன.

சோழனுக்கு இராமனுடனான தொடர்பு

பரதன் – சிபி ஆகியோருடனான சோழவர்மன் தொடர்பு, இராமனுடனும் எவ்வாறு தொடர்கிறது? இங்குதான் அந்த ஐந்து சகோதரர்களது தந்தையான யயாதி வருகிறார். யயாதியின் கதை பலரும் அறிந்ததே. ஆனால் அந்த யயாதி இராமனது முன்னோன் என்பது பலரும் அறியாதது. வால்மீகி இராமாயணத்தில் (1-70-42), இராமரது திருமணத்தின்போது வசிஷ்டரால் சொல்லப்படும் இராம வம்சாவளியில், நஹுஷன், அவன் மகன் யயாதி ஆகியோரது பெயர்கள் வருவதால், இராமனுக்கும், யயாதிக்கும் நேரடி மரபணுத் தொடர்பு இருக்கிறது புலனாகிறது.

அதே வால்மீகி இராமாயணத்தில், பரதனுடன் காட்டுக்குச் சென்று இராமனைத் திரும்பி வருமாறு அழைக்கும் கட்டத்திலும், வசிஷ்டர் இராம வம்சாவளியைச் சொல்கிறார். இராமனது பரம்பரையில் மூத்த மகன்தான் அரசுரிமை பெறுகிறான் என்று சொல்லும் போது, இன்னாருடைய மூத்த மகன் இன்னார் அரசரானார்கள் என்று வரிசையாக வசிஷ்டர் பட்டியலிடும்போது யயாதியின் பெயரைச் சொல்லவில்லை. நஹுஷனுக்குப் பிறகு அவனது மகனான நாபாகன் அயோத்தி அரசனானான் என்கிறார் (2-110-32).  இதன் மூலம் யயாதி மூத்த மகன் அல்லன் என்று தெரிகிறது.

மேலும், விஷ்ணு புராணத்தில் (4-6), அவன் சந்திர குலத்தில் வந்தவனாகச் சொல்லப்படுகிறான். இந்த குலத்தினர், இக்ஷ்வாகுவின் மூத்த சகோதரியான இலாவின் வழிவந்தவர்கள். இந்த குலத்திலும், நஹுஷன்- யயாதி என்பவர்கள் தந்தை-மகனாகச் சொல்லப் பட்டிருப்பது வினோதமாக இருக்கிறது. பரதன், சிபி, இராமன் என அனைவர் தொடர்பையும் சோழர்கள் சொல்லுவதால், இந்த யயாதி, சூரிய வம்சமான இக்ஷ்வாகு குலத்தில் பிறந்து சந்திர குலத்துக்குத் தத்து கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். அவன் மகன்களுக்குப் பிறந்தவர்கள் பரதனும், சிபியும். இந்த வகையில் இவர்கள் இருவரும், இராமனுடன் ஒரே மரபணுத் தொடர்பில் வருகிறார்கள். இதனால் சோழர்கள் பரம்பரையில் இம்மூவரும் வருகிறார்கள்.

இராமன் குலதனம் சோழர்களுக்கு

இராமனது பரம்பரையுடன் தொடர்பு இருந்ததால், பட்டாபிஷேகத்தின் போது இராமனால் விபீஷணனுக்குக் கொடுக்கப்பட்ட ‘குலதனம்’, சோழர்களிடம் சேர்ப்பிப்பதற்காக இருந்திருக்கலாம்.  பட்டாபிஷேகம் முடிந்து 'குலதனத்துடன்' விபீஷணன் திரும்புகிறான் (வா.இரா. 6-128 -90). இராமன் வைகுந்தம் செல்லத் தயாராகும் போது விபீஷணனிடம் இக்ஷ்வாகு குல தெய்வமான  'ஜெகந்நாதனை' வழிபடுமாறு இராமன் சொல்கிறான். (வா.இரா 7-121)

இதற்கு முன்னால் இராமன் விஷ்ணுவை வழிபடுவதைப் பற்றி வால்மீகி கூறுகிறார். தசரதன் ஏற்பாடு செய்த பட்டாபிஷேகத்தை முன்னிட்டு அதற்கு முந்தின தினம், இராமனும், சீதையும், அவர்களது வீட்டில் சில நியமங்கள், பூஜைகளை செய்கிறார்கள். அப்பொழுது விஷ்ணுவை வழிபட்டார்கள் என்றும் விஷ்ணுவை முன்னிட்டு ஹோமம் செய்தார்கள் என்றும், அதன் பிறகு விஷ்ணுவின் இருப்பிடத்தில் (கோயிலில்) குஶப் புல்லாலான பாயில் படுத்துறங்கினார்கள் என்றும் சொல்லப்பட்டுள்ளது. (வா.இரா 2-6) எனவே ராமன் தனக்கென்று விஷ்ணு விக்ரஹத்தை வைத்துக் கொண்டிருக்க வேண்டும்.

அந்த விக்ரஹமே குலதனம் என்றால், யாராவது அதை மற்றவர்களுக்குக் கொடுப்பார்களா என்ற கேள்வி வருகிறது. விபீஷணனுக்காக கொடுக்கப்பட்டதென்றால், அவன் ஏன் அதை காவிரியின் நடுவில் விட்டு விட்டுச் செல்ல வேண்டும்? தன் இருப்பிடத்துக்கு (இலங்கைக்கு) எடுத்துச் செல்வதுதானே யாரும் செய்யக்கூடியது?

அவனது இருப்பிடமான இலங்கைக்குச் செல்லும் வழியில், சோழ ராஜ்ஜியம் இருப்பதாலும், திடீரென்று ஏற்பாடு செய்த பட்டாபிஷேகத்துக்கு சோழர்கள் வரமுடியவில்லை என்பதாலும், இராமன் தன் பரிசாக, தான் வழிபட்ட பெருமாளை, தன் குலத்தில் வந்தவர்களான சோழர்களுக்கு அளிக்க, விபீஷணனைப் பணித்தானோ என்று எண்ண இடமிருக்கிறது. இதற்கு வலு சேர்க்கும் வகையில், விபீஷ்ணன் பெருமாளை சோழ நாட்டில் விட்டுவிட்டுச் சென்றிருக்கிறான். சோழர்களும், ஸ்ரீரங்கநாதரைத் தங்கள் ‘குலதனம்’ என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

ஸ்ரீ அரங்கநாதர்

ஸ்ரீரங்கம் கோயிலின் வெள்ளைக் கோபுரத்தின் உட்சுவரில் காணப்படும் மூன்றாம் குலோத்துங்கன் காலக் கல்வெட்டில், “குலோத்துங்க சோழ தேவர்க்குக் குலதனமாய் வருகிற கோயிலில்” என்று ஸ்ரீரங்கம் கோயிலைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது (SII Vol 24, No. 133, A.R. No. 89 of 1936-37) அந்த அரசனோ சைவத்தில் பற்று கொண்டவன். அவனுக்குக் குலதனமாகக் கிடைத்த கோயில் என்று எழுதப்பட்டுள்ளதால், இந்தப் பெருமாள் இராமனது குலதனமாக சோழர்களுக்குக் கிடைத்தவர் என்று அறிகிறோம். சோழர்களைத்  தன்னுடைய வம்சாவளியினர் என்று இராமன் நினைத்திருக்கவேதான், தான் வழிபட்ட மூர்த்தியை, தன்னுடைய குலதனமாக, சோழர்களுக்கு, விபீஷணன் மூலமாகக் கொடுத்திருக்கிறான்.



மூன்றாம் குலத்துங்க சோழன் 11-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவன். எனவே இராமனது தொடர்பு என்பது பின்னாளில் இவர்களாகவே கற்பனை செய்துக் கொண்டது என்று யாரேனும் மறுப்பு சொல்லலாம். இராமனது தொடர்பு பின்னாளில் ‘கண்டுபிடித்த’தல்ல. சங்கப் புலவர்களும் இராமனை, சோழர்களது முன்னோன் என்று சொல்லியிருக்கிறார்கள். அவற்றையும் நாம் விவரிப்போம்.

 

 

ஞாயிறு, 15 ஜனவரி, 2023

சேது சமுத்திர கால்வாய் திட்டம் ஏன் சாத்தியமில்லை? - தினமலருக்கு என் பேட்டி

12-01-2023 அன்று தி.மு.க அரசு சேது சமுத்திர கால்வாய்த் திட்டத்தை புதுப்பிக்க ஒரு தீர்மானத்தை முன்மொழிந்தது. இதைத் தொடர்ந்து இந்த திட்டத்தின் சாத்தியக்கூறுகள் குறித்து கருத்து தெரிவிக்க தினமலர் வீடியோ சேனல் என்னை அழைத்தது. தினமலர் பேட்டியாளர்  சியாமளாவுக்கு அளித்த பேட்டியில், என் கருத்துக்களை பகிர்ந்து கொண்டேன்.

நான் பேசிய கருத்துக்கள்: 

# ராமர் சேது பாலத்தின் வரலாற்றுத் தன்மை

# மீனவர்கள் உட்பட பல்வேறு கோணங்களில் கால்வாய் திட்டம் சாத்தியமில்லாத தன்மை 

# 'சேது சென்டிமென்ட்' இன்னும் பல.



புதன், 4 ஜனவரி, 2023

"ராமாயணம் கட்டுக்கதை அல்ல" - 'பேசு தமிழா பேசு'வில் எனது பேச்சு

 பிரபல தமிழ் யூடியூப் சேனலான 'பேசு தமிழா பேசு'வில் ராமாயணம் என்ற தலைப்பில் 4 பகுதி வீடியோ உரையுடன் 2023 ஆம் ஆண்டைத் தொடங்கினேன்.  இராமாயணம் ஒரு கட்டுக்கதை என்று தமிழ்நாட்டில் நடந்து வரும் பிரச்சாரத்தை ஒழிப்பதே இதன் முக்கிய நோக்கமாக இருந்தது. ராமர் சேதுவின் தேதியை பகுப்பாய்வு செய்வது உட்பட பல முதன்மை ஆதாரங்களைப் பயன்படுத்தி நான் ராமரின் தேதியை நிறுவுகிறேன்.

இராமாயணத்தின் வரலாற்றுத் தன்மையை ஏற்றுக்கொண்டு, இராவணன் ராமரை விட உயர்ந்தவன் என்று கூறி, அவரை ஒரு நாயகன் என்று புகழும்  மற்றொரு கணிசமான பிரிவு தமிழ்நாட்டில் உள்ளது. இராம- இராவணன் போரை சைவத்திற்கும் வைணவ மதத்திற்கும் இடையிலான போராக அவர்கள் சித்தரிக்கிறார்கள். மேலும் வானரர்கள் என்னும் குரங்கினம் இருந்ததற்கான ஆதாரமும் இல்லை என்கிறார்கள். இந்தக் கேள்விகள், மற்றும் பல கேள்விகளுக்கு நான் நான்கு வீடியோக்களில் பதில் அளித்துள்ளேன். பார்க்கவும், பகிரவும். 

பகுதி 1: ராமர் பாலம் உண்மையாகவே கட்டப்பட்டதா?


பகுதி 2: சைவமும் வைணவமும் ஒன்றா ?


பகுதி 3: ராவணன் தமிழனா ?


பகுதி 4: பிள்ளையார் பார்வதியின் மகனில்லை ! 



வியாழன், 31 டிசம்பர், 2020

சோழர்களது முன்னோர்கள்: மனு, சிபி, பரதன், ராமன். (பாரதத்தின் வரலாறு 1)

 எனது நீண்ட கால திட்டம் இப்போது வடிவம் பெறுகிறது.

பாரதத்தின் வரலாறு”

என்னும் தொடர் காணொளியின் மூலம், வேத நாகரிகத்தின் தொடக்கம், அதைத் தொடங்கியவர், வேத நாகரிகம் பிறந்த இடம் மற்றும் அது இந்தியாவுக்கு உள்ளேயும் வெளியேயும் பரவினவிதம் ஆகியவற்றை, நான் கொண்டு வர உள்ளேன். ஆரியப் படையெடுப்பு / இடப்பெயர்வு போன்ற சிக்கலான பிரச்சினைகள், மக்கள் இந்தியாவுக்கு வெளியில் இருந்து வந்தார்களா அல்லது இந்தியாவுக்கு வெளியே சென்றார்களா, எப்படி, எப்போது - இந்த விவரங்களையும் நீங்கள் இந்தத் தொடரில் எதிர்பார்க்கலாம்.


தமிழின் கடந்த காலத்தைப் பற்றிய எனது ஆர்வம், இதிஹாச-புராணத்துடன் தமிழ் ஆதாரங்கள் ஒருங்கிணைந்து இருப்பதைக் காட்டியது. இவை பாரதத்தின் கடந்த காலத்தைத் தெரிந்து கொள்ள அவசியம் என்று எப்போதும் என்னை நினைக்க வைத்தது. காலப்போக்கில், இரண்டு ஆதாரங்களுக்கிடையில் ஒன்றுடன் ஒன்று இணைந்து  இருந்த அம்சங்களை அடையாளம் காணத் தொடங்கினேன், அவற்றை ஒன்றுடன் ஒன்று பொருத்தும்போது  முழுமை அடைகின்றன. அவற்றில் ஒன்றை மட்டுமே ஆதாரமாக எடுத்துக்கொண்டால் து ஒரு முழுமையான பார்வையை அளிக்கவில்லை.


ஆகவே, இந்தத் தொடர் தமிழ் மற்றும் வட இந்திய மூலங்களின் ஒருங்கிணைந்த பகுப்பைக்  காணப் போகிறது, இது நூல்களில் காணப்படும் சிக்கலான மற்றும் முரண்பாடான அம்சங்களுக்கான உறுதியான பதில்களைக் கண்டறியவும், நமது கடந்த காலத்தைப் பற்றிய நமது புரிதலுக்கும் உதவும். பாரதத்தின் கடந்த காலத்தை நிர்மாணிப்பதற்கான எனது இந்த முயற்சியில், இலக்கியம், தொல்பொருள், மரபணு மற்றும் பிற ஆதாரங்களுடன் தமிழ் ஆதாரங்களை நான் ஆய்வு செய்வேன். பண்டைய தமிழர்களின் புகழ்பெற்ற நிலமான “குமரிக் கண்டத்தின் உண்மை விவரங்களைப் பற்றியும் நான் பேசுவேன் என்று நிச்சயமாக எதிர்பார்க்கலாம்.

 

ஆங்கில பதிப்பைத் தொடர்ந்து தமிழ்ப் பதிவு வெளியிடப்படும். ஆக்கபூர்வமான கருத்துகள், பரிந்துரைகள் மற்றும் பங்களிப்புகள் (யோசனைகள்) வரவேற்கப்படுகின்றன.

முதல் காணொளி:

 


முதல் காணொளியில், பண்டைய சோழ வம்சத்திற்கும் வட இந்தியாவின் சில முக்கிய வம்சங்களுக்கிடையேயான உயிரியல் தொடர்பை ராஜேந்திரசோழரின் திருவாலங்காடு செப்பேட்டிலும், அவரது மகன் வீரராஜேந்திராவின் கன்னியாகுமரி கல்வெட்டிலும் கொடுக்கப்பட்டுள்ள பரம்பரை பட்டியலின் அடிப்படையில் நிறுவுகிறேன். யயாதியின் பரம்பரையில் வரும் துஷ்யந்தனின் மகன் பரதனின் சொந்த மகனே முதல் சோழன்  என்று ராஜேந்திர சோழர் செப்பேடு கூறுகிறது.  சோழவம்சத்தினர் ராமனின் பரம்பரையில் வந்தவர்கள்  என்று வீரராஜேந்திரர் மிகவும் வெளிப்படையாக எழுதியுள்ளார். துஷ்யந்தன் மகன் பரதன் சந்திர வம்சத்தைச் சேர்ந்தவர், ராமர் சூரிய வம்சத்தைச் சேர்ந்தவர், ஆனால் சோழர்கள் எப்போதும் தங்களை சூரிய வம்சத்தைச் சேர்ந்தவர்கள் என்று அடையாளம் காட்டியதால் இந்த இரண்டு பதிப்புகள் பரஸ்பரம் முரண்படுகின்றன.

இந்த முரண்பாடு யயாதியில் ஆரம்பிக்கிறது. யயாதி ஒருவரே சூரிய மற்றும் சந்திர வம்சத்தில் தோன்றுகிறார். ராமரின் திருமணத்தின் போது வசிஷ்டரால் விவரிக்கப்பட்ட ராமரின் வம்சாவளிப் பட்டியலில் யயாதியின் பெயர் உள்ளது. ஆனால் இதேபோன்ற ஒரு பட்டியலை இதே வசிஷ்டர்  மீண்டும் விவரிக்கிறார். ராமரை ராஜ்யத்திற்குத் திரும்பும்படி வற்புறுத்திய நேரத்தில் இந்தப் பட்டியலைத் தரும் வசிஷ்டர் அதில் யயாதியின் பெயரை மட்டும் விட்டு விடுகிறார். இந்தப் பட்டியலை வசிஷ்டர் கூறுகையில், மூத்த மகன் மட்டுமே இக்ஷ்வாகு வம்சத்தில் ஆட்சியை ஏற்றுக்கொள்கிறான். இவர்களெல்லாம் மூத்த பிள்ளைகள் என்று சொல்லும் போது, யயாதியின் பெயர் சொல்லப்படாததால், யயாதி மூத்த மகனல்லன், ஆனால் ராமனது முன்னோர் தான் என்று நமக்கு விளங்குகிறது. யயாதியின் தந்தை நஹுஷனுக்கு அடுத்து யயாதியின் மகன் நாபாகன் இந்தப் பட்டியலில் இடம் பெறுகிறார்.

இதனால் யயாதி, சந்திர வம்சத்திற்கு தத்து கொடுக்கப்பட்டார் என்ற யூகத்திற்கு இடமளிக்கிறது. விஷ்ணு புராணத்தின் சந்திர வம்சப் பட்டியலில் நஹுஷனது பெயர் தோன்றினாலும், வால்மீகி ராமாயணத்தில் வசிஷ்டரின் 2 வது பட்டியலில் தோன்றும் அவரது பெயர், அவர் இக்ஷ்வாகு சிம்மாசனத்தில் ஏறினார், ஆனால் அதற்குப் பிறகு சந்திர வம்சத்துக்குச் சென்றுவிட்டார் என்பதைக் காட்டுகிறது. நஹுஷன் இந்திரன் பதவியை ஏற்றுக்கொண்டு அகஸ்திய முனிவரை துஷ்பிரயோகம் செய்த பின்னர் கீழே விழுந்த புராணக்கதை இதை ஆதரிக்கிறது. யயாதியும் ஸ்வர்கத்தில் இருந்து விழுந்ததைப் போன்ற ஒரு சம்பவம் உள்ளது. இந்த வெளிப்புற புராணக்கதைகள், அவற்றின் உருவக அர்த்தங்களுக்காக மற்றொரு அத்தியாயத்தில் விவாதிக்கப்படும்

இப்போது யயாதி சூரிய வம்சத்திலிருந்து விலகி சந்திர வம்சத்தில் நுழைந்தார் என்பதைக் கவனிப்போம், இது தத்தெடுப்பு மூலம் மட்டுமே சாத்தியமாகும். புருவின் பரம்பரையில் வந்த துஷ்யந்தனின் விஷயத்தில் துர்வசுவின் பரம்பரையால் தத்து எடுக்கப்பட்டார் என்று விஷ்ணு புராணத்திலும் இதே போன்ற மாற்றம் குறிப்பிடப்பட்டுள்ளது. தந்தைவழி உறவினர்களின் குடும்பங்களுக்குள் இந்த மாற்றம் நிகழ்ந்தது,  ஒரே  மரபணு தொடர்ந்து இருப்பதை உறுதி செய்தது.

புருவும் துர்வசுவும் இக்ஷ்வாகுவின் வம்சாவளியில் வந்த யயாதியின் மகன்களாக இருப்பதால், அதே தந்தைவழி மரபணுவை ராமருடன் பகிர்ந்து கொண்டுள்ளனர். திருவாலங்காடு செப்பேடுகளின்படி, துஷ்யந்தனின் மகன் பரதனின் நேரடி வம்சாவளியாக முதல் சோழன் இருந்ததால், சோழனும் ராமரின் அதே y-குரோமோசோமை (ஆண் வழி மரபணு) பகிர்ந்து கொண்டான்.

இவ்வாறு ராஜேந்திரர், மற்றும் வீரராஜேந்திரர் குறிப்பிட்டுள்ள பரம்பரை, உயிரியல் ரீதியாக ஒன்றுதான் என்பதை நாம் காணலாம். முதல் சோழர்  பரதனுக்குப் பிறந்ததால், ராமரின் தந்தைவழி மூதாதையரான யயாதியிடமிருந்து வந்தவர் என்று வீரராஜேந்திரர், ராமரின் குடும்பத்தில் முதல் சோழரின் பிறப்பை அடையாளம் கண்டிருக்கிறார்! சங்ககால நூல்கள் தொடங்கி, 1000 ஆண்டுகளுக்கு முன்பு வரை எழுதப்பட்ட பல நூல்களில் ராமருடனான தொடர்பு சொல்லப்பட்டுள்ளது.

ராமன் மனுவின் வம்சத்தில் வந்ததால், மரபணு அடிப்படையில், சோழர்கள் தங்கள் வம்சாவளியை மனு மற்றும் சூரியனிடமிருந்து ஆரம்பித்தனர். எனவே சோழர்கள் சூரிய வம்சத்தினர்.

சோழரின் வம்சாவளியில் அறியப்படாத மற்றொரு அம்சம். உள்ளது. அவர்கள் சிபியைக் கொண்டு செம்பியன்’ என்ற பட்டப் பெயரைக் கொண்டிருந்தனர். யயாதியின் மற்றொரு மகன் அனுவின் பரம்பரையில் சிபி வருகிறார். எனவே சிபியும் அதே தந்தைவழி மரபணுவை ராமருடன் பகிர்ந்து கொள்கிறார். ஆனால் சோழர்கள் ஏன் தங்களை சிபியுடன் இணைத்துக் கொண்டார்கள்? பரதனுடைய தொடர்பை எங்குமே சொல்லவில்லையே, ஏன்?

விஷ்ணு புராணத்தின் விவரங்களைப் பார்க்கும்போது, பரதனுக்கு (சோழனின் தந்தை) ஒன்பது மகன்கள். அவர் அந்த ஒன்பது மகன்களையும் கை விட்டு விட்டார்  என்று தெரிய வருகிறது. ஒன்பது மகன்களும் தங்கள் தாய்மார்களால் கொல்லப்பட்டனர் என்று விஷ்ணு புராணம் கூறுவது ஏற்புடையது அல்ல. . திருவாலங்காடு செப்பேட்டின் மூலம் குறைந்தபட்சம் ஒரு மகன் (சோழன்) கொல்லப்படவில்லை என்று தெரிகிறது. மகன்கள் கைவிடப்பட்டனர், ஆனால் அவர்கள் தப்பிப்பிழைப்பதற்கான சொந்த வழிகளைக் கண்டுபிடித்தார்கள். வீரராஜேந்திராவின் கல்வெட்டு, பரதன் மகனான முதல் சோழர் ஒரு சிறிய படையுடன் புறப்பட்டு தெற்கே காவேரி நதி ஓடும் பகுதியில் ஒரு ராஜ்யத்தை நிறுவினார் என்று கூறுகிறது. இந்த சோழன் சொந்த தந்தையான பரதனால் கைவிடப்பட்டபோது சிபியின் குடும்பத்தினரால் தத்தெடுக்கப்பட்டிருப்பான். அதனால் ​சோழர்கள் தங்களை சிபியின் சந்ததியினர் என்று அடையாளப்படுத்திக் கொண்டனர், அதே சமயம் பரதனை பற்றி எந்த வார்த்தையும் சொல்லவில்லை, திருவாலங்காடு செப்பேடு மட்டும் இல்லையென்றால் பரதனுடன், சோழர்களுடனான தொடர்பை நாம் ஒருபோதும் அறிந்திருக்க மாட்டோம்.

 

இப்போது மரபணு குறிப்புகள்:

·         சிபியின் மகன் கேகய  நாட்டை நிறுவுகிறார். கேகயம், இன்றைய பாக்டிரியா (Bactria) என்னும் நாடு என்று தெரிகிறது. ராமர் மற்றும் சோழர் ஆகியோரால் பகிரப்பட்ட மரபணு இந்தியாவுக்கு வெளியே சென்றதை இது காட்டுகிறது இதே மரபணு சோழர் மூலம்  தென்னிந்தியாவுக்கு பூம்புகார் வரை வந்திருக்கிறது. எனவே தமிழ்நாட்டில் காணப்படும் மரபணு குறிப்பான் மத்திய ஐரோப்பாவிலும் இருக்கும்

·         சிபியின் மூதாதையர் அனு இந்தியாவிலிருந்து மேற்கு ஆசியா / மேற்கு ஐரோப்பாவுக்குச் சென்றார். அவர் மூலம், ராமன், சோழர் ஆகியோருக்குப் பொதுவான மரபணு இந்தியாவுக்கு வெளியே சென்றிருக்கிறது.

·         பரதனின் மூதாதையரான துர்வசுவின் சந்ததியினர் யவனர்கள் என அடையாளம் காணப்பட்டனர்

·         பாண்டவர்களின் விஷயத்தில் அவர்கள் இந்தியாவுக்கு வெளியில் இருந்து வந்தவர்களால் பிறந்தவர்கள்! இந்த மரபணு கலி யுகம் பிறப்பதற்கு முன்னால் இந்தியாவில் நுழைந்திருக்கிறது. பாரம்பரிய கலியுக தேதியிலிருந்து கழிக்கப்பட்ட மகாபாரத தேதியை அடிப்படையாகக் கொண்டு கி.மு 3200 ஆக நான் நேரத்தை வழங்கியுள்ளேன், பாண்டவர் மகன்களில் பெரும்பாலோர் மகாபாரதப் போரில் இறந்திருந்தாலும், அவர்களது பல தார மணத்தினால், பல மகன்கள் இருந்திருக்க வேண்டும். அவர்களின் மரபணு  இன்னும் தொடர்ந்து இருக்கலாம்.

இதுவரை விவாதிக்கப்பட்ட அனைவரின் பொதுவான மூதாதையர் வைஸ்வத மனு.

மனு அளித்துள்ள இந்திர துவஜம் என்னும் பாடலில் கந்தனை, சுப்பிரமணியர் என்று வணங்கியுள்ளார். இதன் மூலம், கந்தன் மனுவின் காலத்துக்கு முற்பட்டவர் என்று தெரிகிறது. அந்தக் கந்தனோ, முதல் தமிழ் சங்கத்தை தன் தந்தை இறையனாருடன் ஆரம்பித்து வைத்தவர். இதன் மூலம் கந்தன் என்னும் முருகன் தமிழ் வரலாற்றை ஆரம்பித்து வைத்தவர் என்று குறுக்கி விட முடியாது பாரதத்தின் வரலாறே அவரிலிருந்துதான் ஆரம்பிக்கிறது என்று புலனாகிறது. இனி வரும் காணொளிகளில் அந்த வரலாற்றைக் காண்போம்.

 

(இந்தக் கட்டுரையின் தமிழாக்கம் உதவி: திருமதி புவனா சூரிய நாராயணன்)

இந்தக் கட்டுரையின் ஆங்கில மூலம் Indic Past series 1: Solving Yayati mystery and Rama’s connection to Chola.