ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2011

66. மனித பாஷை என்னும் தமிழ் மொழி!



வால்மீகியும் தமிழில் பேசியிருக்கிறார்.  
அவர் வாழ்ந்த காலத்தில் பாரத நாட்டு மக்களும் 
தமிழ் பேசியிருக்கின்றனர் என்று எண்ணும் வண்ணம் 

ஒரு முக்கியக் குறிப்பு சுந்தர காண்டத்தில் வருகிறது



சுந்தர காண்டத்தில் அசோக வனத்தில் அனுமன் சீதையைப் பார்க்கிறான். அவளுடன் பேச வேண்டும் என்று முடிவு செய்கிறான்.  
ஆனால் எந்த மொழியில் பேசுவது என்று யோசிக்கிறான்
தனக்கு சமஸ்க்ருதமும் தெரியும்,  
மனித பாஷையும் தெரியும்,  
இந்த இரண்டு பாஷைகளில் சீதையிடம் 
எந்த பாஷையில் பேசலாம் என்று கொஞ்சம் 
சிந்தனையை ஓட விடுகிறான்.

சமஸ்க்ருதம் என்று எந்த பாஷையைச் சொல்கிறான்  
என்பது நமக்குத் தெரியும்.
ஆனால் மனித பாஷை என்கிறானே,  
அது என்ன மனித பாஷை?

மனிதர்களால் பேசப்பட்டதால் அது மனித பாஷை எனப்பட்டதா?

அப்படியென்றால் பல மனித பாஷைகள் இருக்க வேண்டுமே?  
இன்றைக்கு அப்படித்தானே இருக்கிறது.
அனுமனுக்குத் தெரிந்த மனித பாஷை,  
சீதைக்கும் தெரிந்திருக்க வேண்டுமே?
அயோத்தியில் உள்ளவர்கள் ஒருவித மனித பாஷையைப் பேசியிருப்பார்கள்

அனுமன் வாழ்ந்த கிஷ்கிந்தையில் இருந்தவர்கள் வேறு ஒரு மனித பாஷையைப் பேசி இருப்பார்கள்

இலங்கையில் இருந்தவர்கள் வேறு ஒரு மனித பாஷையைப் பேசி இருப்பார்கள்

இவற்றுள் எந்த இடத்து மனித பாஷையை அனுமன் அறிந்திருந்தான்  
என்ற கேள்வி வருகிறது.

ஆனால் அந்த மனித பாஷையில் அவர் பேசி,  
அதை சீதையும் புரிந்துக் கொண்டு,  
அதே பாஷையில் பதிலும் அளித்ததால்,  
அந்த மனித பாஷை ஓரிடம் என்றோ, ஓரினம் என்றோ 
 ஒரு தனி வட்டத்துக்குள் புழங்கிய பாஷை அல்ல 
 என்று தெரிகிறது.  
பாரதம் முழுவதும் இருந்த மனிதர்கள் அனைவருக்குமே  
பொதுவாக ஒரு பாஷையாக இருந்தது என்றும் தெரிகிறது.

இது சாத்தியாமா என்று கேட்டால்,  
நம்மைச் சுற்றி உள்ள ஜீவ ராசிகளைப் பார்த்தால்  
சில உண்மைகள் விளங்கும்.


பறவைகளுக்கும் பாஷை இருக்கிறது.  
அவை எழுப்பும் ஒலியில் அர்த்தங்கள் எதுவும் இல்லாதது போல  
நமக்குத் தோன்றுகிறது.  
ஆனால் பறவைகளுக்கு அது புரியக்கூடியது.  
அந்த பாஷை அவர்களுக்கு யாரும் சொல்லிக் கொடுத்து வந்ததல்ல. இயற்கையிலேயே அவற்றுக்கென இருப்பது



பறவைகளைப் போல மிருகங்களுக்கும் இயல்பாகவே பாஷை இருக்கிறது. மிருகங்களை விட பறவைகள் அதிகம் சத்தமிடுவதால்
அவற்றின் பாஷை நன்கு விரிவாக இருக்க வேண்டும்.  
அவற்றின் பாஷைகளைக் கூட ஒரு காலத்தில் 
நம் பாரத நாட்டவர்கள் தெரிந்து வைத்திருந்தார்கள் என்பதை
பல பழங்கதைகள் மூலம் அறிகிறோம்


பறவை பாஷை, மிருக பாஷை என்பது போல 
மனிதர்களுக்கும் இயல்பாகவே ஒரு பாஷை இருந்திருக்க வேண்டும்.  
அதாவது, எந்த குறுக்கீடும் இல்லாமல் இருந்தால்,  
ஒரு மனிதக் கூட்டம் தாங்கள் எழுப்பும் ஒலியின் மூலம் 
ஒரு பேச்சை வைத்துக் கொண்டிருக்க முடியும்.  
பறவைகளுக்கும், மிருகங்களுக்கும் இருப்பது போல,  
அது இயற்கையாக உருவாகக்கூடியது.   
அப்படி ஒரு பாஷை இருந்தால்தான்  
அதை மனித பாஷை என்று கூறியிருக்க முடியும்.

இங்கு ஒரு கேள்வி வருகிறது
மனிதக் கூட்டங்கள் ஆதியில் பல இடங்களில்  
தனித் தனியே இருந்தன அல்லவா?  
அவை அனைத்துமே ஒரே பாஷையைப் பேசி இருப்பது  
சாத்தியமாகுமா?
இதை ஆராய்ச்சி செய்ய வழியில்லை.  
ஆனால் பல இடங்களில் உள்ள பறவை, மிருகங்கள்  
எவ்வாறு பேசிக்கொள்கின்றன என்று ஆராய்ந்தால்  
இதன் சாத்தியம் தெரிய வரும்


உதாரணமாக, தொலை தூரத்தில் வேறு ஒரு நாட்டில் இருக்கும்  
ஒரு பறவையை, இந்தியாவுக்குக் கொண்டு வந்து  
உயிர்க் காட்சி சாலையில் வளர்க்கிறார்கள்.  
முதலில் அதைத் தனியாக வைத்திருந்தாலும்
நாளடைவில் அதன் இனத்தைச் சேர்ந்த பிற பறவைகளுடன்  
பழக விடுவார்கள்
அவற்றுடன் ஒத்துப் போவதும், போகாததும், அந்தப் பறவைகளின் சுபாவத்தைப் பொருத்தது.  
ஆனால் அவற்றுக்கிடையே பேசிக்கொள்வதும்,  
புரிந்துக் கொள்வதும் சாத்தியமே.

ஆனால் ஒரு குறிப்பிட்ட பறவை இனம்  
ஒரு இடத்தில் உண்டாகி,  
பிறகு பல தலைமுறைகளில் ஆங்காங்கே பிரிந்து சென்று  
வாழ ஆரம்பித்தால்,  
நிச்சயமாக ஆதியில் இருந்த பறவை மொழியின் சாயல்  
அதிகமாகவே இருக்கும்.  
இப்படி ஒரு சாத்தியம் – 
அதாவது ஆதியில் ஓரிடத்தில் வாழ்ந்து,  
பிறகு பல இடங்களுக்கும் பிரிந்திருந்தால்,  
ஒரே ஒரு மனித பாஷை இருந்திருக்க சாத்தியமாகிறது.  
இன்றைய பாரத நாட்டில் வாழ்ந்த மக்கள்  
ஆதியில் சாகதீவில் வாழ்ந்திருந்து,  
அதிலிருந்து ஒரு பிரிவு,  

வைவஸ்வத மனுவுடன் சரஸ்வதி நதியில் நுழைந்து,  
வட இந்தியா முழுவதும் பரவினார்கள் என்றால்,

அல்லது அதே சாகத்தீவிலிருந்து இந்தியாவுக்கு நேர்த் தெற்கு வழியாக தென்னிந்தியாவில் மக்கள் குடியேறி இருந்தார்கள் என்றால்,
அல்லது  சாகத்தீவு இருந்த இடத்தில்  
பின்னாளில் தென்னன் ஆட்சி வந்து,  
அந்த மக்கள் தென்னிந்தியாவில் பரவி இருந்தார்கள் என்றால்,  
அவர்கள் அனைவரும் பேசியது  
ஒரே மனித பாஷையாக  
பாரத நாடெங்கிலும் இருந்திருக்க முடியும்

அப்படி ஒரே ஒரு பாஷை இருந்திருந்தால்தான்
அதை அனுமன் மனித பாஷை என்று அழைத்திருக்க முடியும்.
அதைமானுஷீம் வாசம் என்றும், (வால்மீகி ராமாயணம்- 5-30-17).
மானுஷம் வாக்யம்என்றும் குறிப்பிடுகிறான்அனுமன்
(வால்மீகி ராமாயணம்- 5-30-19).

சமஸ்க்ருத்தில் பேசினால் என்ன என்று முதலில் அனுமன் யோசிக்கிறான். ஒரு வானரத்துக்கு சமஸ்க்ருதம் எப்படித் தெரியும் 
என்று சீதை நினைப்பாள்.  
ராவணனே வானர வேடம் பூண்டு 
தன்னுடன் சமஸ்க்ருதத்தில் பேசுகிறான் என்று நினைப்பாள்.  
அதனால் மனித பாஷையிலேயே பேசலாம் 
என்று முடிவு செய்கிறான்
சாதாரண மக்கள் பேசிய மனித பாஷை,  
வானரனான அனுமனுக்கும் தெரிந்திருக்கிறது.

அதைச் சொல்லுமிடத்தில்
மானுஷம் வாக்யம் அர்த்தவத்(5-30-19) என்கிறான்.  
அதாவது 
அர்த்தங்கள் அடங்கிய மனித வாக்கியம் என்கிறான்

இதைப் படிக்கும் போது 
அர்த்தங்கள் இல்லாத மனித வாக்கியம்,  
அர்த்தங்கள் அடங்கிய மனித வாக்கியம் 
என்று இரண்டு விதம் இருந்ததா என்ற சந்தேகம் வருகிறது

மனித பாஷை என்பது ஒரு ஒலிக் குறிப்பு என்பதாக மட்டும் இல்லாமல், ஏதோ ஆழ்ந்த அர்த்தங்களைத் தெரிவிப்பதாகவும் இருந்திருக்கிறது.
மனித பாஷையைப் பற்றிச் சொல்லும் 
மூன்று இடங்களில் இதே கருத்தைக் காண்கிறோம்.

(1)  அர்த்தவத் (அர்த்தங்கள் நிரம்பியது) (5-30-19)
(2)  ச்ராவயிஷ்யாமி (புரிந்து கொள்ளச் செய்கிறேன்) (5-30-43)
(3)  அவிததம் (பொய்யில்லாத மொழி / உண்மையானது) (5-30-44)

ஒரு பாஷை என்றால் அது அர்த்தங்கள் நிரம்பியது 
என்றுதானே எடுத்துக் கொள்ள வேண்டும்.  
இதில் என்ன புதிதாக இருக்கிறது என்று நினைக்கத்தோன்றும்.  
ஆனால் சீதைக்கு நம்பிக்கையையும்
தேறுதலையும் சொல்லத்தக்க அளவுக்கு சிறப்புச் சொற்களும்,  
அர்த்தமும், உண்மையும் கொண்டதாக 
அந்த பாஷை இருக்க வேண்டும்.

  • ·         அனுமன் அந்த மனித பாஷையில் பேசின பேச்சால், தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்த சீதை அந்த எண்ணத்தைக் கை விட்டாள்.

  • ·         வந்தவன் ராம தூதன் தான் என்ற நம்பிக்கையை அந்த மொழியின் சொற்கள் ஏற்படுத்தின.

  • ·         ராமனது அழகை சமஸ்க்ருதத்தில் சொல்லப்படுவது போல சாமுத்திரிகா லக்ஷணமாகத் திருத்தமாகச் சொல்ல அந்த மொழி உதவியது.

  • ·         அந்த மொழியில்தான் சீதை தன் சோகத்தை எடுத்துரைத்தாள்.

  • ·         அந்த மொழியின் வாயிலாகத்தான் அனுமன் அவளது சோகத்தைப் போக்கி மன அமைதி உருவாகச் செய்தான்


  • ·         இவையெல்லாம் செய்த அந்த மொழியை கிசு கிசுப்பாக மெல்லிய குரலில், ஒருவருக்கொருவரது காதில் மட்டும் விழும் வண்ணம் பேசியிருக்கிறார்கள்.

  • ·         இன்னும் இருள் பிரியாத விடிகாலைப் பொழுதில், ஒருவரை ஒருவர் சரிவரப் பார்த்துக் கொள்ள முடியாத இருளில், இந்த மொழியின் வார்த்தைகளால் மட்டுமே ஒரு முக்கியமான கருத்துப் பரிமாற்றம் நடந்திருக்கிறது.

  • ·         அதில் ஒரு வார்த்தை கூட அநாவசியமாகப் பேசப்படவில்லை.

  • ·         ஒரு வார்த்தை கூடத் தவறான அர்த்தத்தையோ அல்லது ஒன்று சொல்ல, ஒன்றைப் புரிந்து கொள்கிறாற் போலவோ சொல்லப்படவில்லை.

  • ·         அதில் ஒரு வார்த்தை கூட உண்மையல்லாதைக் காட்டவில்லை.

·         சீதையுடம் மனித பாஷையில் பேசலாம் என்று அனுமன் முடிவு செய்த்தும் அவன் (அந்த அத்தியாய முடிவில்) சொல்வதுஅவிததம் ஜகாத வாக்கியம்” – பொய்யில்லாத உண்மையான வார்த்தைகளைப் பேசுவேன் என்கிறார்

அது என்ன அவிததம் - உண்மையான வாக்கியம்
உண்மையைச் சொன்னால் அது உண்மையான வாக்கியம் அல்லவா 
என்று நாம் நினைப்போம்.  
உண்மையைச் சொல்லுதல் என்றால் 
சொல்லப்படும் கருத்து உண்மை என்று பொருள்படும்
ஆனால் சொல்லே உண்மையானால்?  
அதைச் சாந்தோக்கிய உபநிஷத்து சொல்கிறது.

வார்த்தைக்கு உண்மை சக்தி உண்டு 
என்று சாந்தோக்கிய உபநிஷத்தில் வரும் ஒரு விவரம் வருகிறது. வார்த்தைகளுக்கு உயிர் உண்டு
சக்தி உண்டு என்கிறது அந்த உபநிஷத்து

தண்ணீர்என்று காய்ந்து போன கட்டையிடம் 
சொன்னால் மட்டும் போதும்,  
அதில் கிளைகள் முளைத்து, இலைகள் தளிக்கும் 
என்றார் ஜாபால ஸத்யகாமர். (சா-- 5-2.3) 

அதாவது தண்ணீர் என்ற சொல் அர்த்தம் நிரம்பியதாக
உண்மையானதாக, தவறில்லாததாகச் சொல்லப்பட்டால்,  
அது சொன்னவுடன் தாகம் தணியும்.  
அது போல 
உணவுஎன்று சொன்னால்,  
வயிறு நிரம்ப வேண்டும்.  
அப்படித்தான் பிராணன் இயங்குகிறது என்கிறது இந்த உபநிஷத்து. (5-19.1)


சொல்லுக்கு அந்த சக்தி உண்டு.  
நினைத்ததைச் சொன்னால் 
அந்தச் சொல்லின் மூலம்,  
நினைப்பு உண்மையாக ஆகக்கூடிய சக்தி தேவ பாஷைக்கு உண்டு.

தேவ பாஷை என்று சமஸ்க்ருதத்தைச் சொல்வார்கள்.
மனிதர்கள் பேசுவது மனித பாஷை என்பது போல,
தேவர்கள் பேசுவது தேவ பாஷை ஆகும்

தேவர்களா

என்ன கட்டுக் கதை என்று யாரேனும் நினைப்பதற்கு முன்னால் தொல்காப்பியர் சொல்வதை நினைவு கூற வேண்டும்.
அவர் மனிதர்களையும், தேவர்களையும் மட்டுமே 
உயர் திணைகளாகச் சொல்கிறார்
அதாவது தேவர்கள் என்பவர்களைத் தொல்காப்பியம் ஏற்றுக் கொள்கிறது. 

தேவன் என்பவனும், தெய்வம் என்பவனும் உண்மையல்ல
அவை வெறும் நம்பிக்கைகளே என்று 
மேலை நாட்டு ஆராய்ச்சி மனப்பான்மையில் இருப்பவர்கள் சொல்வார்கள்.
அவர்கள் கண்ணோட்டத்திலேயே சொல்வதென்றால்,
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் அவர்கள் சொன்ன
சமன்பாடான E = mc2 என்பதே
தேவன் என்பதற்கான சூத்திரம் எனலாம்.


தேவர்கள் அல்லது தெய்வங்கள் திடீரென்று தோன்றுவார்கள்.
தோன்றின வேகத்தில் மறைந்தும் விடுவார்கள்.
அவ்வப்பொழுது தெய்வங்கள் காட்சி கொடுத்ததாகப் 
பல சம்பவங்கள் தமிழ் நாட்டிலேயே நடந்திருக்கின்றன.


அந்த தேவன், சக்தி ரூபமாக (ENERGY) இருக்கும் போது 
கண்ணுக்குத் தெரிவதில்லை

ஆனால் அது உருவமாகத் தெரியும் போது (MASS)
அந்த உருவம் சாதாரண உருவம் இல்லை

கூடவே C – SQUARED என்னும் ஒளியின் வீச்சையும் 
அது கொண்டிருக்கிறது.  
ஒளியின் வேகத்திலும் அது தோன்றி மறைகிறது.

அந்த ஒளி எங்கிருந்து வருகிறது?
இந்தப் பிரபஞ்சத்திலிருந்து வருகிறது
இந்தப் பிரபஞ்சத்தில் ஒளியின் ஆதாரம் நட்சத்திரங்கள் ஆகும்.  
அந்த நக்ஷத்திரங்கள் மூலமாகத்தான் படைப்பும்,  
உயிர்கள் தோற்றமும் சாத்தியமாகின்றன 

அவையே தேவனின் ரூபம் ஆகும். (நக்ஷத்ராணி ரூபம்’ - புருஷ சூக்தம்).
அதனால் தெய்வம் ஒளி ரூபமானது என்றும் சொல்கிறோம்
அந்தத் தெய்வம் ஒரு உருவமாகத் தோன்ற வேண்டும் என்றால்,  
அந்த ஒளியும் அதனுடன் ஒட்டி நிற்கும்.

ஐன்ஸ்டீனின் சமன்பாட்டில் சக்திக்கும்,  
உருவத்துக்கும் உள்ள வித்தியாசம் 
இந்த ஒளி வீச்சில் இருக்கிறது.  
யுரேனியம் போன்ற அணுக்களில் 
இந்த வித்தியாசம் மிக மிக அபரிதமானது.  
அணுக்களைத்தாண்டி அப்பாலுக்கப்பாலாய் இருக்கும் 
தெய்வம் என்ற அதீத சக்தியைச் சார்ந்த ஒளிச் சக்தியை 
நம்மால் அளவிட முடியாது


ஐன்ஸ்டீன் சமன்பாட்டைப் புருஷன்-பிரக்ருதி 
என்னும் கருத்திலும் சொல்லலாம்.
உருவம் என்பது பிரக்ருதி, சக்தி என்பது புருஷன்.
இவை இரண்டும் சேர்ந்ததுதான் உயிர்கள் உண்டாகின்றன.
நம்மிலும் புருஷன் இருக்கிறான்.
நமது உடலே பிரக்ருதியும், புருஷனும் சேர்ந்தது ஆகும்.
ஆனால் தெய்வம் என்பது 
புருஷன் என்னும் ஒரு ரூபத்தில் மட்டும் இருக்கிறது.
அது புருஷர்களில் உத்தமன், அதாவது புருஷோத்தமன் என்று சொல்லப்படுகிறது.
அது விரும்பும் போது உருவமாகத் தோன்றும் 
ஐன்ஸ்டீன் சமன்பாடு சொல்வது போல.

நம்மிடம் உள்ள புருஷ நிலை அந்த புருஷோத்தம நிலைக்கு அருகே செல்லும் போது மனிதனும் தெய்வமாகிறான்.
அப்பொழுது அவன் வாயில் வரும் சொல் தேவ பாஷை எனப்படும். அப்படிப்பட்ட சொல் சமஸ்க்ருத மொழி என்னும் ஒலியில் இருக்கிறது. இதுவே தேவ பாஷையின் கதை.

  • அந்த நிலையில் ஒருவன்தண்ணீர்என்று சொன்னால்,  பட்ட மரம் துளிர்க்கும்
  • அன்னம்என்று சொன்னால் பசித்தவன் வயிறு நிரம்பும்
  • அப்படிப்பட்ட நிலையில் இருந்த யஞ்ஞவாக்கியர் என்னும் ரிஷி ஒரு அரசனின் அரியணையில் வைத்து விட்டுப்போன அட்சதைஅந்த அரசன் வருவதற்குள் மரமாக வளர்ந்து விட்டது.
அப்படிப்பட்ட ஒரு அபரிதமான தேவ நிலையை  
வால்மீகியார் அடைந்த பொழுது 
ராமாயணம் இயற்றப்பட்டது.  
அவ்வாறு ராமாயணம் உண்டான விவரத்தை வால்மீகியே சொல்கிறார்.


வால்மீகி நாரதர் மூலம் ராமனது சரித்திரத்தைக் கேட்கிறார்
நாரதர் சென்ற பிறகு ராமனது கதையை யோசித்தவாறே 
ஆற்றங்கரைக்குக் குளிக்கச் செல்கிறார்.  
தண்ணீரில் இறங்கும்முன் சுற்று முற்றும் பார்க்கையில் 
அழகான க்ரௌஞ்சப் பட்சி ஜோடி ஒன்றைக் காண்கிறார்.  
அவை இனிமையாக சப்த்தித்துக் கொண்டு பறந்து கொண்டிருந்தன. அப்பொழுது எங்கிருந்தோ ஒரு வேடன் எய்த அம்பு 
அந்த ஜோடியில் இருந்த ஆண் பறவையை வீழ்த்தியது.  
அதைக் கண்ட பெண் பறவை கதறியது

அதைக் கண்ட வால்மீகியின் மனதில் காருண்யம் பீறிட்டு எழுந்தது.
இப்படி ஆகி விட்டதே

சந்தோஷமாகப் பேசித்திரிந்த பறவைகளில் ஒன்றை, மோஹத்தால் வீழ்த்தின வேடனே, நீ செய்த இந்தச் செயல் என்றைக்கும் மறையாது என்று தன்னை மறந்த நிலையில் சொன்னார்.





அப்படிச் சொன்ன வார்த்தைகள் சமஸ்க்ருத பாஷையில்,
மிகவும் திருத்தமாக,
கவி நயத்துடன்
ஒரு ஸ்லோகமாக அமைந்திருந்தது.
அப்படிச் சொன்ன பிறகுதான்,
தான் அப்படி சிறந்த கவித்துவம் வாய்ந்த வரிகளைச் சொன்னோம்
என்று வால்மீகிக்குப் புரிந்தது

அதில் ஆச்சரியம் என்னவென்றால், அப்பொழுதுதான் நாரதரிடமிருந்து கேட்ட ராமன் கதைக்கும் இந்த வரிகள் பொருத்தமாக அமைந்திருந்தன

மா நிஷாத என்று தொடங்கும் இந்த வரிகளுக்கு,
தாயாரான லக்ஷ்மியின் வாசஸ்தலமாக இருப்பவனே
 மோகத்தால் சீதையைக் கவர்ந்த ராவணனைத் 
தன்னுடைய ஜோடியிடமிருந்து (மண்டோதரி)  
பிரித்துக் கொன்றதால்,  
வரப்போகும் காலமெல்லாம் நீ தெய்வமாகப் போற்றப்படுவாய் 
என்றும் அர்த்தம் அமைகிறது.

அதுவரை வால்மீகிக்குக் கவி இயற்றத் தெரியாது.
சமஸ்க்ருத இலக்கணங்களும் தெரியாது.
ராம காவியத்தை நினைத்துக் கொண்டே இருந்த போது,
க்ரௌஞ்சப் பட்சிக்கு நேர்ந்த கதியைக் கண்டவுடன்,
அவரிடம் உண்டான காருண்யம்
அவரை தெய்வ நிலையில் அப்பொழுது வைத்தது.
அந்த நிலையில் அவரை அறியாமல் தேவ பாஷை வாயில் வந்த்து.
மனித முயற்சியால் உருவாக்கப்பட்ட வார்த்தைகள் அல்ல அவை. மனிதனுக்கு அப்பாற்பட்ட நிலைக்கு ஒருவன் உயரும் போது தெய்வத்துக்கு உரிய சக்திகள் ஒருவனை ஆட்கொள்கின்றன.
அந்த நிலையில் மடை திறந்த வெள்ளம் போல
வாயில் வருவது தேவ பாஷை


அப்படிப்பட்ட நிலையில் ரிஷிகளது வாயில் புறப்பட்டவைதான்
வேதங்கள் என்பவை.
அவற்றை மனித யத்தனத்தால் யாரும் உருவாக்குவதில்லை.
உருவாக்க முடியாது.
வேறு ஒரு அலை வரிசையில் செல்லும் போது தானாகவே உருவாவது அது

அந்த வேத பாஷை சந்தோ பாஷை எனப்பட்டது.
சந்தோ பாஷை என்றால் ஒலி ரூபத்தில் இருப்பது.
அதை எழுதிப் படிக்க முடியாது,
படித்துப் பொருள் கூற முடியாது.
ஆனால் அப்படிச் செய்து தப்பும் தவறுமாகப் பொருள் கண்டார்கள் மெக்காலே போன்றவர்கள் என்பதை முன்பே கண்டோம்


தன் வாயில் புறப்பட்டச் சொற்களை எண்ணி 
ஆச்சரியம் அடைந்த வால்மீகிக்கு முன்  
நான்முகப் பிரமன் தோன்றுகிறார்.  
அந்தச் சொற்கள் தெய்வ நிலையில் சொல்லப்பட்ட சொற்களே என்றும், அந்த வரிகளை முதலாகக் கொண்டு 
ராமாயணம் முழுவதும் எழுதுமாறும் வால்மீகியைப் பணித்தார்.  





அதன் படி அவர் எழுதிய ராமாயணம் முழுவதுமே மடை திறந்த வெள்ளமாக, ஒரு உயர்ந்த தேவ நிலையில் அவரிடமிருந்து வெளிப்பட்டது.

அதனால் வால்மீகி ராமாயணத்தை வேத மாதாவின் அவதாரம் என்பார்கள்.
வேதம் எப்பொழுதும் வேத புருஷனைப் பற்றியே பேசும்.
அந்த வேத புருஷன் ராமனாக அவதரித்த போது,
வேத மாதாவும் ப்ராசேதஸ் என்னும் வால்மீகியிடம் 
ராமாயணமாகப் பிறந்து
அந்த ராமனைப் பற்றியே பேசினாள்.
இந்தக் கருத்தைக் கொண்ட ஸ்லோகத்தைச் சொல்லி விட்டுத்தான் ராமாயண பாராயணத்தை இன்றும் பக்தர்கள் செய்கிறார்கள்.

தேவ நிலையை ஒருவன் அடையும் போது,  
அவன் நாவில் சரஸ்வதி அமர்கிறாள் என்பதற்கு 
வால்மீகியின் வாழ்வில் நடந்த இந்த சம்பவமே ஒரு உதாரணம்.
பிரமன் என்னும் தெய்வமே வேதத்துக்கு ஆதாரம்.

வேதமானது வாக்கில் வெளிப்படும்போது, அது சரஸ்வதி ஆகும்.
எனவே பிரமனுக்கு மனைவி சரஸ்வதி என்று கதை எழுந்தது.


  • ·         வெள்ளத்தில் தப்பி, புது வாழ்வு ஆரம்பித்த வைவஸ்வத மனுவும் மற்றவர்களும், தங்களுக்கு வாழ்வளித்த நதியை சரஸ்வதி என்றே அழைத்தார்கள். தங்கள் தவ நிலையில் ரிக் வேதம் வெளிப்பட்டதாலும், அந்த நதியை சரஸ்வதி என்று அழைத்திருக்கலாம்

இது சமஸ்க்ருத மொழிக்கு மட்டும் பொருந்துவதல்ல.
தமிழ் மொழிக்கும் பொருந்துவது என்பதுதான்
நாம் முக்கியமாகக் கவனிக்க வேண்டிய செய்தி

  • ·         2-ஆம் ஊழி கண்ட பிறகு பாண்டியனும் அவன் மக்களும் கபாடபுரத்தைத் தலைநகரமாக்க் கொண்டு, புது வாழ்வு துவக்கின போதும், அங்கு சரஸ்வதியின் அவதாரமென 48 புலவர்களைக் கொண்டு 2-ஆம் தமிழ்ச் சங்கம் கண்டனர். (பகுதி44).

  • ·         ஒரு ஊழிக்குப் பிறகு மக்கள் இயக்கம் ஆரம்பிக்கும் போது மொழி வாயிலாக இறைவனைப் போற்றும் வழக்கம் சரஸ்வதி நதி தீரத்திலும் நடந்திருக்கிறது.

  • ·         தென்னன் தேசத்திலும் அது நடந்திருக்கிறது.

  • ·         சரஸ்வதி நதிக் கரையில் அது வேதம் என சமஸ்க்ருதத்தில் வெளிப்பட்டது.

  • ·         தென்னன் தேசத்தில் தமிழ்ச் சங்கம் என தமிழ் மொழியில் வெளிப்பட்டது.
தேவ பாஷை எனப்பட்ட சமஸ்க்ருத மொழிக்கு ஒப்பாக,  
வேறொரு மொழி இருந்த்தென்றால் அது தமிழ் மொழி மட்டுமே

முன்பு சாந்தோக்கிய உபநிஷத்து சொன்னதாகக் கண்டோமே
அப்படிப் பட்ட பிராண சக்தி வார்த்தைக்கு உண்டு.
அது சமஸ்க்ருதத்துக்கு உண்டு.
சமஸ்க்ருதம் தவிர வேறு ஒரு பாஷை என்றால்
அது தமிழ் மட்டுமே.
அந்தத் தமிழுக்கு மட்டுமே அப்படிப்பட்ட சக்தி இருக்கிறது.

  • ·         தெய்வ நிலையை எய்தினவர்கள் வாயில் வந்த சொல் தாகத்தைத் தீர்த்தது என்பதைப் போல, தெய்வ நிலையில் இருந்த நாயன்மார்களால் சொல்லப்பட்ட சொல், மூடின கதவைத் திறந்தது.

  • ·         அப்படிப்பட்ட நிலையில் இருந்த திருஞான சம்பந்தரது வாயில் எழுந்த சொற்களால், இறந்த பெண்ணுக்கு உயிர் வந்தது.

  • ·         அப்படிப்பட்ட நிலையில் இருந்த அபிராமி பட்டர்பௌர்ணமிஎன்று சொன்னால் அது பொய்யாகாது. பௌர்ணமி நிலவு தோன்றி விடும்.

  • ·         அப்படிப்பட்ட்துதான் அனுமன் சொல்லும் அவிததம்

பொய்யில்லாதஅவிததம்நிரம்பிய சொல் மனித மொழியில் இருந்தது. எனவே அதில் பேசுவேன் என்று அனுமன் முடிவெடுக்கிறார்.
இதுவரை மனித குலம் கண்டமொழிகளில் சமஸ்க்ருதம் அல்லாமல், உண்மையான சொல்லாக விளங்கியது தமிழ் மொழி மட்டுமே.
இந்த கருத்துடன் தொல்காப்பியத்தின்  
பெயரியல் சூத்திரத்தைப் படித்தால் 
அர்த்தமுள்ள ஆழ்ந்த பொருள் கிடைக்கும்.

பெயரியல் இப்படி ஆரம்பிக்கிறது:-
எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே.
பொருண்மை தெரிதலும்
சொன்மை தெரிதலும்
சொல்லின் ஆகும் என்மனார் புலவர்”.

எல்லா மொழியிலும் உள்ள எல்லாச் சொற்களுக்கும் பொருள் இருக்கும். ஆனால் தமிழ் மொழியில் பொருண்மை உண்டு.
அதாவது ஒரு பொருந்திய உண்மை உண்டு என்கிறார்.
உண்மை என்றாலேஉள்ளதானதுஎன்று பொருள்.
பொருண்மை என்றால் அதனுள் பொருந்தி,  
உள்ளிருக்கும் உண்மை என்பதாகும்.
வெறுமனே பொருள் உண்டு என்று சொல்லாமல் பொருண்மை உண்டு என்று சொன்னதற்கு என்ன அர்த்தம் என்பதை மேலே கொடுக்கப்பட்டுள்ள விவரங்கள் விளக்குகின்றன.

அந்தப் பொருண்மை தமிழுக்கு எங்கிருந்து வந்தது?

பறவைகள் பாஷை பற்றி ஆரம்பத்தில் பேசினோம்
அந்தப் பறவைகளில் கிளியைப் பாருங்கள்.  
அது கிளி பாஷையில் பேசினாலும்
அதற்கு நாம் பேசும் மொழியைச் சொல்லிக் கொடுத்தால் 
அதையும் பேசும். ஆதி சங்கரருடன் வாதிட்ட  
மண்டனமிஸ்ரர் என்பவரது வீட்டு வாயிலில் இருந்த கிளிகளும் 
வேதம் பற்றிப் பேசின என்று நூல்கள் தெரிவிக்கின்றன.  
கிளியின் பாஷையை செம்மைப்படுத்தினால் இது சாத்தியமாகிறது.

இயல்பான செம்மையுடன் சமஸ்க்ருதம் இருக்கிறது.
இன்றைக்கு அறிவியலார் அதன் செம்மைப் பாங்கைக் கண்டு வியக்கிறார்கள்.

செம்மைப்படுத்தப்பட்ட மொழியாக தமிழ் இருக்கிறது - ஒரு கிளியின் பாஷையை செம்மைப்படுத்தினது போல,

ஆதி மனிதனாக இருக்கும் போது இயல்பாக உண்டான மனித மொழியை, ஆதி சிவனும், அகத்தியனும் செம்மைப்படுத்தினார்கள் என்பதே 
மீண்டும் மீண்டும் நாம் பழந்தமிழ் நூல்களில் காணும் செய்தி

ஆதி சிவன் பெற்று விட்டான்என்னை
   ஆரிய மைந்தன் அகத்திய னென்றோர்
வேதியன் கண்டு மகிழ்ந்தேநிறை
    மேவும் இலக்கணஞ் செய்து கொடுத்தான்
என்று பாரதியார் சொன்னாரே அந்தக் கருத்துதான்
100 ஆண்டுகள் முன் வரை
நம் தெய்வத் தமிழ் நாட்டினில் வழங்கி வந்த்து.

அதை மறக்கடித்த பெருமை திராவிடவாதிகளுக்கே சாரும்.

அவர்கள் மறக்கடித்தாலும்,
அழியா ஆதி காவியமான வால்மீகி ராமாயணத்தில்
8 இடங்களில் ஒரு பெயருடன் இந்த மனித மொழி சொல்லப்பட்டுள்ளது

அதே பெயர் குமர குருபரர் எழுதியுள்ளமதுரைக் கலம்பகத்திலும் காணப்படுகிறது

அதே பெயரை மகாகவி பாரதியாரும் தமிழைப் பற்றிச் சொல்லுமிடத்தே குறிக்கிறார்

அது என்ன பெயர் என்று அடுத்த கட்டுரையில் காண்போம்.

12 கருத்துகள்:

  1. Mr M.Krishnaswamy writes:

    A well-taken point -- the presumption that there was only one language for communication among human beings as contrasted with bird-speak, animal-speak etc. and that தமிழ் மொழி was the only language that existed since the earliest times.

    MKK

    பதிலளிநீக்கு
  2. Dear mam, ரிஷிகள் தேவ நிலைக்கு வரும்பொழுது ஏன் சமஸ்கிருதம் தான் பேசி இருபர்களா? தமிழ் மொழியும் தேவ நிலையில் இருக்கும்பொழுது பேசக்கூடிய தகுதி வாய்ந்த மொழி தானே!!! பல நூறு வருடங்களாக தமிழ் மொழி சமஸ்கிருதத்திர்க்கு முன்பு இருந்தே அல்லவா இருந்து வருகிறது...?

    பதிலளிநீக்கு
  3. //ரிஷிகள் தேவ நிலைக்கு வரும்பொழுது ஏன் சமஸ்கிருதம் தான் பேசி இருபர்களா?//
    அப்படி வந்ததுதான் வேதங்கள். ஏசு வேதம் என்கிறீர்களே, அவையெல்லாம் வேதம் இல்லை. இதுதான் வேதம். மோன நிலையில் வாயில் உண்டாவது வேதம். அது சமஸ்க்ருதத்தில் இருக்கிறது.

    //தமிழ் மொழியும் தேவ நிலையில் இருக்கும்பொழுது பேசக்கூடிய தகுதி வாய்ந்த மொழி தானே!!! பல நூறு வருடங்களாக தமிழ் மொழி சமஸ்கிருதத்திர்க்கு முன்பு இருந்தே அல்லவா இருந்து வருகிறது...? //

    தேவ மொழி vs மனித மொழி என்பதே சமஸ்க்ருதத்துக்கும், தமிழுக்கும் உள்ள வித்தியாசம். இந்தக் கட்டுரையையும், இதற்கு முன் / பின் வந்த கட்டுரைகளையும் பொறுமையாகப் படித்துத் தெரிந்துக் கொள்ளவும்.

    பதிலளிநீக்கு
  4. உங்களுக்கு நல்ல கதை எழுதும் ஆர்வம் இருப்பதனை உங்கள் கட்டுரைகள் காட்டுகிறது. உங்கள் சமஸ்கிருதம் தேவபாஷை தேவ மொழி vs மனித மொழி என்பது தமிழ். அதெப்படி
    (மனிதனுக்கு அப்பாற்பட்ட நிலைக்கு ஒருவன் உயரும் போது தெய்வத்துக்கு உரிய சக்திகள் ஒருவனை ஆட்கொள்கின்றன.
    அந்த நிலையில் மடை திறந்த வெள்ளம் போல
    வாயில் வருவது தேவ பாஷை)அவன் வாயில் வருவது எல்லாம்
    தேவ பாஷையா ? இதுதான் மிக பெரிய தமாஷ். இந்த கதைகளுக்கு ஐன்ஸ்டீன் தியரி வேறு..!! E = mc2 என்ற சமன்பாட்டினை ஆய்வுகள் மூலம் நிரூபிக்கபட்டுள்ளது. நீங்கள் குறிப்பிடும் சக்தியினை உருவத்தினை அறியல் முறையில் ஆய்வுக்கு உட்படுத்தி நிரூபிக்க முடியுமா ? இந்த சமன்பாட்டினை ஐன்ஸ்டீன் னுக்கு முன்னதாக வேதம் நன்கு கற்ற பிராமணன் எவனும் கூறவில்லையே அது ஏன் ? அவ்வாறு முன்பே குறிப்பிட்டு இருந்தால் அதனை அவர்களே ஆய்வின் மூலம் நிரூபித்து இருக்கலாமே..? அடுத்து உங்கள் கட்டுரையில் இருந்தே ஒரு கேள்வி பிரபஞ்சம் சக்தியினால் உருவானதா ? அல்லது பிரபஞ்சம் சக்தியினை உருவாக்கியதா ? புத்தன் ஞானம் அடைந்த போது பேசிய மொழி சமஸ்கிருதம் இல்லையே ? சித்தர்கள் பேசிய மொழியும் சமஸ்கிருதம் இல்லையே ? அது ஏன் பிராமணன் மட்டும் தேவ பாஷை பேசினான் ? அதெப்படி (‘தண்ணீர்’ என்று காய்ந்து போன கட்டையிடம்
    சொன்னால் மட்டும் போதும்,அதில் கிளைகள் முளைத்து, இலைகள் தளிக்கும்)அப்போ சுனாமி என்று சொன்னால் சுனாமி வருமா? இக்காலத்தில் தேவபாஷை தெரிந்த எந்த பிராமணனும் இறை நிலையை அடையாதது ஏன் அப்படி அடைந்தவர் இருந்தால் குறிப்பிடுங்கள் வறண்டுபோன நதிகளையெல்லாம் "தண்ணீர்" என்று சொல்லி நீரினை உருவாக்குவோம். ஆய்வு என்று நினைத்து கொண்டு அர்த்தமற்ற, ஆதாரங்கள் அற்ற பொய்களை உங்களின் கட்டுடரைகளில் குறிப்பிட்டுள்ளீர்கள். இதுதான் உங்கள் ஆய்வின் இலக்கணமா ..?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களது புரிதலின் இலக்கணம்.

      நீக்கு
    2. ஆத்திரத்தில் எழுதிக் கொண்டு வருகிறீர்கள் என்று தெரிகிறது . ஆத்திரக்காரனுக்கு எது குறையுமோ அதைக் காட்டிக் கொண்டு வருகிறீர்கள். பிரசுரிக்கத் தக்கதாக இருக்கும் வரை பிரசுரிக்கிறேன். அடிப்படைகள் தெரிந்து கொண்டு எழுதினால், பதில் கொடுக்கிறேன். பொதுவாக என்னுடைய வாசகர்கள் மிகவும் அறிவு பூர்வமாக எழுதியும், கேள்வி கேட்டும் வருவார்கள். அவர்களால் எனது அறிவு விசாலமடைகிறது என்று கூறுவேன். ஒரு கருத்துரையில் அதை எழுதியும் இருக்கிறேன். அவர்களில் ஒருவராக இருக்க இந்த ஆய்வுகள் பற்றிய அடிப்படை அறிவு இருக்க வேண்டும். நீங்கள் அவர்களைப் போல இருந்தால் பதில் கிடைக்கும்.

      நீக்கு
  5. பிரபஞ்சம் சக்தியினால் உருவானதா ? அல்லது பிரபஞ்சம் சக்தியினை உருவாக்கியதா ? உங்களின் பதில் என்ன ? இக்கேள்வியினை நான் மென்மையாகவே கேட்கிறேன் ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் சொல்கிறீர்களே அந்தப் பிரபஞ்சம் என்றால் என்ன, சக்தி என்றால் என்ன என்பதெல்லாம் கேள்விகள். இன்றைய விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளில் எந்த அளவு சரி, எது இன்னும் ஏற்றுக் கொள்ள முடியாதது என்றும் இருக்கின்றன. இந்தக் கேள்வியை நீங்கள் அறிவதற்காகக் கேட்கிறீர்களா அல்லது நீங்கள் படித்த பிக் பாங்க் போன்ற விஞ்ஞானக் கருத்துகள் அடிப்படையில் மட்டும் தான் கேட்கிறீர்களா - அதைக் கொண்டு விதண்டாவாதம் செய்ய விரும்பிகிறீர்களா என்றும் தெரியவில்லை. ஏனெனில் அவை முடிவான கருத்துக்கள் அல்ல. அவை தரும் விடையை விட, அவை எழுப்பும் கேள்விகளே அதிகம், மேலும் அவற்றில் உயிர் (consciousness) எவ்வாறு ஏற்படுகிறது பௌதிக உலகில் எவ்வாறு ஒன்றுகிறது என்பதைப் பற்றிய சிந்தனையே இல்லை. இந்தக் கேள்விகளுக்கு உள்நோக்குப் பார்வையால்தான் விடை கிடைக்கும். உதாரணமாக நீங்கள் சொன்ன இரு சொற்களான பிரபஞ்சம், சக்தி என்பவற்றுக்கான பிரபஞ்சவியல் சொற்கள் வேதாந்தத்தில் இருக்கின்றன. அவற்றின் பெயர் தெரிந்துதான் கேட்கிறீர்களா என்றும் தெரியவில்லை. அந்த வகையில் சுபாஷ் கக் (இவர் ஒரு விஞ்ஞானி) அவர்கள் சொன்ன 'pervading of the Consciousness' தான் ஒப்புக் கொள்ளக் கூடியது. வேதாந்தக் கருத்தும் அதுவே. அவரது வலைத்தளத்தின் முகவரியை என்னுடைய ஆங்கில வலைத்தளத்தில் கொடுத்திருப்பேன். தேடிப் படிக்கவும்.

      என்னுடைய ஸ்பெஷலிடியே படைப்புத் தத்துவம்தான். என் ஆங்கில வலைத்தளத்தில் பல வேறு கட்டுரைகள் இட்டுள்ளேன்,. படிக்கவும். அல்லது தமிழ் ஹிந்து வலைத்தளத்தில் மகாசிவராத்திரியையும், நடராஜர் உருவத்தையும் கொண்டு விளக்கியிருப்பேன்.

      http://www.tamilhindu.com/2010/01/adimudi-kaanaa-athisayam-a-dimension-of-the-universe/

      அதே தளத்தில் பிரபஞ்சத்தில் உயிர் உற்பத்தியைப் பற்றி வேறு கட்டுரைகள் இருக்கின்றன.

      நீக்கு
  6. This Tamil article has been reproduced in English. It can be read here. There will be many information written by me in the comment section of this article.

    http://jayasreesaranathan.blogspot.in/2013/04/tamil-was-human-tongue-or-manushya.html

    பதிலளிநீக்கு
  7. Ram Yadav
    தமிழில் அரம்வைத்து பாடினார்கள் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள் ஒன்றுமே தெரியாத குரும்பாடு மேய்த காளிதானுக்கு காளி அனுக்கிரகத்தால் மகாகவியாக வில்லையா? காமுகநாக இருந்த அருணகிரியார் பக்த்திபாடல்களை கடல்மடைதிறந்த வெள்ளமென பாடவில்லையா? இப்படி நிறைய உள்ளது தமிழ் எழுத்துக்களை முறைப்படி எழுதினால் பட்டமரம் தளிர்விடும்

    பதிலளிநீக்கு
  8. திரு ராம் யாதவ் அவர்களுக்கு ஒரு விண்ணப்பம். நீங்கள் சக்தியினால் பிரபஞ்சம் உண்டானதா அல்லது பிரபஞ்சம் சக்தியை உண்டாக்கியதா என்று கேட்டு இருக்கிறீர்கள். இதற்கு சற்று சுற்றி வளைத்த விடையை நான் கொடுக்க முயற்சிக்கிறேன்.
    சக்தி என்பது ஆற்றல் என்று அறிகிறோம். அவை பல விதமாக உள்ளன. ஐந்து விதமான உணர்ச்சிகளும் அவற்றில் அடங்கும்.
    இப்பொழுது விஞ்ஞான பூர்வமான ஒரு ஆற்றலைப் பார்க்கலாம். சோடியம் (தமிழ் வார்த்தை எனக்குத் தெரியாது) ஒரு நிறமற்ற, தண்ணீருடன் கலந்தால் எரியும் சக்தி உடையது. ஆகையால், அதனுடைய ருசி என்னவென்று தெரியாது. குளோரின் மஞ்சள் பச்சை நிற, கார நெடியுள்ள வாயு பதார்த்தம். இந்த இரண்டு வேதிப் பொருட்களையும் சரி சமமாக கலந்தால், நாம் மிகவும் பயன் படுத்தும் உப்பு உண்டாகும் என்று வேதியியல் கூறுகிறது. இதில் இந்த இரண்டு வேதிப் பொருட்களுக்கும் சம்பந்தமில்லாத சுவையில் கரிக்கும் தன்மை எங்கிருந்து வந்தது? இத் தன்மை எக்காலத்திலும் எந்த இடத்திலும் ஏற்ப்படும் உண்மை. இந்த சக்தி எங்கிருந்து வந்தது, ஏன் வந்தது, எப்படி வந்தது என்று ஆராய்ந்தால் உங்கள் கல்விக்கு ஒருவாறு விடை கிடைக்கும். அந்த விடை தான் பரம் பொருள் என்று நாம் போற்றுகிற கடவுளே! இதைத் தான் திருமதி ஜெயஸ்ரீ அவர்களும் ஐன்ஸ்டீனை மேற்கோள் காட்டியுளார். இந்த சக்தி தான் நாம் எல்லா பார்க்கும், பார்க்க முடியாதவற்றிலும் உணர்கிறோம். இதைத்தான் மகாகவி பாரதியும் காக்கைச் சிறகினிலே உந்தன் கரிய நிறம் காணுதையா என்று பரவசப் பட்டுப் பாடியுள்ளார்,

    பதிலளிநீக்கு
  9. Sanskrit is a dialect of old Tamil. It was not a separate language. Have look:
    https://sites.google.com/site/vedictamil/rig-veda--archaic-tamil

    பதிலளிநீக்கு